யானையைத் தின்பது : வளன்

ஒரு யானையைத்

தின்பது எப்படி?

பொறுமையாக 

ஒரு வேளைக்கு ஒரு கடி.

இப்படி யானையைத்

தின்பது போலதான்

இந்த மரணத்தின் நாட்களைக்

கடக்க வேண்டியிருக்கிறது.

சுத்தமாக இருக்கச் சொல்லி

எங்கிருந்தோ உத்தரவு வருகிறது

பத்து நபர்களுக்கு மேல் 

யாரும் சேர்ந்திருக்கக் கூடாது என்கிறார்கள்

தனித்திருக்கச் சொல்கிறார்கள்

இருமினாலோ தும்மினாலோ

அனைத்து கண்களும்

பயத்தையும் சந்தேகத்தையும் உமிழ்கின்றன

மூடப்பட்ட வழிபாட்டுத்தலங்களில்

கடவுளர்கள் தனிமையிலிருக்கிறார்கள்

எப்போது மாறும் இந்த நிலை 

என்பதுதான் பலரது கேள்வி.

இந்த நிலை மாறும்

இன்னொரு தடுப்பூசி குத்திக்கொண்டு

இந்தப் புதிய வைரஸுடன்

இணைந்து வாழத்தான் போகிறோம்

இந்த வசந்தம்

இன்னொரு கோடையை கடக்கவிருப்பதைப் போல

இந்த மரணத்தின் காலத்தையும் கடக்கத்தான் போகிறோம்

இந்த இருண்ட காலத்தின் கதையை

அடுத்த தலைமுறைக்குச் சொல்ல

நம்மில் பலர் இருக்கத்தான் போகிறோம்

அதனால்

பதற்றமில்லாமல்

ஒரு யானையைத் தின்பது போல

மெதுவாக இந்த சூழலைக் கடந்துவிடுங்கள்.

  • வளன்
  • kingvalan093@gmail.com