எழுதிக் கொண்டே இருக்கலாம்…

ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன்.  ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும்.  இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது.  மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது.  இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது.  ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல்.  புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும்.

நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன்.  ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன்.  ஆனால் அது ஒரு அதி முக்கியமான தகவல்.  இப்போது ஒரு நூல் தேவைப்பட்டது.  அதன் விலை 3600 ரூ.  கிண்டிலில் இல்லை.  முக்கியமான புத்தகம்.  எனக்கு நூலகங்களிலிருந்து புத்தகம் எடுத்துக் கொடுக்கும் ஒரு நண்பரிடம் இது ஏதாவது நூலகத்தில் கிடைக்குமா என்று கேட்டேன்.  வெளிநாட்டுப் பல்கலைக்கழக நூலகங்களிலிருந்து அப்படிப் பல நூல்கள் கிடைத்துள்ளன. 

அந்த நண்பரை எனக்கு அதிகம் தெரியாது.  எப்போதோ ஒருமுறை போன் நம்பரைக் கொடுத்து வாசகர் வட்டத்தில் சேர ஆசை என்று எழுதியிருந்தது ஞாபகம் இருந்தது. 

அவர் நடுத்தர வர்க்கத்தையும் சார்ந்தவர் அல்ல, அதற்கும் கீழே என்பது என் யூகம்.  என்னுடைய உரைகளைத் தவறாமல் கடிதம் எழுதி வாங்கிக் கேட்டு விடுவார்.  இன்று அவரிடமிருந்து வந்த கடிதம் இரண்டு விஷயங்களைத் தாங்கியிருந்தது.  ஒன்று, எந்த நூலகத்திலும் அது இல்லை.  இரண்டு, உங்கள் விலாசம் கொடுங்கள்.  நானே பணம் கட்டி உங்கள் விலாசத்துக்கு வரவழைக்கிறேன்.  இல்லாவிட்டால், உங்களுக்குக் கூகிள்பே மூலம் பணத்தை அனுப்பி விடுகிறேன், நீங்களே வாங்கிக் கொள்கிறீர்களா?

எனக்கு உதவி செய்பவர்களிடமும் மற்ற நண்பர்களிடமும் நான் அவர்களின் சம்பளத்தைக் கேட்பது வழக்கம்.  அதை மற்ற பலர் தவறாகவே நினைப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.  என்னைப் பொறுத்தவரை, பணம் என்பது எனக்கு லஜ்ஜையான விஷயமே இல்லை.  பணத்தைப் பற்றிப் பேசும் போது ஏன் இந்தியவர்கள் ஏதோ மலம் கழிப்பது போலவோ, உடலுறவில் ஈடுபடுவது போலவோ ரகசியம் காக்கிறார்கள் என்று எனக்குப் புரிவதே இல்லை.  ஏதோ ஒரு அவமானமான காரியமாகப் பார்க்கிறார்கள்.  கையில் கவர் கொடுக்கும்போது கூட மறைத்துக் கொடுக்கிறார்கள்.  ஏன் ஐயா, நீங்கள் எனக்கு என்ன லஞ்சமா கொடுக்கிறீர்கள்?  தாரளமாக, தைரியமாகச் செய்தால் என்ன?  பெரிய பெரிய நிறுவனங்கள் கூட கவராகக் கொடுக்கும் போது பம்மி பம்மித்தான் கொடுக்கிறார்கள். 

சம்பள விவரத்தைக் கேட்கும் காரணம், எனக்கு உதவி செய்து விட்டு அவர்கள் சிரமப்படக் கூடாதே என்ற அக்கறைதான். 

கடிதம் எழுதிய நண்பரின் பழைய கடிதங்களைத் தேடி எடுத்து போன் போட்டேன்.  பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்வதற்காகத்தான் அழைத்தேன். ஆனால், அறிமுகம் இல்லாத பல நண்பர்கள் செய்வது போலவே இவரும் எடுக்கவில்லை.  சரியென்று விட்டு விட்டேன்.  கொஞ்ச நேரத்தில் 3600 ரூ. கூகிள்பேயில் வந்தது.  கூடவே ஒரு கடிதமும்.  அந்தக் கடிதம்:

அன்புள்ள சாரு,

தாங்கள் எதற்குமே விலை வைத்ததில்லையே… கோபிகிருஷ்ணன் உரையைக் கூட இலவசமாகத்தானே தந்தீர்கள்? இந்த ஆண்டு முழுவதும் மாதச் சந்தா செலுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். லௌகீக சிக்கல்கள் அனுமதிக்கவில்லை. அதற்கு பதில் நீங்கள் கேட்ட புத்தகத்திற்கான தொகையை G Pay மூலம் அனுப்பிவிட்டேன்.

அறியாத் தொலைபேசி எண் அழைப்பு ஒன்றுக்கு ஏன் இதயம் இப்படி அடித்துக் கொள்கிறது என்று அப்போது புரியவில்லை. ‘ச்சி. Don’t be crazy’ என்று சொல்லிக்கொண்டேன். என் வாழ்நாளுக்கான ஆசீர்வாதம் இன்று கிடைத்தது.  

இப்படிக்குத் தங்கள்,

…….   

இந்தக் கடிதம் சொல்லும் சேதி பற்றி நான் எதுவும் எழுதாமல் நீங்களே புரிந்து கொள்ளலாம்.  இது போன்ற வாசகர்களுக்காக வாழ்நாள் உள்ளளவும் எழுதிக் கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai