பூச்சி 81

இன்று காலை பத்து மணிக்கு இந்தக் கணினியில் அமர்ந்தேன்.  சாப்பிட மட்டும்தான் இடையில் எழுந்தேன்.  முழுநாளும் அல்ஹலாஜின் கவிதைகளில் மூழ்கியிருந்தேன்.  கவிதையா அது.  சந்நதம்.  கடவுளோடு ஒன்றிய நிலை.  பரமஹம்ஸாவின் பித்தநிலை.  அல்ஹலாஜ் சூஃபி கவி மட்டும் அல்ல.  கலகக்காரர். தெருவில் நின்று போராடியவர்.  அடுத்த யேசு.  அந்தக் கட்டுரையை எழுத கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் படித்தேன்.  இரண்டு மணி நேரம் கணினியில் பேய் வேகத்தில் தட்டினேன்.  நரம்புகள் தெறித்து விழுந்தன.  ஒரு கிளாஸ் ஒயின் அருந்தினால் நலம்.  பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்டன.  டிசம்பரில் பார்த்தது.  அதை ஈடுகட்ட இந்தப் பாடல்.  இதை இரண்டு மூன்று முறை கேட்டு விட்டு அடுத்த வேலைக்கு நகர வேண்டும்.