ராஸ லீலா மதிப்புரை : பாலா கருப்பசாமி

முகநூலில் பாலா கருப்பசாமி அடியேனின் நாவல் ராஸ லீலாவுக்கு எழுதிய ஒரு மதிப்புரை கீழே:

ராஸலீலா – வாசிப்பனுபவம்
ஒரு நாவலுக்கான வரையறைகள் அனைத்தையும் உடைத்துவிட்டு நிற்கிறது ராஸலீலா. ஆரம்பம் முடிவு தொடக்கம், காலம், வரிசை என்று எதுவுமின்றி எழுத்தாளனின் எழுத்துத் திறனின் மீதே முழுதுமாய் நிற்கிறது. ஒன்றிரண்டு வரிகளிலேயே வாசிப்பவரை உள்ளிழுக்கும் மாயாஜால நடை. ஒரு நல்ல நாவல் என்று எதைச் சொல்வோம்? ஒரு உச்சத்தைத் தொடுதல், நெகிழ்ச்சி, ஆழமான பார்வை, கவித்துவம், ஒரு வாழ்க்கையை மொத்தமாய் வாழ்ந்து முடித்த சோர்வு இப்படி எதுவும் ராஸலீலா தராது. அபாரமான வேகமான உள்ளே உள்ளே இழுத்துச்செல்லும் எழுத்து. அவர் மீண்டும் மீண்டும் பல இடங்களில் சுட்டிக்காட்டிய இசையைப் போல, நடனத்தைப் போல. ஆனால் ஒரு ஏக்கம்போல இத்தனை அழகாய் வசியம் செய்யும் எழுத்தைக் கொண்டவர் ஏன் ஒரு வடிவத்துக்குள் தன் எழுத்தைக் கொண்டுவரக்கூடாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதற்குப் பதில்சொல்லும்விதமாகக்கூட நாவலில் சிலவரிகள் வருகின்றன. பின்நவீனத்துவம் என்றால் எதையும் முன்கூட்டித் திட்டமிட்டு எப்படி எழுதுவது? நான் பாட்டுக்கு எழுதுகிறேன். அதற்கு அர்த்தம் நீங்கள்தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாய்த் தொகுத்துச் சொல்வதாய் இருந்தால், கதை இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. கண்ணாயிரம் பெருமாளின் அஞ்சல்துறை அனுபவங்கள். இதில் பெரும்பாலும் அலுவலகவாசிகளின் வாழ்க்கை, இப்போது சாரு பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறாரே “அதிகாரம்” அதனால் பீடிக்கப்பட்ட அய்ப்பீயெஸ் களின் அதகளம். இப்படி மொத்தம் இருபத்தாறு கதைகள் முதல் பகுதியில் வருகின்றன. ஒவ்வொரு கதைக்கும் பின்குறிப்புகள் என்ற பெயரில் அதுவே ஒன்றிரண்டு சிறுகதைகளைப் போல நீண்டு கிடக்கின்றன. ஒவ்வொரு கதை, அதாவது அத்தியாயம் தொடங்கும்போதும் ஒரு quote இடம்பெறும். சாதாரணமாய் நடைபெறும் சம்பவங்களாய் நீளும் அத்தியாயத்தைப் படித்து முடித்தவுடன் எதற்குப் படித்தோம் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த quotation-ஐ வாசித்துப் பார்த்து உள்ளர்த்தம் செய்யலாம். நான் சில பல நேரங்களில் இப்படிச் சோதித்துப் பார்த்தேன். சம்பவங்களின் விவரணைக்கும் அந்த கோட்டுக்கும் தூரம் ரொம்ப அதிகமாய் இருந்து என்னை ரொம்பச் சோதித்ததால் அப்புறம் விட்டுவிட்டேன். அவர் போடும் கோட்கள் அருமையாய் இருக்கின்றன. கதையில் இரண்டு இடங்கள் மனயெழுச்சியூட்டுபவை. 1) பெருமாளின் நண்பன், பெருமாளின் கதை பெரும்பாலும் தான் எழுதிக் கொடுத்தது என்று சொல்லும்போது பெருமாள் ஆடைகள் அத்தனையையும் கழற்றிவிட்டு அம்மணமாய் நிற்பது. 2) பாரீஸில் ரோட்டில் ஒருபெண் அப்படியே உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது பெருமாள் உணர்ச்சிவசப்பட்டு, “சுதந்திரம் என்றால் இதுதான். அந்தப் பெண்ணின் சிறுநீரை முத்தமிடவிரும்புகிறேன்” என்று சொல்வது. ஆனால் பின்னர், அங்கு குளிர் அதிகம் என்பதாலும் சாலையில் ஒரு பாத்ரூமுக்கும் இன்னொன்றுக்கும் தூரம் அதிகம் என்பதாலும் நிறையபேர் இப்படித்தான் கழிக்கிறார்கள். அது சாதாரண நிகழ்வு என்றும் தெரிந்துகொள்கிறான்.

அந்தக்காலத்தில் பேனா நண்பர்கள் என்று பல இடங்களில் பல அமைப்புகளாலோ தானாகவோ நட்பை வளர்த்துக்கொண்டனர். அப்படி தபால் போட்டுத்தான் நட்பை வளர்க்க வேண்டிய அளவுக்கு இங்கு யாரும் நண்பர்கள் இல்லாமல் இல்லை. எல்லாமே பெண்களுக்கான தேடல்தான். இணையம் வந்தபிறகு அதன் ஆரம்பகால கட்டத்தில் மெசஞ்சர்கள் கொடிகட்டிப் பறந்தன. MSN இந்தியாவில் ஆபாச உரையாடல்களே ஓடுகின்றன என்று தன் சேவையையே நிறுத்திக்கொண்டது. பின்னர் உரையாடலோடு கேமராக்களும் சேர்ந்துகொண்டதால் இது இன்னும் சூடானது. ராஸலீலாவின் இரண்டாம்பகுதியின் பெரும்பங்கு பெருமாளின்/சாருவின் வாழ்வில் வந்துபோகும் இணையவழிப் பெண்கள் அவர்களது உரையாடல் தான். சாருவின் உரையாடல் மொழி மோசம். its so formatted and not colloquial. அதேநேரம் அந்த உரையாடல்களில் தனிமையும், விரகமும் ஏகத்துக்குக் கொட்டிக்கிடக்கிறது. அதன் உண்மைத்தன்மையினாலேயே அதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. யதார்த்த உலகில் எப்படி நேரடியாக இருவர் நடந்துகொள்ளமுடியாதோ அது இணையத்தில் மிக எளிதாக இருக்கிறது. கொச்சையாக, மனதில் தோன்றுவதை அப்படியே பட்டவர்த்தனமாய் ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளும் வெளியாக இருக்கிறது.

பெண்ணுக்குத் துணையும், தன்னைப் புரிந்துகொள்பவனுக்கான தேடலும், தான் பேசுவதைக் கேட்கும் ஆணுக்கான ஏக்கமும் உரையாடலுக்குக் காரணமாக இருக்கிறது. ஆணுக்கு இது எதிலும் நாட்டமில்லை. அடைத்துவைக்கப்பட்ட இச்சைகளைக் கொட்டவேண்டும். சமூகம் எதையெல்லாம் தடையாக்கி வைத்திருக்கிறதோ அது காட்டாற்றுவெள்ளம்போல் பெருகி ஓடும் இடம். இதைப் பெறுவதற்காக ஆண் பல விஷயங்களைச் சகித்துக் கொள்கிறான். அதில் ஒன்று பெண் பேசுவதற்கெல்லாம் ஊம், அடடா, அப்புறம் என்று கேட்டுவிட்டு அவள் ஓரளவு தன்னைப் பற்றி அன்றைக்குச் சொல்லவேண்டியதைக் கொட்டித் தீர்த்ததும் விரசத்துக்கு இறங்குவது. இதே பெண்கள் நேரில் சந்திக்கும்போது அப்படி ஒருவன் இல்லவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். அல்லது நேரில் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். உள்ளும் புறமுமாய் தனியே பிரித்துவைக்க பெண்களால் முடிகிறது. இதைத்தான் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான பக்கங்கள் தீராமல் சொல்லிச் செல்கிறது. எத்தனைவிதமான அனுபவங்கள் என்று மீட்டி மீட்டிப் பார்க்கிறது. யதார்த்தத்தில் அது கிடைக்க வழியே இல்லை என்பதால் அது பெரிய விஷயமாய்ப் பிரஸ்தாபிக்கப் படுகிறது.

“தமிழ் மொழி மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் இருநூறு பேருக்காகவும், முன்னூறு பேருக்காகவும் இலக்கியம் படைப்பதில்தான் சற்றும் உடன்பாடில்லை. ” – ராஸலீலாவில் ஒரு அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இலக்கிய வாசிப்பாளர் அல்ல. ஆனால் சாருவின் அத்தனை புத்தகங்களையும் வாங்கி பீரோவுக்குள் ஒளித்துவைத்திருக்கிறார். அவருக்கு இரண்டு பெண்கள். ராஜேஷ்குமார் நாவல் மட்டுமே வாசிக்கும் ஒரு வாசகரும்கூட சாருவின் புத்தகத்தைத் தற்செயலாய் வாசித்து பின் தொடர்ந்து அவரது நாலைந்து புத்தகங்கள் வாசித்தார். அவர்கள் வாசிப்பதால் இலக்கியத் தரமில்லாத எழுத்து என்று அர்த்தமில்லை. அவரது வசீகரமான எழுத்து ஒரு காரணம். Political correctness-க்கு எதிரான கலகக்குரல் நாவல் முழுக்க எதிரொலிக்கிறது. நிறைய இடங்கள் இரசிக்க வைக்கிறது. நிறைய அடிக்கோடிட அல்லது பின்னர் அதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று நினைத்து எல்லாமே விடுபட்டுவிட்டது. சின்னச்சின்னதாய் நிறைய விஷயங்கள். முழுநாவலுமே இப்படிச் சின்னச்சின்னதாய் கோர்வையின்றி நிறையக் கிடைப்பதால் தொகுத்துச் சொல்ல ஏதுவாயில்லை. வாசித்து முடித்தவுடன் இதுபோன்று எழுதவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி ஒரு ஸ்டைல். வாசிக்கையிலேயே பின்குறிப்புகளைத் திருப்பிப் பார்த்துக் கொள்ளவேண்டி வருகிறது. அத்தியாயத்தை முடித்து பின் குறிப்பு வரும்போது திரும்ப அத்தியாயத்துக்குள் போய் மீள் வாசிப்புக்கான அவசியத்தையும் சிலநேரங்களில் ஏற்படுத்தி விடுகிறது.

கொண்டாட்டம், nudity, அரசியல் சரிநிலைக்கெதிரான கலகம், அதிகார துஷ்பிரயோகம் இவைதான் நாவல் முழுக்க பிரஸ்தாபிக்கப்படுகின்றன. நிர்வாணத்துக்கு ஆசிரியர் தரும் விளக்கம் ‘அப்படியே இரத்தமும் சதையுமாய்ப் பச்சையாய் இருத்தல்.’ எப்படி ஒருவன் தான் எழுதிய நாவலின் 20% அவன் எழுதித்தந்ததாய்ச் சொன்னதும் பெருமாள் ஆடைகளைக் கலைந்து அம்மணமாகிறானோ அதைப்போல. எந்த அத்தியாயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் மேற்சொன்ன நான்கில் ஒன்று இருக்கும்.

இவையெல்லாவற்றையும் அடக்கிய பித்தான எழுத்துநடை. மது அருந்திவிட்டு எழுதுவது போலவே இருக்கின்றன சில இடங்கள், ஒருவகையான சுரவேகம். அதேவேளையில் நான்லீனியரின் பல சாத்தியங்களைப் புகுத்தித் திணறடிக்கிறார். முன்னும் பின்னும் கோர்த்து ஒரு திறமையான வித்தைக்காரனின் வித்தை போல, ஒரு வலைபோல அத்தியாயங்கள் பின்னிக் கிடக்கின்றன. நான்-லீனியரே ஒருவகையில் தடையாகவும் இருக்கிறது. சொல்லவரும் விஷயத்தின் அழுத்தத்தை நான்-லீனியர் தடுத்துவிடுகிறது. நிறைய அத்தியாயங்களுக்கு சில்வியா பிளாத்தின் ‘The Journals’ -லிருந்து, ஷேக்ஸ்பியர், எல்பிரிட் ஜெலினெக் (The Piano Teacher)-லிருந்து சில வரி கோட் கொடுக்கப்பட்டிருப்பது பொருத்தமாக அழகாக இருக்கிறது. இருந்தும் முதல்பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பதுகதைகளோடு ராஸலீலாவாக வரும் இரண்டாம் பகுதியின் சில அத்தியாயங்களையும் சேர்த்து (அதாவது without web chat) தனிப்புத்தகமாக வந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இணைய உரையாடல்களை அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்தியிருப்பது கடுப்படிக்கிறது. இதற்கு ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கலாம் (உரையாடலே நாவலுக்குத் தேவையில்லை என்றாலும்) (25/12/2016)