என் ஆசானுக்கு மரியாதை

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை சார்பாக என் ஆசானும் மதிப்புக்குரிய நண்பருமான அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. இதை நான் எனக்கே அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். எங்கள் சில்ஸிலாவில் யாருமே அப்படி அப்படியே க்ளோனிங் செய்த மாதிரி ஒருவர் சொல்வதை அடுத்தவர் ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் அன்பையும் அபிமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட புரிதலோடு வாழ்தல் என்பதுதான் இந்த சில்ஸிலாவின் பொதுத்தன்மை. ஆகவே நூற்றுக்குத் தொண்ணூறு விஷயங்களில் வேறுபட்டாலும் இந்தப் புள்ளியில் ஒன்றுபட வேண்டும். மேலும், அன்பு பற்றிய புரிதலிலும் பல குளறுபடிகள் உள்ளன. எல்லா மதங்களும் அன்பைப் பேணுவதற்காகவே உருவாக்கப்பட்டதாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் பார்த்தால் மனித சரித்திரம் பூராவும் ரத்த ஆறு ஓடுவதற்கே மதங்கள் துணை புரிந்தன. எனவே அன்பு என்றால் என்ன என்பதிலேயே பல பிரச்சினைகள் எழுகின்றன.

குடிக்காதே, உன் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன் என்று என்னிடம் சொல்லும் நல்லவரைப் பார்த்தால் எனக்கு ஹிட்லரைப் போல் தெரிகிறான். என் சுவாசத்தை விட நான் முக்கியமானதாகக் கருதும் என் சுதந்திரத்தை என்னிடமிருந்து பறிப்பவன் என் மீது அன்பு செலுத்தக் கூடியவனாக இருப்பான்? அவன் அப்படி நினைக்கிறான். அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை அவன் என்னுடைய predator.

இதையெல்லாம் நான் கற்றுக் கொண்டது நிறப்பிரிகை பத்திரிகையில். நிறப்பிரிகையின் அச்சாணி அ. மார்க்ஸ். அதனால்தான் அவரை என் ஆசான் என்கிறேன்.

நாளை மறுநாள் அம்பாஸடர் பல்லவா ஓட்டலில் விழா. தவறாமல் கலந்து கொள்ளுங்கள். முகக் கவசம் அணிந்து வாருங்கள். அழைப்பிதழ் கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. மார்க்ஸ் நம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவர்.

அழைப்பிதழ்: