மாயம்

அடிக்கடி நண்பர்கள் நீங்கள் பயன்படுத்தும் முகக் களிம்பு என்ன பிராண்ட் என்று கேட்கிறார்கள். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயம். தங்கமான சப்ஜெக்ட். எம்ஜியார் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது உண்மைதான். நானும் ஒரு பத்து வருட காலம் தங்க பஸ்பம் சாப்பிட்டேன். விவரம் மற்றும் பலன் எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். உறவு துண்டானதும் பஸ்பத்தை நிறுத்தி விட்டேன். தேவைப்படவில்லை. இவ்வளவுதான் வெளிப்படையாக சொல்ல முடியும். ஆயுர்வேதத்தில் எல்லாம் இருக்கிறது.

அதேபோல் தங்கத்தைப் பொடி செய்து களிம்பில் சேர்த்து விற்கிறார்கள். அந்தக் களிம்பை முகத்தில் தடவிக் கொண்டால் முகம் தங்கம் போல் ஜொலிக்கும். ஔரங்ஸேப் நாவலை வாங்கினீர்கள் என்றால் அது என்ன பிராண்ட் என்று சொல்கிறேன். இப்போது இதை இங்கே எழுதுவதன் காரணம், நான் வைத்திருந்த சிறிய பாட்டில் களிம்பில் கிட்டத்தட்ட 90 சதவிகிதக் களிம்பைக் காணோம். அது சமீபத்தில் வாங்கியது என்பதால் ஒரு பத்து சதம்தான் எடுத்திருப்பேன். அதிலிருந்து கை நிறைய அள்ளுகிறாள் என்பதால் அவந்திகாவுக்குத் தெரியாமல் ஒளித்துதான் வைத்திருக்கிறேன். ஒரு சிறிய டப்பா 5000 ரூ. விலை. இப்போது டப்பாவின் அடியில் துளியூண்டுதான் இருக்கிறது. யாராவது எடுத்து குஞ்சாமணிக்கெல்லாம் போட்டார்களா? கேட்கவும் லஜ்ஜையாக இருக்கிறது. எப்படி இந்த அளவு காணாமல் போயிருக்கும் என்பதும் மர்மமாக இருக்கிறது.

யாரிடமாவது காசு இருந்து இதை வாங்கித் தரும் அளவுக்கு அன்பும் இருந்தால் எனக்கு எழுதுங்கள். பிராண்ட் என்ன என்று எழுதுகிறேன். கையிருப்பு இன்னும் ரெண்டு நாள்தான் வரும். வளன், உனக்கு அந்த பிராண்டை வாட்ஸப்பில் அனுப்புகிறேன். ஆமாம், நீ பாதிரியார்தானே, உனக்கு எதற்கு இந்தக் களிம்பெல்லாம்?

charu.nivedita.india@gmail.com