கோபி கிருஷ்ணனும் வரம்பு மீறிய பிரதிகளும்

என்னுடைய கட்டுரைகளில் அவ்வப்போது கோபி கிருஷ்ணன் பற்றிக் குறிப்பிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். தமிழில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர்கள் நகுலன், அசோகமித்திரன், ஆதவன், கோபி கிருஷ்ணன். இதில் அசோகமித்திரனைத் தவிர மற்ற மூன்று பேருடைய எழுத்துக்கும் என்னுடைய எழுத்துக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதிலும், கோபியும் நானும் கிட்டத்தட்ட க்ளோன் பண்ணிய ஆடுகள் மாதிரி. தமிழில் transgressive fiction-ஐ அவரும் நானும் சேர்ந்தே எழுதினோம்.

என்னுடைய 12 ஆண்டு தில்லிவாசத்தை முடித்துக்கொண்டு 1989ஆம் ஆண்டு சென்னை வந்தேன். நிரந்தரமாகவே தில்லியில் இருந்துவிடலாம்; தமிழ்நாட்டுப் பக்கமே தலைவைக்க வேண்டாம் என்றுதான் தில்லிக்குச் சென்றேன். ஆனால் ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டி இங்கே வந்து, வந்தவுடனேயே அந்தப் பெண்ணையும் பிரிய நேர்ந்து மிகப் பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டேன். அது வேறு விஷயம். ஆனால் அதே 1989ஆம் ஆண்டு கோபியுடன் எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. ஆனால் அந்த நட்பை நாங்கள் மிக ரகசியமாகவே வைத்துக் கொள்ள நேர்ந்தது. ஏனென்றால், என்னைத் தங்களது ஜென்ம விரோதியாக நினைத்த பலர் கோபிக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.

அடிக்கடி என் அலுவலகத்துக்கு வருவார். ஒன்றாகத் தேநீர் அருந்துவோம். அவர் வைத்திருக்கும் உலகத்திலேயே படு காட்டமான சிகரெட்டை அவரோடு சேர்ந்து நானும் குடிப்பேன். ஏன் இவ்வளவு மோசமான சிகரெட்டைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டால் இதுதான் இருப்பதிலேயே விலை மலிவு என்பார். பாஸிங் ஷோவைவிட காட்டமாகவும் அதைவிட மலிவாகவும் இருக்கும். பெயரும் கேள்விப்படாததாக இருக்கும். சுண்டு விரல் சைஸுக்கு இருக்கும். இதுவரை நான் மது அருந்தாமல் பழகிய ஒரே நண்பர் கோபி. அவர் அருந்துவாரா என்றும் நான் கேட்டதில்லை. பலமுறை அவர் வசித்த அம்பத்தூர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். உங்கள் வீட்டுக் குளியலறை எவ்வளவு அளவோ அந்த அளவுதான் வீடு. பொதுக் கக்கூஸ். அதிலும் இருண்ட குகைக்குள் செல்வது போல் செல்ல வேண்டும். முதல்முறை சென்றபோது வழுக்கி விழுந்து அடுத்த முறையிலிருந்து வெகு முன்னேற்பாடாக அவர் வீட்டுக்குச் செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னாலேயே தண்ணீர் அருந்துவதை நிறுத்தி விடுவேன்.

பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். எப்போது என் மூத்திரப்பை இனியும் தாங்க முடியாது என்று அபாய அறிவிப்பைத் தெரிவிக்கிறதோ அப்போது அவரிடமிருந்து விடை பெறுவேன்.

அவரே என் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால், அநாவசியமாக அவரை பஸ்ஸில் இழுத்தடிக்க வேண்டாம் என்று அதைத் தவிர்த்து விடுவேன். ஆயிரம் இரண்டாயிரத்துக்கெல்லாம் தினம் 14 மணி நேரம் வேலை செய்திருக்கிறார். எல்லாம் ப்ரூஃப் ரீடிங் வேலை. கண்ணுக்கு நேராக ஏதாவது அயோக்கியத்தனம் நடந்தால் உடனே அதை எதிர்த்துக் கேட்டு அந்த வேலையைப் போக்கிக்கொண்டு விடுவார். அதாவது, அவரை யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார். ஆனால் சக தொழிலாளிக்கு எதுவும் நேரக் கூடாது. பொங்கி எழுந்து எதிர்ப்புத் தெரிவித்து முதலாளியால் வேலை நீக்கம் செய்யப்படுவார். என்னிடம் வந்து ’அந்த முதலாளி ரொம்ப நல்லவர், ரொம்ப நல்லவர்’ என்று பலமுறை சொல்வார்.

கோபி அவருடைய 58ஆவது வயதில் இறந்தார் என்று நினைக்கிறேன். அதுவரை அவர் என்னை விட 10 வயது சிறியவர் என்றே எண்ணியிருந்தேன். அவ்வளவு இளமையாக இருப்பார். அவரைப் போன்ற ஒரு மனிதரை திரேதா யுகத்தில்தான் பார்த்திருக்க முடியும். இயேசு கிறிஸ்து ஒரு மனிதனுக்கான எவ்வளவு நற்பண்புகளைக் கூறுகிறாரோ அத்தனை நற்பண்புகளையும் ஒருங்கே பெற்றவர் கோபி. அதை அவரிடம் ஒரு மணி நேரம் பழகியவர்களால் கூடப் புரிந்துகொள்ள முடியும்.

இதைத் தட்டச்சு செய்யும்போது என் கண்ணீர் இந்த எழுத்துக்களை மறைக்கிறது. ஏன் என்றால், பிறந்து ஒருசில தினங்களே ஆன குழந்தை எப்படி இருக்குமோ அந்த அளவுக்குப் புனிதமான ஒரு ஆத்மாவாக வாழ்ந்தவர் கோபி. இந்த உலகின் கசடுகள் எதுவுமே படியாத ஒரு அற்புத மனிதன் கோபி. அவருடன் நீங்கள் பழகியிருந்தால் இயேசு போன்ற ஒரு தீர்க்கதரிசியுடன் பழகியதற்கு ஒப்பாகும்.

நான் கண்ணை மூடினால் இயேசுவுடன் பேச முடியும் என்பார் அடிக்கடி. உண்மையில் இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு அற்புதமான மனிதன் சாத்தியமே இல்லை. இப்போதும் எனக்கு அந்த நாட்களை எண்ணினால் ஏதோ ஒரு கடவுளுடன் பழகியது போலவே இருக்கிறது. அவர் மரணமடைவதற்கு முன்னால் பத்தே நாட்களில் எனக்கு ஒரு நூறு போன் செய்திருப்பார். நேரில் வரச் சொல்லிதான் அத்தனை போன் அழைப்புகளும். போகலாம் போகலாம் என்று இருந்துவிட்டேன்.  கடைசியில் மரணச் செய்தி வந்தது.

என்னிடம் அவர் சொன்னது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு மாதம் 500 ரூபாய் கிடைத்தால் இன்னும் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்வேன். எதற்கு அந்த 500 ரூபாய்? அவருடைய காட்டமான சிகரெட்டுகளுக்கும், தேனீருக்கும். ஆம். சிகரெட்டும், தேனீரும்தான் அவருடைய உணவு. செய்ன் ஸ்மோக்கர். தேனீரும் அப்படியே. சாப்பாடு சாப்பிட மாட்டார். சாப்பிடவும் வழியில்லை. அவருடைய மனைவிதான் எங்கெங்கோ ப்ரூஃப் ரீடிங் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

கஷ்டம் என்றால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அது மட்டுமல்லாமல், கோபியிடம் உள்ள ஒரு பழக்கம், தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்ல மாட்டார். அவர் கேட்ட ஐநூறு ரூபாய்க்காக அவர் என்னிடம் கொடுத்திருந்த ஐந்தாறு சிறுகதைகளை எடுத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த பத்திரிகைகளில் எல்லாம் ஏறி இறங்கினேன்.

“நீங்கள் வேண்டுமானால் கதை கொடுங்கள்; போடுகிறோம். கோபி கிருஷ்ணனை யாருக்குத் தெரியும்?” என்றார்கள்.

ஒரு பத்திரிகையில் அவர் கதை புரியவில்லை என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தார்கள்.

எனக்கோ இப்போது போல் நண்பர் வட்டமோ, பரவலான வாசகர் வட்டமோ கிடையாது. கடைசியில் இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வாஸந்தி அவர் கதைகளை ஏற்றுக் கொண்டார்.  ஆனால் அப்பத்திரிகையின் 1500 ரூபாய் செக் வந்த போது அவர் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது.

சில அசடுகள் சொல்வதுபோல் அவர் தற்கொலையெல்லாம் செய்துகொள்ளவில்லை. அவர் அப்படிப்பட்டவரும் கிடையாது. அன்றாட வாழ்வுக்கான பணம் இல்லாததால் மட்டுமே அவர் இறந்தார். அவருடைய தேவை ஒரு நாளைக்கு 25 ரூ. தேநீர், சிகரெட் மற்றும் அவருடைய நரம்புத் தளர்ச்சி நிவர்த்திக்கான அத்தியாவசியமான மாத்திரைகள் ஆகியவற்றுக்கு. அந்தப் பணம் அவருக்குக் கிடைக்காததாலேயே அவர் இறந்தார். இறப்பதற்கு முன்னால் அவர் எழுதிய போஸ்ட் கார்ட் என்னிடம் பத்திரமாக உள்ளது.

என்னுடைய எழுத்து உங்களுக்குப் பிடித்தால் அதைவிட அதிகமாக கோபியின் எழுத்து உங்களுக்குப் பிடிக்கும். கோபியின் எழுத்தை வெகுவாக சிலாகிக்கும் சில நண்பர்களுக்கு என்னுடைய எழுத்து பிடிக்கவே பிடிக்காது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கோபியின் madness நிஜமானது, சாருவின் madness பாசாங்கானது.

முதலில் இப்படிப்பட்ட விமர்சனமே முட்டாள்தனமானது என்பேன். பைத்தியம் பற்றி எதுவுமே தெரியாத மூடர்கள்தான் இப்படிச் சொல்லுவார்கள். சரி, நான் ஒன்று கேட்கிறேன். உங்களுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் ஒரே ஒரு நாள் பாசாங்கு செய்து பாருங்கள். அதற்குப் பிறகு நீங்கள் கடவுளையே சாட்சிக்குக் கொண்டு வந்தாலும் நீங்கள் பைத்தியம் இல்லை என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

சரி, நீங்களே உங்கள் நண்பரிடம் ஒரு பேச்சுக்கு “நான் பைத்தியம் இல்லை” என்று சொல்லிப் பாருங்கள். விளைவு தெரியும்.

பைத்தியங்கள் அதிகமுள்ள ஒரு ஊருக்கு – என் நண்பனின் வீட்டுக்குச் –  சென்றிருந்தேன். நண்பன் சொன்னான். “பக்கத்து வீட்டு அம்பியிடம் ஜாக்கிரதையாக இரு சாரு; அவன் ஒரு மாதிரி.” அடுத்த நாள் பக்கத்து வீட்டு அம்பி என்னிடம் சொன்னான். “சாரு, உங்கள் நண்பனுக்கு மெண்டல் பிரச்சினையாகி இப்போது மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ஜாக்கிரதையாக இருங்கள்.”

நீங்கள் நல்லவனாக நடிக்கலாம்; கெட்டவனாக நடிக்கலாம்; தியாகியாக நடிக்கலாம்; ஸ்திரீலோலனாக நடிக்கலாம்; ஏக பத்தினி விரதனாக நடிக்கலாம்; அடக்கமானவனாக நடிக்கலாம். ஆனால் ஒருபோதும் பைத்தியமாக நடிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த நடிப்பே உங்களைப் பைத்தியமாக்கி விடும்.

பின்குறிப்பு: என்னுடைய வரம்பு மீறிய பிரதிகள் என்ற நூலில் கோபி கிருஷ்ணனைப் பற்றிய விரிவான ஒரு கட்டுரை உள்ளது. முடிந்தால் படித்துப் பார்க்கவும்.

27.4.2009.

மேற்கண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்து கொடுத்தவர் சுபத்ரா லட்சுமிகாந்தன்.  அவருக்கு என் நன்றி.  இந்தக் கட்டுரை ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலிருந்து விரைவில் வெளிவர இருக்கும் என்னுடைய கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்ற தொகுப்பில் உள்ளது.  என்னுடைய நூல்களில் மிக முக்கியமான ஒரு தொகுப்பு அது.  ஆனாலும் தமிழ் வாசிப்புச் சூழல் ஒன்றும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இல்லை.  நான் எழுதிய அறம் பொருள் இன்பம், நாடோடியின் நாட்குறிப்புகள் போன்ற நூல்கள் வெளிவந்த உடனேயே 2000 பிரதிகள் விற்றிருக்க வேண்டாமா? இந்த நூல்களெல்லாம் கல்லூரி மாணவர்களும் கூட வாசிக்க வேண்டியவை ஆயிற்றே?

***

இனி சாருஆன்லைன் இணைய தளத்தில் வாரம் இரண்டு கட்டுரைகள் எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணைய தளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai