28. சொற்கடிகை

நேற்றைய குறிப்பில் ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். இத்தாலியின் வறுமை பற்றி. தனிநபர் வருமானம் போன்ற புள்ளி விவரங்களைப் பார்த்தால் இந்தியாதான் இத்தாலியை விட பல மடங்கு கீழே இருப்பது போல் இருக்கும். ஆனால் புள்ளி விவரத்தை விட எதார்த்த வாழ்க்கை தரும் அனுபவங்கள் நேர்மாறானவை. இத்தாலியின் வறுமை பற்றி எழுதிய போது இளைஞர்களைக் குறிப்பிட்டேன். அதில் ஒரு சாரார், ஆண் விபச்சாரர்கள். Male strip clubகளில் பணி புரியும் இளைஞர் கூட்டம். மிலன் என்ற ஒரே ஒரு ஊரில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட male strip clubகள் உள்ளன. இன்றுதான் இது பற்றியெல்லாம் நெட்ஃப்ளிக்ஸில் உங்களுக்குப் படங்கள் கிடைக்கின்றன. நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே எக்ஸைலில் விரிவாக எழுதியிருக்கிறேன். அப்படிப் பணி புரிபவர்களின் நேரடி அனுபவங்கள் அவை. வயகராவை விழுங்கி விட்டு நாலு மணி நேரம் நட்ட குறியோடு ஆட வேண்டும். அங்கே வரும் மேட்டுக்குடிப் பெண்கள் ரசிக்கவும் ருசிக்கவும் நட்ட குறி தர வேண்டும். நாற்பது வயதில் மரணம் நிச்சயம். தினந்தோறும் வயகராவைப் போட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? இது ஒரே ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் வறுமைக் காட்சிகளை எழுதினால் உங்களால் நம்ப முடியாது.

என் நாவல்களை ஆங்கிலம் வழியாகப் படித்த ஒரு ஜெர்மானிய இளைஞன் எனக்கு எழுதிய ஐம்பது கடிதங்கள் உள்ளன. எல்லாம் நீண்ட கடிதங்கள். அவனை இதை வைத்து ஒரு நாவல் எழுதச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாற்பது வயதில் ஒரு மொபைல் போனுக்கு வழியில்லை அவனுக்கு. எனக்கு எழுதும் கடிதங்களை இண்டர்நெட் கடையில் போய்தான் டைப் செய்து அனுப்புகிறான். ஒரு தோழி கிடையாது. என் பேராசிரியர்கள் ப்ளோஜாப் செய்யச் சொல்கிறார்கள் என்று எழுதுகிறான். அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவ்வளவு கடுப்பாக எழுதுகிறான். அவன் பெர்லினில் ஒரு பெரிய உணவு விடுதி உரிமையாளராக ஒரு இந்தியனைப் பார்க்கையில் என்னவென்று நினைப்பான்? அவன் ஒரு ஆய்வு மாணவன் என்பதாலும் புத்திஜீவி என்பதாலும் தெளிவாக இருக்கிறான். இல்லாவிட்டால் ஸ்கின்ஹெட்டாக மாறியிருப்பான். நியோநாஜிகளின் அடையாளம் மொட்டைத் தலை. இது ஜெர்மனியின் நிலை. இப்படி நிறைய இருக்கிறது.

ஔரங்ஸேப் எடிட்டிங் இன்னும் முடிந்த பாடு இல்லை. எடிட்டிங் என்றால் என்ன?

பிரபஞ்சத்தின் எல்லையற்ற பிரம்மாண்டத்தின் முன்னே கண்ணுக்குப் புலப்படாத தூசு போன்ற மானுட வாழ்வின் அபத்தத்தின் முன்னே இந்த தாயக்கல்லெல்லாம் எந்த மூலை? 

இது பிழையான வாசகம். இப்படித்தான் பிஞ்ஜில் வந்துள்ளது. ஒரே வாக்கியத்தில் முன்னே முன்னே என்று இரண்டு முறை வரக் கூடாது. வந்தால் இடையில் ஒரு சிறிய கோடு வர வேண்டும். – இப்படி. எனவே இந்த வாக்கியத்தைப் பின்வருமாறு மாற்றினேன்.

பிரபஞ்சத்தின் எல்லையற்ற பிரம்மாண்டத்தில், கண்ணுக்குப் புலப்படாத தூசு போன்ற மானுட வாழ்வின் அபத்தத்தின் முன்னே இந்த தாயக்கல்லெல்லாம் எந்த மூலை? 

இப்படி 1500 பக்கங்கள்…