பூச்சி – 34

கணேஷ் அன்புவின் கடிதம். கடிதத்தின் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாராட்டு வார்த்தை உள்ளது.  ”உங்களது அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் மேலும் மேலும்  என்னை வியக்க வைக்கிறது என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு தொடர்கிறேன்.”   ஏன் ஐயா, யாரை யார் பாராட்டுவது?  நட்பின் காரணமாகத் தோள் மீது கை போட்டால் இருவரும் சமம் என நினைத்துக் கொள்வதா?  அமார்த்யா சென்னிடம் போய் “உங்கள் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைக்கிறது” என்று சொல்ல முடியுமா?  சொல்லலாம்.  சொல்பவர் அமார்த்யா சென்னை விடப் பெரிய ஆளாக இருக்க வேண்டும்.  எழுத்துதான் என் உயிர் மூச்சு என்கிறேன்.  என்னிடம் வந்து உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது என்றால் என்ன அர்த்தம்?  சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம்.  ஆனால் என்னோடு பத்து வருடம் பழகிய ஒருவர் அப்படி இருக்க முடியுமா?  கணேஷ் அன்பு அவர் பெயருக்கேற்றபடியே மிக அன்பானவர்.  ஆனால் எழுத்து என்று வரும்போது மட்டும் ஏன் இந்தக் குளறுபடி.  அதனால்தான் நண்பர்களிடம் நான் எழுத்தில் கவனமாக இருக்கும்படி எப்போதும் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறேன்.  உங்கள் காதலியோடு ஏதேனும் பிரச்சினை ஆகி அதை மெஸேஜின் மூலம் தீர்க்க முனைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது ப்ரேக் அப் வரை போய் விடும்.  அதை விடப் பேசி விடலாம்.  பேச்சு எப்போதுமே குளுமை.  எழுத்து நெருப்பு.  நீங்கள் நல்லதாக நினைத்து எழுதினாலும் சுட்டு விடும்.  கணேஷ் நல்லதாக நினைத்துத்தான் எழுதியிருக்கிறார்.  ஆனாலும் சுடுகிறது.  யாரை யார் பாராட்டுவது?  வயது வேண்டாமா?  அனுபவம் வேண்டாமா?  கணேஷின் தந்தைக்கே என்னை விட ஏழெட்டு வயது குறைவு.  நான் இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதுவும் இருப்பதிலேயே ஆக மட்டமான ஒரு அரசுத் துறையில், இருப்பதிலேயே ஆக மட்டமான ஒரு ஸ்டெனோ வேலையில் இருந்து கொண்டு நூறு புத்தகங்கள்.  உலக சினிமா.  கள ஆய்வு.  வீட்டு வேலை.  வீட்டில் எடுபிடி வேலை போக எழுத அமரவே மாலை நான்கு ஆகி விடுகிறது.  இத்தனைக்கும் இடையில் நூறு புத்தகங்கள்.  என் அர்ப்பணிப்பு உங்களுக்கு வியப்பு அளிக்கிறது!  ரமண மகரிஷியிடம் போய் சாமி, உங்கள் அர்ப்பணிப்பு எனக்கு வியப்பு அளிக்கிறது என்று சொல்வீர்களா?  அடக்கம் வேண்டும் கணேஷ், நேர் வாழ்வில் மட்டும் இருந்தால் போதாது.  எழுத்திலும்.  பாராட்டும்போது கூட கவனம் தேவை.  எத்தனை முறை நான் தஸ்தயேவ்ஸ்கியின் அழையா விருந்தாளி கதை பற்றிச் சொல்லியிருக்கிறேன்?  நாம் நல்லது செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டே கெடுதல் செய்து விடுகிறோம்.  அப்படியேதான் பாராட்டும் சில சமயம் அவமதிக்கும் செயலாக மாறி விடும்.

***   

வாசகர் வட்ட சந்திப்புகளில் நானும் சீனியும் கருப்பசாமியும் செல்வகுமாரும் மற்ற நண்பர்களும் உரையாடல்களில் அமர்வது வழக்கம்.  மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்தால் அதிகாலை வரை போகும். பல சமயங்களில் கணேஷும் இருந்திருக்கிறார். அரிதாக சில சமயம் விவாதம் இப்போது இந்தக் கடிதம் மாதிரி விபரீதம் ஆகி நான் கிளம்பிப் போய் விடுவேன்.  எனக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லை. இப்போது இந்த விவாதத்தையே எடுத்துக் கொண்டால் நான் ஆடுவது சதுரங்கம்.  கணேஷ் ஆடுவது கபடி.  ரெண்டுக்கும் சம்பந்தம் உண்டா?  பிராமணன் மாடு சாப்பிட்டால் எனக்கென்ன?  மனுசனைச் சாப்பிட்டால் எனக்கென்ன?  மனுவில் என்ன எழுதியிருந்தால் எனக்கென்ன?  நாம் இப்போது பிராமணனையும் மனுவையும் பற்றியா பேசிக் கொண்டிருக்கிறோம்?  வேதங்களைப் பற்றியா பேசிக் கொண்டிருக்கிறோம்?  நான் பேசுவது ஜீவகாருண்யம் பற்றி. அதற்கும் பிராமணனுக்கும் என்ன சம்பந்தம்?  மேலும், என்னோடு உடன்படவே முடியாத நிலைப்பாட்டில் இருக்கும் போது ஏன் இத்தனை பெரிய கடிதம்?  இதனால் யாருக்கு என்ன பயன்?  இன்னும் கொஞ்சம் நான் இந்து மதத்துக்கு ஆதரவாக எழுத வேண்டியிருக்கும்.  எத்தனை பெரிய துரதிர்ஷ்டம்!  மதம் என்பதற்கே எதிரானவன் நான்.  எல்லா மதங்களுமே மனிதனுக்கு எதிரானவைதான்.  எல்லா மதங்களுமே வன்முறையான கருத்துக்களையும் கோட்பாடுகளையும் கொண்டவைதான்.  நான் சொல்வதே சரியான கருத்து – இதன் நீட்சி: நான் வணங்கும் கடவுளே உண்மையான கடவுள்.  இப்படிச்  சொல்லும்போதே வன்முறை ஆரம்பித்து விடுகிறதே? இறைவனுக்கு மதம் கிடையாது என்கிற போது மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனுக்கு ஏது மதம்?  அதனால்தான் ஒரு மதத்துக்கு ஆதரவாக எழுதுவது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டேன்.

விவாதங்களில் ஈடுபடுவது எனக்கு மிகவும் ஆயாசம் தருகிறது.  ஏனென்றால், விவாதம் என்பதே எனக்கு மீண்டும் மீண்டும் மதமாற்றத்தை நினைவுபடுத்துகிறது.  மதமாற்றம் போன்ற அயோக்கியத்தனமான, சமூக விரோதமான, மனித விரோதமான காரியம் வேறு எதுவும் இல்லை. மதமாற்றம் செய்யச் செல்பவர்கள் சிலவேளைகளில் கொல்லப்படுகின்றபோது எனக்குள் அது எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்துவதில்லை.  நீ ஒரு மனிதனின் நம்பிக்கையையே அழித்தொழிக்கக் கிளம்புகிறாய் என்கிற போது உன்னை அவன் அழிக்கிறான்.  அவ்வளவுதான்.  ரவுடிகளின் மோதலில் ஒரு ரவுடி இறந்தால் நாம் யாரேனும் வருத்தப்படுகிறோமா?  அப்படித்தான் பார்க்கிறேன் இந்த விஷயத்தை.  ஏனென்றால், மதமாற்றம் செய்பவன் உங்கள் கடவுளை மட்டும் மாற்றவில்லை.  உங்கள் மொழியை மாற்றுகிறான்; உங்கள் சிந்தனையை மாற்றுகிறான்; உங்கள் கலாச்சாரத்தை மாற்றுகிறான்; உங்கள் கொண்டாட்டங்களை, உங்கள் பண்டிகைகளை, உங்கள் வரலாற்றை, உங்கள் பண்பாட்டை, உங்கள் பாரம்பரியத்தை, உங்கள் மூதாதையரை, உங்கள் மரபை, உங்கள் மண்ணை, உங்கள் உணவை, உங்கள் நம்பிக்கைகளை, சுருக்கமாகச் சொன்னால் உங்கள் அடையாளத்தையே மாற்றுகிறான்.  அதற்கு முன் இருந்த நீங்கள் வேறு; மதம் மாறிய பிறகான நீங்கள் வேறு.  சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  பொட்டு வைத்துக் கொள்வது இந்து மரபு. பொட்டு இங்கே புனிதம்.  பொட்டு அழிந்தால் விதவை என்று பொருள்.  ஆனால் பொட்டு வைக்காதே என்றது கிறித்தவம். இங்கே உள்ளவர்களும் பொட்டை அழித்துக் கொண்டார்கள்.  காரணம், கிறித்தவம் இவர்களுக்குக் கல்வியைக் கொடுத்தது.  வறுமையில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பணம் கடவுள் மாதிரி இல்லையா? என்னது, பணமா?  பின்னே?  இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு என்ன ஞானத்தையா கொடுத்தது?  உத்தியோகமும் அதன் மூலமான பணமும்தானே?  அதனால் பாதிரிகள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டார்கள் இந்துக்கள்.  இந்து மதம் இவர்களுக்குக் கல்வியைக் கொடுக்கவில்லை.  மாற்றான் கொடுத்தான்.  அதற்காகத் தங்கள் பண்பாட்டு அடையாளத்தையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருந்தார்கள்.  தவறு என்று சொல்லவில்லை.  தங்கள் கலாச்சாரத்தின் ஆணி வேராக இருந்த அடையாளங்களைக் கூடத் துறப்பதற்குத் தயாராக இருந்தார்கள் மதம் மாறியவர்கள்.  அதேபோல் மலரும் சூடக் கூடாது என்றார்கள்.  அதுவும் ஒரு பண்பாட்டு அடையாளம்.  அதையும் தள்ளி வைத்தார்கள் இந்துக்கள்.

