இப்படி 20 ஆண்டு காலமாக நடந்த்து எதையும் தெரிந்து கொள்ளாமல், புத்தகம் வாங்கிப் படிக்காமல் இணைய தளங்களில் நடக்கும் அடிதடி சண்டைகளை மட்டும் மேய்ந்து விட்டு ”என்னப்பா இலக்கியம்… ஒரே சண்டை” என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அது ஒருவித்த்தில் இங்கே தமிழ் இலக்கியச் சூழலில் நடந்து கொண்டிருக்கும் சீரிய முயற்சிகளையும் சாதனைகளையும் அவமானப்படுத்துவதாகும். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். உயிரோசை இணைய தளத்தில் இந்திரா பார்த்தசாரதி ஒரு பத்தி எழுதினார். மிக அருமையான பத்தி. எண்பது வயதிலும் ஒரு இளைஞனைப் போல் இ.பா. சிலம்பாட்டம் ஆடிய பத்தி அது. அதில் என்ன அடிதடி இருக்கிறது? அதைப் படிக்காமல் அடிதடி விவகாரங்களை மட்டுமே படித்து விட்டுப் புலம்புவதை என்னவென்று சொல்வது?
மேலும் ஒரு விஷயம். கேபிள் சங்கர், லக்கிலுக், தண்டோரா மணி, நர்சிம், அதிஷா, ஜ்யோராம் சுந்தர் போன்ற பலரும் வலைப்பூவில் எழுதுகிறார்கள். இவர்கள் யாரும் அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போய் மனைவியை அழைத்துக் கொண்டு (பேச்சுலர் பாய்ஸ் மன்னிக்கவும்) பீச்சுக்கோ கோவிலுக்கோ போய் சமூகத் தொண்டு செய்யாமல் தமிழில் தானே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? குடும்பத்தை கவனிப்பதை விட்டு விட்டு எழுத்து என்ற ஒரு விஷயத்தில்தானே ஈடுபடுகிறார்கள்? ஆபீஸ் வேலையை ஒழுங்காக செய்து சிறந்த குமாஸ்தா என்ற ஜனாதிபதி விருதுக்கா இவர்கள் ஆசைப் படுகிறார்கள்? எழுத்தில் தானே ஐயா தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள்?
இந்த இட்த்தில் எனக்கு விஜய் மகேந்திரன் என்ற நண்பரின் பெயர் ஞாபகம் வருகிறது. அவருடைய ’நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதையைக் கூட இலக்கியம் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டுக் குழந்தை ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டு வந்து உங்களிடம் காண்பித்தால் அதை வாங்கி “வான் கோவைச் நீ அவமானப்படுத்தி விட்டாய்” என்று சொல்லி குப்பைக் கூடையிலா போடுவீர்கள்? அந்த மாதிரி சிறுகதைகள் அவை. இது பற்றி விஜய் மகேந்திரனை பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இந்தக் கிண்டலை மற்றவர்களாக இருந்தால் அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொண்டு என்னைப் பகைவனாக நினைத்துத் தூக்கம் வராமல் அவதிப்பட்டிருப்பார்கள். இருந்தாலும் விஜய் மகேந்திரன் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறார். காரணம் என்ன? அவர் ஒரு டாக்டர். இளைஞர். ஏன் அவர் மாலை நேரங்களில் பெண்களை ஒதுக்கிக் கொண்டு டென்.டி போன்ற ப்ப்களில் ஒதுங்காமல் என்னையும் ஹமீதையும் வந்து பார்க்கிறார்? இலக்கியம் என்ற விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதல். அதனால்தான் நானும் ஹமீதும் எவ்வளவு கிண்டல் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து நிற்கிறார். என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.
அதனால் நண்பா, இங்கே எவ்வளவு அடிதடிகள் நடந்தாலும் இலக்கிய இயக்கம் மட்டும் நடந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் இங்கே சிலருக்கு இலக்கியம் மட்டும்தான் உயிர்மூச்சாக இருந்து கொண்டிருக்கிறது. இது அரசாங்க அலுவலகங்களில் குமாஸ்தா வேலையை செம்மையாகச் செய்து ஜனாதிபதி விருது வாங்கும் கனவில் இருப்பவர்களுக்குப் புரியாது.
மேலும், எனக்கு எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் உள்ளன. நான் பிறந்து வளர்ந்த்து நாகூர். என்னுடைய ஆரம்ப 17 ஆண்டுகள் அந்த ஊரில்தான் கழிந்தன. அந்த நாகூர் கதைகளை ஒருநாள் ஹமீதிடம் நீண்ட நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன். இதை நாவலாக எழுதுங்களேன் என்றார். அதே போல் தில்லியில் நான் கழித்த 15 ஆண்டுகளும் இன்னும் எழுதப்படவில்லை. அதேபோல் அரசியலில் மிக உயர்ந்த இட்த்தில் என் நண்பர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் எனக்கும் நண்பர். அதனால் என் செவிகளில் ஆயிரக் கணக்கான விஷயங்கள் வந்து விழுகின்றன. அதையெல்லாம் நான் எழுதியதே இல்லை. எழுதவும் முடியாது. ஏனென்றால், அதெல்லாம் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்கள். அடுத்தவரின் அந்தரங்கம் பற்றி எனக்குத் தெரிந்தாலும் அதை எழுதும் அளவுக்கு நான் அநாகரிகமானவன் அல்ல. அப்படி இருக்கும் போது ஒரு ஜுஜுபி விஷயத்தைச் சொல்லி விட்டு “இதைப் பற்றி எழுதி விடாதே, எழுதி விடாதே’ என்று கதறுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதுபோல் பல ஜுஜுபி நண்பர்கள் கதறிக் கதறி எனக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து அந்தக் கோமாளித்தனத்தை நிறுத்துங்கள் நண்பர்களே!
(கூர்க் சென்று கொண்டிருக்கும்போது காரில் அமர்ந்தபடி டைப் செய்தேன். தவறுகள் இருக்கும். மன்னியுங்கள்…)
24.7.2010.
1.10 p.m.
