கர்ஜனையும் அழுகையும்…


எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு இல்லை என்று தெரிகின்றதல்லவா, பின் எதுக்காக தொடர்ந்தும் இந்த வகையான தாழ்வுச் சிக்கல் கட்டுரைகள். 

எழுத்தாளரை மதிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி எழுதுவது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது சாரு. 

சீலேயில் மதித்தார்கள் என்பதற்காக, கேரளத்தில் மதித்தார்கள் என்பதற்காக எல்லா இடத்திலும் அப்படியே இருக்குமா என்ன.

நான் இலங்கையைச் சேர்ந்தவன். 

எங்களது நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு ஆஹா ஓஹோ என்ற வரவேற்பு இல்லை.

சிங்கள திரைப்பட நடிகர்களையும் இங்கே தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில்லை. 

கிரிக்கெட் விளையாடுபவர்களை நாங்கள் கடவுள்களாக ஆக்குவதில்லை. 

இவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று சொல்கிறீர்கள், இதுவரை சமூகத்தை சரியாக புரிந்து கொண்டதாய் இல்லையே. 

புலம்பலை விடுங்கள், யதார்த்தத்தை ஏற்று வாழப்பழகுங்கள். 

அழுவது கோழைகளின் இயல்பு. 

அம்ஜத் அஹமத்.

மேலே உள்ள கடிதம் உண்மையில் எனக்குப் புரியவில்லை.  சமூகத்தில் ஒரு நோய்மை இருக்கிறது என்றால் அதை என் வாழ்நாள் பூராவும் சுட்டிக் காட்டிக் கொண்டேதான் இருப்பேன்.  அதுதானே என் வேலை?  ஏன் அழுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?  எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்றா அழுதேன்?  ஏண்டா மகாபாவிகளா, அசோகமித்திரன் என்ற மகா கலைஞனின் சாவுக்கு இருபது பேர் வந்து நிற்கிறீர்கள் என்கிறேன்.  அது அழுகையா?  வந்தது இருபத்தோரு பேர்.  அவர் குடும்பம் பத்து.  மீதி குடும்பத்தை விட நெருக்கமான நண்பர்கள்.  ஞானக்கூத்தன் சாவுக்கு வந்ததும் இருபதுதான்.  ஒரு சமூகம் அழுகி நாறிக் கிடக்கிறது என்று சொன்னால் அழுகிறேனாம்.  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதாம். 

ஜெயகாந்தனுக்குப் பிறகு தமிழில் இதையெல்லாம் பேசிய, பேசிக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான்.  எஸ்பிபியின் மரணத்துக்குத் தமிழ்க் கவிஞர்கள் கூட்டம் அத்தனையும் சேர்ந்து கவிதைகளாக எழுதிக் குவித்த போது ஏன் இப்படிச் செய்கிறீர்கள், உங்கள் பண்பாட்டின் அடையாளமா இறந்து போனது என்று கேட்டதற்கு எல்லோரும் சேர்ந்து என்னை சபித்தார்கள்.  செத்துப் போ செத்துப் போ என்றே நூறு மின்னஞ்சல்கள் வந்தன.  அத்தனை சாபம்.  நான் தினந்தோறும் சோற்றோடு சேர்த்து சாபத்தையும் தின்கிறேன். 

சாபம் தின்பவனை கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற ஒரே தைரியம்தான்.  உண்மையைச் சொல்ல ஊரில் ஒருத்தனாவது இருக்க வேண்டாமா? 

அண்ணாதுரை இறந்த போது ஜெயகாந்தன் பேசியதையும் எழுதியதையும் யாராவது படித்துப் பார்த்திருக்கிறார்களா? 

கடிதத்தில் அம்ஜத் நாங்கள் என்கிறார்.  ”கிரிக்கெட் விளையாடுபவர்களை நாங்கள் கடவுள்களாக ஆக்குவதில்லை.” இந்த நாங்கள் சிங்களர்களா, தமிழர்களா?  சிங்களர்கள் என்றால் ஒத்துக் கொள்கிறேன்.  தமிழர்கள் என்றால், ஆஹா இனிமேல் பேச்சு வார்த்தையே இல்லை.  சினிமா நடிகர்களையும் வணிக எழுத்தையும் இன்னும் எல்லா தமிழ்நாட்டு ஆபாசத்தையும் தமிழ்நாட்டை விட அதிகமாகக் கொண்டாடும் ஒரே இடம் இலங்கைதான். 

ஒரு ஆங்கிலப் பேட்டியை என் வாழ்நாள் முழுதுமே மறக்க இயலாது.  ஆங்கிலப் பத்திரிகையாளரிடம் பிரபாகரனைப் பற்றி அவரது சகாக்கள் தெரிவிக்கிறார்கள்.  பிரபாகரன் இத்தனை போருக்கு மத்தியிலும் பயங்கரமாகப் படிப்பார், அவர் ஒரு தீவிரமான படிப்பாளி.  பத்திரிகையாளரும் அதை நம்பி எழுதி விட்டார். பிரபாகரனிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று கேட்டால், அவர் கல்கி, அகிலன் என்கிறார்.  ஆனால் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குத் தெரியாத லத்தீன் அமெரிக்க எழுத்தாளனே கிடையாது.  அவர் கெரில்லா போராளியாக இருக்கும்போதே.  கார்ஸியா மார்க்கேஸின் நெருங்கிய நண்பர் ஃபிடல். 

எனவே எனக்குத் தெம்பு இருக்கும் வரை சினிமாவின் மேலாதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன்.  இது அழுகை என்று எடுத்துக் கொள்பவர்களைப் பற்றியும் எனக்கு ஒரு கவலையும் இல்லை. 

மேலும், தமிழ்நாட்டில் எழுத்தாளர் நிலை முன்பு போல் இல்லை.  இப்போது நல்ல முறையில் மாற்றம் தெரிகிறது.  இன்னும் 30 ஆண்டுகளில் நிலைமை முழுக்கவும் மாறிவிடும்.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai