இன்னும் ஓரிரு தினங்களில் அன்பு. இப்போது முன்னட்டை ஓவியம்…

எது எழுதினாலும் அதை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து நான் விலகி விடுவேன். அது வாசகர்களுக்கானது. அவ்வளவுதான். ஆனால் அன்பு நாவலில் அப்படி இல்லை. அதை நான் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படிக்கச் சொல்லி யாசிக்க வேண்டும். அது என் சுவாசம். என் தவம். அதற்கு நான் பெரிதும் எதிர்பார்த்த அட்டைப் படம் வந்து விட்டது. ஓவியம் மணிவண்ணன். மணி வண்ணனை ஒரு மாணவராக எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும். சந்த்ரு வீட்டில் பார்ப்போம். சி. மோகனோடு பார்ப்போம். சக்ஸ் வீட்டில் பார்ப்போம். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பார். ஓவியர்களுக்கு இல்லாத அடக்க குணம். ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆரம்பித்த காலத்தில் நான் காயத்ரியிடம் எனக்குத் தெரிந்த மணிவண்ணன் பற்றிச் சொன்னேன். பலமுறை சொன்னேன். பிறகு புத்தகங்களில் மணிவண்ணன் என்று பார்த்த போது எனக்குத் தெரிந்த மணிவண்ணன் வேறு இவர் வேறு என்று நினைத்து விட்டேன். மணிவண்ணன்தான் அட்டை ஓவியம். பிரமாதமாக வந்திருக்கிறது. அவரைப் பார்த்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

அன்பு நாவல் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளிவந்து விடும். எஃப் 19 ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும்…