என் கடன் பணி செய்து கிடப்பதே…

இந்தக் கட்டுரையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது.  மறந்தால் நஷ்டம் எனக்கில்லை.  இந்தக் கட்டுரையை உங்கள் சந்ததிக்கும் சொன்னீர்களானால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைக்கும் அது நன்மை செய்யும்.  பொதுவாக என்னைப் பற்றிப் பொதுவெளியில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.  அது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை.  ஞானியும் பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருப்பார்கள்.  எனக்கு நான் யார் என்று தெரியும்.  உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை.  என் எழுத்து தான் என் வாழ்க்கை.  ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு ஒரு பறவை பறப்பது போலே எழுதுகிறேன் என்று பதில் சொன்னேன்.  பறவையால்தான் பூமி வாழ்கிறது.  பறவைகள்தான் வனங்களைப் பெருக்குகின்றன.  வனங்களே வாழ்வின் ஜீவாதாரம் என்பதை நாம் அறிவோம்.

என்னைப் பற்றிய அவதானங்களில் ஒன்று, நான் திமிர் பிடித்தவன் என்பது.  என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும், அந்தக் குணத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று.  ஆனால் ஏன் அப்படி ஒரு கருத்து உருவாகிறது என்று என்னால் அனுமானிக்க முடிகிறது.  நான் யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதைச் சொல்லி விடுகிறேன்.  அதனால் அப்படி நினைக்கிறார்கள்.  வாஸ்தவத்தில் என்னிடம் அகந்தை கிடையாது.  என் கடிதங்களை அடியேன் என்றுதான் முடிப்பது வழக்கம்.  ஏனென்றால், நான் அடியேன் என்றுதான் நினைக்கிறேன்.  உங்களின் அடிமை.  உங்களுக்குப் பணி செய்து கிடப்பதே என் மகிழ்ச்சி.  அந்தப் பணிக்காக உங்களிடம் அவ்வப்போது கையேந்துவேன்.  அவ்வளவுதான்.  இந்த மனோபாவம் எனக்கு ஆண்டாளிடமிருந்தும் ஸ்ரீராமானுஜரிடமிருந்தும்தான் கிடைத்தது.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராமானுஜரின் வழிவந்த ஸ்ரீவைஷ்ணவர்களிடம்தான் இந்த மனோபாவம் கொஞ்சமும் இல்லாததைப் பார்க்கிறேன்.  கடிதங்களில் அடியேன் போடுவதோடு சரி, மனதில் இல்லை.  அங்கே இருப்பது ஆணவமும் அகங்காரமும்தான்.  இதற்கு விதிவிலக்காக இதுவரை என் நட்பு வட்டத்தில் ஒரு ஆத்மாவைக் கூட பார்த்ததில்லை.  ஆமாம், அவந்திகாவையும் அராத்துவையும் சேர்த்துதான் சொல்கிறேன்.  (பேரே எனக்கு அராத்துன்னு வச்சிருக்கீங்க, நான் போய் எப்படிச் சாரு அடக்கமா இருக்கறது என்று கேட்பார் அராத்து!)   யோசித்து யோசித்துப் பார்த்தேன், அடியேனாக வாழ வேண்டும் என்று சொன்ன ராமானுஜ தாஸர்களிடம்தான் அடக்கமின்மை சற்று தூக்கலாக இருக்கிறது.

இன்னும் சிலர் வார்த்தைகளை ஜோடனையாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மேட்டுக்குடி பிராமண நண்பர் இன்ஷா அல்லாஹ் என்று எழுதியிருப்பதைக் கண்டேன். இறைவனின் விருப்பம் இருந்தால் என்று பொருள்.  மனிதர்களின் அகங்காரத்தை அடக்குவதற்காகச் சொல்லப்படுவது.  யாரும் சொல்லலாம்.  ஆனால் அசைவ உணவைக் கூடத் தீண்டியிராத ஒருவர் இஸ்லாமியரின் கலாச்சார அடையாளத்தில் கை வைக்கலாமா?  சரி, அசைவம் ஆகவில்லை என்றால், வேறு எதிலாவது காண்பியுங்கள்.  நீங்கள் மேட்டுக்குடியிலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறீர்கள் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது?  கலாச்சார அடையாளங்களை வெறும் ஃபேஷனாக மாற்றாதீர்கள்.  நான் அடியேன் என்று சொன்னால் அடியேனாக வாழ்கிறேன்.

