நண்பர்கள்: மனுஷ்ய புத்திரன்

12.3.17

நண்பர்கள் – மனுஷ்ய புத்திரன்

எனக்கு செத்த எலிகளைத் தெரியும்

அன்பின் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி

அவ்வளவாக எதுவும் தெரியாது.

(தித்திக்காதே தொகுதியில் மனுஷ்ய புத்திரன்.

அநேகமாக என்னைப் பற்றியதாகத்தான் இருக்கும்.)

நேற்று (11.3.2017) தி இந்து நாளிதழில் நான் எழுதியிருந்த ‘என் நண்பர்கள்’ என்ற கட்டுரை சில நண்பர்களுக்கு மன உளைச்சலையும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  அவர்களில் முக்கியமானவர் மனுஷ்ய புத்திரன்.  அவரை நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முகநூல் நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கியதோடு மட்டும் அல்லாமல் தடையும் செய்து விட்டேன்.  இதற்கும் எதார்த்த வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை.  முகநூல் நட்பு என்பது virtual realityயைப் போன்றது.  அது ஒரு நிழல்.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தீபாவளி நாளில் எனக்கு முகநூலில் ஐநூறு பேர் வாழ்த்து சொன்னார்கள்.  ஆனால் அன்றைய தினம் நாள் முழுதும் நான் மோரும் சோறும் சாப்பிட்டேன்.  அதிரசம், முறுக்கு, பணியாரம், சீடை, மைசூர்பாகு… எதுவுமே இல்லை.  ஐநூறு பேருடைய வாழ்த்தில் பலகாரம் கிடைக்குமா?  நாள் முழுக்க மோருஞ்சாதம்.  முகநூலில் வயிறு நிறையாது.  ஆனால் பைத்தியம் பிடிக்கும்.  ஒரு இளைஞன் என்னிடம் சொன்னான்.  ”என் காதலி தினம்தினம் காலையில் எழுந்து கலக்கல் ட்ரெஸ்ஸில் புகைப்படம் எடுத்து முகநூலில் குட்மார்னிங் மெஸேஜ் போடுகிறாள்.  ஆயிரக் கணக்கான லைக்குகள் அள்ளுகின்றன.  அது எனக்கு மன உளைச்சலைத் தருகிறது.”  நான் சொன்னேன்,  ”நீ ஆண் பிள்ளை.  வெறும் அரை ட்ரௌசரோடு கூட போஸ் கொடுக்க முடியும்.  இந்தியாவில் ஜான் ஆப்ரஹாம் என்ற நடிகரின் உடம்புதான் பல லட்சம் பெண்களின் சுயமைதுனத்துக்கு உதவுகிறது.  அதைவிட அதிகமாக ரித்திக் ரோஷன்.  தென்னிந்தியாவில் ரானா டக்குபட்டி பல கன்னிகளின் கனா நாயகராக விளங்குகிறார்.

மற்றும் பல ராணா புகைப்படங்களுக்குப் பார்க்கவும்:

http://photogallery.indiatimes.com/Rana-Nathalias-steamy-photo-shoot/articleshow/12416945.cms

இதேபோல் நீயும் போஸ் கொடுத்து உன் காதலியின் நிம்மதியைக் கெடுக்க வேண்டியதுதானே?”   அவனை நான் கிண்டல் செய்வதாக எண்ணி அதிலிருந்து அவன் என்னிடம் பேசுவதில்லை.

Chintoo: Prabhu Kalidas

சரி, மனுஷ் விஷயத்துக்கு வருவோம்.  என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களில் இரண்டு மூன்று பேரை நான் முகநூலில் தடை செய்து வைத்திருக்கிறேன்.  அதில் மனுஷும் ஒருவர்.  அதற்காக அவர் என் நண்பர் அல்ல என்று அர்த்தமா?

நேற்றைய நண்பர்கள் கட்டுரையில் நான் பொதுவாக என் வாசகர் வட்ட நண்பர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.  கருப்புசாமி, செல்வகுமார், ச.பா. முத்துக்குமார், ராமசுப்ரமணியன் என்று போட்டு அதன் கூடவே மனுஷ்ய புத்திரன் என்று எழுதவா?  தகுமா?   என்னை ஒருகாலத்தில் சுந்தர ராமசாமியின் சிஷ்யப்பிள்ளைகள் ‘கரம்’ கட்டி அடித்துக் கொண்டிருந்த போது எனக்கு எழுத இடம் கொடுத்து, சிந்தனைத் தளத்தில் எனக்குத் தார்மீக ஆதரவு கொடுத்தவர்கள் தமிழவன், அ. மார்க்ஸ், ராஜ் கௌதமன் போன்றவர்கள்.  அது 1980-இல்.  அதை நான் அந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தேன்.  அந்தப் பட்டியலிலும் என் பெயர் இல்லை என்று மனுஷ்ய புத்திரன் அங்கலாய்ப்பாரா?  அவருக்கு இப்போது 37 வயது இருக்குமா?  அப்படியானால் 1980-இல் அவர் ஒரு வயதுக் குழந்தையாக இருந்திருக்க வேண்டும்.  சரி, அவர் வயது 37 அல்ல, 42 என்று சொன்னால் அவர் அப்போது ஐந்து வயதுச் சிறுவனாக இருக்க வேண்டும்.  எப்படிப் பார்த்தாலும் ஏழெட்டு வயதுக்கு மேல் இருக்காது.

மனுஷ்ய புத்திரனின் பெயர் நண்பர்கள் பட்டியலில் விடுபட்டதற்குக் காரணம் இதுதான்.  ஒன்று, நான் எழுதத் துவங்கிய போது அவர் பிறக்கவில்லை அல்லது குழந்தையாக இருந்தார்.  இரண்டு, வாசகர் வட்ட வாண்டுகளோடு மனுஷ்ய புத்திரன் பெயரைச் சேர்க்க முடியாது.  போச்சு, இப்போது நான் வாசகர் வட்ட நண்பர்களிடமிருந்தும் செம மாத்து வாங்க வேண்டும்.  நாங்கள் என்ன வாண்டுகளா அப்படி இப்படி என்று கொதிப்பார்கள்.  ஒருவேளை இதனாலேயே பிரிந்து போய் வாசக சோலை என்று ஒரு அமைப்பை உருவாக்கினாலும் உருவாக்கலாம்.

இப்போது பிரபலமாக இருக்கும் வாசகசாலை அமைப்பு உருவானதற்குக் காரணம் என்ன தெரியுமா?  சில ஆண்டுகளுக்கு முன்பு வாசகர் வட்ட நண்பர்களோடு கோவா போனோம்.  அராத்து, பாஸ்கர், பார்த்திபன், கணேஷ் அன்பு போன்றோர் அதன் பிரபலங்கள்.  அப்போது வகதூர் பீச்சில் காரை நிறுத்த வேண்டி வந்தது.  அராத்து காரை இடப்பக்கம் நிறுத்தினால் ரொம்ப தூரம் நடக்க வேண்டாம், நிறைய கனம் வேறு தூக்க வேண்டும் என்றார்.  உடனே பார்த்திபன் வலப்பக்கம்தான் காரை நிறுத்த வேண்டும் என்றார்.  ”இல்லை பார்த்திபன், நான் கோவாவில் மூன்று வருடம் வேலை பார்த்திருக்கிறேன்.  எனக்குத் தெரியும்.  இடப்பக்கம் நிறுத்துங்கள். ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கும், இத்யாதி இத்யாதி.” இது அராத்து.  உடனே பார்த்திபன், “நான் பிறந்து வளர்ந்ததே கோவாவில்தான்” என்று சொல்லி விட்டு காரை வலப்பக்கம் திருப்பினார்.  ஒன்றரை கிலோமீட்டர் நடந்து வந்தோம்.  அந்த அனுபவத்திலிருந்து நான் அராத்து சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற ஆரபித்தேன்.  பாஸ்கரும் பார்த்திபனும் வாசகசாலையைத் துவக்கினார்கள்.

இந்துவில் கொடுக்கப்பட்ட வார்த்தை அளவு 550.  அதற்குள் எவ்வளவுதான் எழுத முடியும்?  இரண்டு முக்கியமான விடுபடல்கள்.  சாமிநாதன்.  இம்மானுவல்.  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் கிடந்த போது ஒரு வாரம் ராப்பகலாக என்னை கவனித்துக் கொண்ட நண்பர்கள் இவர்கள்.  அது பற்றித் தனியாக எழுத வேண்டும்.  இன்று காலை சாம்-க்கு ஃபோன் பண்ணி உங்கள் பெயரை விட்டு விட்டேன், கோபிக்க வேண்டாம் என்று சொன்ன போது இப்படியெல்லாம் சொன்னால்தான் கோபிப்பேன் என்று திட்டினார்.

மனுஷ்ய புத்திரன்.  என்ன எழுதுவது?  காமரூப கதைகள் நாவலில் பாதி பக்கம் மனுஷ்தானே ஐயா?  உங்களைப் பற்றி ஒரு நாவலே எழுதியிருக்கும் போது இந்துவில் போட்ட பட்டியலில் பெயர் எதற்கு?  மேலும், மனுஷின் கவிதைகள் பற்றி நான் புகழ்ந்து எழுதிய அளவுக்குத் தமிழில் வேறு யாருமே யாரைப் பற்றியுமே எழுதியதில்லை.  சும்மா போகிற போக்கில் சொல்லும் புகழ்ச்சி அல்ல அது.  அவர் கவிதையில் தோய்ந்து தோய்ந்து எழுதியிருக்கிறேன்.  பாப்லோ நெரூதாவுக்கு நிகரான சீலே கவி நிக்கனோர் பார்ராவின் கவிதைகளை விட மனுஷின் கவிதைகள் சிறந்தவை என்பதை கடைசிக் கோப்பை என்ற கவிதையை (இருவரும் அதே தலைப்பில் எழுதியுள்ளனர்) ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன்.

மட்டுமல்லாமல் மனுஷ்ய புத்திரன் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர் மனதில் இருக்கும் அத்தனை பெண்களை விடவும் அதிகமான இடத்தைப் பிடித்திருப்பவன் நான் மட்டுமே.  என்னை விடவும் அவர் மனதில் இடம் பிடித்திருக்கும் இரண்டே பேர் அம்முவும் மனோஜும் மட்டுமே.

காதலியிடம் காதலன் தன் காதலை எவ்வளவு நிரூபித்தாலும் காதலிக்கு அவன் இன்னும் தன்னைத் தீவிரமாக நேசிக்கவில்லை என்றே தோன்றும். அவன் சொல்லும் காதல் வார்த்தைகள் எல்லாம் பொய் என்று தோன்றும்.  அதைப் போலவேதான் மனுஷுக்குத் தோன்றுகிறது.  அன்று ஒருநாள் ஏதோ பேச்சுக்கிடையில், ”உங்களைப் பற்றி நான் ஒரு வார்த்தை திட்டி எழுதியதில்லை” என்றார்.   அடப்பாவி!  விமர்சகர் வட்டத்தில் கூட என்னை அவ்வளவு திட்டியதில்லை.  அப்படித் திட்டியிருக்கிறார்.  ஆனாலும் மனுஷ் சொல்வது உண்மைதான்.  அவர் என்னைத் திட்டியதே இல்லை என்று அவருக்குத் தோன்றுகிறது.  அதுதான் உண்மை.  ஆழ்ந்த நட்பும் நேசமும் இருந்தால் மட்டுமே அப்படித் தோன்றும்.

மற்றபடி மனுஷின் உயிர்மை பதிப்பகமும் உயிர்மை பத்திரிகையும் இல்லாவிட்டால் நான் வெகுகாலம் சாக்கடையிலேயே உழன்று கொண்டிருந்திருப்பேன்.  என் நூல்களை நானே தான் பிரசுரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன்.  அவந்திகாவின் தாலி, வளையல் எல்லாம் விற்றாயிற்று.  இனிமேல் விற்க எதுவும் இல்லை.  காலச்சுவடு பதிப்பகத்தை அரவிந்தன் மூலம் அணுகினேன்.  அவர் கண்ணனிடம் நான் சொன்னதைச் சொன்னாரா என்றே இப்போது சந்தேகிக்கிறேன்.  கிழக்கு பதிப்பகத்தில் பாலா என்ற நண்பர் மூலம் அணுகினேன்.  (பாலா கிழக்குவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.)  பத்ரி மறுத்து விட்டதாக பாலா சொன்னார்.  (அவ்வளவுதான் எனக்குத் தெரியும்; நானே போய் கேட்கவில்லை.)   அப்போது என் நூல்களைப் பிரசுரிக்க முன்வந்தது உயிர்மை மட்டுமே.  உயிர்மை பத்திரிகையின் முதல் இதழிலிருந்து பத்து ஆண்டுகள் மாதாமாதம் எழுதினேன்.  ஒரு இதழ் கூட விடவில்லை.  உயிர்மையின் அங்கம் நான்.  பிறகுதான் பெரும் பத்திரிகைகளிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.  அது மனுஷுக்கு எதிரான முடிவு அல்ல.  ஐம்பது வயதில் நான் குடிக்கலாம் என்று முடிவு செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஐம்பது வயது வரை குடிக்காத ஆள்.  அந்த முடிவை அவனுடைய சுற்றத்தார் அவர்களுக்கு எதிரான முடிவு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?  உயிர்மையில் எழுதுவதை நிறுத்தி விட்டு காலச்சுவடுவில் எழுதியிருந்தால் அதைக் குற்றம் சொல்லலாம்.  நான் டெக்கான் க்ரானிகிளில் அல்லவா எழுதினேன்?

நான் இறந்து போனால் மனுஷ்ய புத்திரன் எடுத்துக் கொள்ள வேண்டிய மனநல மாத்திரைகள் மிக அதிகப்படியாக இருக்கும்.  அவருடைய காதலிகள் அவரை அப்போது கொஞ்சம் கூடத் தனியாக விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

***

பின்வரும் கட்டுரை விகடன் தடம் இரண்டாவது இதழில் வெளிவந்தது:

பைத்திய நிலவுகள்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.  குற்றாலம் கவிதைப் பட்டறையில் நானும் நண்பர்களும் அருவியில் குளித்து விட்டு காட்டு பங்களாவை நோக்கி வந்தோம்.  அடர்த்தியான காடு.  பங்களாவில் அமர்ந்து கொஞ்சம் குடித்து விட்டு எங்கள் அறைகளுக்குத் திரும்பலாம் என்பது திட்டம்.  காட்டில் கும்மிருட்டு.  தூரத்தில் பங்களா வெளிச்சம்.  கிட்டத்தில் போனால் தன்னந்தனியனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.  மாலை ஆறு மணியிலிருந்து அப்படி உட்கார்ந்திருக்கிறாராம்.  நாங்கள் போனபோது மணி பத்து.  இதோ வந்து அழைத்துப் போகிறோம் என்று சொல்லிச் சென்ற நண்பர்கள் மட்டையாகி விட்டார்கள் போல.  பிறகு நாங்கள்தான் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றோம்.  அதுதான் மனுஷுடனான என் முதல் சந்திப்பு.

அவர் கவிதைகள் எனக்குப் பிடிக்குமே தவிர அவர் சுந்தர ராமசாமி பள்ளி என்பதால் அதிகம் நெருங்கியதில்லை.

பிறகு சில ஆண்டுகள் சென்று அவர் சென்னைக்கு வந்த போது அவரை ரயில் நிலையத்துக்குப் போய் சந்தித்த ஒரே எழுத்தாளன் நான்தான்.  (என் வாழ்வில் யாரையுமே நான் ரயில் நிலையம் சென்று வரவேற்றதில்லை.) பிறகு ’உயிர்மை’யைத் தொடங்கினார்.  ’உயிர்மை’யின் முதல் இதழிலிருந்து ஒவ்வொரு மாதமும் பத்து ஆண்டுகள் எழுதினேன்.  அந்தப் பத்து ஆண்டுகளும் அவரை நான் சந்திக்காத நாள் அவரோ நானோ வெளியூர் சென்றிருக்கும் நாளாகத்தான் இருக்கும்.  பேச்சு பேச்சு பேச்சு.  மாதத்தில் ஒருநாள் குடிப்போம்.  ஆனால் மனுஷுடன் குடிப்பது மிகவும் சலிப்பூட்டுகின்ற காரியம்.  உடல்நலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் கண்ட இடங்களில் இருந்தும் சிக்கன் பஜ்ஜிகளை வாங்கி வரச் சொல்வார்.  எண்ணெய் சொட்டும் அந்த பஜ்ஜிகளைக் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவேன்.  அதை விடக் கொடுமையான சமாச்சாரம், ஒரு பெக்கை ஒன்றரை மணி நேரம் குடிப்பார்.  செஷன் நான்கு மணி நேரம் போனால் அவர் குடித்தது ஒன்றரை பெக்காக இருக்கும்.  அவர் போதையாகி நான் பார்த்ததே கிடையாது; ஒரே ஒருமுறை பார்க் ஷெரட்டனில் வைத்து ஆறு பெக் ஆகி விட்டது.  அன்று அவர் சொன்ன விஷயங்களை வெளியே சொன்னால் என் தலை உடம்பில் இருக்காது.

மனுஷ்ய புத்திரன் படு கெட்டி, தந்திரசாலி என்றெல்லாம் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  அதெல்லாம் தப்பு.  ஒரு குழந்தையை ஏமாற்றுவது போல் அவரை ஏமாற்றி விடலாம்.  ஒருநாள் அவரும் நானும் நண்பர் மனோஜும் அவருடைய அறையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். குடிக்கலாமா, என்னிடம் ஒரு அப்ஸலூட் வோட்கா இருக்கிறது என்றார் மனுஷ்.  சற்றும் யோசிக்காமல் சரி என்றேன்.  (அப்போதெல்லாம்  அப்படித்தான்!) ஒரு பெக் ஆயிற்று.  எறும்பு கடித்த மாதிரி கூட இல்லை.  இரண்டாவது பெக்கும் ஆயிற்று.  ஒன்றுமே இல்லை.  ஓ, மொடாக்குடியனாகி விட்டோம் போலிருக்கிறதே, ஒன்றுமே தெரியவில்லையே என்று லேசாக மனோஜிடம் கேட்டேன்.  ஆமாம் என்றார் அவரும்.  மனுஷும் அதையே சொன்னார்.  உடனே தண்ணீர் கலக்காமல் குடித்தோம்.  பிறகுதான் தெரிந்தது, அவருடைய உதவியாளர் யாரோ (ஒருவரோ இருவரோ) போத்தலில் இருந்த வோட்காவைக் காலி செய்து விட்டு அதில் தண்ணீரை நிரப்பி மூடி வைத்து விட்டார்கள்.  பிறகு சில தினங்கள் சென்று அந்த நபர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டீர்களா என்று கோபத்துடன் கேட்டதற்கு, அட நீங்க வேற, பாவம், அவுங்கதான் என்னா பண்ணுவாய்ங்க என்றார் சிரித்துக் கொண்டே.

இடையில் மனுஷின் கவிதைகள் பற்றி ஏராளமாக எழுதினேன்.  என் அளவுக்கு அவர் கவிதைகளைக் கொண்டாடியவர் யாரும் கிடையாது.  அதை விட முக்கியம், என்னுடைய ’காமரூப கதைகள்’ நாவலில் அவர் இரண்டு மூன்று பெயர்களில் நாவல் முழுவதுமே வருகிறார்.

இப்படியாக எங்கள் நட்பு இனிமையாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் இனிமேல் இவர் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்ற சபதத்துடன் பிரிந்தேன்.  இதுவரை அதன் காரணத்தை யாரிடமும் சொன்னதில்லை, அவரிடமும் கூட.  ஒரு மலையாள சினிமா நண்பர் (இலக்கிய வாசகர்) மனுஷிடம் சமீபத்தில் குறிப்பிடத்தக்க தமிழ் நாவல் என்ன வந்திருக்கிறது என்று கேட்டபோது அவர் ராமகிருஷ்ணனின் ஒரு நாவலைச் சொன்னதாக அவரே சொன்னார்.  என்னிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  என் எழுத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், திட்டலாம்.  ஆனால் என் எழுத்தின் மீது மரியாதை கொண்டவர்களோடு மட்டுமே நட்பு பாராட்டுவேன்.  இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  கடந்த முப்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு செஷனிலும் நாலு ரவுண்டு ஆன பிறகு அங்கிருப்போர் என் எழுத்தைக் கண்டபடி தூற்றுவதையே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன்.  அதனாலேயே பல மதுபான இரவுகள் வெட்டிச் சண்டையில் முடிந்ததுண்டு.  அதனால்தான் மேற்கண்ட முடிவை எடுத்திருந்தேன்.  பிறகு மனுஷோடு மூன்று நான்கு ஆண்டுகள் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் அவந்திகா மட்டும் நீ செய்வது சரியல்ல சரியல்ல என்று புலம்பிக் கொண்டே இருப்பாள்.  காரணம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு சின்மயா நகரிலிருந்து மனுஷ் வசிக்கும் ராஜா அண்ணாமலைபுரம் வருவதற்கு தினமும் ஆட்டோவுக்குப் பெரும் தொகை செலவாகிறதென்று அவர் வீட்டுக்கு அருகிலேயே குடி வந்து விடுவது என்று முடிவு செய்து மூட்டையைக் கட்டிய போது மைலாப்பூரில் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.  பிராமணர் பகுதி என்பதால் அசைவ உணவுக்காரர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.  அப்போது மனுஷ்தான் தன் வண்டியில் – அப்போது அவரிடம் கார் இல்லை – தெருத் தெருவாக அலைந்து எங்களுக்கு வீடு பார்த்துக் கொடுத்தார்.  அந்த நன்றி விசுவாசம் இல்லையே உனக்கு என்பது அவந்திகாவின் பிராது.  ”உண்மைதான் அம்மு, எனக்கு மனித உறவுகளை விட என் எழுத்துதான் முக்கியம்; ஏனென்றால் என் உயிர் மூச்சே என் எழுத்துதானே?  அதை மதிக்காத ஒருவரோடு நான் எப்படிப் பழகுவேன்?” என்பேன்.  ஆனால் சுந்தர ராமசாமி பள்ளியைச் சேர்ந்த மனுஷுக்கு என் நாவல் பிடித்திருந்தால்தானே ஆச்சரியம் என்ற எண்ணமும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

என்னிடம் இன்னொரு கெட்ட குணம் உண்டு.  ஒருவரோடு பழகினால் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.  எந்த எல்லை வரையும் செல்வேன்.  ஆனால் பிரிந்து விட்டால் ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து எழுத்து மறைவது போல் எல்லா நினைவுகளும் மறைந்து விடும்.  பின்னாளில் ஒருமுறை அவந்திகா நீ திடுதிப்பென்று மனுஷ்ய புத்திரனை விட்டு விலகியதால் அவர் மூன்று மாத காலம் உளவியல் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகச் சொன்னார் என்றாள்.  நன்றாகப் படட்டும், அந்த சினிமா நண்பரிடம் என் நாவலைச் சொல்லாதவனோடு எனக்கு என்ன சிநேகிதம் என்றே எண்ணினேன்.

இடையில் முகநூலில் வாரம் ஒருமுறையாவது மனுஷ் என்னைத் திட்டி எழுதுகிறார் என்று நண்பர்கள் சொல்வார்கள்.  எனக்குத் தெரியாது; ஏனென்றால், நான் அவரைப் பிரிந்த போதே அவரை முகநூலில் block செய்து விட்டேன்.  பிறகு நண்பர்களிடம், இனிமேல் மனுஷ் எழுதுவது பற்றி என்னிடம் கொண்டு வந்தால் உங்களோடும் பழக மாட்டேன் என்று சொன்ன பிறகுதான் அவர் எழுதுவதை என்னிடம் காண்பிப்பதை நிறுத்தினார்கள்.

ஆனால் இடையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சில சமயம் சந்திக்க நேரும் போது ஏதோ நேற்று மாலைதான் பேசிப் பிரிந்தது போல் பேசிக் கொண்டிருப்போம்.  இன்னொரு முக்கிய விஷயம்.  எனக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் யோசனை கேட்க வேண்டியிருந்தால் காலையில் ஏழு மணிக்கு அவருக்கு ஃபோன் செய்வேன்.  அப்போதும் ஏதோ முந்தின மாலை சந்தித்தது போல்தான் பேசுவார்.

இப்படியே மூன்று நான்கு ஆண்டுகள் சென்ற பிறகு ஒருநாள் மனுஷிடமிருந்து ஃபோன்.  ”உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?” “ஒன்றும் பிரச்சினை இல்லையே” என்று பொய் சொன்னேன்.  வீட்டுக்கு அழைத்தார்.  போனேன்.  பேசினேன்.  பழசை மறந்து விட்டு மீண்டும் நண்பனானேன்.

கோவையில் ஒரு புத்தக வெளியீடு.  பேச அழைத்தார்.  படு நெருக்கடியான வேலைகள்.  ஆனாலும் மனுஷ்தான் ஆக முக்கியம்.  போனேன்.  என் பேச்சில் என்னைப் பற்றி அதிகம் பீற்றிக் கொண்டு விட்டேன் போல.  கடுப்பாகி விட்டார்.  மறுநாள் இரவு ஊட்டியில் – ஒரு காட்டுப் பகுதியில் – தங்கினோம்.  எங்கள் நட்பின் இந்த இரண்டாம் காலகட்டத்தில் நான் குடிப்பதை விட்டிருந்தேன்.  காரணம், வாரத்தில் ஒருமுறை குடித்தாலும் அது என் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது என்பதை உணர்ந்தேன்.  முக்கியமாக, வெளிநாட்டுப் பயணங்களின் போது நண்பர்களோடு குடியைத் தவிர்க்க முடிவதில்லை.  தினமும் குடி என்று ஆகி விடுகிறது.  சுத்தமாக நிறுத்தினேன்.  ஒயின் கூட அருந்துவதில்லை.  குடிப்பவர்களோடு சேர்ந்து பேசுவதும் இல்லை.  என்ன இது, இப்படி உளறுகிறார்கள் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது.

ஊட்டியில் காட்டு பங்களாவில் அதிக கூட்டம்.  இலக்கியவாதிகள்.  பலர் குடித்தார்கள்.  சிலர் குடிக்கவில்லை.  ஒருவர் சினிமாப் பாட்டை ஆரம்பித்தார்.  ஐயோ தலைவலி ஆயிற்றே என்று இலக்கியத்தின் பக்கம் பேச்சைத் திருப்பினேன்.  அதுதான் நான் செய்த தவறு.  ஒரே ரகளை, அடிதடிப் பிரளயம் ஆரம்பம்.  முப்பது ஆண்டுகளாகப் பார்த்து வந்த கொடுமை.  அப்போது குறுக்கே புகுந்த மனுஷ், எல்லாம் உங்களுடைய சொந்தக் கதையைத்தானே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று என் புனைவெழுத்தை நிராகரிக்கும் தொனியில் சொன்னார்.  பதில் பேசாமல் எழுந்து போய் விட்டேன்.  இனி செத்தாலும் அவர் முகத்தில் முழிப்பதில்லை என்று சபதம். ஊட்டியில் சந்தித்தோம், ஊட்டியில் பிரிந்தோம் என்று தமிழ் சினிமா பாணியில் நினைத்துக் கொண்டேன்.  அது பற்றி எதுவும் எழுதவும் இல்லை.   என்னிடமிருந்த மனுஷின் புத்தகங்களையெல்லாம் மூட்டை கட்டி நண்பரிடம் கொடுத்து விட்டேன்.  (கொடுக்கும் போது கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன்.)  அந்த நண்பரிடம் மனுஷை இனிமேல் வாழ்நாளில் சந்திப்பதில்லை என்று முடிவு செய்து விட்டதாகக் கூறினேன்.  அடப் போங்க சாரு, நீங்களும் மனுஷும் சேர்ந்து எங்களையெல்லாம் முட்டாளாக்கிக் (வேறொரு வார்த்தை சொன்னார்; இங்கே எழுத முடியாது) கொண்டிருக்கிறீர்கள்; இதோ அடுத்த மாதமே ரெண்டு பேரும் சேர்ந்து புத்தக வெளியீடு நடத்துவீர்கள் என்றார்.  கடுமையாகத் திட்டி அனுப்பி விட்டேன்.

ஊட்டி சம்பவம் நடந்து இரண்டு மாதம் ஆகியிருக்கும்.  மனுஷிடமிருந்து குறுஞ்செய்தி.  எதுவுமே நடக்காதது போல, நேற்று மாலைதான் பேசிப் பிரிந்தது போல. சாரு, என் கவிதை வெளியீட்டுக் கூட்டத்திற்கு நீங்கள் வந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். அந்தக் கணம் முடிவெடுத்தேன்.  இவரோடு இனி எந்தக் காலத்திலும் சண்டை போடுவதில்லை.  ஏனென்றால், எனக்குத்தான் ’வெக்கம் மானம் சூடு சொரணை’ எதுவும் இல்லை என்றால் இவர் நமக்கு மேல் இருக்கிறாரே என்றுதான் அந்த முடிவுக்கு வந்தேன்.

நாகூரில் ஐம்பதுகளில் சண்முகம், குட்லி என்று இரண்டு ரவுடிகள் இருந்தார்கள். அதில் சண்முகம் என் தாய்மாமா. அப்போது அவருக்குத் திருமணம் ஆகவில்லை.  எங்கள் வீட்டில்தான் இருந்தார்.  வீட்டில் அவரைப் பார்த்ததை விட கள்ளுக்கடையில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். எப்படியென்றால், அவ்வப்போது அம்மா எவர்சில்வர் தூக்கில் கொடுத்தனுப்பும் கோழிக் குழம்பை நான்தான் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம்.  கள்ளுக்குத் தொட்டுக் கொள்ள என்பதால் குழம்பாக இல்லாமல் கெட்டியாக இருக்கும்.  ஆனால் வறுவல் அல்ல.  ’பெரட்டுனது’ என்பார்கள்.  ஒருநாள் சண்முகம் மாமா உடம்பில் பலத்த வெட்டுக் காயங்களோடு வீட்டுக்கு வந்தார்.  குட்லிதான் வெட்டி விட்டார்.  அம்மா உடனே அவரை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.  28 இடங்களில் தையல்.  வீடு பூராவும் ரத்தம் கொட்டியிருந்தது.  ஒரு மாதம் கழித்து கள்ளுக் கடைக்குக் கோழி பெரட்டல் எடுத்துக் கொண்டு போன போது சண்முகம் மாமா குட்லியோடு சிரித்துப் பேசியபடி இருந்ததை அம்மாவிடம் வந்து சொன்னேன்.  ஒரு கெட்ட வார்த்தையால் தன் அண்ணனைத் திட்டினார்கள் அம்மா.  அப்படியாக அந்த ’வெக்கம் மானம் சூடு சொரணை’ இல்லாத மனோபாவம் எனக்குப் பிதுரார்ஜிதமாகவே வருகிறதென்று தோன்றுகிறது.

இடையில் மனுஷ் திமுகவில் சேர்ந்து மேடைப் பேச்சாளனாக ஆன போது அதை வேடிக்கை பார்த்தேன்.  தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆக்கி விடுவார்களே என்று தோன்றியது.  என் நண்பர்கள் எல்லோரும் அவரை விமர்சித்தார்கள்.  நான்தான் அதிகம் திட்டியவன்.  ஆனால் யோசித்துப் பார்த்த போது எனக்குக் காரணம் புரிந்தது.     ஃப்ரெஞ்ச் கவிதையின் கடவுள் என்று போற்றப்படுகிற ஆர்தர் ரேம்போவையும் (Arthur Rimbaud) பால் வெர்லேனையும் பற்றித் தெரிந்து கொண்டால் மனுஷின் திமுக அரசியல் பற்றியும் புரிந்து கொள்ளலாம்.

ரேம்போவின் காலம் 1854-இலிருந்து 1891 வரை. ரேம்போ அளவுக்கு உலகில் உள்ள பாடகர்களை, கவிஞர்களை, தத்துவவாதிகளை பாதித்த ஆளுமை யாரும் இல்லை.  இவ்வளவுக்கும் அவர் கவிதை எழுதிய காலம் 1870-இலிருந்து 1875 வரை வெறும் ஆறே ஆண்டுகள்.    அதாவது அவருடைய 16 வயதிலிருந்து 21 வயது வரை.  அதற்கு மேல் அவர் வாழ்ந்த 37 வயது வரை அவர் கடிதங்களைத் தவிர கவிதைகள் எழுதவில்லை.

”கவிஞன் என்பவன் ஒரு தீர்க்கதரிசி.  அதற்கு அவனுடைய உணர்வுகள் பிறழ்வுண்டிருக்க வேண்டும்.  அதன் விளைவாக ஏற்படும் வேதனைகளைத் தாங்கும் சக்தி அவனுக்கு இருக்க வேண்டும்.  ஒரு கவிஞன் உருவாவதில்லை; பிறக்கிறான்.  அதற்காக அவன் எல்லா நஞ்சையும் உட்கொள்ளுகிறான்;  எல்லா சித்ரவதைகளையும் ஏற்றுக் கொள்ளுகிறான்.  விதவிதமான காதலில், வேதனையில், பித்தத்தில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்கிறான்.  அதனால் ஏற்படும் துயரங்களை, வேதனைகளை விழுங்கி அதன் சாரத்தை மட்டும் தன்னில் தேக்கிக் கொள்கிறான்.  கடுமையான நம்பிக்கையும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலிமையும் வேண்டியிருக்கும் இந்தச் சித்ரவதைகளால் அவன் நோயாளியாகிறான், கிரிமினலாகிறான், சபிக்கப்பட்டவனாகிறான். அதே சமயம், மனித குலத்தில் எல்லாம் அறிந்தவனுமாகிறான்.”

தன் பதினேழாவது வயதில் ரேம்போ பாரிஸில் வெர்லேனைச் சந்திக்கிறார்.    உலகம் பூராவிலும் எழுத்தாளர்களுக்குப் பிரியமான அப்ஸிந்த் என்ற மதுவிலும் ஹஷீஷிலும்தான் இருவரும் வாழ்ந்தார்கள்.  லண்டனுக்கு வந்தார்கள்.  தினந்தோறும் சண்டைதான்.  ஒருநாள் வெர்லேன் தன் கைத்துப்பாக்கியால் ரேம்போவைச் சுடுகிறார்.  ரேம்போ சாகவில்லை; ஆனால் குண்டு உடலுக்குள் போய் விட அறுவை சிகிச்சை நடந்து பிழைத்துக் கொள்கிறார்.  இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கிறது வெர்லேனுக்கு.  அதற்குப் பிறகு இந்தோனேஷியப் காடுகளுக்கும் பிறகு அங்கிருந்து ஆஃப்ரிக்காவுக்கும் போகிறார் ரேம்போ.  வாழ்நாள் முழுவதும் நாடோடியாகவே அலைகிறார்.  கால்நடையாகவே ஐரோப்பா முழுக்க சுற்றுகிறார்.  வெர்லேனைப் பிரிந்த பிறகு அவர் கவிதை எழுதவில்லை.

ரேம்போவைப் புரிந்து கொள்ளாமல், ஒரு வேசிக்காகத் தன் காதுகளை அறுத்துக் கொடுத்த வான்கோவின் மனப்பிறழ்வைப் புரிந்து கொள்ளாமல், ஒருவர் மனுஷ்ய புத்திரனின் மனப்பிறழ்வையும் புரிந்து கொள்ள முடியாது.  மேலே ரேம்போ தீர்க்கதரிசி என்று சொன்ன அர்த்தத்தில் ஒருமுறை மனுஷை தீர்க்கதரிசி என்று எழுதினேன்.  உடனே முகநூலில் ”என்னைப் போய் தீர்க்கதரிசி என்கிறார் சாரு; நான் ஒரு சைத்தான் ஆயிற்றே?” என்று எழுதினார் மனுஷ்.  கவிஞனைப் பொறுத்தவரை தீர்க்கதரிசியும் அவன்தான்; சைத்தானும் அவன்தான்.  ரேம்போவின் விளக்கமே அதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஒரு தேவதை என்னிடம் “நான் உனக்கு சொர்க்கத்தைக் காண்பிக்கிறேன்; அந்த சைத்தானின் நட்பை விட்டு விடு” என்று சொன்னபோது எனக்கு சைத்தானே போதும் என்று அவன் வாழும் நரகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  ஏனென்றால், இந்த மனித குலத்தின் எல்லா துயரத்தையும், எல்லா காதலையும் அந்த சைத்தான் இரவு பகலாக எழுதிக் கொண்டேயிருந்தான்.  மனுஷ் அளவுக்கு கவிதை எழுதிக் குவித்த வேறு யாரொரு கவியும் தமிழில் இல்லை.  ஒரே ஆண்டில் அவர் எழுதிய மாபெரும் கவிதைத் தொகுதி ’புலரியின் முத்தங்கள்’. ஒரு கவிதை அரங்கில் அவர் சொன்னார்: ”என் மனப் பிறழ்வையே கவிதையாக எழுதுகிறேன்.  கொஞ்சமாவது மனப்பிறழ்வு கொண்டவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.” அவர் சொல்லும் மனப்பிறழ்வு என்பது மனோவியாதி அல்ல; சராசரி மனிதர்களின் லௌகீக வாழ்வின் ஓட்டங்களுக்கு எதிரான ஒரு கலகக்காரனின் குரல்.

***

2008-இல் மனுஷ்ய புத்திரனின் கவிதை பற்றி இப்படி எழுதியிருந்தேன்:

பாப்லோ நெரூதா, Nicanor Parra போன்ற உலகின் எந்த மகத்தான கவிஞர்களுக்கும் நிகரானவர் மனுஷ்ய புத்திரன். தமிழ்நாடே கொண்டாட வேண்டிய நம்முடைய தேசியக் கவிஞன் மனுஷ்ய புத்திரன்தான் என்று சந்தேகமின்றிச் சொல்லுவேன்.

நமக்கு பாப்லோ நெரூதாவைத் தெரியும். ஆனால் நெரூதா வாழ்ந்த அதே கால கட்டத்தில், அதே தேசத்தில் வாழ்ந்த நிகனோர் பார்ராவைத் தெரியாது. அவருடைய கவிதை ஒன்றை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்.

கடைசிக் கோப்பை

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ

நம்மிடம் இருப்பது மூன்று தெரிவுகள்தான்

நேற்று இன்று நாளை.

 

மூன்று கூட இல்லை

ஏனென்றால்

தத்துவவாதிகள் சொல்வதுபோல்

நேற்று என்பது நேற்றுதான்

அது நமது நினைவுகளில் மட்டுமே

தங்கியிருக்கிறது

ஏற்கனவே பறிக்கப்பட்ட ரோஜாவிலிருந்து

மேலும் இதழ்கள் வளர வாய்ப்பில்லை.

 

விளையாடுவதற்கான சீட்டுக்கட்டுகள்

இரண்டு மட்டுமே உள்ளன:

நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.

 

இல்லை

இரண்டு கூட இல்லை

ஏனென்றால்

நிகழ்காலமென்பது

கடந்த காலத்தின் விளிம்பைத்

தொட்டுக் கொண்டிருக்கிறதே தவிர

அது ஒன்றும்

நிகழ்காலத்தில் இல்லை

இளமையைப் போல்

அதுவும்

செலவாகிவிட்ட ஒன்று.

 

கடைசியில் நம்மிடம் இருப்பது

எதிர்காலம் மட்டுமே.

நான்

எனது மதுக் கோப்பையை

அந்த

வரவே வராத நாளுக்காக

உயர்த்துகிறேன்.

 

ஆனால்

நம்மிடம் இருப்பது

அது மட்டும்தானே?

***

கடவுளுடன் பிரார்த்தித்தல் என்ற மனுஷ்ய புத்திரனின் தொகுதியிலிருந்து ஒரு கவிதை:

 

துயருற்றிருந்த என் கடவுளுக்கு

 

துயருற்றிருந்த என் கடவுளுக்கு

நான் முதலில்

என் சக்கர நாற்காலியைக் கொடுத்தேன்

 

தான் படைத்த உலகம் வரை

அதில் போக முடியுமா என்றார்

 

அவரது மதுக்கோப்பைகளை

நிரப்பினேன்

 

தான் படைத்த உலகத்தை

மறந்துவிட முடியுமா என்றார்

 

என்னுடைய காதல்களில் மிகச் சிறந்த ஒன்றை

எடுத்துக் கொள்ளும்படி கூறினேன்

 

தான் படைத்த உலகத்தின் நஞ்சு

அதில் படிந்திருக்கிறது என்றார்

 

என் படைப்பின்

மிக ரகசியமான சூட்சுமமொன்றை அவருக்குக்

கற்றுக் கொடுத்தேன்

 

தான் படைத்த உலகத்தை

அழிக்கும் ரகசியத்தைச் சொல்லிக்கொடு என்றார்

 

நான் கொஞ்சம் கொஞ்சமாக

கடவுளாகிக் கொண்டிருந்தேன்.

(கட்டுரைக்காகவே மனுஷ் என்று குறிப்பிடுகிறேனே ஒழிய அவரை நான் ஹமீத் என்றே அழைப்பது வழக்கம்.

ஆர்தர் ரேம்போவின் Illuminations தொகுப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்து அவரை இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ள உதவிய காயத்ரிக்கு என் நன்றி.)

***

படம்: பிரபு காளிதாஸ்

தடம் இதழில் வெளிவந்த மேற்கண்ட கட்டுரை பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில்:

தடம் இதழை இன்று மாலை தமிழ்மகன் தந்தார். மிக நேர்த்தியான வடிவமைப்புடன் செம்மையாக இருந்தது. என்னைப்பற்றி சாரு ஒரு கட்டுரை எழுதியிக்கிறார் என்று கேள்விப்பட்டதிலிருந்து அதை படிக்கவிரும்பினேன். ஒரு சிநேகிதி காலையில் போன் செய்து ‘ தடத்தில் சாரு உன்னைப்பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு நானே சாரு உன் கவிதைகளைப் பற்றி அவர் ப்ளாக்கில் எழுதியதை படித்துதான் உன்னைத் தேடி வந்தேன். அதுபோன்ற ஒரு துன்பியல் சம்பவம் இதைப் படிக்கிற வேறு எந்தப் பெண்ணுக்கும், யாருக்கும் நடந்துவிடக்கூடாது ’ என்றாள் விசனத்துடன்.

ஒரு பதினைந்து வருட நட்பைப் பற்றிய சித்திரத்தை எழுதுவது கடினமானது, இந்த 15 வருடங்களில் நாங்கள் பரஸ்பரம் அளித்துக்கொண்டதும் இழந்ததும் எண்ணற்றவை. என் எழுத்துக்களுக்கு அப்பால் என்னை தனிப்பட்ட முறையில் நன்கறிந்த அரிதான சில நண்பர்களில் சாருவும் ஒருவர். முரண்பட்ட எண்ணங்களும் நம்பிக்கைகளும் நடத்தைகளும் கொண்ட இருவர் சந்தித்துகொள்ளும் புள்ளிகளை மட்டுமே தேடித்தேடி கழிந்தவை இந்த 15 வருடங்கள். அவை சொல் தரும் அன்பின் நிமித்தங்களிலானனவை.

சாரு எனது காலர் ட்யூனில் துவங்கி எனது அரசியல் வரை என்னை கிண்டல் செய்யாத விஷயங்களே இல்லை. ஆனால் சிலரின் கிண்டல்கள் நமக்கு மனதிற்கு உகந்ததாகிவிடும். முரண்பட்டும் விலகியும் சென்ற தருணங்களில்கூட வருத்தம் இருந்திருக்கிறது, கோபம இருந்திருக்கிறது. ஆனால் ஒரு உறவுக்குள் மறுபடி திரும்புவதற்கான பாதைகளை அடைக்கும் வன்மம் இருந்ததில்லை.

என் கவிதைகளை சாரு இடைவிடாமல் கொண்டாடி வந்திருக்கிறார். அவர் என்னை விட்ட சமயத்தில்கூட என் கவிதைகளை கைவிட்டதில்லை. அவற்றைப்பற்றி அவர் திரும்பத் திரும்ப பேசியிருக்கிறார். மிக அதிகபட்சமான வார்தைகளால் கொண்டாடி இருக்கிறார். நெரூடாவுடன் அவர் என்னை ஒப்பிட சமயத்தில் நான் அவரை கடுமையாக மறுத்தேன். ஆனால் அவர் ‘ இல்லை நெரூடாவைவிடவும் நீதான் முக்கியமான கவிஞன் ‘’ என்றார் பிடிவாதமாக.
அன்னியன் நிலத்தின் பெண் வெளியீட்டு விழாவில் என் கவிதைகளைப் பற்றி அவர் ஆற்றிய உரை இன்றும் என் நினைவில் இருக்கிறது.

தடத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை என் கவிதைளைத்தாண்டி என்னுடனான உறவை பற்றி ஒருவர் எழுதும் முதல் கட்டுரை எனலாம். அது எனக்கே என்னைபற்றிய ஒரு வினோதமான சித்திரத்தை அளிக்கிறது. நான் இந்தக் கட்டுரையின் ஊடாக கடந்து சென்ற நாட்களைப் பற்றி எவ்வளவோ நினைக்கிறேன். அன்பு என்பதும் நட்பு என்பதும் வெறு தருணங்கள் அல்ல, அது ஒரு இயக்கம். எப்போதும் கவனமாக வளர்தெடுக்கப்படவேண்டிய இயக்கம். கொண்டாடப்படுவது ஒரு கொடுப்பினை. கொண்டாடத் தெரிவது ஒரு கலை.

என் பைத்திய நிலவுகளை அவர் கொண்டாடுவதன் வழியாக அந்த பைத்திய வெளிச்சத்திலிருந்து நீங்கமுடியாமல் நான் முடிவற்று நடந்துகொண்டேயிருக்கிறேன்.

சாரு என்றாவது நீங்கள் எனக்கான ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதுவீர்கள். அப்போது நீங்கள் எழுதுவதே சிறந்த கட்டுரையாக இருக்கும்.

மனுஷ்ய புத்திரன்

***

சாரு நிவேதிதா:

தடம் என்னும் இலக்கிய இதழை விகடன் கொண்டு வருகிறது என்று அறிந்த போது இன்னும் ஒரு இலக்கிய இதழா என்றே சலிப்புடன் எண்ணினேன்.  காரணம், எழுத்தாளர்களின் லௌகீக வாழ்க்கை.  எனக்கு வரும் ராயல்டி தொகை எனக்குப் பற்பசை வாங்கவே பத்தாது.  பதிப்பாளர் என்ன செய்வார்?  புத்தக விற்பனை ஆயிரம் ரெண்டாயிரத்தைத் தாண்ட மாட்டேன் என்கிறது.  ஆயிரம் ரெண்டாயிரம் என்பது கூட நாவலுக்குத்தான்.  கட்டுரைத் தொகுப்பு என்றால் நூறு இருநூறுதான்.  கவிதை என்றால், கவிஞர்களே இருநூறு பிரதிகள் காசு கொடுத்து வாங்கி நண்பர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.  இந்த லட்சணத்தில் இலக்கியத்துக்கு என்று இன்னொரு பத்திரிகை வேண்டுமா என்றே சலிப்பு தோன்றியது.

ஆனால் முதல் இதழ் தடம் வந்து விட்டது என்று தெரிந்தவுடன் மைலாப்பூர் பூராவும் பத்துப் பதினைந்து கடைகளில் ஏறி இறங்கியவனும் நான் தான்.  அப்படியும் கிடைக்காததால் விகடனிலிருந்தே கொடுத்து அனுப்பினார்கள்.  இவ்வளவுக்கும் தடத்தில் என்னுடைய எழுத்து எதுவும் வரவில்லை.  வர வேண்டும் என்று விரும்பி என்னிடம் கேட்டார்கள்.  நானும் சிரத்தையாக ஒரு சிறுகதை எழுதினேன்.  என் முதல் வாசகர் டாக்டர் ஸ்ரீராம்.  அனுப்பினேன்.  சூப்பர் என்றார்.  மருத்துவத்தைத் தவிர வேறு எந்தப் பேச்சையும் அவர் சொல்லி நான் நம்ப மாட்டேன் என்பதால் இன்னொரு நண்பருக்கு அனுப்பினேன்.  சே, தண்டம், அனுப்பாதீர்கள், உங்கள் பஞ்ச்சே இதில் இல்லை என்றார்.  புரியவில்லையே என்றேன்.  ரஜினியின் லிங்கா மாதிரி இருக்கிறது என்றார்.  உடனேயே அந்தக் கதையை பிறகு நல்லபடியாக எழுதலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், நம்முடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.  ஒரு பத்திரிகையின் முதல் இதழில் நம் எழுத்து வெளிவருவதென்பது ஒரு கௌரவம் இல்லையா?  அதைக் கூட நான் முக்கியமாக நினைக்கவில்லை.  என் எழுத்து எப்போதுமே அதன் வீர்யத்தை இழந்து விடக் கூடாது.

இப்போது விகடனின் தடம் இரண்டாவது இதழ் வெளிவந்துள்ளது.  இதில் மனுஷ்ய புத்திரன் பற்றிய என் கட்டுரை ஒன்று இருக்கிறது.  இந்த இதழுக்காகவும் மைலாப்பூரில் கடை கடையாக இரண்டு தினங்கள் ஏறி இறங்கினேன்.  (ஆட்டோ சார்ஜே நூறு ரூபாய் ஆகி விட்டது.)  கடைசியில் லஸ்ஸில் உள்ள பெரிய கடையில் கிடைத்தது.  ஹமீதிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஆனானப்பட்ட விகடனே போட்டாலும் இலக்கியம் என்றால்  கிடைப்பதில்லை பாருங்கள் என்றார்.  விலை ஐம்பது ரூபாய் அதிகம் என்றார்கள்.  அப்படிச் சொல்பவர்கள் இலக்கியத்தின் எதிரிகள் என்பேன்.  நான் இப்போது எழுதும் ArtReview Asia ஒரு பிரதியின் விலை 500 ரூ.  இலக்கியம் என்றால் விலை அதிகம்தான்.  லட்சக் கணக்கான பேர் இலக்கியம் படிக்கத் தயாராகி விட்டால் இருபது ரூபாய்க்குக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

***

பஜ்ஜி உங்களுக்குத் தெரியும்.  வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜியெல்லாம் பிரசித்தம்.  ஆனால் அசைவ உணவுப் பிரியர்களுக்கே அவ்வளவாகத் தெரிந்திராத ஒரு வஸ்து சிக்கன் பஜ்ஜி.  அதை சிக்கன் பக்கடா என்று சொல்கிறார்கள்.  அது தவறு.  பக்கடாவின் texture வேறு; இது வேறு.  சிக்கன் துண்டுகளைக் கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுப்பது சிக்கன் பஜ்ஜி.  ஹமீதுடன் மது அருந்தும் போது (அந்த துரதிர்ஷ்டம் யாருக்கும் வர வேண்டாம்!) அந்த சிக்கன் பஜ்ஜியை நீங்கள் உண்டு துய்க்கலாம்.  ஆனால் ஒரு மாதம் தொடர்ந்து உண்டால் மேலே டிக்கட் வாங்கி விட வேண்டியிருக்கும்.  ஏனென்றால், ஹமீது ஏரியாவில் சிக்கன் பஜ்ஜி செய்யும் கடையில் அந்த எண்ணெயைப் பல ஆண்டுகளாக மாற்றியதே இல்லை என்பதை அந்த சிக்கன் பஜ்ஜியைத் தின்னும்போதே நீங்கள் உணரலாம்.  இன்னும் இது போன்ற பல்வேறு விஷயங்களில் ஹமீது ஒரு ப்ராலிடேரியட்டைப் போலவே வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து நான் விசனப்பட்டிருக்கிறேன்.  இன்னொரு நாள் பார்த்தேன், கிழிந்து ஓட்டை ஓட்டையாக இருந்த பேண்ட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.  ஜீன்ஸ் கிழிந்திருந்தால் அது ஃபேஷன்.  சாதாரண பேண்ட் கிழிந்திருந்தால்?  என்னங்க இது என்றால் பேண்ட் வாங்கக் காசு இல்லை என்றார்.  நண்பர்களிடம் வந்து சொல்லி ஆச்சரியப்பட்டதற்கு, நீங்க ரொம்ப வெகுளி என்றனர்.  எல்லா பணத்தையும் அவர் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கிறாராம்.  என்ன வெங்காயமோ, எனக்கு இதெல்லாம் புரிவதே இல்லை.

சரி, சிக்கன் பஜ்ஜிக்கு வருகிறேன்.  என் கதை கட்டுரைகளை பிழை திருத்தம் செய்வோரிடம் நான் கொடுப்பதில்லை.  நானேதான் என் எழுத்துக்குப் பிழை திருத்துகிறேன்.  நான் எழுதியதில் ஒரு கமா ஃபுல்ஸ்டாப் கூட மாறக் கூடாது என்றே வலியுறுத்துவேன்.  காரணம், சிக்கன் பஜ்ஜி என்று நான் எழுதியிருந்ததைப் படித்த தடம் துணையாசிரியர் நான் கமா போட மறந்து விட்டதாக எண்ணி, சிக்கன், பஜ்ஜி என்று திருத்தியிருக்கிறார்.  இப்போது கட்டுரையில் சிக்கன், பஜ்ஜி என்று வந்து விட்டது.  ஒரு பெரிய nuance காலி.  ஹமீது வாங்கி வரச் சொல்வது சிக்கனும் பஜ்ஜியும் அல்ல.  சிக்கன் பஜ்ஜி.  தடம் துணையாசிரியர் ஒருமுறை ஹமீது வீட்டுக்குப் போய் ஹமீது அந்த ஏரியாவின் பிரபலமான சிக்கன் பஜ்ஜி கடையிலிருந்து வரவழைத்துக் கொடுக்கும் சிக்கன் பஜ்ஜியைச் சாப்பிட்டு உய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

நம் ஆரோக்கியத்துக்கே சவாலாக இருக்கக் கூடிய அந்த சிக்கன் பஜ்ஜியை ஹமீது மட்டும் எப்படி அடிக்கடி சாப்பிடுகிறார்?  இந்த இடத்தில்தான் நீங்கள் திமுக தலைவர் கருணாநிதி, குஷ்வந்த் சிங் போன்றவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.  குஷ்வந்த் சிங் 100 வயது வரை ஒரு நாள் தவறாமல் மது அருந்தினார்.  அதையே நாம் செய்தால் ரெண்டே வருடம்தான்.  இது பற்றித் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார்.  ஓரறிவு உயிர்கள் பல உள்ளன.  ஈரறிவு உயிர்களும் பல உள்ளன.  இதேபோல் மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிரிகள் பல உள்ளன.  ஆனால் ஆறறிவு கொண்ட இனம் மனித இனம் மட்டும்தானே?  அப்படி இல்லை.  அந்தப் பாடலில் தொல்காப்பியர் ”மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பறப்பே” என்கிறார்.  ஆறறிவு உள்ள மனிதர்களைப் போல் பிற உயர்களும் உள்ளன என்றால் அது யார் என்று மிகவும் குழம்பினேன்.  நச்சினார்க்கினியர் உரையிலும் தெளிவாகவில்லை.  பிறகு இளம்பூரணர் உரையில்தான் தேவர் அசுரர் என்று கண்டேன்.  கருணாநிதி, குஷ்வந்த் சிங், ஹமீது போன்றவர்களை இதில் சேர்க்கலாம்.  தேவர்கள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  இல்லாவிட்டால் கருணாநிதிக்கு என் மீது கோபம் வரும்.  ஆக, மனிதர்களுக்கு நடக்கக் கூடியதெல்லாம் தேவர் அசுரருக்கு நடக்காது.  இல்லாவிட்டால் வாழ்நாள் முழுதும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதி வீட்டுக்குக் கடவுளின் பிரதிநிதியே நேரில் வருவாரா?  எனவே ஹமீது சொல்கிறாற்போல் அவருக்கெல்லாம் நான் அஞ்சலிக் கட்டுரை எழுத நேராது. 

மேலும் அஞ்சலிக் கட்டுரைகளை நான் வெறுக்கிறேன்.  அஞ்சலிக் கட்டுரைகள் தமிழர்களின் குறுகிய புத்தியைக் காட்டுகிறது.  ஏனென்றால், ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது அவரைப் பாராட்டவோ அவரைப் பற்றி எழுதவோ துப்பு இல்லாதவர்களே இறந்த பிறகு எழுதுகிறார்கள்.  நான் யாரையும் மனதில் வைத்து இதை எழுதவில்லை.  தமிழர்களின் பொதுவான குணம் இது. 

ஹமீதின் வாழ்வில் இரண்டு முக்கியமான சம்பவங்களைப் பற்றி நான் எழுதியிருக்க வேண்டும்.  இடப் பற்றாக்குறை ஒரு காரணம்.  மழை பெய்யும் நள்ளிரவில் தன் தோழியின் பிறந்த நாளுக்குக் கொடுக்க கையில் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்னையின் தெருக்களில் சென்று கொண்டிருந்த கவிஞன் உலகத்தில் வேறு யாராக இருக்க முடியும்?  ரேம்போவிடமிருந்த அதே மனப்பிறழ்வின் ஒளிக்கீற்றுதான் அது.  ஹமீது, அந்த அளவு வீரியத்தைத் தாங்கக் கூடிய பெண்களை சென்னையில் உங்களால் சந்திக்க முடிந்ததா?  எனக்கு என்னவோ ஐரோப்பா தான் உங்களுக்கு உகந்த தேசம் என்று தோன்றுகிறது. 

இன்னொரு சம்பவம்.  கோவை செல்லும் ரயில்.  எதிர் இருக்கையில் ஹமீது.  நள்ளிரவில் கழிப்பறைக்கு எழுந்து செல்லும் போது எதிர் இருக்கையில் ஒரு பெண் உருவம் ஹமீதின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தது.  ஹமீது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  காலையில் செல்வியிடம், ”பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று விட்டது போல் இருந்தது நள்ளிரவுக் காட்சி” என்றேன்.  தூக்கத்துல அனத்திக்கிட்டே இருந்தார் என்றார் செல்வி.  மறைக்க முடியாத லஜ்ஜை முகத்தில் ததும்பிக் கொண்டிருந்தது.

 

நாளை அடுத்த நண்பர்…