மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை

“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்
எனக் கேட்கும் மோகினீ…,

“எந்த தேசம் போனாலும்
அங்கே பெண்களையும்
குழந்தைகளையும் தெருக்களையும்
கவனிப்பேன்
எங்கே குழந்தைகளும்
பெண்களும் மகிழ்ச்சியாய்
இருக்கிறார்களோ,
எங்கே தெருக்களில் நாய்கள்
அலைவதில்லையோ,
அதுவே என் கனவு தேசம்

அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்
பத்திரிகையில் செய்திகளே இல்லை
பிரதமரின் வெளியுறவுச்
செய்திகளும்
சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்
மட்டுமே இருந்தன
மருத்துவரும் யாருமில்லை
போலீஸ்கூட இல்லை
இரவுக் காட்சி சினிமாவுக்குப்
போனபோது என் முன்னால்
நின்றவர்தான் பிரதமர் என்றான்
எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்
சினிமா முடிந்து பிரதமர்
சைக்கிளில் வீடு திரும்பிக்
கொண்டிருந்தார்.

இந்த தேசத்தில் என்னால்
எழுதவே முடியாது
நரகத்திலிருந்து மட்டுமே
எழுத முடியும்
ஜாரின் ரஷ்யாவில்
எத்தனையெத்தனை மேதைகள்
எழுதினார்கள்

நீ என்னோடு பேசினால்
கவிதை நின்றுவிடு
மென் மோகினிக் குட்டீ!!”