தாஸனாய் வாழ்வதை ஆண்டாளிடமிருந்து கற்றேன் என்றேன்.  திருப்பாவையின் பதினைந்தாம் பாடல் எல்லே இளங்கிளியே மிகவும் பிரபலமானது.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

தோழிகளைத் துயிலெழுப்ப கோதை நாச்சியாரே வீடு வீடாகச் செல்கிறாள்.  ஒரு தோழி, உறக்கம் கலையாமல் இதோ வந்து விட்டேன் என்று சிடுசிடுப்புடன் கூற, அதற்கு ஆண்டாள், ”சரி, எனக்குத்தான் பேசத் தெரியவில்லை; நீயே வல்லவளாக இருந்து கொள்; தவறு செய்தவள் நானாகவே இருக்கிறேன்” என்கிறாள்.  இதிலிருந்துதான் கற்றேன்.  தவறெல்லாம் என் மீதுதான். இதிலிருந்துதான் அடியேன் என உணரத் தொடங்கினேன்.  இதிலிருந்துதான் அடியேன் எனக் கையெழுத்திடத் தொடங்கினேன்.  இதிலிருந்துதான் யாரும் எனக்குச் சிறியவர் இல்லை என உணரத் தொடங்கினேன்.  என்னை விட வயதில் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவருக்குப் பணிவிடை செய்ய என்றுமே நான் தயங்கியதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளில் நண்பர்கள் குடித்துப் போட்ட சிகரெட் துண்டுகளை எடுத்துப் போட்டுத் துப்புரவுப் பணிகளில் அனாயாசமாக ஈடுபடுவேன்.  கக்கூஸைச் சுத்தம் செய்திருக்கிறேன்.  காந்தியைப் படித்ததெல்லாம் பிற்பாடுதான்.  இளமையில் கற்றது ஆண்டாளிடம்; உடையவரிடம்.

ஆனால் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேரிடம் என்னால் அடக்கத்தைப் பார்க்க முடியவில்லை.  நல்லவர்களாக இருக்கிறார்கள்.  மிக உயர்ந்த குணங்களைக் கொண்ட பண்பாளர்களாக இருக்கிறார்கள்.  சிலரை நான் மகாத்மா என்றே அழைப்பது வழக்கம்.  ஆனால் பழக்கவழக்கங்களில் மென்மையில்லாமல் இருக்கிறார்கள்.  மூர்க்கம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் மென்மை இல்லை.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  காலையில் இரண்டு நண்பர்களுக்கு ஒரே செய்தியை அனுப்பினேன்.  இன்று செய்ய வேண்டிய வேலை பற்றிய ஒரு முக்கியச் செய்தி அது.  ஒருவர் (மகாத்மா) ஓகே என்று பதில் அனுப்பினார்.  மற்றொருவர், ஷ்யூர் சாரு என்று பதில் அனுப்பினார்.  ஓகே என்பது முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.  ஷ்யூர் சாரு என்று பதில் சொல்வது மயிலிறகால் வருடுவது போல் உள்ளது.

என் கையில் மொபைல் ஃபோன் வந்ததிலிருந்து இந்தக் கணம் வரை, நான் ஓகே என்று யாருக்கும் பதில் அனுப்பியது இல்லை.  ஓகேவுடன் அவர் பெயரையும் சேர்த்தேதான் அனுப்புவது என் வழக்கம்.  சிலருக்கு நீண்ட பெயராக இருக்கும். ஆனாலும் ஓகே பிரஸன்னா என்றுதான் பதில் அனுப்புவேன்.  Prasanna என்று எட்டு எழுத்தையும் தட்டுவேன்.  கிழக்கு பிரஸன்னாவிடம் இதை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.  காலையில் அவரிடம் ஒரு புத்தகம் கேட்டு செய்தி அனுப்ப வேண்டுமானால் good morning prasanna, என்று அடித்து விட்டு அப்புறம்தான் செய்திக்குப் போவேன்.  என்னிடம் 15 ஆண்டுகளாக கைபேசி இருக்கிறது.  இந்தப் பதினைந்து ஆண்டுகளாகவும் இப்படித்தான் வழக்கம்.  பிரஸன்னாவை விடுங்கள்.  என் நண்பர் ஸ்ரீராம் என் மகனைப் போன்றவர்.  28 வயது.  அவருக்கே எந்தச் செய்தியையும் வெறும் செய்தியாக அனுப்புவதில்லை.  இன்ன படம் வேண்டும் ஸ்ரீராம்.  இன்ன புத்தகம் வேண்டும் ஸ்ரீராம்.  பெயரைக் குறிப்பிடாமல் பேசுவதே இல்லை.

இதிலெல்லாம் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உலக வாழ்க்கை இன்னும் மோசமடைந்து கொண்டே தான் போகும்.  உங்களுக்கே தெரியும், 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சௌக்கியமாக இருந்தது.  இப்போது இத்தனை விஞ்ஞான, தொழில்நுட்ப வசதிகள் வந்த பிறகும் வாழ்க்கை சிடுக்குகள் மிகுந்ததாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் என்ன பொருள்?  நம் மனோபாவத்திலும் மாற்றம் வேண்டும்.  என் நண்பர்கள் இரண்டு வகைப்படுவர்.  30 வயதுக்குக் கீழே, 30-இலிருந்து 50-க்குள்.  ஐம்பதுக்கு மேல் யாரும் என் நட்பு வட்டத்தில் இல்லை.  முப்பதிலிருந்து ஐம்பதுக்கு மெஸேஜ் அனுப்பினால் ஓகே என்று பதில் வருகிறது.  முப்பதுக்குள் இருக்கும் இளம் தலைமுறை Ok என்று கூட அனுப்புவதில்லை; வெறும் k.  என் மகன் கார்த்திக் கூட வெறும் k தான்.  ஆனால் நான் என்ன மெஸேஜ் அனுப்பினாலும் முழுசாக karthik என்றுதான் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டி அனுப்புவேன்.  ஓ போடுவதற்குக் கூட நேரமில்லை.  ஓட்டம். ஓட்டம்.  இப்படித் தொண்ணூறு வயது வரை ஓடினால் கூட சந்தோஷப்படுவேன்.  நாற்பதிலேயே எல்லா நோய்களையும் வரவழைத்துக் கொண்டு விடுகிறார்கள்.  பெயர் சொல்லி அழைக்க, உறவு சொல்லி அழைக்க, நண்பா என்று சொல்ல, dude என்று சொல்ல, honey என்று சொல்ல, amor என்று சொல்ல, bro என்று சொல்ல, அக்கா என்று அழைக்க, சாரு என்று அழைக்க எங்கே வலிக்கிறது நண்பர்களே உங்களுக்கு?

இப்போது நான் மேலே சொன்ன சம்பவத்துக்கு வருகிறேன்.  இரண்டு பேருக்கு ஒரே செய்தி அனுப்பினேன். ஒருவர், ஓகே.  ஒருவர் ஷ்யூர் சாரு.  இந்த இரண்டாமவர் எப்போதுமே எனக்கு மொட்டையாக மெஸேஜ் அனுப்பியதில்லை.  அச்சு அசலாக என்னைப் போலவே இருக்கிறார்.  நீங்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.  நான் சொல்வது தவறாக இருந்தால் சொல்லுங்கள்; நான் மாற்றிக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்கிறேன்.

கட்டுரையை எழுதி விட்டு இதற்கு என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.  அந்தப் பாடலைப் பாடியவர் நால்வரில் யார் என்று சந்தேகம் வந்து விட்டது.  நான்கு பேரையும் ஒருவராகவே தெரிந்து வைத்திருப்பவன் நான். ஆனால் ஏற்கனவே யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் பாடலில் குழப்படி செய்து விட்டதால் கவனமாக யார் பாடியது என்று பார்த்த போது என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தலைப்பில் மகாப் பெரியவர் ஒரு கட்டுரை எழுதியிருப்பதைப் பார்த்தேன்.  மகாப் பெரியவர் ஒரு மகா ஞானி.  பிராமணர்களால் போற்றப்பட்டதால் அவரை மற்றவர் பலருக்கும் தெரியாமல் போய் விட்டது.  அவர் ஒரு அற்புதமான ஞானி.  அற்புதமான கலைஞன்.  தெய்வத்தின் குரல் என்ற தொகுப்பைப் படித்தீர்களானால் அது உங்களுக்குப் புரியும்.  என் கட்டுரைகள் பலவற்றில் நான் சொன்ன கருத்துக்களையே அவருடைய கட்டுரையும் பிரதிபலிப்பதை கீழே படித்துப் பாருங்கள்.  காருண்யம் என்பதில் கூட அகங்காரம் இருக்கிறது என்கிறார் அவர்.  கொடுப்பவர் மேலே இருக்கிறார்.  பெறுபவர் கீழே இருக்கிறார்.  இந்த பாவம் இருக்கக் கூடாது என்கிறார்.

கீழே வருவது மகாப் பெரியவர்:

இப்போது நான் ”ஜீவகாருண்யம்”, ”பரோபகாரம்” என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு வார்த்தையுமே தப்புத்தான் ஏனென்றால்:

காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ”நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம் ‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆதமாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும்.

கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே போனால் போகிறதென்று யாரோ அந்நியருக்கு இரக்கம் காட்டுகிற மாதிரியான அஹங்கார எண்ணம் இல்லை.

ஆனாலுங்கூட நடைமுறை உலகில் இப்படி நம்மவர், அசலார் என்கிற பேதமேயில்லாமல் ஸகலரையும் ஒரே போல் பாவித்து, தாரதம்மியம் இல்லாமல் ஸவாபாவிகமான அன்பைச் செலுத்துவது என்றால் அது ஆரம்ப காலத்தில் ஸாத்யம் இல்லாமல்தான் இருக்கிறது. இந்தப் பொது இயற்கையை ஓப்புக் கொள்கிறது போலத் தான் திருவள்ளுவர்கூட அன்பு, அருள் (அருள் என்பதைக் கருணை என்று வைத்துக்கொள்ளலாம்) என்று பிரித்து distinction சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? அருள் என்னும் அன்பீன் குழவி என்கிறார். அன்பு ஈன்ற குழந்தையே அருள் என்று அர்த்தம்.

இப்போது நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை மட்டும் நினைத்துக் கொண்டு அன்பு செல்லுத்துகிறோம் அல்லவா? இந்த ‘வேண்டியவர்’களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்தே படிப்படியாக அருள் பிறக்கிறது. அப்புறம் இப்படி அருள் பண்ணுகிறவனைப் பொருத்த மட்டும் அது ‘அருள்’ ‘கருணை’ என்றெல்லாம் உயர்வு விஷயமாக இல்லாமல், ஸ்வபாவமான, ஹைஜமான அன்பாகவே ஆகிவிடுகிறது. ஆனாலும் இந்த அன்பைப் பெறுகிறவர்களோ அது ஸாதாரனமாக நண்பர்களிடையே பந்துக்களிடையே இருக்கிற அன்புமாதிரி இல்லாமல், நல்ல கனிவு பெற்று தெய்விகமான சக்தி பெற்றிருப்பதாக உணர்கிறார்கள். இந்த பக்குவமான, திவ்யசக்தி வாய்ந்த அன்பை ‘அருள், அருள்’ என்கிறார்கள்.

‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’என்று ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்துகொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒருபடி கிழே இறங்கி தன்னைக் குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். ‘நைச்சியம்’ என்று இதை வைஷ்ணவர்கள் விசேஷித்துச் சொல்வார்கள். தன்னைத் தாழ்ந்தவானக, நீசனாக நினைத்து இன்னொருத்தனுக்கு ஸேவை செய்வதுதான் ‘நைச்சியம்’. இப்படி இவன் தன்னைக் குறைத்துக் கொள்கிறபோதுதான் இவனுடைய அன்பு வெறும் பேச்சாக, எண்ணமாக மட்டுமில்லாமல் அதற்குக் காரிய ரூபத்திலேயே தெய்விகமான சக்தி உண்டாகி, அது ‘அருளாக’ ஆகிவிடுகிறது! கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் ”நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்” என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. இவனுடைய அன்பு வெறும் பேச்சாகவும் எண்ணமாகவும் மட்டுமில்லாமல், காரியத்திலேயே ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது.

இவனுடைய ஜீவகாருண்யத்தால் இப்படி இவனே உயர்வதுதான் பெரிய பிரயோஜனமாகிறது. ஒருத்தன் உபகாரம் என்று நினைத்து இன்னொருத்தனுக்குச் செய்வது அவனுக்கு அபகாரமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது இவனுடைய உபகாரத்தை அவன் விரும்பாமலும் இருக்கலாம். அதாவது பிறத்தியானைப் பொருத்தமட்டில் இவனுடைய ஸேவை வீணாகவே போனாலும் போகலாம். ஆனால் இவனையே பொருத்தமட்டில் இவனுடைய அஹங்காரத்தைக் கரைத்து, இவனை (ஆத்மிகத்தில்) உயர்த்திவிடுகிறது.

இதனால்தான் ‘ஜீவகாருண்யம்’ என்கிற மாதிரியே ‘பரோபகாரம்’ என்ற வார்த்தையும் ஒரு தினுஸில் தப்புதான் என்றேன். பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்லவேண்டும்.

இது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது நாம் கருணை பண்ணுகிறோம், அருள் காட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லாதபோதுதான், இவனுக்கு தெய்விகமான ‘அருளுடைமை’யே உண்டாகிறது. இப்படியே இவன் ஸ்வய நலனைக் கொஞசம்கூட நினைக்காமல் பரோபகார ஸேவை செய்வதுதான் உண்மையில் ஆத்ம லாபம் என்கிற பெரிய ‘ஸ்வயோபகாரமாக’இருக்கிறது.

நல்ல அத்வைத திருஷ்டி வந்துவிட்டால் ஸ்வயம், பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, பல தினுஸில் கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஒருத்தன் தன்னுடைய இயற்கையான தர்மமாகவே ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். இப்போதும் ‘பர உபகாரம்’ என்ற phrase தப்பாகி விடுகிறது! தனக்குப் பரமாகத்தான் இவனுக்கு எதுவுமில்லையே! ”என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது இந்த நிலையில்தான்.

”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும்.

கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty .அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச் செய்ய வேண்டும்.

லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இதனால்தான் ஜடம் என்று நினைக்கிற பூமி, ஜலம், அக்னி இவற்றுக்குக்கூட நாம் செய்கிற பிரதியாக வைதிக மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது, உணர்ச்சிகள் இருக்கின்றன என்று ஜகதீஷ்சந்திர போஸ்தான் கண்டு பிடித்தார் என்றில்லை. வனஸ்பதி, அச்வத்தம் என்கிற மாதிரியாக அதுகளையும் உயிரும் உணர்ச்சியும் கொண்டதாகப் பார்த்து மந்திரபூர்வமாக அவற்றுக்கும் நம் ப்ரத்யுபகாரமாக பூஜைகளைப் பண்ண சாஸ்த்திரம் இருக்கிறது. ‘தூர்வா ஸூக்தம்’, ‘ம்ருத்திகா ஸூக்தம்’ என்றெல்லாம் அருகம்புல், மண் முதலானவற்றிலிருக்கிற தெய்வ சக்தியைக்கூட ஆராதிக்க வேத மந்திரங்கள் இருக்கின்றன. தினமும் செய்கிற ‘ப்ரஹ்ம யஜ்ஞ’த்தில் சேதன-அசேதனங்கள் அத்தனையிலும் இருக்கிற சைதன்ய சக்திக்கு நம் நன்றியறிதலாகத் தர்ப்பனம் சொல்லியிருக்கிறது.

ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி ஸவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும் ஆத்மார்தமாகவும் பண்ணுகிற உபகாரம் கொஞ்சநஞ்சமில்லை. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் மஹா பெரியவர், வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே!

மந்த்ரவத்தாகவும், கிராம ஜனங்களின் வழக்கத்தில் வந்துள்ளதுமான அநேக சடங்குகளைப் பண்ணினாலே அசேதனம் (inanimate) என்று நாம் நினைக்கிறவற்றின் அதிதேவதைகள் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இது தவிர தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. ”வாயில்லா ஜீவன்” என்றே அவைகளை ரொம்பவும் பரிவொடு சொல்வது வழக்கம். முன்காலத்தில் ஊருக்குள் மட்டுமின்றி, வெளியே மாடுகள் மேய்ச்சலுக்குப் போகிற இடங்களில் கூட அவற்றுக்கெனவே குளம் வெட்டி வைப்பார்கள். ஒரு பசுவுக்கு கழுத்திலே அரிக்கிறது. நம்மைப்போல் அதற்குக் கையா இருக்கிறது, சொரிந்து கொள்ள?” எனக்கு அரிக்கிறது” என்று சொல்ல அதற்கு வாய் கூட இல்லையே!அதன் கஷ்டத்தை உணர்ந்து, பசு சொரிந்து கொள்வதற்கென்றே அங்கங்கே கற்களை நாட்டி வைத்தார்கள். ”ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ ‘என்று இதை ஒரு பெரிய தர்மமமாக நீதி நூல்களில் சொல்லியிருக்கிறது. கடைசியில் நம் மாதிரியான மநுஷ்யர்களிடத்தில் வந்தால், ஸ்ருஷ்டியில் பாக்கியுள்ள அத்தனை ஜீவ இனங்களுக்கும் எத்தனை கஷ்டம் இருக்குமோ அத்தனையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் இருக்கிறது!இது இவனுடைய அலாதி புத்தியினால் இவனே ஸம்பாதித்துக் கொண்ட சொத்து!இவனைப்போல problem (பிரச்னை) வேறு எதற்கும் இல்லை. இதிலே முக்கால்வாசி இவனே கல்பித்துக்கொண்டதுதான்!இதைச் சரிப்படுத்துகிற மஹாபெரிய பரோபகாரத்தைத்தான் மஹான்கள் செய்கிறார்கள்.

இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்.

நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty.

இதைத்தான் தர்மம், அறம் என்று சொல்வது. முதலிலேயே நான் சொன்னபடி, இதைச் செய்வதால் எதிராளிக்கு வாஸ்தவத்தில் எந்த அளவுக்கு துக்கநிவிருத்தி உண்டாகுமோ அதற்கு நாம் ‘காரன்டி’ சொல்லமுடியாது. அதற்கு நாம் ஜவாப்தாரியும் அல்ல. ஆனால் இப்படிச் செய்வதால் நமக்குச் சித்தசுத்தி நிச்சயமாக ஸித்திக்கிறது. அதாவது மனமாசு அகல்கிறது. திருவள்ளுவர்கூட தர்மத்துக்கு definition (லக்ஷணம்) சொல்லும்போது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றுதான் சொல்கிறார்.