நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…

கார்ல் மார்க்ஸ் நூல் (ராக்கெட் தாதா) வெளியீட்டு விழாவின் போது எதார்த்த வாதத்தின் காலம் முடிந்து விட்டது; வேறு விதமான கதைகளை எழுதுவோம் என்று பேசினேன்.  அப்போது தமிழில் எழுதப்பட்டது எல்லாமே எதார்த்தவாதக் கதைகள்தாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.  ஆனால் எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், என்னுடைய ஸீரோ டிகிரி, நான் எழுதிய சிறுகதைகளான நேநோ, the joker was here, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் போன்ற பல சிறுகதைகளும் எதார்த்தவாதக் கதைகள் அல்ல.  அவை மெட்டாஃபிக்‌ஷனில் சேரும்.  Metafiction பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.  இதையெல்லாம் பற்றி 1980கள் 90களிலேயே ஏகப்பட்ட விவாதங்கள் நடந்திருக்கின்றன.  நான் எதார்த்தவாதக் கதைகள் பலவும் எழுதியிருக்கிறேன்.  நேற்று வந்த விழா உட்பட.  ஆனால் நான் எழுதிய பல கதைகள், நாவல்கள் மெட்டாஃபிக்‌ஷன் வகையைச் சார்ந்தவை.  உதாரணத்துக்குப் பின் வரும் கதையை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.  இது நேநோ தொகுப்பில் உள்ளது.  ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு.

நட்சத்திரங்களிடமிருந்து செய்தி
கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்

“The Book of Fuzoos – Male Edition”

by Jacques Didier

Published in French – 1972- Edition de Minuit

Translated in English by Catherine Dumont – 1984

Routeledge – Price not mentioned.

மனித வரலாற்றிலேயே முதன் முதலாக நட்சத்திரங்களையும் கிரகங்களையும் மிக நெருக்கமாகத் தனது தொலைநோக்கிகளால் பார்த்தவர் கலிலியோ கலிலி (1564-1642). அப்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருந்திருக்கும். அந்த அனுபவங்களை அவர் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவன் (Sidereus nuncius) என்ற நூலில் பதித்திருக்கிறார். பால்வீதி என்பது நட்சத்திரக்கூட்டங்களால் ஆனது என்றும் கிரகங்கள் தாமே ஒளி வீசுவதில்லை – சூரியனிடமிருந்து அவை ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் அந்த நூலில் கூறுகிறார்.

தனது 69 ஆவது வயதில் விசாரணைக் கமிஷனின் முன்பாக அவர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார்: “கலிலியோ கலிலியாகிய நான் பிரபஞ்சத்தின் மையம் சூரியன் என்றும் அது நகராமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்றும் உளறிவிட்டேன்… இத்தகைய தவறான கருத்துக்களை இப்போது நான் மாற்றிக்கொள்கிறேன்” என்று சொல்லி முடித்துக் கடைசியில் “E pur si muove” (இருந்தாலும் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது) என்று யாருக்கும் காதில் விழாமல் ஈனமாக முனகினார்.

விசாரணைக்குப் பிறகு கலிலியோவின் புத்தகங்கள் தடை செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார் (1633).

பிஸாவின் கதீட்ரலில் உள்ள தொங்கும் விளக்குகளின் சீரான இயக்கத்தைப் பார்த்து, தொங்குகின்ற ஒரு பொருளின் எடையோ அல்லது அதன் உயரமோ அதன் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துவதில்லை என்றும், உயரம்தான் அந்தப் பொருளின் இயக்கத்தின் கால அளவை நிர்ணயிக்கிறது என்றும் சொன்னார். இதுதான் பெண்டுலத்தின் கண்டுபிடிப்பிற்கும் அடிப்படையாக இருந்தது.

பிஸா டவரிலிருந்து ஒரு பவுண்ட் உலோக உருண்டையையும் பத்து பவுண்ட் உலோக உருண்டையையும் கீழே விழச் செய்து இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை அடைந்ததை வைத்து மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் வேகம் அதன் எடையைப் பொறுத்து அமைகிறது என்ற அரிஸ்டாட்டிலின் கோட்பாட்டை மறுத்துத் தன்னுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் வேகம், காலம், தூரம் பற்றிய பல புதிய கோட்பாடுகளை உருவாக்கினார்.

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உரிய உடையை அணிய மறுத்தார் என்பது போன்ற பல சில்லறைக் காரணங்கள் கூறப்பட்டு பிஸா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உலகத்தைப் பற்றிய இரண்டு அடிப்படை விதிகள் குறித்தான விவாதம் என்ற புத்தகத்தை 1632இல் வெளியிட்டு, அதன் காரணமாக மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வீட்டுக்-காவலில் வைக்கப்பட்டார்.

வீட்டுக்காவலில் இருந்து கொண்டே இரண்டு புதிய விஞ்ஞானங்கள் தொடர்பான விவாதங்கள் என்ற நூலை எழுதி அதை ரகசியமாக ஹாலந்துக்கு அனுப்பினார். 1638இல் அந்நூல் பிரசுரமாயிற்று.

ஆனால் அந்த நூலை அவரால் பார்க்க முடியாமல் அதே ஆண்டில் தன்னுடைய 74ஆவது வயதில் அவர் கண் பார்வையை இழந்தார்.

அவர் இறந்தபோது அவரது மரண ஊர்வலத்தைத் தடை செய்தது கத்தோலிக்கத் திருச்சபை.

இதேபோல் ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோஸஃப் ப்ரீஸ்ட்லி, லியனார்டோ டா வின்ஸி, நிகோலஸ் கோபர்னிகஸ் நியூட்டன், லூயி பாஸ்ச்சர், மேரி க்யூரி என்று இப்படி விஞ்ஞானிகளின் வரிசை நீண்டுகொண்டே போகிறது. இதில் முக்கியமாக லியனார்டோ — பறவைகள் பறப்பதற்கும் மீன்கள் நீஞ்சுவதற்குமான ஒற்றுமைகளைக் கவனித்து, அதன் மூலம் காற்று நீர் இவற்றின் ஓட்டத்தின் ஒற்றுமைகளைக் கண்டு, அதன் மூலம் இவருக்குப் பின்னால் இருநூறு ஆண்டுகள் கழித்து இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்றாம் விதி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னேயே வினை மற்றும் எதிர்வினைக்கான விதிகளைச் சொன்னவர். இவரது கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்தினால் அதுவே ஒரு புத்தக அளவுக்கு நீளும்.

ஆனாலும் நமக்குப் படிப்பது என்பதே ஒரு வாழ்க்கை வசதி சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறது. ஒருவருக்கு தலித் விடுதலைக்கான களச் செயல்பாடுகளும், ஒருவருக்கு மனித குல விடுதலைக்காக சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஹாலில் வாரம் இரண்டு கூட்டங்கள் போடுவதும் (அமைப்பாளர்களையும் சேர்த்து மொத்த பார்வையாளர் எண்ணிக்கை : 9), ஒருவருக்குத் தன் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக வீடு கட்டுவதும், ஒருவருக்கு சிறுபத்திரிகையில் கடிதங்கள் எழுதுவதும், ஒருவருக்குத் தன் மனைவியின் நகையை விற்று கவிதைத் தொகுதி போடுவதும், ஒருவருக்கு பல்கலைக் கழகங்களில் தன் புகழ் பரவுவதற்காகப் பாடுபடுவதும், எனக்கு தமிழ்நாட்டில் பரவலாக பாலியல் புரட்சி ஏற்படுவதற்காக 27 பேரை சந்தாதாரராகக் கொண்ட ஒரு சிறு பத்திரிகையில் வில்ஹெல்ம் ராய்க்கின் கட்டுரையை மொழிபெயர்ப்புச் செய்வதும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. இக்காரணங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ நமக்கு ஒரு குஸ்தாவ் ஃப்ளெபரின் புத்தகம் பற்றித் தெரிந்திருக்கிறது. ஃப்ளெபர் பற்றி சார்த்தர் தன்னுடைய ஆயுட்கால திட்டமாகக் கொண்டு 5000 பக்கங்கள் எழுதி, அது வெளிவந்த பிறகு “இன்னும் நான் ஃப்ளெ பர் பற்றிய ஆய்வை இந்த 5000 பக்கங்களில் ஆரம்பிக்கவே இல்லை” என்று சொல்லி விட்டார். இது பற்றி எழுதும் மரியோ பர்கஸ் யோசா “ஒரு labyrinth க்குள் மாட்டிக் கொண்டு விட்டார் சார்த்தர்; இந்த ஆய்வின் முறையைப் பார்த்தால் 50000 பக்கங்கள் எழுதினால்கூட ஆய்வு முடிவடையாது என்று தோன்றுகிறது” என்கிறார்.

இந்த நிலையில் The Book of Fuzoos என்ற புத்தகம் பற்றி அதிகம் பேசப்படாததில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான். இதை எழுதியிருக்கும் ஜாக் திதியே, சார்த்தர் படித்த சொர்போன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். படித்து முடித்ததும் ப்ரஸீலியக் காடுகளுக்குச் சென்று விட்டார்.

மூன்று ஆண்டுகள் ப்ரஸிலின் வடக்குப் பகுதியிலுள்ள காடுகளில் அலைந்து விட்டு பாரீஸ் திரும்பியவர் தன் ஆய்வுக் குறிப்புகளை வைத்து The Book of Fuzoos (Male Edition) நூலை எழுதி முடித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்தப் புத்தகம் மேலே குறிப்பிடப்பட்ட விஞ்ஞானிகளின் சாதனைகளுக்குச் சற்றும் குறையாத, சரியாக கவனிக்கப்பட்டால் நமது சமூக வாழ்வின் போக்கையே மாற்றிமைக்கக் கூடிய பல ஆய்வுக் குறிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் கொண்டிருக்கிறது.

நெக்ரோஃபீலியா1 என்பது இறந்தவரின் மீதான விருப்பம் – nekros என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் பிரேதம் nex, necis என்ற லத்தீன் வார்த்தைகளின் பொருள் _____________________________________________________________________________________
1. நெக்ரோஃபீலியா என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் தோழர் லெனின் என்று தெரிகிறது. அதன் பிறகு பயன்படுத்தியவர் ஸ்பானியத் தத்துவவாதி மிகெல் கெ உனாமுனோ, 1936இல் ஸ்பானிய உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உனாமுனோ தலைவராக இருந்த சலாமாங்கா பல்கலைக்கழகத்தில் மிலான் அஸ்த்ரே என்ற ஜெனரல் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது அவருக்குப் பிடித்த கோஷமான ‘Viva la muerte!’ (மரணம் வாழ்க!) என்ற கோஷத்தை அடிக்கடி எழுப்ப, கூட்டத்தில் இருந்தவர்களும் வீவா லா முவர்த்தே!என்று கத்துகிறார்கள். ஜெனரல் பேசி முடித்ததும் உனாமுனோ எழுந்து மரணம் வாழ்க என்ற கோஷத்தில் நெக்ரோஃபீலியாவின் ஒரு வெளிப்பாட்டைத்தான் நாம் இப்போது கேட்டோம்… ஜெனரல் மிலான் அஸ்த்ரோ ஒரு முடவர். இதை நாம் மிகவும் வலியுறுத்திச் சொல்ல முடியும். போரின் காரணமாக முடமானவர் அவர். துரதிர்ஷ்டமாக இப்போது ஸ்பெயினில் ஏகப்பட்ட முடவர்கள் இருக்கிறார்கள். கடவுள் நம்மைக் காப்பாற்றாவிட்டால் இன்னும் நிறைய முடவர்கள் உருவாக்கப்படுவார்கள். வெகு மக்கள் உளவியலைப் பற்றி ஜெனரல் மிலான் அஸ்த்ரோ பேசுவது மிகவும் வேடிக்கையானது… வருந்தத்தக்கது…என்கிறார். உனாமுனோவின் இந்தப் பேச்சைக் கேட்கக் கேட்க ஜெனரல் அஸ்த்ரோவுக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. எழுந்து நின்று அபாஹோ லா இந்த்தெலிஜென்ஸியா!’ (புத்திசாலிகள் ஒழிக!) என்று கத்துகிறார். உடனே அவரது கோஷத்தைத் தொடர்ந்து பலரும் வீவா லா முவர்த்தே!’ ‘வீவா லா முவர்த்தே!என்று கத்துகிறார்கள். இந்த கோஷங்களையும் மீறிக்கொண்டு உனாமுனோ தனது பேச்சைத் தொடர்கிறார்: ஆம். இந்த இடம் புத்திசாலிகளின் கோவில். நான்தான் இதன் பிரதான குரு. இந்த இடத்தின் புனிதத்தை நீங்கள் களங்கப்படுத்திவிட்டீர்கள். ஏனென்றால் உங்களிடம் அதற்கான மிருகபலம் இருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த மனமாற்றத்தையும் உருவாக்கி விட முடியாது… அதற்குத் தேவை அறிவும் நியாய உணர்வும். அது உங்களிடம் இல்லை.

இந்தச் சொற்பொழிவுக்குப் பிறகு சில மாதங்களில் உனாமுனோ வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார், அவர் சாகும் வரை. (The Anatomy… பக்கம் : 441)

கருத்தரங்குகளில் நான் கட்டுரை வாசிக்கும்போதும் அல்லது இலக்கிய விவாதங்களில் பங்கேற்கும் போதும் தொடர்ந்து ஒரு கேள்வி என்னை நோக்கி வீசப்படுகிறது. நீங்கள் புரட்சிக்கு என்ன செய்தீர்கள்?”

சமீபத்தில் ஒரு தலித் கலைவிழாவில் பேசிய ஒரு கவிஞர் தன் பேச்சில் ஒன்பது முறை குறிப்பிட்டார், “நீங்கள் சாகத் தயாராகுங்கள் என்று. தன் பேச்சை முடிக்கும்போதும் அவர் இதைச் சொல்லியே முடித்தார். அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போது என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் நாங்கள்தான் ஏற்கனவே செத்துக்கொண்டிருக்கிறோமே; இன்னமும் சாகச் சொன்னால் எப்படி?” என்று கேட்டார். என்னிடம் கேள்வி கேட்டவரிடம் நான் சொன்ன பதில்: நான் சாகத் தயாராக இல்லை; புரட்சி என்பது என்னை மரணத்தை நோக்கி அழைக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கான மனத் துணிவும் உறுதியும் என்னிடம் இல்லை.

எரிக் ஃப்ராமின் ஆய்வு சுவாரசியமாக இருந்தாலும் அவரது ஆய்வின் அடிப்படை அணுகுமுறை பலவித குளறுபடிகளுக்குத்தான் இட்டுச் செல்லும் என்று தோன்றுகிறது. அவரது ஆய்வின்படி பார்த்தால் உனாமுனோவுக்குத்தான் நெக்ரோஃபீலியா மனப்பான்மை இருப்பதாக ஆகிறது. ஏனென்றால் ஜெனரல் அஸ்த்ரோதான் அங்கே நெஃப்திஸ்* உனாமுனோ நேரடியாக நெஃப்திஸுடன் மோதுகிறார். தான் ல்வியுறுவோம் என்றும் தனக்கு நேரப்போவது மரணம்தான் என்றும் தெரிந்தும் மோதுகிறார். (The Books of Fuzoos, பக்கம் 654)

(*Nephethys –லிபியாவின் தொல்கதைகளில் புகழ்பெற்ற ஒரு மரண தேவதை.)

 

கொலை அல்லது கொடூரமான மரணம் என்று துவங்கி, நெக்ரோஃபீலியாவைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறார் எரிக் ஃப்ராம். The Anatomy of Human Destructiveness என்ற இந்த நூலின் நீட்சியாகவும் ஒரு வகையில் இதன் மறுப்பாகவும் அமைந்திருக்கிறது The Book of Fuzoos. இந்தப் புத்தகம் வெறும் மானுடவியல் ஆய்வாக மட்டும் அல்லாமல் ப்ரஸீலின் வரலாற்றைப் பற்றியும் விரிவாகப் பதிவு செய்கிறது.2 ப்ரஸீலின் அடிமைகளைப் பற்றியும், அவர்களின் போராட்டங்களைப் பற்றியும், பதினேழாம் நூற்றாண்டில் அடிமை முறைக்கு எதிராகப் போராடிய அந்த்தோனியோ வீயேயிரா என்ற பாதிரியைப் பற்றியும் ஒரு காவியத்தைப் போல் சொல்லுகிறது இந்த நூல். மேலும் 1539ஆம் ஆண்டு முதல் ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பின மக்கள் அடிமைகளாகப் பிடித்து வரப்பட்டு ப்ரஸீலில் விற்கப்பட்டதையும், 1854ஆம் ஆண்டு இந்த அடிமை இறக்குமதி தடை செய்யப்பட்டதையும் சொல்லுகிறது.

இந்த வரலாறு முழுதும் புத்தகத்தின் 522 பக்கங்கள் வரை கண்களில் பூதக்கண்ணாடி கொண்டு படிக்கப்பட வேண்டிய பொடி எழுத்துக்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றிலிருந்து சில விபரங்களை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.

