நிலவு ஒரு மௌனக் கண்ணாடி,
நட்சத்திரங்கள் மறந்து போன கடவுச்சொற்கள்
என்னைப் பார்க்க மறுக்கின்றன.
குழந்தைப் பருவத்தில்
பெரியோரின் முகம் பார்க்க
அண்ணாந்தவன்
வானத்தைப்
பார்க்க வாய்த்தவன்
அதே வானம்தான்
என் மீது புழுதியைக் கொட்டுகிறது.
சத்தியம் ஒரு தொலைந்த நதி
அறம் வதந்திகளின் எதிரொலி
பிறரின் கண்ணீரை வண்ணமாக்கி
கதைகளை வரைகின்றேன்
ஜீவன்களின் தோழனென
முகமூடி அணிகின்றேன்.
கேள்விகளுக்கு பதிலில்லை
ஆனாலும்
ஒரு மூட்டை பதில்களுடன்
ஆங்காங்கே அலைகின்றேன்
அஞ்ஞானியாய் இருந்துகொண்டு
ஞானத் தோரணையில் திரிகின்றேன்
கொசு, கம்பளிப்பூச்சி, கரப்பான் பூச்சி, அட்டை,
மரவட்டை, எறும்பு, பூரான், பாம்பு, கோழி, ஆடு, ஈசல், கொக்கு, மடையான், தவளை, உடும்பு, மண்புழு,
வண்ணத்துப்பூச்சியென்று நான் கொன்ற ஜீவன்கள்
ஏராளம்.
நான் ஒரு பயணி,
கரங்களில் மரணத்தின் முத்திரை
பெண்களின் கண்ணீர்
மனதின் கறைகளாகத்
திரள்கிகின்றன
அன்பை உறுதியளித்து,
துரோகத்தை மட்டுமே தருகிறேன்.
கருணை ஒரு மறந்த மொழி
நேசம் ஒரு உடைந்த பாலம்
அன்புக்குத் துரோகம்
பரிவுக்கு வன்மம்
கருணைக்குக் குரோதம்
கனிவுக்கு மூர்க்கம்
அருளுக்கு ஆணவம்
நேசத்துக்கு முரட்டுத்தனம்
தயவுக்குத் திமிர்
என் வாழ்க்கை இதுதான்
மனையாளிடம்
நான் உச்சரிப்பது பொய்யின் மூச்சு மட்டுமே.
ஒரு பெண்ணுக்கு சுகம் தருவதாய் வாக்களித்து
உடலின் தோல்வியில் மூழ்கியிருந்திருக்கிறேன்
வழிபாட்டுத் தலங்களில்
மனம் ஆடைகளை உரிக்கிறது
குடியில் மூழ்கி,
கீறல் விழுந்த இசைத்தகடாய்
ஒரே புலம்பலை
ஒன்பது முறை எதிரொலிக்கிறேன்.
மனிதவுருக் கொண்டு
வாழ்ந்தாலும்
நானென்பவன்
ஒரு நிழல்
ஒரு கவிஞன்
மேலும்
கைவிடப் பட்ட
சொற்களின் குவியல்.