வன யோனா: சிறுகதை: அராத்து


“பொண்ணு பாக்கறப்ப தனியா பேச விடுவாங்க இல்ல, அப்பவே புடிச்சி கிஸ் பண்ணிடு மச்சி ” என்றான் சயன் .

நாளைக் காலை மதுரைக்குச் சென்று பெண் பார்க்க இருக்கும் அவலாஞ்சி , இன்று நண்பன் சயனுடன் பியர் அடித்துக்கொண்டு இருக்கிறான். அவலாஞ்சியின்  அப்பா மின் துறையில் அவலாஞ்சியில் வேலை பார்த்தபோது இவன் பிறந்ததால் அவலாஞ்சி என்றே பெயர் வைத்து விட்டார். பையன் ஊட்டியில் தான் படித்தான். ஊட்டி கான்வெண்ட் என “ரேஞ்சை” ஏற்றிக்கொள்ளாதீர்கள். ஊட்டியில் அரசுப்பள்ளியில் படித்தான்.

உடன் தண்ணி அடித்துக்கொண்டிருக்கும் சயன் என்கிற அனந்த சயனம் அவலாஞ்சியின் பள்ளித் தோழன். அவலாஞ்சி முதலில் திருமணம் செய்துகொள்ளட்டும், ஆழம் பார்த்து விட்டு தான் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற தந்திரமான திட்டத்தில் ஈடுபட்டிருந்த்தான் சயன்.

பல வழிகளிலும் திருமணத்திற்கு முயற்சித்து விட்டான் அவலாஞ்சி. எல்லாமே தோல்விதான். காதல் திருமணம் , ஜாதி , மதம் என அவலாஞ்சி வீட்டில் எதற்கும் தடையில்லை. அவலாஞ்சியின் அப்பா “மொருஜி தேசை” நவீனமானவர். அவலாஞ்சியின் தாத்தா அந்தக்காலத்தில் ரேடியோவில் மொரார்ஜி தேசாய் பெயரைக்கேட்டு , அவர் மீது வெட்டியாக ஒரு பிடிப்பு ஏற்பட்டு மொரார்ஜி தேசாய் என பெயர் வைக்க , பலரும் விதவிதமாக அழைத்து , ஒரு வழியாக பொது முடிவுக்கு வந்து மொருஜி தேசை என்று நிலைப்பெற்றது.

அவலாஞ்சிக்கு இருப்பது ஒரு முக்கியமான பிரச்சனை. அதை அவன் நெருங்கிய நண்பன் சயன் உட்பட யாரிடமும் சொன்னதில்லை. பிறகு எப்படி அப்பா விடம் சொல்ல முடியும் ? இந்த முக்கியமான பிரச்சனையால் தான் அவலாஞ்சிக்குத்  தொடர்ந்து திருமணம் கைகூடாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. 

“கிஸ் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பொறுமையா கூட அடிச்சிக்கலாம் மாப்ள, இந்த பொண்ணு மொதல்ல செட் ஆவுதான்னு பாப்போம்” என்றான் அவலாஞ்சி.

அவனே தொடர்ந்து , “பொண்ணு பாக்கறப்ப இதுவரைக்கும் எவனும் கிஸ் அடிச்ச மாதிரி கேள்விப்பட்டதே இல்லை இல்லடா? ” என்று கேட்டு விட்டு பியரில் மும்முரமானான்.

மூன்றாவது பியர் இரண்டாவது பியருடன் வயிற்றில் கலந்துகொண்டிருந்தது. முதல் பியர் தன் வேலையை செவ்வனே காட்டி விட்டு  இந்நேரம் மாநகர புதை குழாய் சாக்கடையில் ஓடிக்கொண்டு இருக்கும்.

“மச்சி , என்னா பண்ணனும் ….பொண்ணு பாக்கறப்ப , தனியா பேசணும்னு சொல்லி ரூமுக்கு கூட்டிட்டுப் போய்ட்டு , கப கபன்னு கட்டிப்புடிச்சி , படுக்க போட்டு மேட்டர் முடிச்சிடணும் மச்சி. எப்டி இருக்கும் ? “ . போதையில் , கண்களில் ஒளி மின்னக் கேட்டான் சயன் .

“கதவை சாத்திஹ்ஹ விட மாட்டாங்ஹதா  . அதை வுடு , நாளைக்கு காலைல ஃபிளைட் , இப்பப்  போய்ப்  படுத்தாதான் சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.” என்று சொல்லிவிட்டு கடைசி கோப்பையைக் கவிழ்த்துக்கொண்டான் அவலாஞ்சி.

பில் செட்டில் செய்து விட்டு டாய்லெட்டில் பியர் பாரத்தை இறக்குகையில் , கண்ணாடியில் தன்னைப் பக்கவாட்டில் பார்த்துக்கொண்டே , முணு முணுத்தான் .

“இந்த தடவை நாசூக்கா , நாகரீகமா , குழந்தை பேசற மாதிரி , கோவம் வராத மாதிரி பேசி , பதில் வாங்கிகிட்டு , இந்தப் பொண்ணைக்  கட்டறேன் “

மேற்சொன்ன வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொன்றாக அழுத்தம் கொடுத்து முணுமுணுத்து முடித்தான்.

மதுரை விமான நிலையத்தில் இறங்கியதும் “பொண்ணு “வீட்டில் இருந்து அழைத்துப் போக பொண்ணின் அப்பாவே வந்திருந்தார். ஏர்போர்ட்டில் இறங்கியதும் ஒரு “தம்” அடிக்கலாம் என்ற அவலாஞ்சியின் ஆசை வெற்றுக் காற்றாக வாயில் இருந்து வெளியேறியது. அவலாஞ்சியின் குடும்பம் ஒரு வேன் வைத்துக்கொண்டு பொண்ணு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது.

பொண்ணின் அப்பா இயல்பாக அவலாஞ்சியின் வேலையைப் பற்றிக் கேட்டுக்கொண்டே வந்தார். பொண்ணின் வீட்டை நெருங்கியதும் , தன் குடும்பம் இன்னும் வந்து சேரவில்லை என்பது அவலாஞ்சிக்குப்  புரிந்தது. போன் செய்துப் பார்த்ததில் மதுரையை நெருங்கி விட்டதாகவும் , டீ குடித்துக்கொண்டு இருப்பதாகவும் சொன்னார் மொருஜி தேசை.

“மாடி ரூம்ல ரெஸ்ட் எடுங்க ” என்று சொன்ன பொண்ணின் அப்பா , அறையைத் திறந்து விட்டார். இதுவரை அவலாஞ்சிக்கு பொண்ணு கண்ணில் தட்டுப்படவில்லை.

நன்றி சொல்லி அறைக்குள் நுழைந்த அவலாஞ்சி கதவைச் சாத்திக்கொண்டு கட்டிலில் விழுந்தான். சுவரில் பெண்ணின் படம் பெரிய சைஸில் மாட்டப்பட்டு இருந்தது. சடக்கென எழுந்து அமர்ந்தான் அவலாஞ்சி. இவனுக்கு அனுப்பப்பட்டப்   படத்தில் இருந்ததை விட மிக மிக அழகாக இருந்தாள். சேலை கட்டி இருந்த அந்தப் புகைப்படத்தில் தெரிந்த கொஞ்சூண்டு இடை பலாச்சுளையில் மின்சாரம் பாய்ந்து தெறிக்கும் சுளைமின்னல் கீற்று  போல  இருந்தது. 

மார்பு எடுப்பாக இருந்தது , மேலும் லேசாக , மிக மிக லேசாக “க்ளீவேஜ் “தெரிவது போல இருந்தது அவலாஞ்சிக்கு ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது.

“இவளை எப்படியாவது கல்யாணம் முடிக்கணும் , ஒத்து வராளா பாப்போம் ” என முணுமுணுத்து விட்டு ,  சுய இன்ப மூடுக்கு வந்தவன் , அவளின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டே அதற்கான ஆயத்தங்களில் இறங்கினான்.”கல்யாணம் ஆனாலும் ஆயிடும் போலருக்கு இவகூட” என்று முணுமுணுத்தவாறே , “வேணாம்” என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டு   மனம் மாறி சொறிந்து கொடுப்பதோடு நிறுத்தி விட்டான்.

அறையில் தனியாக அமர்ந்திருப்பது ஒரு மாதிரியாக இருந்ததால் ஜன்னல் வழியாக தெருவில் இருக்கும் ஒரு மரத்தைப் பார்த்து அதன் நிழலில் நிற்கலாம் என்ற எண்ணத்துடன் கீழே இறங்கி வந்தான்.

கீழ்த்தளத்தில் பொண்ணு பார்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மரத்தடியில் நின்றுகொண்டு மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவனை , பொண்ணின் அப்பா , வாய் பிளந்து சிரித்தபடி அழைத்தார்.

அருகில் சென்றதும் , “காஃபி சாப்படறீங்களா , மோர் வேணுமா”  என்று கேட்டார்.

“இட்ஸ் ஓக்கே ” என்ற சம்மந்தம் இல்லா பதிலை அவலாஞ்சி அளித்ததும் ,

“ஹா ஹா சரி சரி ” என்று சொல்லிய பொ.அ ,

“மாப்ளைக்கு காஃபியே போதுமாம் ” என்று உள்ளே குரல் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் லலா காஃபி எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவலாஞ்சி இன்னும் வாயிற்படி அருகிலேயேதான் நின்றுகொண்டிருந்தான். லலா இப்போது சூரிதார் அணிந்து இருந்தாள். அவலாஞ்சி அவளை முதன்முறையாக நேராகப் பார்க்கிறான். சேலையில் இருந்தது ஒருவித பேரழகு என்றால் , சூரிதாரில் இன்னும் இளைமையாக இருந்தாள். கட்டிவைக்கப்பட்ட கருவேப்பிலை மூட்டை போல இருப்பது மாதிரி தோன்றியது அவலாஞ்சிக்கு. இப்படி ஏதாவது அர்த்தமற்று எகனை மொகனையாகத் தோன்றுவது அவலாஞ்சிக்கு வழக்கம் தான்.

அவலாஞ்சி முதலில் லலாவின் கைகளைப் பார்த்தான். பிறகு கால் தெரிகிறதா எனப் பார்த்துக்கொண்டே , அவளிடம் இருந்து காஃபியை வாங்கிக்கொண்டான்.

“தேங்க்யூ” சொல்லியபடியே ஒரு சிப் அடித்தவன் அவளின் மேல் உதடுக்கு மேல் பூத்திருக்கும் வியர்வை முத்துக்களை நோட்டம் விட்டு சற்று சமாதானம் அடைந்தான்.

அதற்குள் பொ.அ உள்ளே போயிருக்க ,

“ஏன் இங்கயே நிக்கறீங்க ? உள்ள வந்து உக்காந்து குடிங்க .” என்றாள் லலா.

அப்போது அவளின் புருவத் தெறிப்பைப் பார்த்தவாறே கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தான்.

“மாடி ரூம்ல உங்க போட்டோ பாத்தேன். அதுக்கும் இப்ப பாக்கறதுக்கும் நிறைய வித்தியாசம். “

“அப்டியா ? எதுல செம அழகா இருக்கேன் ?”

“சொல்றது கஷ்டம் , அந்த போட்டோ பக்கத்துல வந்து நில்லுங்க , சொல்ல முயற்சி செய்றேன் .”

“உங்க பேரு ஏங்க அவலாஞ்சி? “

“உங்க பேரு ஏன் லலா ?”

இப்படி பேசிக்கொண்டே , பதில்களும் சொல்லிக்கொண்டே இருவரும் மாடி ஏறினார்கள். அறைக்கு வந்து அந்த போட்டோவின் பக்கத்தில் நின்றாள் லலா.

அதை ஒரு புகைப்படம் எடுத்தான் அவலாஞ்சி.

பிறகு இயல்பாக அந்த அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் லலா.

“ரெண்டுத்துலயும் அழகா இருக்கீங்க. ஆனா சூரிதார் தான் பெஸ்ட். “

“வாவ் , ஷாக்கிங்க். தமிழ்ப்பசங்க எல்லாம் சேலைலதான் அழகுன்னு மருகுவாங்க. ஃபர்ஸ்ட் டைம் இப்டி சொல்ற ஒரு ஆளைப் பாக்கறேன்.”

அமைதியாக ஆமோதித்து சிரித்துக்கொண்ட அவலாஞ்சிக்கு இந்த சந்தர்ப்பம் பதட்டம் இல்லாமல் இயல்பாக அமைந்திருப்பது போலத் தோன்றியது. இப்போதே பேசி விடலாம் என்ற எண்ணத்தில் அவன் கண்கள் இலக்கில்லாமல் சுழன்றன.

“இப்ப கொஞ்சம் பேசலாமா ? எங்க வீட்ல இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க .”

“பேசலாமே , அதெல்லாம் கவலைப்படாதீங்க, நான் ஜஸ்ட் 5 மினிட்ஸ்ல சாரிக்கு மாறிடுவேன் .”

“ஓக்கே …எனக்கு ஒரு சின்ன இஷ்யூ …ஆக்சுவலி அது இஷ்யூ இல்ல , எப்டி கோர்வையா சொல்றதுன்னுதான் ….”

“ஃப்ராங்கா சொல்லுங்க , கஞ்சா அடிப்பீங்களா ?”

“இல்ல…ஃப்யூ டைம்ஸ் சும்மா டிரை பண்ணி இருக்கேன், பட் அது இல்ல மேட்டர். நீங்க ஃப்ரீயா பேசற மாதிரி இருக்குறதால் டேரக்டா பேசிடலாம்னு பாக்கறேன் …”

“ஹலோ டேரக்டா பேசுங்க அதுதான் நல்லது. ஒளிச்சி மறைச்சி பேசி என்னத்தை சாதிக்கப் போறோம் .”

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சி இருக்கு …இப்ப நான் கேக்கப்போறதை ஜஸ்ட் வேர்டா , ஐ மீன் வெறும் வார்த்தையா … அதுக்கு பின்னால எந்த டிரெடீஷனல் வேல்யூ , எதிக்ஸ் எதையும் போட்டு குழப்பிக்காம கேப்பீங்களா ?”

“ஹலோ ஏன் ஓவர் பில்ட் அப் ? விர்ஜினான்னு கேக்கப் போறீங்களா ?”

“சேச்சே …அது இல்ல , எப்டி சொல்றது …இப்ப நான் பேசப்போறாதை ஒரு பொண்ணு பேசற மாதிரி எடுத்துகிட்டீங்கன்னா ….கோவம் வராது …ஜஸ்ட் டேட்டா வுக்காக , சும்மா தகவலுக்காக கேக்கறதா எடுத்துகிட்டு …”

“ஐயா சாமி ..என்ன வேணா கேளுங்க , எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்.” சிரித்தாள்.

“சரி … உங்க விஜினாவுல , ஐ மீன் யோனில நிறைய முடி இருக்குமா ?”

“வாட் ?”

“நோ நோ , டென்ஷன் ஆவாதீங்க …இருந்தாலும் பிரச்சனை இல்லை.தட் ஈஸ் நேச்சர். உங்க  நேச்சர் எப்டி ? “

“ஹேய் …என்னா இது ? “

“இல்ல , இயற்கையிலேயே உங்க யோனில நிறைய முடி இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. உங்களுக்கு அங்க முடி வச்சிக்கப் பிடிக்குமா ?”

ஒரு மாதிரி திக் பிரமை பிடித்து லலா அமர்ந்திருக்க ,

“எனக்கும் முடி பிரச்சனை இல்லை. அது வேற இங்க இருந்தாலும் பிரச்சனை இல்லை. யோனில மட்டும் எனக்கு அலர்ஜி. என் வீக்நெஸ்ஸுன்னு வச்சிக்கோங்களேன். அங்க மட்டும் அதை வளர விடாம முளையிலேயே கிள்ளி எறிஞ்சிட்டா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை “

லலா இவனை மெண்டல் போல பார்த்துக்கொண்டே , எழுந்திருக்க …

“பாத்தீங்களா ? நான் தான் ஃபர்ஸ்டே சொன்னேன் இல்ல ? ஜஸ்ட் டேட்டா , அவ்ளோதான் . “

“மயிரு டேட்டா ” என்றபடி லலா அறையை விட்டு வெளியே செல்ல முயற்சிக்க …

“இல்ல , கல்யாணத்துக்கு முன்னால எல்லாத்தையும் ஃபிராங்கா கிளியர் பண்ணிகிட்டு , நேராவே பேசி செக் பண்ணிக்கலாம்னுதான் …”

“யூ பாஸ்டர்ட் , இதை நேரா வேற செக் பண்ணுவியா ?”

“சாரி சாரி , பேசி செக் பண்ணிக்கறதை சொன்னேன். “

“இந்த யோனி மசுரைத் தவிர கல்யாணத்துக்கு முன்ன உனக்கு பேசறதுக்கு எதுவுமே இல்லியாடா ? ச்சீ பைத்தியம் .” என்று கத்தி விட்டு லலா வெளியே செல்வதற்கும் வேன் வீட்டின் முன் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

புயலென வீட்டினுள் நுழைந்த லலாவிடம் , அம்மா ,

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க , சீக்கிரம் புடவை மாத்திக்கோம்மா .” என்றாள்.

“ஒரு மயிரும் மாத்த மாட்டேன். எல்லாரையும் வெளில போகச் சொல்லு. “

“என்னாடீ ஆச்சி ? இப்டி திடீர்னு சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க ?”

“ம்ம்… போயி  எங்கயாச்சும் போய் மயிரைப் புடுங்கச் சொல்லு .”

மாடியில் இருந்து இறங்கிய அவலாஞ்சி , வந்து நின்ற வேனில் ஏறிக்கொண்டவன்,

“பொண்ணு சரி வராது . அப்டியே வேனைத் திருப்புங்க. ” என்றான்.

————

வேனிலேயே கள்ளக்குறிச்சி வரை திரும்பி பைபாஸில் இறங்கிக்கொண்டான் அவலாஞ்சி. குடும்பம் கச்சிராப்பாளையம் நோக்கிச் செல்ல சென்னை செல்லும் பேருந்தைப் பிடித்தான் .

பேருந்து தியாக துருகம் , உளுந்தூர்பேட்டை என மேப் வரைந்து விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இளைப்பாறியது.

கடுப்பாக இறங்கி தம் பற்ற வைத்தான் அவலாஞ்சி. மெல்ல இருள் கவியத் துவங்கி இருந்தது. இந்த நாளின் முதல் தம். அந்த நாளின் முதல் சிகரட் கொடுக்கும் கிக்கே தனி. அது போல முதல் புணர்ச்சி சுகத்தை யார் தரப்போகிறாள் ? டீசல் புகையோடு சிகரட் புகையும் கலந்துகொண்டிருந்தது.

வேனில் வருகையில் நடந்த உரையாடலை அசை போட்டான்.

“ஏண்டா என்ன ஆச்சி ? ஏன் திடீர்னு திரும்பலாம்னு சொல்ற ? “

“இல்லப்பா , பொண்ணு வெளிப்படையா பேச மாட்டேங்கறா .”

“பொண்ணுங்கன்னா அப்டித்தானேடா ? இருக்குன்னா இல்லன்னு அர்த்தம் , இல்லன்னா இருக்குன்னு அர்த்தம் . நாம தான் புரிஞ்சிக்கணும் .”

“அவ ரொம்ப மோசம்பா . இருக்குன்னும் சொல்ல மாட்டேங்கறா. இல்லன்னும் சொல்ல மாட்டேங்கறா .”

“சரி , நீ என்ன கேட்ட ? அவ அதுக்கு என்ன சொன்னா? என்கிட்ட சொல்லு. நான் எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆளு. நான் டீகோட் பண்ணி சொல்றேன் .”

அவலாஞ்சி அமைதியாக இருக்க …

“அட சொல்லேம்பா , இந்தக்காலத்து சின்னஞ்சிறுசுக என்ன பேசிக்கிறாங்கன்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் .” உறவினர் ஒருவர் குரல் கொடுத்தார்.

“கல்யாணம் பண்ணிகிட்டு ஏழுமலையானுக்கு மொட்டை போடலாமான்னு கேட்டேன். ஆளை விடுங்க .” என்று சொல்லிவிட்டு சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

——————

பேருந்து மீண்டும் கிளம்பியதும் , சயனுக்கு போன் போட்டு பியர் வாங்கி அறையில் வைக்கச் சொல்லி , இரவு அவன் ஃபிளாட்டுக்கு  வருவதாகச் சொன்னான் அவலாஞ்சி.

சயனுடன் பியர் அடிக்கையில் பொண்ணு பார்த்த விஷயத்தைத்  தவிர்த்தான்.சயனுக்கு ஒரே ஆர்வமாக இருந்தது. விடாமல் அதைச் சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருந்தான்.

“மச்சி அதை விடு. அவ வேற டைப் , நான் வேற டைப். செட் ஆகாது ” என்று கூறி முடித்து , சாப்பிட்டு குட்நைட் சொல்லி அவன் ஃபிளாட்டில் இவன் வந்தால் தங்கும் அறைக்குச் சென்றான்.

படுக்கையில் படுத்து மொபைலை எடுத்து லலா வின் ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தான். எந்த அப்டேட்டும் இல்லை. அவளின் வாட்ஸப் எண்ணை அமுக்கினான். ஹாய் என்று டைப் செய்து விட்டான். அவனை இன்னும் பிளாக் செய்யாததே ஆச்சரியமாக இருந்தது.

இதுவரை ஒரு சில காதல்கள் , மேட்ரிமோனி மூலம் வந்த சந்திப்புகள் , கேஷுவல் ஃபிரண்ட்ஷிப் எல்லாம் திருமணத்தை நோக்கிச் செல்கையில் , அவலாஞ்சி பேச ஆரம்பித்ததும் பிளாக் செய்யப்பட்டதுதான் வரலாறு.

நீங்கள் நினைக்கலாம். காதலில் இருக்கையில் , படுக்கை வரை சென்று , நேரில் பார்த்து தரிசித்து , முடி அதிகம் இருந்தால் , இதை எடுத்து விடு என்று சொன்னால் , சிம்பிளாக எடுத்து விடப்போகிறாள். அல்லது “நானே எடுத்து விடுகிறேன் ” என்று சொன்னால் இந்தக் காலத்துப் பெண்கள் நெக்குருகிப் போய் , காதலால் கசிந்துருகி இரண்டு கால்களையும் தோள்களில் தூக்கி வைத்து,  வழியும் தங்கள் ஆனந்தக் கண்ணீரை கைகளால் துடைத்தெடுத்துத் தெளித்து வேலையை இன்னும் சுலபமாக்கப்போகிறார்கள். பிரச்சனை அதுவல்ல , அவலாஞ்சியின் நேர்மைதான் பிரச்சனை.

ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பேசித்  தெரிந்து கொண்டு பிறகுதான் அதில் ஈடுபட வேண்டும் என்பதுதான் அவன் கொள்கை. ஆண்கள் தாடி வளர்க்கிறார்கள். வித விதமாக மீசை வைத்துக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு டி.ராஜேந்தரை தாடி , மீசை எடுத்துடு என்று சொன்னால் அவருக்கு எப்படி இருக்கும் ?

பெண்களுக்கு தாடி மீசை போன்ற பர்ஸ்னாலிட்டி சார்ந்த ஸ்டைல் இல்லை. அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இடம் தான் . அதிலும் அவர்களின் மன விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் அடிமடியில் கைவைத்தால் எப்படி ? என்ற அவலாஞ்சியின் பரந்த மனப்பான்மைதான் இப்படி அவர்களிடம் முன்கூட்டியே வெளிப்படையாகப் பேசிவிடும் காரணம். இதற்காக அவன் யோனி முடி பற்றி கொடூரமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை தேடித் தேடி வாசித்து இருக்கிறான். அதில் முடியால்  இதயம் வரைந்து கொள்வது , பூரான் விடுவது , கட்டம் போட்டுக்கொள்வது மற்றும் அது சார்ந்த பெண்களின் யோனிவியல் மற்றும் உளவியல்களைப் படித்துப் புரிந்து கொண்டு இருப்பதால் இப்படிச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறான். மேலும் அவலாஞ்சி மேம்போக்காக சில இலக்கிய ஆக்கங்களைப் படித்து , தன்னை ஒரு ஜனநாயகவாதியாக உருமாற்றிக்கொண்டு இருப்பவன். ஜனநாயகத்தின் பிறப்பிடம் யோனி , ஜனநாயகத்தின் தோற்றுவாய் யோனி என உலகின் தலை சிறந்த இரண்டு பொன்மொழிகளை உருவாக்கி இதுவரை பொதுவெளியில் விடாமல் அடக்கி வாசிக்கும் சுபாவமுள்ளவன் அவலாஞ்சி. அதனால் இந்த முடி விஷயத்தில்,  திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்தினால் ஆண் சர்வாதிகாரியாக முடிவெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இருவரும் கலந்து பேசி ஜனநாயக முறைப்படி ஒரு கூட்டு முடிவு எடுக்கவேண்டும் என்பதுதான் அவலாஞ்சியின் விருப்பமாக இருந்தது.

லலா “ஹாய்” மெசேஜை பார்த்தற்கான சமிக்ஞை வாட்ஸப்பில் காட்டியது.

“சாரி ” என்று அடித்தான் .

பதிலில்லை.

“உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கமில்லை . எனக்கு யோனி முடியில் ஒரு சின்ன பிரச்சனை. உங்களுக்கு யோனி முடி சம்மந்தப்பட்டு வெவ்வேறு கற்பனைகளும் , ஃபேண்டஸிகளும் இருந்தால் , அதை நான் தடுக்கக் கூடாது அல்லவா ? அதனால் தான் நான் வெளிப்படையாகக் கேட்டேன். வேறு எந்த தீய நோக்கமும் இல்லை. “

மீண்டும் பதிலில்லை , ஆனால் படித்து விட்டாள்.

“ஆக்சுவலி  , உங்கள் யோனி உங்களுக்குச் சொந்தமானதுதான். உங்கள் யோனி உங்கள் உரிமை. இருந்தாலும் , திருமணம் செய்து கொண்டால் உங்கள் யோனியை நானும் உபயோகிக்கப் போகிறவன் என்ற முறையில் , என் விருப்பம் சார்ந்த சில கருத்துக்களை வெளியிட்டு , உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன், அவ்வளவுதான். மற்றபடி என்னைக் காட்டிலும் அதிக அளவு உங்கள் யோனியை நீங்கள்தான் பயன்படுத்தப்போகிறீர்கள், அல்ரெடி பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறீர்கள் என்ற ரியாலிட்டி அறிந்ததால்தான் , ஜனநாயகத்தன்மையுடன் , வெளிப்படையாக அந்த கேள்வியைக் கேட்டேன் .”

இதையும் படித்து விட்டாள். பதிலில்லை.

“இப்படி யோசியுங்கள். உங்கள் யோனிக்கு பேசும் சக்தி இருந்தால் அதனிடம் கேட்டிருப்பேன். அதற்கு அந்த ப்ரிவிலேஜ் இல்லாததாலும் , அதன் சார்பாக நீங்கள்தான் பேசக்கூடியவர் என்பதாலும் , உங்கள் யோனியின் உரிமை உங்களிடம் இருப்பதாலும்தான் உங்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்க நேர்ந்தது. “

இதற்கு பதில் வந்தது.

“ஃபக் யூ , ப்ளடி மெண்டல் ஆஸ் ஹோல், பாஸ்டர்ட்  “

போதையும் தலைக்கேறி இருந்ததால் அவலாஞ்சியும் தூண்டப்பட்டான்.

“ஏண்டி அவனவன் என்னான்னா கேக்கறான் ? மொதல்ல எளநி வழுக்கை மாதிரி பேசிட்டு கல்யாணம் பண்ணிட்டு , அவனை ஓத்தியா , இவனை ஓத்தியா ? எங்க தடவுனான் ? எத்தனை பேர் கூட பழக்கம் ? அது இதுன்னு எவ்ளோ ரப்சர் பண்ணுவான்? அப்பல்லாம் கண்ணை கசக்கிட்டு , நான் ஒண்ணும் பண்ணலை , அவன் தான் கழட்னான் , அவன் தான் கடிச்சான் , அவன் தான் ஓத்தான் , எனக்கு ஒண்ணுந் தெரியாதுன்னு பப்பா மாதிரி மூக்கொழிகிட்டு இருக்க புடிக்கும். அவன்லாம் நல்லவன். நான் கெட்டவன்.

சொத்து எவ்ளோ , எவ்ளோ நகை போடுவீங்க ? கேஷ் எவ்ளோ குடுப்பீங்க ? ஒரே சாதியா ? ஒரே குலமா ? குல தெய்வம் என்னா ? எந்த குடும்பத்துல கட்டிக் குடுத்து இருக்கீங்க ? கார் வாங்கிக் குடுப்பீங்களான்னு எல்லாம் கேக்கறவன் ஜெண்டில் மேன். மயிரு , கூதில முடி வச்சிக்க புடிக்குமா ? எனக்கு அது மட்டும் கொஞ்சம் பிரச்சனைன்னு வெளிப்படையா பேசற , கேக்குற நான் தேவடியாப்பையன் . 

கல்யாணம் பண்றதுக்கும் , சாதிக்கும் , சொத்துக்கும் என்னாடி சம்மந்தம் ? கல்யாணம் பண்றது மெயினா எதுக்கு ? ஓத்து புள்ளை பெக்குறதுக்குதானே ? அப்ப மெயின் பூளும் புண்டையும் தானே ? அதை வுட்டுட்டு சம்மந்தம் இல்லாத மத்த மயிரை பெரிய மயிரு மாதிரி  பேசிகிட்டு இருக்கீங்க . இந்த வெட்டி மயிரைப் பேசறதுக்கு வெள்ளையுஞ் சொள்ளையுமா நாலு பெரிய மனுஷனுங்க வேற . அது எப்படி இருக்கும் ? நமக்கு புடிச்ச மாதிரி இருக்குமா ? நமக்கு புடிச்ச மாதிரி வச்சிக்கிறதுல  அவளுக்கும் விருப்பமா ? ஒத்து வருமா ? இதெல்லாம் தெரிஞ்சிக்கணும்னு ஓப்பனா நாகரீகமா கேட்டா தேவடியாப்பையன்னு திட்டுவியா ? ஆமாண்டி தன் பொண்டாட்டி புண்டையையே ஒரு தடவை கூட வெளக்குல பாக்காத , அது எப்டி இருக்கும்னு தெரியாத , அதுக்கூட ஒரு இண்டெலக்சுவல் , எமோஷனல் உறவு வச்சிக்காத மட மாக்கான் கூட்டத்துல நான் மெண்டல் தாண்டி “

12 நிமிடங்களுக்குப்பின் அவலாஞ்சியை பிளாக் செய்தாள் லலா. அவலாஞ்சிக்கு பியர் அடிக்க வேண்டும் போல இருந்தது. எழுந்து வெளியே போனான். சயன் அமைதியாக அமர்ந்து பியர் அடித்துக்கொண்டு இருந்தான். அவலாஞ்சியை பார்த்ததும் பியர் பாட்டிலை நீட்டினான்.

—————-

ஏறிய இரத்த அழுத்தத்திற்குக்  குளிர்ந்த பியர் இதமாக இருந்தது. ஃபிரிட்ஜில் இருந்து இன்னும் இரண்டு பியர்கள் காலியானதும் மீண்டும் போய் படுக்கையில் விழுந்தான் அவலாஞ்சி. அவலாஞ்சிக்கு லலாவை மிகவும் பிடித்தே இருந்தது.

“யேய் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குடி , புரிஞ்சிக்கோடி. ” என்று எஸ் எம் எஸ் அடித்து விட்டு மட்டையானான்.

மட்டையானாலும் நினைவுகள் உறங்க ஆரம்பிக்கவில்லை. இடது புறமும் வலது புறமும் புரண்டுப்  புரண்டு படுக்கப் படுக்க , மார்கழி மாதப் பனியும் , கோயில் வெண்பொங்கலும் , தெருக்கோலமும் , அதன் நடுவே வைக்கப்பட்டிருக்கும் பூசணிப்  பூவும் நினைவில் ஆட ஆரம்பித்தன . அதனூடே தாமரை நினைவுக்கு வந்தாள். தாமரை கோலம் போட்டுக்கொண்டிருப்பது நினைவில் ஆடியது. அப்படியே உறங்கிப்போனான்.

———-

அவலாஞ்சியில் இருந்து காரமடைக்கு அவலாஞ்சியின் அப்பா மாற்றல் ஆகி , புது வீடு வாடகைக்கு எடுத்து ஓர் இரவில் காரில் அவலாஞ்சி அந்த வீட்டுக்குள் புகுந்த போது தூங்கிக்கொண்டு இருந்தான். தூக்கக்கலக்கத்திலேயே அவனை மொருஜீ தேசை தூக்கிக்கொண்டு போய்ப்  படுக்கையில் போட்டார்.

அதிகாலையில் எழுந்து குழம்பினான் அவலாஞ்சி. அம்மா ஹார்லிக்ஸ் போட்டுக்கொடுத்து , “வெளில போய் ஒக்காந்து இரு , அம்மா க்ளீன் பண்ணிட்டு கூப்புடறேன் .” என்று சொல்லி வீட்டு வேலையில் ஆழ்ந்தார். மார்கழி மாத ஆதவன் கடும் பிரயத்தனத்துடன் போராடி கதிர்களை விரிக்க ஆரம்பித்து இருந்தான். அவலாஞ்சி கண்களை கசக்கிக்கொண்டே வீட்டின் வெளியே வந்தான். திண்ணையில் அமர்ந்தான். அது மூன்று போர்ஷன்களை கொண்ட வீடு. ஒரே பொது வாயிற்படி.

வாசலில் குத்துக்காலிட்டு அமர்ந்து தாமரை கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள். அவளுக்கு என்ன வயது என்றெல்லாம் அப்போது அவலாஞ்சிக்குத் தெரியாது.பாவாடை தாவணி கட்டியிருந்தாள். அந்த பாவாடை டிசைன் , தாவணி வண்ணம் கூட இப்போதும் அவலாஞ்சிக்கு ஞாபகம் இருக்கிறது. ஜாக்கெட் வண்ணம் மட்டும் மறந்து போயிற்று.

பச்சை வண்ணப்  பாவாடையில் வெள்ளை வண்ண பூக்கள்.அடர்ப்  பச்சை வண்ண தாவணி . தாமரை வெள்ளைக்காரி போல வெளுப்பாக இருந்தாள். முதலில் கோலத்தை அசுவாரசியமாகப் பார்த்தான் அவலாஞ்சி. அப்போது அவன் வயது 9 அல்லது 10  இருக்கலாம்.

தாமரை பாவாடையை முட்டிக்காலுக்கு மேல் ஏற்றி விட்டு குத்துக்காலிட்டு அமர்ந்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள். யதேச்சையாக முட்டிக்காலுக்கு அருகில் பார்வையை ஓட்டிய அவலாஞ்சிக்கு தாமரையின் யோனி தெரிந்தது. அதில் கருகருவென முடி வளர்ந்து யோனி என்பதே மொத்த பிரபஞ்சக்  கறுமை போலக் காட்சியளித்தது. பயந்து விட்டான் பொடியன் அவலாஞ்சி.திக் பிரமை பிடித்தது போல ஆனான். சிறுமிகளின் யோனியைக் கண்டதுண்டு அவலாஞ்சி. ஆற்றில் குளிக்கையில் , தெருவில் குளிப்பாட்டுகையில் என யோனியை தன் வாழ்வில் இயல்பாக ஏற்றுக்கொண்ட ஒருவனுக்கு , புத்தருக்கு உலக உண்மை முகத்தில் அறைந்தது போல தாமரையின் யோனி வனம் முகத்தில் அறைந்தது. பேய் அறைந்தது போல ஆனான்.

ஆனாலும் தாமரை கோலம் போட்டு முடித்து பூசணிப்பூ வைக்கும் வரையில் பார்த்துக்கொண்டே இருந்தான்.

————–

இந்த சம்பவத்திற்குப்பிறகு அவலாஞ்சிக்குத் தாமரை தன் வனத்தைக் காட்டும் சந்தர்ப்பம் அமையவில்லை. அவலாஞ்சிக்குப்  பெண்களைப் பார்த்தாலே பயம் உண்டானது. அவர்களுக்கு உள்ளே இருக்கும் வனத்தைப்பற்றியே நினைத்து பயந்து போனான். தாமரையை மீண்டும் பார்க்கும் போதெல்லாம் அவள் முகத்திற்கு பதிலாக அடர்வன யோனியை அங்கேக் கண்டான். தொடர்ந்து பெண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் , அவர்கள் முகத்துக்குப் பதிலாக வனயோனியே இருப்பதைக் கண்டு மிரண்டான்.

இப்படியே போய் இருந்தால் , பைத்தியம் ஆகி இருப்பான். ஏதேனும் ஒரு மனநல மருதுவர் அவனை பல மாத்திரைகள் கொடுத்தும் , கவுன்சிலிங்க் கொடுத்தும் இன்னும் மெண்டல் ஆக்கி இருப்பார்கள். அவலாஞ்சி தனக்கான மருத்துவத்தைத் தானே தேடிக்கொண்டான். தன்னுடன் படிக்கும் வகுப்புத் தோழிகளை பலப்பல விளையாட்டுகள் மூலம் , அவர்களின் யோனியைக் காட்ட வைத்தான். அதில் முடி இல்லாமல் தன் குறி போலவே இருப்பதைக் கண்டு , உலகம் அவ்வளவு கொடூரமானது அல்ல என்ற முடிவுக்கு வந்து தேற்றிக்கொண்டான். அதை செல்லம் கொஞ்சி கொண்டாடினான்.

——————–

ஒரு நாள் தாமரை அவலாஞ்சியை அழைத்தாள். முத்தம் கொடுத்தாள். காட்டேரி,  முடிகளுடன் முத்தம் கொடுத்துத்  தன் கன்னத்தில் ரத்தம் உண்டாக்குவது போல உணர்ந்தான் அவலாஞ்சி. அந்த முடிக்கற்றைகளை விட்டு வெளியேற போராடுவது போல இருந்தது அவனுக்கு .

தாமரைக்கு அழகான கேசம். தலைக்குளித்து முடித்து அவ்வளவு அம்சமாக இருந்தாள். அன்று சிவப்பு வண்ண தாவணி அணிந்து இருந்தாள். அவலாஞ்சிக்குத்தான் அவள் முகமே மறைந்து வனயோனி கழுத்தில் வீற்றிருக்கிறதே.

ஒரு கடிதத்தைக் கொடுத்து அடுத்தத்  தெருவில் மண்டி வைத்திருக்கும் அண்ணனிடம் கொடுக்கச் சொன்னாள்.

அந்தக் கடிதத்தை அவலாஞ்சி அந்த அண்ணனிடம் கொடுத்த அடுத்த இரு நாட்களில் தாமரை ஊரை விட்டு ஓடிப்போனாள்.

அவலாஞ்சிக்கு நிம்மதியாக இருந்தது.

——————–

இப்போது லலாவிடம் பேசியது போலவே பல பெண்களிடம் இதை விட சொதப்பலாகப் பேசி வசை , செருப்படி எல்லாம் வாங்கி இருக்கிறான் அவலாஞ்சி. அவனுக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. ஆனாலும் அந்த யோனி முடி அலர்ஜி மட்டும் இன்னும் விலகவில்லை.

மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது பிட் படம் பார்த்து சடுதியில் திரை முழுக்க வந்த மிகப்பிரம்மாண்டமான யோனி மற்றும் முடிகளைப் பார்த்து இதயம் பயத்தால் துடிதுடிக்க ,வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்ற திக்கற்ற நிலைக்குப் போய் , மீண்டான்.

தேவதை மாதிரி இருக்கிறார்கள். குழந்தை போல பேசுகிறார்கள். ஆனால் ஏன் அவர்களுக்கு இப்படி காட்டேரி போல கடினமான முடி அந்த இடத்தில் இறைவன் வைத்தான் ? என்ற தத்துவார்த்த ஆன்மீக கேள்விக்கு அவலாஞ்சிக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. எவ்வளவு மென்மையாக இருக்கிறார்கள்  ? பளிங்கு போல முகம் , பஞ்சு போல மார்பு , ஆனால் ஆனால் ..ஆனால் …இப்படியே வெதும்பி வெதும்பியே அவன் வாழ்க்கை போனது.

வேலைக்குச் சேர்ந்து வெளிநாட்டு போர்னோகிராஃபி பார்த்து ஓரளவு சமாதானம் அடைந்தான். ஆனாலும் அதில் காட்டப்படும் “க்ளீன் ஷேவ்ட் ” யோனி அவனுக்கு யோனி போலவேத் தோன்றவில்லை.

மழை பெய்து ஓய்ந்த செம்மண் நிலத்தில் , திடீர் நீரோடை ஓடி மறைந்ததால் , நெகிழ்ச்சியாக கிடக்கும் நிலம் போல சில வெளிநாட்டு  யோனிகள் இருந்தது. விருப்பு வெறுப்பற்ற பர்கர் போல சில யோனிகள் காட்சிகளில் காணக் கிடைத்தன.

செத்துக்கிடக்கும் மீன்கள் போல , விழுங்கத் துடிக்கும் திமிங்கிலம் போல எல்லாம் வெளிநாட்டு யோனிகளை போர்னோகிராஃபிக் படங்களில் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தான். தமிழ் நாட்டு யோனிதான் உயிரோட்டமுள்ள யோனி. ஆனால் அதில் ஒரே சிக்கல் முடிதான். சிக்கலில்லாமல் அந்த முடிகளைக் களைந்து விட்டால் , அதுவும் யோனியின் ஓனரின் சம்மதத்தோடு களைந்து விட்டால் , ஓனருக்கும் அந்த முடி விஷயம் பிடிக்காமல் இருந்து விட்டால் , இந்த உலகில் அவ்வளவு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து , அதை தன்னால் இயன்ற வரை நாகரீகமாகச் செயல்படுத்த ஆரம்பித்தான்.

————

சயன் வீட்டில் தூங்கி எழுந்ததும் , தலை வலிக்க வில்லை. நல்ல பியர் போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக ஏதேனும் ஒரு “பேட்ச் ப்ரொடக்‌ஷனில்” நல்ல பியர் மாட்டி விடும்.

டாய்லெட்டில் அமர்ந்து மொபைலை நோண்டுகையில் , அப்பாவிடம் இருந்து ஒரு போட்டோ வந்திருந்தது.

லலாவை விட பேரழகியாக இருந்தாள். தூக்கம் கலைந்து உற்சாகம் ஆனான். அவளின் தொலைபேசி எண்ணையும் அனுப்பி இருந்தார் தந்தை. சென்னையில் தான் வேலையில் இருக்கிறாள்.

மற்ற அனைத்தும் சடுதியில் நடந்தேறியது.

அவளை காஃபி ஷாப்பில் சந்தித்தான். மகாபலிபுரம் வீக் எண்ட் போகலாமா என்றாள் அவள்.

வீக் எண்டில் , மிகவும் முன்னெச்சரிக்கையோடு பேச முற்படும் போதெல்லாம் அவள் வேறென்னவோ பேச்சை மாற்றி பேசிக்கொண்டு இருந்தாள்.

பீச் ரெஸார்டில் நான்காவது ரவுண்டில் , மிகுந்த முன் தயாரிப்புடன் வெகு ஜாக்கிரதையுடன் , அவலாஞ்சி இந்த யோனி முடி மேட்டரை ஆரம்பிக்கையில் ,

“புண்டைக்கு எதுக்குடா மீசை தாடி ? ஐ ஹேட் இட் ” என்று முடித்து வைத்தாள் மெல்லியா .

அன்று இரவு அதைப் நேரில் தரிசித்தும்  சரிபார்த்துக்கொண்டான் அவலாஞ்சி. அதில் உள்ள உயிரோட்டத்தையும் புரிந்துகொண்டான். அதையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தவனை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டாள்.

முதல் முறையாக மெல்லியா முகத்தில் முகம் இருப்பதைக் கண்டான் அவலாஞ்சி.

—————

அவலாஞ்சியும் மெல்லியாவும் திருமணம் செய்து கொள்ள மனம் ஒப்பினார்கள். அதற்குள் மெல்லியா கர்ப்பமானாள். ஒரு ஃபார்மாலிட்டிக்காக மெல்லியாவை பெண் பார்க்கும் வைபவம் வைத்தார்கள்.

அதே போல வேன். அவலாஞ்சி தனியாக காரில் சென்றான்.

மெல்லியா புடவை கட்டிக்கொண்டு , சிரித்துக்கொண்டே எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுதாள்.

மெல்லியாவின் அப்பா ஆரவாரமான சந்தோஷத்தோடு , பேசிக்கொண்டு இருந்தார்.

மெல்லியாவின் அம்மா பட்சணங்களை ஒரு பெரிய தட்டில் வைத்துக்கொண்டு , அடக்க ஒடுக்கமாக நடந்து வந்து , மென் சிரிப்புடன் , நடுவில் வைத்தார்.

இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று அவலாஞ்சிக்கு மனம் துடிக்க ஆரம்பித்தது.

அவலாஞ்சியின் அப்பா , “டேய் அவலாஞ்சி , இது யார் தெரியுமா ? உன் சின்ன வயசுல குடியிருந்தமே , அந்த வீட்ல இருந்த தாமரை டா. நீ தான் லவ் லெட்டர் குடுத்து இவங்கள சேத்து வச்சியாம் , சொன்னிச்சி. படவா , அப்ப நீ எதுமே சொல்லலை இல்ல எங்க கிட்ட ?”

என்று சொல்லி இடி இடியென்று சிரித்தார்.

அவலாஞ்சி தாமரையைப் பார்த்தான். அந்த மார்கழி மாத அதிகாலை நினைவுக்கு வந்தது.தாமரையின்  முகத்தில் இப்போது வனயோனி இருந்தது.

காஃபியை எடுத்துக் குடித்தான் .

மெல்லியாவைப் பார்க்காமல் காஃபியையே கர்ம சிரத்தையாக உற்றுப் பார்த்துக் குடித்துக்கொண்டு இருந்தான்.