 

_____________________________________________________________________________________
2. கி.மு. 10000 வாக்கில் வட அமெரிக்காவிலிருந்து வேட்டையாடுவதற்காக சிறுசிறு குழுக்கள் பரஸீலை வந்து சேர்ந்து அங்குள்ள நிலங்களில் ஆதி சமூகக் குடிகளை அமைத்தனர். பிறகு 11150 ஆண்டுகள் வேற்றுலக மனிதர்களின் தொந்தரவு ஏதுமின்றி வாழ்ந்து வந்த இந்த மக்களுக்கு கி.பி. 1500ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி கேடு வந்தது. அன்றைய தினம் லிஸ்பன் நகரிலிருந்து 18 கப்பல்களில் 1800 பேர் அடங்கிய குழு ஒன்று அட்மிரல் பேத்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் தலைமையில் இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமா கண்டுபிடித்திருந்த கடல் வழியில் புறப்பட்டது. ஆனால் தவறுதலாக இந்தக் குழு ப்ரஸீலை வந்து அடைய, இங்கிருந்துதான் இன்றைய ப்ரஸீல் உலகின் பிரதான பிச்சைக்கார நாடுகளுள் ஒன்றாக மாறியதன் கதை துவங்குகிறது. ப்ரஸீலின் இயற்கை வளங்களைப் பற்றி எவ்வளவோ அறிந்திருக்கிறோம். அறியாமலிருக்கிறோம். அந்த நாட்டின் நதிகள், காடுகள், தாதுப் பொருட்கள் என்று எத்தனையோ கணக்கிலடங்காத சமாச்சாரங்களைப் பற்றி படிக்கிறோம். உதாரணமாக அமேஸான் நதியின் அகலம் என்பதை நீளம் என்று நினைத்தே நெட்டுருப் போட்டது ஞாபகம் வருகிறது.

இப்போதுதான் அது நீளம் அல்ல அகலம் என்பதும், எங்கள் ஊர் காவிரியின் அகலம் 1.26 கி.மீ. என்பதும் தெரிகிறது. அட்மிரல் காப்ராலைத் தொடர்ந்து ஏகப்பட்ட போர்ச்சுக்கீசியக் கும்பல் ப்ரஸீலுக்குச் சென்றது. Terra da Vera Cruz.  (உண்மையான சிலுவையின் நாடு) என்று இந்த நாட்டுக்கு ஒரு பெயரையும் வைத்தது இக்கும்பல். பிறகு இந்தப் பெயர் Terra da Brasil (மரங்களின் பூமியான ப்ரஸீல்) என்று மாற்றப்பட்டது. 1512ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த நாடு உலக வரைப்படத்தில் இடம்பெற்றது. அதிலிருந்து இந்தப் பூமியின் சொந்தக்காரர்களான சிவப்பு நிற மக்களை அழித்தொழிக்கும் வேலை தொடங்கியது. ஆதிவாசிகள் மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டார்கள். அது மட்டுமல்லாமல் கப்பல்களில் வந்த ஐரோப்பியக் கும்பல் தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களோடு அம்மை நோய், ஃப்ளு போன்ற தொற்று வியாதிகளையும் கூடவே கொண்டுவந்ததால் அதுவரை இதுபோன்ற நோய்களையெல்லாம் கண்டே அறிந்திராத, ப்ரஸீலின் ஆதி குடிகள் கிராமம் கிராமமாக ஒரு பூச்சி பொட்டு இல்லாமல் & மனிதர்கள் இதுவரை வாழ்ந்ததற்கான எந்தச் சுவடுமே இல்லாமல் & அழிந்தார்கள். ரியோ மற்றும் பஹையா மாநிலங்களிலுள்ள கடற்கரையோர கிராமங்கள் அனைத்துமே இப்படிப் பூண்டோடு அழிந்து போயின.

காரஹாஸ் என்பது வடக்கு ப்ரஸீலில் புழுதி படிந்த அமேஸான் காடுகள் உள்ள பகுதி. உலகத்தின் மிகப் பெரிய இரும்பு மலை இங்குதான் இருக்கிறது. 1967ல் ஒரு ஜியாலஜிஸ்ட் தன்னுடைய ஹெலிகாப்டர் பழுதடைந்ததால் அங்கே இறங்க வேண்டியதாகி அப்போதுதான் முதன் முதலாக இந்த மலைப்பகுதியைப் பற்றித் தெரியவந்தது. 18000 மில்லியன் (எத்தனை சைஃபர் போட வேண்டும் என்று தெரியவில்லை) டன்கள் இரும்புத் தாதுவும் இதைவிட அதிக சைஃபர்கள் அளவுக்கு பாக்ஸைட், மங்கனீஸ் மற்றும் தாமிரப் படிவுகளும் கொண்ட மலைப்பகுதி இது.

கிட்டத்தட்ட இந்த மலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளில் இதன் அருகாமையிலுள்ள சுருயி இன மக்கள் வாழும் பகுதிக்கு வந்து சேர்கிறார் ஜாக் திதியே. சுருயி இன மக்களின் தற்போதைய எண்ணிக்கை கிட்டத்தட்ட 1500இலிருந்து 5000 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திதியே இதை எழுதிய ஆண்டு 1969 என்பதால் இப்போது இந்த இனமே அழிந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இவர்களுடைய மொழி துப்பி. இவர்கள் மாத்தோ குரோஸோ மலையின் வடக்குப் பகுதியில் ஜிப்பாரானா மற்றும் அரிப்புவானா நதிகளுக்கிடையே வசிக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரைத்தான் திதியே சந்தித்திருக்கிறார். மற்றவர்கள் கிட்டத்தட்ட 90 குழுக்களாக காடுகளில் வாழ்கிறார்கள், 1967இல் ப்ரஸீலிய பாராளுமன்ற விசாரணை கமிஷன்காரர்கள் இங்கு வந்து இவர்களைச் சந்தித்து ‘வரலாறு’ இவர்களுக்கு இழைத்த அநீதி பற்றி விசாரித்து விட்டுப் போனதையும் திதியே தன் நூலில் பதிவு செய்திருக்கிறார். மேலும் ரப்பர் சேகரிக்கும் கான்ட்ராக்டர்கள் இங்கு வந்து இவர்களைத் துப்பாக்கியால் சுட்டு, இவர்களின் குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தி, கண்ணில் தென்பட்ட சுருயி மக்களையெல்லாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பிறகு அந்தப் பகுதியிலேயே காட்டின் உட்புறமாகப் பயணம் செய்கிறார் திதியே. அங்கே அவர் சந்தித்த ஆதிவாசிக் குடிகளென யோபோ, க்ராஹோ, ஷவாந்த்தே மற்றும் போரோரோ இன மக்களைப் பற்றியும் (இவர்களின் பொதுப் பெயர் ஸிங்கூ இந்தியர்), இவர்களைப் பற்றி வேறு சில புத்தகங்களில் தான் படித்த விபரங்களையும் அந்த நிலவியல் அமைப்பை வைத்து அந்த இனத்தைத் தான் அடையாளம் கண்டுகொண்ட விதம் பற்றியும் விரிவாகக் கூறுகிறார். அதில் இவர் சந்தித்த ஒரு இனக்குழுவைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் இவர்களுக்கும் திதியே கடைசியில் சந்தித்த இனக்குழுவான ஃபூஸு இனத்தவருக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உண்டு. உரூபு காப்போர் என்ற இந்த இனத்தவரின் எண்ணிக்கை 600. இவர்களுடைய மொழியும் துப்பிதான். இவர்கள் பொதுவாக நர மாமிசம் உண்ணும் வழக்கமில்லாதவர்கள். எனினும் இவர்கள் தங்கள் விரோதிகளைத் தின்று விடுகிறார்கள். விரோதிகளின் தலையைக் கொய்து அதைச் சுற்றி நின்று நடனமாடி பாட்டுப் பாடி சடங்குகள் சில செய்து அந்தத் தலையைத் தின்கிறார்கள். இவர்களுடைய விழாக்கால உடையைப் பற்றி மட்டுமே பல பக்கங்கள் விவரிக்கிறார் திதியே. அவ்வளவையும் படித்து என் மனதில் நான் உள் வாங்கிக்கொண்டது இதுதான்: உடல் முழுக்கவும் கோரைப் பாயைச் சுற்றிக்கொண்டு தலையில் முறம் போல் ஒன்றை அணிந்து முகத்தைப் பூசணிக்காயால் மூடிக் கொள்வது. இவர்களையும் தாண்டி இன்னும் மனிதர்களைச் சந்திக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் காடுகளின் உட்பகுதிகளுக்குச் செல்கிறார் திதியே. அப்போது அவர் சந்தித்த ஒரு இனம்தான் ஃபூஸூ. இந்த ஃபூஸூ இன மக்களை முதன்முதலில் சந்தித்த ஒரே அந்நியன் தான்தான் என்றும், இவர்களைப் பற்றி இதுவரை எந்த மானுடவியல் புத்தகங்களிலும் எந்த விபரமும் காணக்கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடும் திதியே, இந்த மக்களின் பேச்சில் ஒவ்வொரு வாக்கியமும் ஃபூஸூ ஃபூஸூ என்றே முடிவடைவதால் இவர்களை ஃபூஸுக்கள் என்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார்.

இனி வருவது ஃபூஸுக்களின் கதை:

ஃபூஸுக்களின் பாலியல் வாழ்வுதான் இவர்களின் சமூக வாழ்வாகவும் இருக்கிறது என்று துவங்குகிறது இந்தப் பகுதி.

பிரேதங்களோடுதான் இவர்கள் வாழ்கிறார்கள். பிரேதங்களோடுதான் கலவி செய்கிறார்கள். உயிரைப் பற்றிய எந்தவித உணர்வும் அற்று இருக்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களை விட இவர்கள் பிரேதங்களையே அதிகம் நேசிக்கிறார்கள்.

ஒரு ஃபூஸு ஒரு பெண்ணைக் கொன்ற பிறகுதான் அவளோடு கலவியில் ஈடுபடுகிறான். கொல்வது கூட கழுத்தை நெறித்துக் கொல்வதுதான் இவர்களின் வழக்கமாக இருக்கிறது. பிரேதங்களை இவர்கள் அப்புறப்படுத்துவதோ எரிப்பதோ புதைப்பதோ இல்லை. கலவியில் ஈடுப்பட்ட பின் அந்தப் பெண்ணின் கழுத்தைக் கடித்து குருதியை உறிஞ்சுவதும், முலைகளையும் புட்டத்தையும் கடித்துத் தின்பதும், கால்களை அகல விரித்து உறுப்பினை உறிஞ்சுவதும்3 வயிற்றைப் பிளந்து குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்வதும், அதை ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடுவதும் இவர்களின் வழக்கம். இதுதான் ஃபூஸு இன ஆண்கள் அறிந்த கலவி முறை என்கிறார் திதியே. இதைப் படித்ததும்

எனக்கு இது ஒரு மானுடவியல் நூலா அல்லது நாவலா என்ற சந்தேகமே ஏற்பட்டது. திதியே ஏதோ ஜல்லியடிக்கிறார் என்று தோன்றியது.

_____________________________________________________________________________________
3. இதற்கென்று அவர்கள் ஒரு குச்சி வைத்திருப்பதாகவும், அதை உள்ளே விட்டு கலக்கி பிறகு உறிஞ்சுவதாகவும், மேலும், ரப்பர் குழாய் போன்ற ஒரு தாவரத்தின் கிளையைக் கொண்டு வாயினால் அப்பிரேதத்தின் சிறுநீரை உறிஞ்சிக் குடிப்பதும் உண்டு என்கிறார் திதியே, (பக்:729) தான் பார்த்த மற்றொரு இனக்குழுவான முண்டூருகூ மக்களிடமும் இருக்கும் ஒரு பழக்கத்தை ஒத்திருப்பதாகவும் கூறுகிறார். முண்டூருகூ இனத்தவர் தன் எதிரிகளை வீழ்த்தி அவர்களின் தலைகளை உருபு காப்போர் இனத்தினரைப் போலவே கொய்து &- ஆனால் நடனம் பாட்டு போன்ற சடங்குகள் எதுவும் இல்லாமல்- & தலையில் ஒரு துளை செய்து குச்சியால் கலக்கி ஒவ்வொருவராக உறிஞ்சுவது வழக்கம். இதைப் படித்தபோது எனக்கு சிறு பிராயத்தில் புளிய மரத்தில் திருட்டுத்தனமாக புளியம்பழம் அடித்து அதில் ஒரு துளை போட்டு அதனுள் தண்ணீர் விட்டுக் கலக்கிக் குடிக்கும் ஞாபகம் வந்தது.

எப்படியென்றால் இந்தப் பிரேதக் கலவிதான் அவர்கள் அறிந்த ஒரே கலவி முறை என்றால் ஃபூஸு இனம் முழுவதும் ஒரே தலைமுறையிலேயே அழிந்து போயிருக்க வேண்டுமே? அந்த இனத்தினரின் இன விருத்தி எப்படி நிகழ்ந்திருக்கிறது?

இதுபற்றி ஃப்ரான்சிலிருக்கும் என் ஈழத் தோழியுடன் பேசிக்-கொண்டிருந்த பொழுது “திதியேவின் இந்த நூல் Male Edition என்பதைக் கவனியுங்கள்” என்றார். “அப்படியானால் பெண்களுக்-கான கலவி முறை ஏதும் உண்டா?” என்று கேட்டேன். “உண்டு” என்று சொன்ன அவள், தான் ஒரு ஃபிரெஞ்ச் பத்திரிகையில் படிக்க நேர்ந்த The Book of Fuzoos: Female Edition என்ற நூலுக்கான விரிவான மதிப்புரை ஒன்றைக் காட்டினாள். Female Editionஐத் தான் இன்னும் படிக்க முடியவில்லையெனினும், அந்த விரிவான மதிப்புரையில் என்னுடைய கேள்விக்கான பதில் இருப்பதை விளக்கினாள் அவள். அதே பத்திரிகையில் Male Editionபற்றி தான் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் காண்பித்தாள். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.

