பூச்சி 54

டியர் சாரு,

எவ்வளவோ முறை பேசவேண்டும் என நினைத்திருக்கிறேன். தயக்கமா, பயமா என்ன என்று தெரியவில்லை, இவ்வளவு நாள் உங்களை வாசித்துக் கொண்டிருந்தாலும் பேச முடியவில்லை. இன்றுதான் (10/05/2020) எனக்கு Zoom-ல் முதல்முறையாக உங்களோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. 

என்னை வாசிக்க வைத்தது, வைப்பது எல்லாம் நீங்கள்தான் என்று சொல்லுவேன். ஸீரோ டிகிரியில் தொடங்கி, எக்ஸிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் வாசித்து, இப்போது ராஸ லீலா வாசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல், மெதூஸாவின் மதுக்கோப்பை தனிக் கணக்கு! 

ஒவ்வொரு கேள்வியையும் ஒரு பச்சைக் குழந்தையின் curiosity-யுடனும் புன்னகையோடும் நீங்கள் கேட்டு பதிலளித்த விதத்தில் ஒரு ஞானியைக் கண்டேன். மிகவும் பிடித்தது. 

குரு தட்சணை என்று ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்று ஒரே நாளில் இவ்வளவு செய்திகளைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு, எவ்வளவு தட்சணை கொடுத்தாலும் ஈடாகுமா என்றும் தெரியவில்லை. இருந்தாலும், அப்பா அம்மாவிற்குக் கஷ்டம் வேண்டாமே என்று பணம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுள் ஒருவனாய், ஒரு 500 மட்டும் அனுப்பி வைத்திருக்கிறேன். அடுத்த முறை புத்தகம் வாங்கும் பணத்தில் Charuonline-க்கு சந்தா கட்டிவிடுகிறேன். உங்கள் வலைத்தளமே இலட்சம் புத்தகங்களுக்குச் சமம்! 

உங்கள் பூனையிடம் “ஓடியா தூக்கிக்கிறேன்” என்று நீங்கள் சொன்னபோது புன்னகையோடு லேசாக கண்ணீரும் வந்துவிட்டது. அடுத்த முறை உங்கள் செல்லக்குட்டிகளை கவனித்துக் கொள்ளவும் பூனை உணவுக்கு முயற்சி செய்கிறேன். 

நீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் என்றென்றும் நலமாய் வாழ பிரார்த்திக்கிறேன். 

உங்கள் வாசகன்,

ஈஷ்வர்.

ஈஷ்வரின் இந்தக் கடிதம் கண்டு சற்று கலங்கி விட்டேன்.  ராயல்டி பணம் ஆண்டுக்கு ஆறு லட்சம் வந்தால் சாருஆன்லைனை இலவசமாகவே படிக்கலாம் என்று சொல்லி பணம் பற்றிய பேச்சே எடுக்க மாட்டேன்.  ஆனால் புத்தகங்கள் அவ்வளவு விற்பதில்லை.  எல்லாம் அம்பது காப்பிதான்.  நூறு விற்றால் சாதனை.  நாவல் எழுதினால் ரெண்டாயிரம் போகும்.  சந்தேகம் இல்லை.  பத்திரிகைக்குப் பத்தி எழுதினால் ஒரு கட்டுரைக்கு நியாயமாகப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும்.  ஆயிரம் கிடைக்கிறது.  அதுவும் இப்போது ஐந்தாறு ஆண்டுகளாகத்தான்.  அதற்கு முன்னால் இலக்கியப் பத்திரிகைகளில் இலவசமாகவே எழுதிக் கொண்டிருந்தேன்.  இலக்கியப் பத்திரிகைகளெல்லாம் அந்தந்த ஆசிரியரின் சொந்தப் பணத்தில் நடத்தப்படுவது.  சி.சு. செல்லப்பா தன் சொத்தையெல்லாம் விற்று எழுத்து நடத்தினார் இல்லையா, அதன் தொடர்ச்சி.  அதில் எழுத பணம் கேட்டால் தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து விட்டுப் பிள்ளையிடம் பணம் கேட்பதைப் போல.  இதில் கொஞ்சம் மோடி வேறு புண்ணியம் கட்டிக் கொண்டார்.  நீங்கள் இனி பணம் பற்றியே யோசிக்கக் கூடாது என்று சொல்லி மாதம் 45000 ரூ. கொடுத்து வந்த நண்பரின் நிறுவனத்தில் மோடியின் பொருளாதாரக் கொள்கையால் சிக்கன நடவடிக்கை.  நாற்பத்தைந்தாயிரமும் நின்று விட்டது.  அதிலிருந்துதான் சந்தா/நன்கொடை என்று கேட்டு வருகிறேன்.  அதுவும் முடிந்தவர்கள் அனுப்பினால் போதும்.  ஈஷ்வர் போல் இத்தனை சிரமப்பட்டு அல்ல. 

சினிமா நடிகர்களுக்கு நாற்பது கோடி ஐம்பது கோடி என்று சம்பளம்.  நீங்களெல்லாம் சமீபத்தில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளருக்கு எழுதிய நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்.  அது ஒரு குரூர நாடகத்தின் அவலமான அங்கம்.   இயக்குனரும் உதவியாளர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்க வசதி செய்து தர வேண்டும்.  தினமும் உணவுச் செலவு தர வேண்டும்.  அதற்கு எதுவும் உச்சவரம்பு இருக்கக் கூடாது.  (அதாவது ஒரு நாளைக்கு இருபது ரெமி மார்ட்டின் கேட்டால் இருபது வர வேண்டும்!) இப்படியே ஒரு இருபது ஷரத்துக்கள் போகின்றன.  கடைசி ஷரத்துதான் ஆக அட்டகாசம்.  இயக்குனருக்கு மனம் மாறியது என்றால், படத்திலிருந்து பாதியிலேயே விலகிக் கொள்வார்.  சம்பளப் பணம் திருப்பித் தர மாட்டாது.   தயாரிப்பாளர் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கக் கூடாது.  ஏனென்றால், கலைஞர்களால் இது போன்ற விஷயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து கொண்டிருக்க முடியாது.  ஆக, தயாரிப்பாளர் இயக்குனருக்கு மட்டும் பத்து கோடி ரூபாய் செலவு பண்ணினால் இயக்குனருக்கு மூட் சரியில்லை என்று சொல்லி விட்டுக் கிளம்பி விடுவார். 

ஆனால் எழுத்தாளனின் சன்மானம் ஆயிரம் ரூபாய்.  இன்றைய மாயா இலக்கியச் சந்திப்பு பிரமாதமாகப் போயிற்று.  அதற்கு மாயா இலக்கிய வட்டத்தினருக்கும் குறிப்பாக ரமா சுரேஷுக்கும் நன்றி. 

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்புங்கள்.  இன்றைய சந்திப்புக்காக இரண்டு தினங்கள் படிக்க வேண்டியிருந்தது.  மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்தால் ஒரு லட்சம் சன்மானம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  மற்றபடியும் தமிழருவி மணியனைப் போன்றவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள்.  பேச்சாளர்களுக்கு நல்ல வருமானம்தான் போல.  ஆனால் எழுத்து இலக்கியம் என்று வந்தால் அதுவும் இலவசமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.  இதெல்லாம் ஒரு சமூகப் பிரச்சினை.  யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஒரு Zoom சந்திப்பு என்றால், நூறு பேர் நிச்சயம் கலந்து கொள்வார்கள்.  ஒருத்தருக்கு 500 ரூ. கட்டணம் என்று சொன்னால் எத்தனை பேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?  பத்து பேர் வந்தால் அதிகம்.  ஆனால் பத்து பேருக்குப் பேசலாம் என்கிறேன்.  பேச்சு ஒரு நல்ல வடிவமாக இருக்கிறது.  காரில் செல்லும் போது கேட்டுக் கொண்டே போகலாம்.  பேச்சில் அது ஒரு பெரிய வசதி.  வாரம் ஒரு முறையோ இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ பேசலாம் என்றுதான் தோன்றுகிறது.  கட்டணம் கட்டினால்.  ஓஷோ, ஜேகே எல்லாமே பேசிக் கொண்டே இருந்தவர்கள்தானே?  அவர்களின் பேச்சுதானே ஒலித்தகடுகளாகவும் புத்தகங்களாகவும் வந்து கொண்டிருக்கின்றன?  

இன்றைய பேச்சு நன்றாக இருந்தது என்று கடிதம்/செய்தி அனுப்பியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  இன்றைய பேச்சின் போது ஐந்து பூனைகளும் என் நாற்காலியைச் சுற்றித்தான் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.  சமயங்களில் என் தலைக்கருகே கூட வந்து அமர்ந்திருந்தன.   

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai