வசிய லேகியம்

வசியமருந்துக்காரனொருவனை

யதேச்சையாய்க் கண்டேன்

ஒரு பெண்ணை வசியப்படுத்த வேண்டுமென்ற

நீண்டநாள் ஆசையைச் சொன்னேன்

“கவலை வேண்டாம் விலைதான் 

கொஞ்சம் அதிகம்” என்றவனிடம்

“உயிரையும் கொடுப்பேன் விலையாக

மருந்தைக் கொடு முதலில்” என்றேன்.

நாற்பது மூலிகைககள் சேர்ந்ததிந்த லேகியம்

உன் இஷ்ட ஸ்த்ரீயை முத்தமிடுமுன்

உதட்டில் இட்டுக் கொள்

ஜென்மத்துக்கும் அடிமையென்றான்

முதல் சந்திப்பின் முதலாவது முத்தத்தின் போது

மறக்காமல் இட்டுக் கொண்டேன்

ஏய் வசியக்காரா

ஜென்மத்துக்கும் போதுமிந்த முத்தம்

இந்த நினைவிலேயே

 ஏழேழுஜென்மம்

வாழ்ந்து விடுவேன்

சொல்லி விட்டு மாயமானாள்

மோகினி போலவள்