(முன் குறிப்பு: இந்தக் கவிதையை நான் ஆறு மணி நேரத்துக்கு மேல் எழுதினேன். பத்துப் பதினைந்து படிகள் எடுத்தேன். திரும்பத் திரும்ப திருத்தினேன். திரும்பத் திரும்ப மாற்றினேன். மாற்றிய ஒவ்வொரு படியும் என்னிடம் உள்ளன. படித்துப் பாருங்கள்…)
1
அவன் கடவுளின் உலகைப் பார்த்தான்
முகம் சுளித்தான்
இங்கே எல்லாம் கலைந்து கிடக்கிறது
காற்று குழப்பத்தை முணுமுணுக்கிறது
முகங்களில் துக்கத்தின் தடயம்
தெருவில் நடந்தால்
பெண்களை உரித்துத் தின்கின்றன கண்கள்
இரவின் நிழல்கள்
குழந்தையின் முகத்திலும்
தீயின் கறை படியச் செய்கின்றன
மாற்றான் கழுத்தில் கத்தி வைப்பவன்
மக்களின் தலைவன்
அடுத்தவன் சொத்தைப்
பிடுங்கித் தின்பவன்
மனிதகுல மாணிக்கம்.
கடவுள் எரிச்சலடைகிறார்
தூதர்களை அனுப்புகிறார்
ஒவ்வொருவரும் தம் வண்ணத்தில்
சேதியை மாற்றினர்
சீடர்கள் அதையே உண்மையெனக்
கொண்டனர்
நம்பிக்கைகள் வாட்களை உயர்த்தின
ஆயிரம் ஆண்டுகள்
குருதி ஆறாய் ஓடுகிறது
கடவுளின் உலகம் தன் அழிவைச் சுமக்கின்றது
பசித்த புலி மானைத் தின்றது
புலியின் வாயில் மாட்டிய மானின்
கண்களை கண்டதுண்டோ?
கண்டிருப்பின் தெரிந்திருக்கும்
படைத்தலின் இயலாமை
தெருவில் குரங்கொன்று
நடந்து சென்றது
நான் கேட்டேன்:
‘முன்னாளில் கடவுளரே…
ஏனின்று தெருவில் திரிகிறீர்?’
’வனங்கள் சாம்பலாயின
விருட்சங்கள் கருகின
உணவுக்கு வழியின்றி
நகரங்களுக்குப் பெயர்ந்தோம்’
என்றதது.
இன்று காலை
குரங்குகளிரண்டு
பக்கத்து வீட்டுப் படியிலமர்ந்து
காகிதத்தைத் தின்றன
காகிதத்தின்
கசங்கலினூடே
இரண்டு வரிகளிருந்தன
இந்த உலகம் இருந்தென்ன?
இல்லாமல் போனாலென்ன?
2
கடவுளின் உலகைக் கண்டு
முகம் சுளித்தவன்
தன் உலகைப் படைத்தான்
அனாதைகளில்லை.
காற்று ஒவ்வொருவருக்கும்
மென்மையான படுக்கை விரித்தது
நள்ளிரவில் பெண்கள்
நட்சத்திரங்களுடன் உரையாடினர்
பசித்தவர்களுக்கு
நிலவின் துண்டுகள் பகிரப்பட்டன
வீடற்றவர் யாருமே இல்லை
இரண்டு வாகனங்கள் இடித்துக்கொண்டால்
ஓட்டிய இருவரும் சிரித்தபடி விலகினர்
காதலனோடு சேர்ந்து
மனைவியர் யாரும்
கணவனையோ குழந்தைகளையோ
விஷம் வைத்துக் கொல்லவில்லை
மற்றவரின் கண்ணீரைத் துடைத்தால்
அது பூவாய் மலர்ந்தது
கத்திகள் மரங்களைச் செதுக்கி
குழந்தைகளுக்கு பொம்மைகளை உருவாக்கின
யாரும் யாரையும் அடக்குவதில்லை
தேவையிலிருந்தோர் இணங்கியோரைத் தழுவினர்
நதிகள் மனிதர்களுடன் முணுமுணுத்தன
மரங்கள் தங்கள் கிளைகளை
வீடுகளுக்கு அரவணைப்பாக விரித்தன
புலிகள் மான்களுடன் நதியோரம் நடந்தன
ஒன்றையொன்று தழுவி
நிழலில் உறங்கின
நடந்த சம்பவம் ஒன்று :-
ஒரு மன்னன் வேட்டைக்குச் சென்றான்
எலும்பும் தோலுமாய்
எதிரே வந்தது ஒரு புலி
மன்னன் தன் ஆடைகளைக் கழற்றி
‘உன் பசி தீர, என்னைப் புசி,’ என்றான்
புலி அவனை முத்தமிட்டுவிட்டு
நதியை நோக்கி நடந்தது
எங்கேயிருக்கிறது அந்த உலகற்புதம்?
கைகளில் தவழ்கிறதா?
கனவின் நிழலில் மறைகிறதா?