என் பெயர் ரோஸி: சிறுகதை: வாஸ்தோ (ஒரு சிறிய முன்குறிப்புடன்…)

முன்குறிப்பு: சாரு

என் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் பல பூனைகள் வசிக்கின்றன.  அதில் சில பூனைகள் தனிப் பூனைகள்.  அப்படியென்றால் recluseஆக வாழ்பவை.  என்னை மாதிரி.  அதில் ஒன்று Teddy.  தியாகராஜா, அசோகா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நாவல்களோடு பூனைகள் பற்றி ஒரு நாவலும் முழுமையடையாமல் உட்கார்ந்து கிடக்கிறது. அதில் மற்ற விவரங்கள் வரும்.  ரெக்லூஸ் பூனைகளில் இன்னொன்று, கால் விந்தி நடக்கும் பூனை. அதற்குக் கொரோனா என்று பெயர் வைத்திருக்கிறார் செக்யூரிட்டி. சாந்தோம் நெடுஞ்சாலையில் சிக்கி கால் ஒடிந்து அவந்திகாவின் பிரார்த்தனை ஒன்றினால் மட்டுமே கால் மீண்டும் கிடைத்தது.  இப்போது ரொம்பவே தேவலாம்.  காலையில் அவந்திகா பத்து மணிக்குக் கீழே போய் விட்டு பதினொன்றரைக்குத்தான் வருவாள்.  ஒன்றரை மணி நேரம் பூனைகளுக்கு உணவு.  பந்தி பந்தியாகப் பரிமாற வேண்டும்.  வேற வேல மயிரு இல்ல என்று நினைத்துக் கொண்டு மேலே வந்து விட்டால், அந்தப் பூனைகள் பசியால் பரிதாபமாக அழும்.  அந்தக் குரலைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும்.

இன்றும் அப்படியே பதினொன்றரைக்கு மேலே வந்தாள்.  பன்னிரண்டு மணிக்கு கொரோனா பரிதாபமாகக் குரல் கொடுத்தது.  ஏம்மா, அது சாப்பிடலையா என்றேன்.  வர்லப்பா, இதோ போறேன் என்று சொல்லி விட்டு மறுபடியும் கீழே கிளம்பினாள்.  அப்போது அவள் ஒரு வாக்கியம் சொன்னாள்.  இல்லாவிட்டால் இதை எழுதியிருக்க மாட்டேன்.  ”கடவுளுக்குச் செய்யும் சேவையாக நினைத்துச் செய்கிறேன்.” 

நீங்கள் கடவுளை நம்பாதவராக இருந்தாலும் கீழே உள்ளதைப் படியுங்கள்.  ஷீர்டி பாபாவிடம் ஒரு பக்தர் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தார்.  பாபா தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தார்.  பக்தர் ஒருநாள் சற்று அதிகமாக வற்புறுத்தினார்.  சரி, வருகிறேன் எனச் சொல்லி ஒரு நாளைக் குறித்தார் பாபா.  அந்தக் குறிப்பிட்ட நாளில் பெரிய தடபுடலாக விருந்து செய்து வைத்துக் கொண்டு காத்திருந்தார் பக்தர்.  இரவு வரை பாபா வரவில்லை. 

மறுநாள் மிகுந்த வருத்தத்துடன் பாபாவிடம் வந்தார் பக்தர்.  விஷயத்தைச் சொன்னார்.  முழுநாளும் சாப்பிடாமல் காத்திருந்தேன் என்றார். 

அப்படியா, நான் மூன்று முறை வந்தேன், ஆனால் நீ மூன்று முறையும் என்னை அடித்துத் துரத்தி விட்டாயே?

ஐயோ, கனவிலும் நினைக்க மாட்டேனே பாபா?

கனவிலும் நினைக்காததை நேற்று செய்தாயே?

இல்லையே பாபா, நீங்கள் சொல்வது புரியவில்லையே, நான் முழுநாளும் உங்களுக்காக வாசலிலேயே காத்திருந்தேனே?

உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஒரு நாய் வந்து உன்னிடம் சாப்பாடு கேட்டதா?  நீ துரத்தினாயே?

