எதிர்வீடு தனிவீடு
சுற்றி ஒரு தோட்டம்
நாலரை கோடி பெறும்
ஒரு என்னாரய் வாங்கினான்
பன்னிரண்டரை கோடிக்கு
வீட்டின் வெளியே நடைபாதை
அதிலே ஒரு தார்ப்பாலின்
அங்கே வசித்த இரு மூதாட்டிகள்
வெளிகேட்டுக்குப் பூட்டு இல்லை
தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றி
செடிகளுக்கு உயிர் கொடுத்தார்கள்
என்னாரய்க்கு
மடியில் பணத்தின் கனம்
மனசில் பூட்டின் கனம்
இருவரையும் துரத்தி விட்டு
கேட்டுக்குப் போட்டான் பூட்டு
இப்போது செடிகள் எலும்புக்கூடுகள்
தோட்டம் ஒரு பிணக்காடு
நான் ஒரு மண்புழு
புழுதியில் புரள்பவன்
ஏதும் செய்ய ஏலாது
அறம் பாடினேன்
ஆனால் எதிர்வீட்டு என்னாரய்
அறத்தைப் பார்த்தான்
அதற்கும் ஒரு பூட்டைப் போட்டு
எங்கோ போட்டான் தூக்கி…