இன்றைய நிலையில் இந்தியாவில் வசிக்கும் நடுத்தர வர்க்க இந்துக்களில் 90 சதவிகிதத்தினர் மனோதர்மத்தில் கிறித்தவர்களே ஆவர்.  ஏனென்றால், அவர்கள் படிப்பது பெரும்பாலும் கிறித்தவப் பள்ளிகளில்.  அங்கே அவர்களுக்குப் பணம் சம்பாதிக்க உதவக் கூடிய கல்வியோடு கிறித்தவக் கோட்பாடுகளும் கற்பிக்கப்படுகின்றன.  அதற்காக பைபிள் வகுப்பு என்று நினைத்து விடாதீர்கள்.  காற்று எப்படி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறதோ அதேபோல் நமக்கு வெளிப்படையாகப் புலனாகாத அளவில் பாவம் புண்ணியம் பற்றிய கருத்தாக்கங்கள் மனிதர்களின் மனதில் புகுத்தப்பட்டு விடுகிறது.  இந்து மதத்தில் இந்தப் பாவ புண்ணியப் பாகுபாடே கிடையாது.  ”ஏ பாவிகளே!” என்ற அழைப்பே இந்து மதத்தில் இல்லை. இந்து மதத்தில் உடம்பு ஒரு கொண்டாட்டம்; செக்ஸ் ஒரு கொண்டாட்டம். எல்லாமே அதில் கொண்டாட்டம்தான். கோவில்களைப் பார்த்தாலே அது தெரியும்.  ஆனால் கிறித்தவத்தின் அடிப்படையே பாவம்தான். பாவம் என்பதிலிருந்துதான் கிறித்தவமே துவங்குகிறது. 

மேலும், இந்துக்களுக்கு இளம் பிராயத்திலிருந்தே ஆங்கிலேயர்களால் இவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறது: நீ இந்துவாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்; அவமானப்பட வேண்டும்.  இன்றளவும் மேலைநாட்டினரால் இந்துக்களுக்கு இது கற்பிக்கப்பட்டு வருகிறது.  ”உன்னிடம் சாதிப் பாகுபாடு இருந்தது; நீ பெண்களை ஒடுக்கினாய்; விதவைகளைத் தீயிட்டுக் கொளுத்தினாய்.  உன் மதம் கீழானது; உன் மதம் மனித விரோதமானது. உன் மதத்தில் சமத்துவம் இல்லை. அதற்காக நீ வெட்கப்பட வேண்டும்.  குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும்.”  இதுதான் பிரிட்டிஷ்காரர்கள் இந்துவுக்குக் கற்பித்தது.  இந்துவும் கேட்டுக் கொண்டான்.  ஒப்புக் கொண்டான்.  இப்போது குற்றவுணர்ச்சி கொள்கிறான்.  அதனால்தான் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறியவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் பிராமணர்கள்.  அவர்களெல்லாம் மேற்சொன்னபடி தங்கள் மதத்தைப் பார்த்து குற்றவுணர்ச்சி கொண்டவர்களே.  இப்போதும் இந்து முற்போக்குவாதிகளும், இந்து புத்திஜீவிகளும், இந்து இடதுசாரிகளும், இந்து நாத்திகர்களும் இந்து மதச்சார்பற்றவர்களும் இந்து எழுத்தாளர்களும் இஸ்லாமிய ஆதரவாளர்களாகவே இருப்பதன் காரணம் இதுதான்.  சாதிப் பாகுபாட்டைக் கொண்ட இழிவான இந்து மதத்தில் இருப்பதா?  அதற்காக மதம் மாறவும் முடியாது.  அதனால்தான் தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்துக் கொண்டு திரிகிறார்கள். 