ஃபூஸுக்கள் வசிக்கும் பகுதியின் ஒரு மூலையில் ஒரு ஃபூஸு கிழவி ஒருத்தி வாழ்வதாகவும் அவளை அந்த ஃபூஸு இன ஆண்கள் முழுவதுமே ஏதோ ஒரு பூதத்தைப் போல் நினைத்து அஞ்சுவதாகவும், காம இச்கைக்கு ஆட்பட்ட ஒரு ஃபூஸு பெண் ஒரு ஆணைக் கொன்று (அவர்கள் வழக்கப்படி கழுத்தை நெறித்து), கழுத்து நெறிக்கப்படுவதால் குறியில் விரைப்பு ஏற்பட அதன் பிறகு புணர்ச்சி4 செய்து, பிறகு சில மாதங்களில் வயிற்றில் கனத்தை உணர்ந்ததுமே அவள் உடனடியாக அந்தக் கிழவியின் இருப்பிடத்தில் தஞ்சமடைவதாகவும் Female Editionக்கான அந்த மதிப்புரையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது என்றாள் தோழி, கிழவியின் இருப்பிடத்திற்கு எந்த ஆணுமே வருவதில்லையாதலால் அந்தக் கர்ப்பிணிப் பெண், பிறகு பேறு முடிந்துதான் குழந்தையுடன் தன் குழுவைச் சேர்கிறாள் – சமயங்களில் வழி தவறி அந்தப் பக்கமாக வந்துவிட்ட ஆண்களின் கதியும் அதேதான் – கிழவியிடம் இருக்கும் பெண்கள் அந்த ஆணைச் சுற்றிக் கொண்டு கழுத்தை நெரித்துப் புணர்ந்து… என்று போகிறது Female Edition.

ஃபூஸுக்களைப் பற்றிய மற்றொரு விபரம், இவர்களில் அநேகமாக எல்லோருமே ஓவியர்கள் என்பது. கறுப்பு, வெள்ளை, பூக்களைப் பிழிந்து தயாரிக்கப்பட்ட மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து வண்ணங்களை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். மரப்பட்டைகளிலும் மனித உடல்களிலும் வரைவதை இவர்கள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிடும் திதியே சில ஓவியங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். அவற்றில் சில உதாரணங்கள், சுருக்கமாக:

_____________________________________________________________________________________
4. ஆணின் கழுத்தை மெல்ல மெல்ல இறுக்கிக் கடைசியில் அவனுடைய உயிர் போவதற்கும் அவள் உச்ச எழுச்சி நிலையை (orgasm) அடைவதற்கும் சரியாக இருக்கும் என்கிறது திதியேவின் குறிப்பு.

 

ஓவியம்- 1: ஒரு பெண்ணின் துண்டாக்கப்பட்ட உடல் உறுப்புகள் இரைந்து கிடக்க அதன் பக்கத்தில் ஒருவன் மலம் கழித்துக் கொண்டிருக்கிறான். துண்டிக்கப்பட்ட அப்பெண்ணின் தலை மட்டும் அவனுடைய புட்டத்திற்கு சற்றுத் தள்ளிக் கிடக்கிறது. மிகவும் வேட்கையுடன் அந்த மலத்தை நோக்கித் தன் நாவை நீட்டுகிறது துண்டிக்கப்பட்ட அந்தத் தலை.

ஓவியம்- 2: ஒரு பூத கணத்தைப் போன்ற தோற்றம் கொண்ட வெளிறிய ஆணுருவம் ஒன்று மலையைப் போல் தரையில் கிடக்கிறது. முகமெங்கும் பிரேதக் களை. உடல் முழுதுமே சாம்பலால் ஆனதோ என நினைக்க வைக்கும் நிறம். உடம்பில் ஒரு இடத்தில் கூட முடி இல்லை. அந்தப் பேருருவத்தின் உடலைச் சுற்றிலும் எறும்பு சைஸ் பெண்ணுருவங்கள்.

மீதிக் கதையை நேநோ தொகுதியில் பார்க்கவும்…

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai