அசோகா: ஹ்ருதய சூத்ரம்

நாவல் பற்றி எதைச் சொன்னாலும் அது சஸ்பென்ஸை உடைத்து விடும் என்றுதான் இருந்தேன். ரொம்ப சிரமப்பட்டு வாயைத் திறக்காமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மூன்று தினங்களாக ஹ்ருதய சூத்ரம் என்ற அத்தியாயத்தை எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையா சம்ஸ்கிர்த் (Gaiea) என்ற பெண் ஹ்ருதய சூத்ரத்தை பிரமாதமான குரலில் பாடியிருக்கிறார். உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஹ்ருதய சூத்ரத்தைக் கையில் வைத்துக் கொண்டு கேட்டுப் பாருங்கள். கொகேய்ன் பொடியை மூக்கின் வழியே உறிஞ்சியது போல் இருக்கும்.

நாவலில் இந்த அத்தியாயம் ஒரு maze மாதிரி சுற்றிக் கொண்டு போகும். நாவலைப் படிக்கும்போது இந்த சூத்ரம் ஞாபகத்திலும் வராது. இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கு வேண்டுமானால் ஞாபகம் வரலாம்.

ஸாரிபுத்ரனே, சூன்யத்திலே ரூபம் இல்லை, உணர்வு இல்லை, பிரக்ஞை இல்லை, விழியில்லை, செவியில்லை, வாய் இல்லை, உடல் இல்லை, பிரக்ஞை இல்லை.

ரூபம் இல்லை, சப்தம் இல்லை, மணம் இல்லை, ருசி இல்லை.

அறியாமை இல்லை, அறிவு இல்லை. முதுமை இல்லை, மரணம் இல்லை. இளமையும் இல்லை, மரணமின்மையும் இல்லை.

துக்கம் இல்லை, சந்தோஷம் இல்லை, ஞானம் இல்லை, அஞ்ஞானமும் இல்லை.

அதனாலே போதிசத்துவனாகப் போகும் ஸாரிபுத்ரனே, இதனாலெல்லாம் தருமாறாமல் நிர்வாணத்தை அடையும் பாதையை கவனி…

கதே கதே பாரகதே பாரஸம்கதே போதி ஸ்வாஹா!

இதி ப்ரக்ஞாபாரமிதா ஹ்ருதயம் ஸமாப்தம்.

***

அதிக பட்சம் மூன்று மாதங்கள். அசோகா வந்து விடும். இப்போதைக்கு கையாவின் பாடலைத் தொடர்ந்து கேளுங்கள்.