இந்தியாவில் மதச்சார்பற்ற நிலை என்றால் என்ன?  இந்து மதத்தைத் திட்ட வேண்டும்.  ஆனால் இஸ்லாமை அரவணைக்க வேண்டும்.  கேட்டால் அவர்கள் சிறுபான்மையினர்.  கருணாநிதி எப்படி இருந்தார்?  ஒரு மாநிலத்துக்கே முதல்வர்.  இங்கே உள்ள இந்துக்களும்தானே அவருக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள்?  அவர் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டார்.  ஆனால் ரம்ஸானுக்கு வாழ்த்து சொல்வார்.  ஸ்டாலின் அவர் வாரிசு.  ஏதோ ஒரு கோவிலில் அவருக்குத் திருநீறு வைத்து விட்டார்கள்.  ஏதோ தேள் கொட்டி விட்டது போல அதை எல்லோரும் பார்க்கப் பார்க்க அழித்தார்.  ஆனால் ரம்ஸான் பண்டிகைக்கு தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஈ ஈ என்று இளிக்கிறார்.  இதுதான் மதச்சார்பின்மை.  மதச்சார்பின்மை என்றாலே இந்து எதிர்ப்பு; இஸ்லாமிய ஆதரவு. 

தில்லியில் ஒரு இந்திக் கவிஞனோடு நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு பாபா கோவில் குறுக்கிட்டது.  உள்ளே செல்லத்தான் விருப்பம்.  ஆனால் கூட்டமாக இருந்ததால் வெளியிலேயே நின்று வணங்கினேன்.  கவிஞனும் வணங்கினான்.  பிறகு சொல்கிறான், இப்போதெல்லாம் இப்படி சாமி கும்பிடுவதெல்லாம் கூட பயந்து பயந்து செய்ய வேண்டியிருக்கிறது.  ஏன்யா என்று கேட்டால், எழுத்தாளர்களெல்லாம் இப்படி சாமி கும்பிட்டால் மதவாதி என்றும் இந்துத்துவா என்றும் சொல்லி விடுகிறார்கள்; சக எழுத்தாளர்களே அப்படிச் சொல்கிறார்கள் என்றான்.  இதுதான் இந்தியாவில் ஒரு இந்துவின் நிலை.  ஒரு இந்துவின் இறை நம்பிக்கையே இங்கே கேலி செய்யப்படுகிறது.  ஆனால் ஒரு முஸ்லீம் அல்லது கிறித்தவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் பிரச்சினை இல்லை.      

ஆனால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் அல்ல; தென்னமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் நடந்த கொடுமைகளை ஒப்பிடும்போது. ஸ்பெய்னின் அரசி இஸபெல்லா 1492-இல் கொலம்பஸை இந்தியா சென்று வருமாறு ஆணையிட்டாள்.  ஏனென்றால் இந்தியாவில்தான் தங்கமும் பவளமும் அதிகம். Nina, Pinta மற்றும் சாந்த்தா மரியா ஆகிய மூன்று கப்பல்களில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி 1492 அன்று இந்தியாவை நோக்கிக் கிளம்பிய கொலம்பஸ் இரண்டரை மாத கடல் பயணத்துக்குப் பிறகு அக்டோபர் 12-ஆம் தேதி நிலத்தைக் கண்டார்.  ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அந்த நிலம் இந்தியா அல்ல.  அது மத்திய அமெரிக்காவில் இருந்த ஒரு தீவு.  அப்போது ஆரம்பித்தது ஒரு பேரழிவின் கதை. எறும்பு யானையைத் தின்ற கதையாக ஸ்பெய்ன், போர்த்துகல் என்ற இரண்டு ஆட்டாம்புழுக்கை நாடுகள் ஒட்டு மொத்த அமெரிக்க கண்டத்தையே கபளீகரம் செய்தன.  கொலம்பஸ் பஹாமா தீவு ஒன்றில் இறங்கியதும் அவர் கண்டது அவர்களில் ஆண் பெண் யாருமே ஆடை அணிந்திருக்கவில்லை; பிறந்த மேனியராக இருந்தார்கள் என்பதுதான்.  இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்ற ஐரோப்பியர்களின் நம்பிக்கையை கப்பலை விட்டு இறங்கியதும் அவர்கள் கண்ட காட்சி உறுதிப்படுத்தியது.  ஆனால் ’இந்தியர்கள்’ ஆடை அணிந்திருக்கவில்லையே தவிர தங்கள் நிலத்துக்குப் புதிதாய் வந்து இறங்கியவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து வரவேற்றார்கள்.  பதிலுக்கு ஐரோப்பியர்கள் அவர்களுக்குக் கொடுத்தது சிலுவை.  கொலைக்கருவியாக இருந்த ஒரு ஆயுதத்தைத் தியாகத்தின் குறியீடாக மாற்றினார் யேசு.  ஆனால் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே அதே தியாகக் குறியீட்டை தென்னமெரிக்க இந்தியர்களுக்கு மரண ஓலையாக மாற்றிக் கொடுத்தார்கள் ஐரோப்பியக் கிறித்தவர்கள்.  இந்த சிலுவையை வணங்கு; இல்லாவிட்டால் இந்த சிலுவையில் அறையப்படுவாய்.  ஆயிரக்கணக்கான பாதிரிகள் தென்னமெரிக்க நிலங்களில் பைபிளோடு வந்து இறங்கினார்கள்.  கூடவே துப்பாக்கி வீரர்கள்.  தென்னமெரிக்கக் ’காட்டுமிராண்டிகளின்’ கையில் பைபிளைக் கொடுத்தார்கள்.  வாங்க மறுத்தவனுக்குத் துப்பாக்கி ரவை பரிசாயிற்று. ஏற்கனவே தென்னமெரிக்க இனம் மிகுந்த சுய அபிமானம் கொண்டது.  உலகின் முதல் மனிதனே தமிழன்தான், உலகின் ஆதி மொழியே தமிழ்தான் என்றெல்லாம் தமிழர்கள் பெருமைப்படுவதைப் போல பெருமை கொண்டிருந்த இனம் பெரூவின் இன்கா இனம். 1400களின் துவக்கத்திலேயே அவர்களின் இன்கா அரசு பெரூவில் மிகச் சிறந்த ஒரு அரசமைப்பைக் கொண்டு வந்து விட்டது.  உலகின் பேரதிசயமான மாச்சு பிச்சு கட்டப்பட்டதெல்லாம் அந்தக் காலக்கட்டத்தில்தான். 

1345-இல் மெக்ஸிகோவில் நிறுவப்பட்டிருந்த மிக வளமான ஆஸ்டெக் சாம்ராஜ்யமும் ஸ்பானியர்களால் 1521-இல் அழித்தொழிக்கப்பட்டது. அதேபோல் பெரூவின் இன்கா அரசும் 1532-இல் அழிக்கப்பட்டது. அதேபோல் அழிக்கப்பட்டதுதான் மாயன் நாகரீகமும். இப்படியே ஐரோப்பியக் கிறித்தவர்களால் மொத்த மத்திய அமெரிக்காவும் தென்னமெரிக்காவும் அந்த நிலங்களின் பூர்வகுடிகளின் அரசுகளும் அழிக்கப்பட்டன.  இந்த அழித்தொழிப்பு எந்த அளவுக்குத் தீவிரமானது என்றால், கொலம்பஸ் தென்னமெரிக்காவில் இறங்கிய போது அதன் மக்கள் தொகை 100 லட்சம்; இது ஒரே வருடத்தில் 8 லட்சமாகக் குறைந்தது.  மீதி 92 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.  இதுதான் தென்னமெரிக்காவின் வரலாறு. இதற்குக் காரணம், ஐரோப்பியர்களிடம் இருந்த நவீனமான போர்க்கருவிகளும் தந்திரமும். இன்னொரு காரணம், ஐரோப்பியர் கொண்டு வந்த நோய்கள்.  குறிப்பாக, அம்மை.  அதற்கு முன் தென்னமெரிக்காவில் அந்த நோயை அவர்கள் அறிந்ததில்லை.  அது மட்டுமல்லாமல், தென்னமெரிக்கர்கள் ஸ்பானியர்கள் அமைத்த சுரங்கங்களில் இரவு பகலாகக் கொத்தடிமைகளாக வேலை செய்து மடிந்தார்கள். வேலை செய்ய மறுத்தவர்களும் மதம் மாற மறுத்தவர்களும் ஈவு இரக்கமில்லாமல் உடனுக்குடனே துப்பாக்கியால் சுடப்பட்டார்கள். இப்போதும் தென்னமெரிக்கர்கள் ஐரோப்பாவின் நீட்சியான வட அமெரிக்க அரசினால் தொடர்ந்து சுரண்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று தென்னமெரிக்க நாடுகள் கொடூரமான வறுமையில் இருப்பதற்குக் காரணமே ஆறு நூற்றாண்டுகளாக ஐரோப்பியர் அங்கே இருந்த வளங்களையெல்லாம் சுரண்டிக் கொண்டு போய் விட்டார்கள்.  ஆனால் அதை விடக் கொடூரம் என்னவென்றால், தென்னமெரிக்கர்கள் தங்கள் மொழிகளையும், கலாச்சாரத்தையும், கடவுளையும் இழந்ததுதான்.        

இப்படி ஆறு நூற்றாண்டுகளாக ஒரு பிரம்மாண்டமான கண்டத்தையே அழித்தொழித்த ஐரோப்பியக் கிறித்தவத்தை விமர்சிக்கத் துணியாக யாரும் இந்து மதத்தின் சாதிகளைப் பற்றிப் பேச உரிமை இல்லை.  யாரும் இங்கே இருந்த சாதிப் பிரிவினையை நியாயப்படுத்திப் பேச முடியாது.  நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து விட்டோம்.  சாதி இந்து மதத்தின் மிகப் பெரிய கறை.  மிகப் பெரிய குற்றம்.  ஆனால் அதை விட மிகப் பயங்கரமான, எதனோடும் ஒப்பீடே செய்ய முடியாத மாபாதகத்தைச் செய்ததல்லவா ஐரோப்பியக் கிறித்தவம்?  ஒரே ஆண்டில் நூறு லட்சம் மக்கள் தொகை எட்டு லட்சமாக மாறியதே?  ஒரு கையில் பைபிளும் ஒரு கையில் துப்பாக்கியும் கொடுத்துத் தேர்ந்தெடு என்று சொன்ன கிறித்தவத்தைப் பேசாமல் எப்படி நாம் இந்து சாதி பற்றிப் பேசுவது?

மேலும், ஆறு நூற்றாண்டுகளாக – அதிலும் குறிப்பாக கொலம்பஸ் அங்கே கால் பதித்ததிலிருந்து இரண்டு நூற்றாண்டுகள் நடந்த கலாச்சார, இன அழித்தொழிப்பு பற்றித் தென்னமெரிக்காவில் பல நூறு நாவல்கள் எழுதப்பட்டு விட்டன.  அவற்றில் பலவற்றைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியும் வருகிறேன்.  இந்தக் காரணத்தினால்தான் நான் தென்னமெரிக்காவை என் ஆன்மாவையே ஈர்த்த கண்டமாகப் பார்க்கிறேன்.  தங்களுடைய வெகுளித்தன்மையின் காரணமாக, தங்களிடம் துப்பாக்கி போன்ற கொலைக்கருவிகள் இல்லாததன் காரணமாக தங்கள் கடவுளையும் மொழியையும் அடையாளத்தையும் ஐரோப்பாவிலிருந்து வந்து ஒரு கொள்ளைக் கும்பலிடம் இழந்து விட்ட ஒரு மனிதக் கூட்டத்தின்பாலும் ஒரு நிலத்தின்பாலும் எனக்கு ஆர்வம் பெருகிக் கொண்டே இருப்பதற்குக் காரணம் இதுதான். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai