அதிகாலைப் பறவைகள்
உத்தரவின்றிப் பாடுகின்றன,
காற்றில் இலைகள் அசைகின்றன
சூரியன் உதிக்கிறது, மறைகிறது,
நிலவு தேய்கிறது, வளர்கிறது,
இயற்கை தன் தாளத்தில் ஆடுகிறது.
பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்,
அல்லது
ஹெலிகாப்டரில் திருமணம் செய்யலாமா என்கின்றனர்
உயிர்கள் இனப்பெருக்கம் செய்கின்றன
மனிதர்கள் பணத்தைத் துரத்துகிறார்கள்,
அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள்
புகழின் மீது மயங்குகிறார்கள்.
ஆண்கள் பெண்களைத் தேடுகிறார்கள்
ஆண்களும் பெண்களும் பால்பேதமில்லாமல்
காதல் தோல்வியில் மனம் உடைகிறார்கள்
உறக்கமின்மையில் உயிர் துவள்கிறது
வெறுப்பில் கொலைகள் பிறக்கின்றன.
காமம் வெறியாகி வன்கலவியில் முடிகிறது
மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள்
நோயில் வாடுகிறார்கள்
நோய் முற்றிச் சாகிறார்கள்
மகிழ்ச்சியில் நடனம் பிறக்கிறது
இன்பத்திலும் துன்பத்திலும் பாடல் ஒலிக்கிறது.
நாய் நன்றி நவில்கிறது
பூனை துயரத்தில் தோய்கிறது.
யானை கூட்டத்தில் இன்புறுகிறது
அல்லது
மனிதன் முன் மண்டியிடுகிறது.
கடல் ஆர்ப்பரிக்கிறது,
நட்சத்திரங்கள் ரகசியம் பேசுகின்றன
கடவுள் மர்மமாய் மறைந்திருக்கிறார்.
வானம் மௌனமாய்ப் பார்க்கிறது
மலைகள் நெடுநாள் நிற்கின்றன
ஆறுகள் பயணிக்கின்றன
காலம் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது.
நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்