Pithy thoughts – 6

கனவுகளாலும் காலடிகளாலும்

எண்ணிக்கையற்ற கதைகளாலும்

நிரம்பியிருந்த

அந்த மணல்வெளியில்

அமர்ந்திருந்த அவனிடம்

ஒரு மணல் சொன்னது

உன் கதையும் என் கதையும்

ஒன்றுதானென

அநந்தகோடி

ஆண்டுகளுக்கு முன்னே

ஒரு ஆதித்தாயின்

கருவை உடைத்தபடி

வந்த

அநந்தகோடி

அணுத்தூசுகளின்

காலப்பெருவெளியில்

மிதந்து வந்து

இப்போது

உன் கையில்

அமர்ந்திருக்கிறேன்.

இப்போது

அண்ட சராசரங்களும்

என் வயிற்றில்

எனச் சொல்லியபடி

அந்த மணல் துகளை

விழுங்கி வைத்த

அவன்

அந்த க்ஷணமே

வயிறு வீங்கிச் செத்தான்

யாருமற்ற கடற்கரையில்

கேட்பாரற்றுக்

கிடக்கிறது

ஒரு

பிரேதம்

10.11.2020.

***

மலரில் மதுரம்

மதுரத்தின் ருசி

ருசியின் சொல்

சொல்லின் கவிதை

கவிதையில் நான்

நானில் நீ

உன்னில் மலர்

மலரில் மதுரம்

9.11.2020.

***

நீ

சற்றும்

எதிர்பாராத

தருணத்தில்

உன் கையில்

வந்து விழும்

பந்து

9.11.2020.