ஐயோ, ஆமாம்.  பாபாவுக்காகக் காத்திருக்கும்போது உனக்கு என்ன இப்போது கேடு என்று கேட்டுத் துரத்தினேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்தேன்.  மீண்டும் துரத்தினாய்.  பிறகு சாய்ங்காலமாக வந்தேன்.  திட்டிக் கொண்டே துரத்தினாய்.  மூன்று வேளையும் நான்தான் நாயாக வந்தேன். 

நேற்று வாஸ்தோ நான்கு சிறுகதைகளை அனுப்பி படித்துப் பார்க்கச் சொன்னார்.  நான்கையும் படிக்க நேரமில்லை என்று கவர்ச்சிகரமான பெயராகத் தெரிந்த ஒரு கதையை எடுத்தேன்.  என் பெயர் ரோஸி.  ரோஸியின் கதையைக் கேட்போம் என்று யோசனை. 

எதிர்பார்க்கவே இல்லை.  உலகத் தரமான கதை.  மீதி மூன்றையும் படிக்கவில்லை.  இப்படி ஒரு உலகத் தரமான கதையை எழுதிய ஒருவனின் மற்ற கதைகளை புத்தகமாக வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.  ஆனால் ஒரே ஒரு பிரச்சினைதான்.  எல்லா இளம் எழுத்தாளர்களிடமும் காண்பது போல் ஏகப்பட்ட ஒற்றுப் பிழைகள்.  எந்த சந்தியிலும் ஒற்றே இல்லை.  பானுமதியின் இலக்கணக் காணொலியைப் பார்க்கச் சொன்னேன்.  எனக்கு இலக்கணமே தெரியாது.  வினை முற்று என்றால் என்ன என்று தெரியாது.  பெயரெச்சம் தெரியாது.  ஆனால் இலக்கணப் பிழையில்லாமல் எழுதத் தெரியும்.  இதை நான் எங்கேயும் போய் கற்றுக் கொள்ளவில்லை.  எங்கே ஒற்று வரும், எங்கே வராது என்று தெரியும்.  யாரும் கற்பிக்கவில்லை.  ஆனால் தற்கால இளைஞர்களுக்கு இது விஷயத்தில் என்ன நேர்ந்தது என்று எனக்குப் புரியவே இல்லை.  எனக்கு புரியவே இல்லை என்று எழுதுகிறார்கள். நடுவில் ப் வரும் என்று ஏன் தெரியவில்லை? தெரியவில்லை.  இதை விடக் கொடுமை, கொலை பாதகம் என்னவென்றால், வரக் கூடாத இடங்களில் ஒற்று கிடக்கிறது.  சாருதானே சொல்கிறார்.  தெளித்து விடு.  ஆனால் தொடர்ந்து வாஸ்தோ எழுதிய கடிதங்களில் அந்தக் குறையைக் களைந்து விட்டார்.  உஷாராகி விட்டார் போல. 

என் பெயர் ரோஸியை பிழை திருத்தம் மட்டும் செய்து நம்முடைய தளத்தில் வெளியிடுகிறேன். 

சாரு

***

என் பெயர் ரோஸி

சிறுகதை

வாஸ்தோ

என் பெயர் ரோஸி. சற்று முன்பு நான் விழுங்கிய ரொட்டி என் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டதால், இன்னும் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி சாகப் போகிறேன். ரோஸி என்கிற பெயரோடு இருப்பதால் யாரும் என்னை பெண் என்று நினைத்துவிடாதீர்கள். நான் ஆண்தான். பின் எப்படி எனக்கு ஒரு பெண்ணின் பெயர் வந்தது என்றுதானே கேட்கிறீர்கள். பெண் பெயருக்கான காரணத்தைச் சொல்லிவிட்டு என் கதையைச் சொல்கிறேன். மன்னிக்கவும், என்னுடைய சுயசரிதை என்னும் போது, நான் பிறந்ததிலிருந்து இந்தக் கணம் – அதாவது நான் மரணித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரையில் சொல்லவேண்டியதுதானே என்னுடைய கடமை. மரணத்தின் இறுதி நொடிகள் என்பதால் உளறுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் முடிந்தளவிற்கு உளறாமல் என் கதையைச் சொல்கிறேன்.

அப்பா யாரென்றே தெரியாமல் பிறந்திருந்தாலும், நான் என்னுடைய அப்பாவின் ஜாடை. அது எப்படி இத்தனை உறுதியாகச் சொல்கிறேன் என்றால், என்னோடு பிறந்தவர்கள் அனைவருமே செவலை நிறத்திலிருக்கையில் நான் மட்டும் செவலை நிறமாக இல்லாமல் பிறந்திருந்தேன். அதுவும் போக, ஏனையோர் அனைவருக்கும் மூக்கு கருப்பாய் இருக்கையில் எனக்கு மட்டும் மூக்கு ரோஸ் நிறத்தில் இருந்தது. அதைப் பார்த்துத்தான் ஒரு குட்டிப் பெண் எனக்கு ரோஸி என்று பெயர் வைத்தாள். அவள் மட்டுமே என்னை ரோஸி என்று அழைப்பாள். நான் குட்டியாக இருக்கையில் ஒருமுறை எனக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் ரோஸ் மில்க் ஊற்றித் தந்தாள். நானும் சலக்புலக்கென்று சப்தமிட்டபடியே குடித்தேன். நான் குடிப்பதைப் பார்த்ததும் அவளுக்கு அவ்வளவு ஆனந்தம். “ரோஸி ரோஸ் மில்க் குடிக்குது” என்று கத்தி ஆர்ப்பரித்தாள். எங்கிருந்தோ கனமாய் ஒரு பொருள் என்னருகில் தொம்மென்று விழுந்தது. அந்தப் பொருள் விழுந்த சத்தத்தில், அந்த சப்தம் கொடுத்த பயத்தில், இனிப்பாய் சுவையாயிருந்த அந்த ரோஸ் மில்க்கை பாதி குடித்திருந்த நிலையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டேன். மீண்டும் அடுத்த நாள் அந்த வீட்டின் வாசலில் சென்று நின்று பார்த்தேன். அந்த குட்டிப் பெண் வெளியே வரவேயில்லை.

விடாய் கண்டிருந்த வேளையில் தெருவே வீடாய்ச் சுற்றிக் கொண்டிருந்த என் அம்மாவை, ஏதோவொரு பணக்கார வீட்டைச் சேர்ந்த ஒருவன் வந்து ஜோலி முடித்திருக்கிறான். அவன் மூலமாகத்தான் நான் பிறந்தது. அம்மாவின் ஜாடையை விடவும் எனக்கு அவன் ஜாடையே வாய்க்கப்பட்டிருக்கிறது. அவர் இவர் என்று மரியாதையாகச் சொல்ல ஆசைதான். ஆனால் என்ன செய்வது? தன் சுகத்தை மட்டுமே பெரிதாக நினைத்து என்னைப் பெற்றுப் போட்டுவிட்டுச் சென்றவனை எப்படி மரியாதையாக விளிப்பது. என்னைப் பெற்றவள் அவனுக்கும் ஒரு படி மேலே. நானும் அவளது கர்ப்பப் பாத்திரத்திலிருந்து வெளியே வந்தவன்தானே. என்னை முத்தே மணியே என்று கொஞ்ச வேண்டாம் குறைந்தபட்சம் நான் உணவு எடுத்துக்கொண்டேனா என்று கூடவா பார்க்காமல் இருப்பாள். அவளது மடிக்காம்பில் என் உடன்பிறந்தவர்கள் அத்தனை பேரும் பால் குடித்து முடித்த பின்னர்தான் என்னை அனுமதிப்பாள். அவர்கள் மிச்சம் வைத்துவிட்டுச் சென்றதைக் குடிக்கும் பொழுதுதான் இவளுக்கு வேலை வந்துவிடும், எழுந்து சென்று விடுவாள். நானும் அவளைத் தனியே விடாமல் அவள் பின்னேயே செல்வேன். எப்பொழுதாவது அவளுக்காகத் தோன்றினால் மட்டுமே அவளது மடிக்காம்பை எனக்குக் கொடுப்பாள். அரை வயிறும் கால் வயிறுமாக குடித்தே என் தேகத்தை வளர்த்தேன்.

நான் ஏற்கனவே சொன்னதுதான், எனக்கு என் அப்பாவின் ஜாடை, அப்பாவின் உடல்வாகு. என் அப்பா ஏதோவொரு பணக்கார வீட்டைச் சேர்ந்தவர் போல, பாலும் சோறுமாகவோ அல்லது கறியும் மீனுமாகவோ தின்று வளர்ந்தவராக இருந்திருப்பார். நான் பத்து நாட்கள் பசியோடு கிடந்தாலும் என் உடலில் அது பிரதிபலிக்காது. பார்ப்பவர்களுக்கு மூன்று வேளையும் மூக்கு முட்டத் தின்று கொழுத்துப் போய் இருப்பதாகவே  தோன்றும். அதனால் என்னோடிருக்கும் மற்ற நோஞ்சான் குட்டிகளோடு சண்டையிட்டு நான் உணவை உட்கொள்ள முயலுகையில், “நல்லா தின்னு கொழுத்துப் போய் இருந்துட்டு, கூட இருக்கிறதுகளுக்க சாப்பாடையும் சாப்பிட வருது பாரு” என்று திட்டியபடியே என்னை நாய்கள் மீது இரக்கம் கொண்ட சில நல்லவர்கள் விரட்டி விடுவார்கள். மரத்தை வைத்தவன் தண்ணி ஊத்துவான் என்று நினைத்தபடியே அங்கிருந்து விலகிச் சென்று மற்ற நாய்கள் உண்ணுவதை ஏக்கத்தோடு வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.

திடீரென்று ஒருநாள் தெருவில் சாலையில் எல்லாம் மக்களின் நடமாட்டம் குறைந்து குறைந்து வந்து ஒரு கட்டத்தில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் போய்விட்டது. அத்தனை நாளும் சாலையில் வேகமாய்க் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பயந்து, சாலையைப் பயந்து பயந்து கடந்து கொண்டிருந்த எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் தைரியம் வந்தது. இங்கும் அங்கும் ஓடினேன். எவ்வித பயமும் இல்லாமல் என்னை விட சிறிய உயிரினங்களை – அதாவது இந்தப் பூனை, எலி போன்ற உயிரினங்களை விரட்டி விளையாடினேன். குப்பைகளில் விசிறி எறியப்பட்ட மீந்த உணவுகளை உடனிருந்த நாய்களோடு சண்டையிட்டு உண்டேன். என்னை யாருமே விரட்டி விட வரவில்லை. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதுவும் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே. பின்னர் உணவு கிடைக்க சிரமமாகத் துவங்கியதும், எங்கேயேனும் ஒரு கைப்பிடி அளவேனும் உணவு கிடைத்திடாதா என்று தேடியலையத் தொடங்கினேன். பசியோடு இருக்கையில் உற்சாகம் எங்கிருந்து வரும். சோர்ந்து போய் ஒரு வீட்டின் வாசலில் படுத்துவிட்டேன்.

அந்த வீட்டு வாசலில் அரை மயக்கத்தில் கிடந்த எனக்கு, எங்கிருந்தோ வந்த உணவுப் பதார்த்தத்தின் மணம் நாசியைத் துளைத்தது. கண்களைத் திறந்து சோர்வாகப் பார்த்தேன். என் முன்னே ஒரு தட்டு நிறைய உணவு. மீந்து போன உணவாகத் தெரியவில்லை. ஒருவேளை அது மீந்து போன உணவாகக் கூட இருக்கட்டுமே. பசித்திருக்கும் வயிறுக்கு உணவு கிடைத்தால் போதாதா! எழுந்து வேகமாகச் செல்ல எத்தனித்தேன். மனதின் வேகம் உடலுக்கு இல்லை. தளர்ந்த நடையோடே சென்று உணவில் வாய் வைத்து இரண்டு கவளம் தின்றேன். இருந்த பசிக்கு அந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது. கண் முன்னே ஒரு மனிதன் நிற்பதற்கான அடையாளமாய் இரண்டு கால்கள் தெரியவும், நிமிர்ந்து பார்த்தேன். வயதான ஒரு அம்மா நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் அத்தனை கருணை தெரிந்தது. அவர்களைப் பார்த்து “வவ்” என்று குரைத்து என் நன்றியைச் சொல்லிவிட்டு, மீண்டும் எனக்கான சாப்பாட்டில் கவனத்தைச் செலுத்தினேன்.

“பாவங்க… எத்தனை நாள் பசியோடு இருந்ததோ…” அந்த அம்மாள் யாரிடமோ சொல்வது கேட்டது.

“நாளையிலருந்து தினமும் இங்க வந்து நிக்கப் போகுது பாரு” என்று உள்ளிருந்து வயதான ஒரு ஆணின் குரல் கேட்டது.

“ஓரு பிடி சோறு அதிகமா பொங்குறதுல என்ன குறைஞ்சிடப் போகுது.” அந்தப் பெண்ணின் குரல். அதற்கு உள்ளேயிருந்து பதில் வராது போகவும், “இந்த ஊரடங்கு காலத்துல இதுங்க சாப்பாட்டுக்கு எங்க போகும் சொல்லுங்க” என்றார். நான் என் மனதினுள் “நீ நல்லா இருக்கனும் தாயி” என்று நினைத்துக் கொண்டேன்.

அன்றிலிருந்து அந்த வீட்டைச் சுற்றியே வர ஆரம்பித்தேன். ஒரு வேளை தான் என்றாலும் சரியான வேளைக்கு உணவு வைத்துவிடுவார் அந்த வயதான அம்மா. உண்ட உணவுக்கு உதவியாய் இருக்க வேண்டி அந்த வீட்டைச் சுற்றி வருவதை நிறுத்திவிட்டு, அந்த வீட்டின் வாசலிலேயே இருக்க ஆரம்பித்தேன். அந்த வயதான இருவரின் உடல் மணமும் எனக்கு பழக்கப்பட்டு விட்டது. அந்த இருவரையும் தவிர்த்து அந்த வீட்டினுள் யாரேனும் நுழைய முற்பட்டால், முதலில் உறுமுவேன், பின்னர் குரைப்பேன்.

அந்த இருவரையும் பார்க்க ஒரு இளைஞன் அவ்வப்பொழுது வருவான். கொஞ்ச நேரம் அந்த வீட்டினுள் இருப்பான். பின்னர் சென்றுவிடுவான். அவ்வப்பொழுது வருவதால் இவன் அந்த வீட்டின் விரோதியல்ல என்பது எனக்குப் புரிந்தது. அதனால் அவன் வருகையிலும் போகையிலும் நான் அவனிடம் பகைமை பாராட்டுவதில்லை. ஒருநாள் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தவன், என்னைப் பற்றி ஏதோ சொல்லத் துவங்கியதும் என்னுடைய காதைத் தீட்டிக்கொண்டேன்.

“வீட்டுக் காவலுக்கு ஒரு நல்ல ஆளைத்தான் போட்டுருக்கீங்க” என்று சொல்லிச் சிரித்தான்.

“வீட்டுக்குள்ள எந்தவொரு புது ஆளையும் வரவிடாதீங்கன்னு, அவன் அமெரிக்கால இருந்து தினமும் சொல்லிட்டு இருக்கான். எதுனாலும் வாசல்லயே வச்சு பேசி அனுப்பிடுங்க, கிட்டக்க கூட வர விடாதீங்க அப்படீங்கிறான். இங்க நாம அப்படி இருக்க முடியுமா சொல்லு” என்கிறார் அந்த அம்மாள்.

“வேற வழியில்லயேம்மா” என்கிறான் இவன்.

“புரியுது. ஆனா வாசல்ல வந்து நிக்கிறவங்களை அப்படியே வாசல்ல நிக்க வச்சுப் பேசி அனுப்பி பழக்கமில்லையேடா.”

“ஹ்ம்ம்ம், உங்க நிலைமையும் புரியுது.”

“இப்ப இந்த நாய் வாசல்லயே கிடக்கிறதால இதத் தாண்டி யாருமே உள்ள வர யோசிக்கிறாங்களா, அதனால அப்படியே வாசல்ல நிக்க வச்சு என்னன்னு சொல்லிட்டு அப்படியே போயிடுறாங்க. ஒருவகையில மனச்சங்கடம் இல்லாம போயிடுது” என்றார்.

என்னால் ஒருவருக்கு உதவியாய் இருக்க முடிகிறது என்று நினைத்த பொழுது நிஜமாகவே எனக்குப் பெருமையாக இருந்தது. வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்தான். நான் எனது வாலை ஆட்டினேன். “இது நாட்டு நாய் போல இல்லமா. ஏதோவொரு நல்ல ஜாதி நாயோட க்ராஸ் போலத் தோணுது.” என் பிறப்பைக் கண்டுபிடித்துவிட்டான் என்று அறிந்ததும் இன்னும் உற்சாகமாய் என் வாலை ஆட்டி அவன் காலருகில் சென்று நின்று கொண்டேன். விரட்டி விடுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என் தலையில் முன்நெற்றியில் வாஞ்சையோடு தடவிக்கொடுத்தான்.

“நாம பேசுறதெல்லாம் அதுக்குப் புரியுது. ஒருநாள் அப்பா என்னைத் திட்டிட்டு இருந்தாரா… இது அவரைப் பார்த்து குரைக்குது. அப்பாக்கும் எனக்கும் சண்டை நடக்கிறப்ப உன் ஃப்ரண்ட் கூட அப்பாகிட்ட சத்தம் போட்டதில்ல” என்றார். அவர் தன்னுடைய பையனை விடவும் ஒரு படி மேலாகவே என்னை நினைத்து வைத்திருக்கிறார் என்று நினைத்ததும், என் மனம் அப்படியே இறக்கையை விரித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் இரவு கருப்பு நிறத்தில் ஒரு உருவம் அந்தத் தெருவில் உலாவுவது தெரிந்தது. அந்த உருவத்தை விரட்டினேன். சட்டென்று அது காணாமல் போய்விட்டது. ஆனால் அது என் பின்னேயே நின்று என்னைப் பார்த்து சிரிப்பதைப் போன்றிருந்தது. மீண்டும் அதை விரட்டினேன். மீண்டம் அது காணாமல் போய்விட்டது. அந்த உருவத்தை சுற்றி வளைக்க என் ஒருவனால் முடியாது என்பது புரிந்ததும் துணைக்கு ஆள் அழைக்க வேண்டி ஊளையிட்டேன். ஊளையிடுதல் ஆபத்தின் அறிகுறி என்பதை உணர்ந்த ஏனைய தோழர்களும் அவர்கள் பங்கிற்கு ஊளையிட்டு அந்தக் கருப்பு உருவத்திடம் நாங்கள் ஒரு பெரிய கூட்டமாய் இருக்கிறோம், இந்த பக்கம் வராதே என்று எச்சரித்தோம். அந்த உருவம் எங்கோ சென்று மறைந்துவிட்டது. நானும் அமைதியாக வந்து என் எஜமானனின் வீட்டின் முன் வந்து படுத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் அந்த வீட்டிலிருந்து அந்தக் கறுப்பு உருவம் வெளியேறியது. அந்த உருவத்தின் பின்னேயே அந்த அம்மாவின் உருவமும் வெளியேறியது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அந்த அம்மா என்னைப் பார்த்து சிநேகமாய்ப் புன்னகைத்தார். அவர் என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டுப் போவதைப் பார்த்ததும், எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஓவென்று அழ ஆரம்பித்தேன். நான் அழும் சப்தம் கேட்டு அந்தத் தெருவிலிருந்த மொத்த நாய்களின் கூட்டமும் அழ ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலையில் அந்த வீட்டிற்கு புதுப்புது மனிதர்கள் வந்தார்கள். சென்றார்கள். ஆனால் எனக்கு ஏனோ அவர்களை எல்லாம் பார்த்து உறுமவோ குரைக்கவோ தோன்றவேயில்லை. எப்பொழுதும் போலவே எனக்கான இடத்தில் தரையோடு தலை வைத்து அமைதியாகப் படுத்திருந்தேன். வந்து போனவர்களுக்கு மத்தியில் அந்த இளைஞன் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். மதியமே அந்த அம்மாவின் உடலை மூங்கில் படுக்கையில் கட்டி வண்டியிலேற்றி எடுத்துச் சென்றார்கள். சென்றவர்களில் அந்த இளைஞனும் இன்னுமொரு இரண்டு பேர் மட்டும் அந்தப் பெரியவரோடு திரும்பி வந்தார்கள். அந்தப் பெரியவர் வீட்டினுள் செல்லும் முன்பாக என்னை ஒருமுறை பார்த்தார். படுத்துக் கிடந்த நான் என் தலையை சோர்வாகத் தூக்கிப் பார்த்தேன். வாயைப் பொத்திக் கொண்டு அழுதபடியே வீட்டினுள் போய்விட்டார். இரவு வெகு நேரத்திற்குப் பிறகே அந்த இளைஞன் அந்த வீட்டிலிருந்து வெளியேறினான்.

மறுநாள் காலை மதியம் இரவு என மூன்று நேரமும் கையில் உணவு கொண்டு வந்தான். அவனும் ஒரு நாலைந்து நாட்களே வந்திருப்பான். கடைசியாக அவன் வந்த தினம் கையிலிருந்த கைக்குட்டையை வாயில் வைத்துப் பொத்தியபடி இறுமிக் கொண்டே வந்தான். அவன் வந்து கொண்டிருந்த வரையில் எனக்கும் ஏதேனும் உணவிடுவான். அவன் வருவது நின்ற பிறகாக எனக்கு உணவு கிடைப்பதும் நின்று விட்டது. என்னை விடுங்கள், எனக்குப் பசியொன்றும் புதிதில்லை. ஆனால் அந்தப் பெரியவர் உணவுக்கு என்ன செய்கிறார் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. முதல் முறையாக திறந்திருந்த வீட்டினுள் நுழைந்தேன். நான் உள்ளே வந்ததைக் கூட கவனிக்காமல், அவர் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்தபடி விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யவேண்டாமென்று வெளியே வந்துவிட்டேன்.

அந்த இளைஞன் வருவது நின்ற பிறகாக ஒரு மத்திம வயதுப் பெண் அந்த வீட்டிற்கு தினமும் வரத் துவங்கினாள். சமையல் செய்யும் மணம் என் எஜமானியின் வீட்டினுள் இருந்து எழும். உணவுக்காகக் காத்திருப்பேன். அந்தப் பெண் மட்டுமே வெளியே வருவாள். உணவு மட்டும் வீட்டினுள்ளேயே தங்கிவிடும். மீண்டும் தெருக்களில் என் உணவு வேட்டையைத் துவங்கினேன். இப்பொழுது மனிதர்கள் ஓரளவுக்கு சாலையில் நடமாட ஆரம்பித்திருந்தார்கள். மனிதர்களை மீண்டும் பார்த்ததில் சந்தோஷமாக இருந்தது. ஆனால் சந்தோஷங்கள் நிலையானது இல்லையே. ஒருமுறை ஒருவன் எறிந்த கல்லொன்று என் முன்னங்காலில் வந்து விழுந்தது. அன்றிலிருந்து நான் முடவனாகவும் மாறிவிட்டேன். உணவுக்காக வெகுதூரம் என்னால் செல்லமுடியவில்லை. ஒரு வேளை உணவுக்காக சண்டையிட முடியவில்லை. பசி பசி பசி. மழையில்லாததால் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு ரொட்டித் துண்டைப் பார்த்தேன். வேறு எவரும் வந்து அந்தத் துண்டு ரொட்டிக்காக என்னிடம் சண்டைக்கு வந்துவிடக் கூடாதென்பதற்காக எத்தனை வேகமாய் அதைத் தின்ன முடியுமோ அத்தனை வேகமாய்த் தின்ன ஆரம்பித்தேன். வறண்டிருந்த தொண்டையில் ஒரு துகள் சிக்கியதைக் கூட கவனிக்காமல் அடுத்தடுத்த துண்டுகளை முழுங்க முயற்சித்ததில் மிருதுவாயிருந்த ரொட்டித் துண்டு என் மூச்சுக் குழாயில் வந்து சிக்கிக் கொண்டு விட்டது. மூச்சு விட முடியவில்லை. துளி நீர் கிடைத்தாலும் போதும், பிழைத்துக் கொள்வேன். தூசி பறக்கும் சாலையில் நீருக்கு எங்கே செல்வேன். கொஞ்சம் கொஞ்சமாய் என் இதயத் துடிப்பு அடங்குவது தெரிகிறது. என் உயிர் போகும் முன்பாக என் கதையை உங்களிடம் சொல்லிவிட்ட திருப்தியில் கண்ணை மூடிக் கொள்கிறேன்.