சிறுகதை எழுதுவது எப்படி?

நேற்று ஒரு சம்பவம் நடந்தது.  அந்தக் காலத்தில் வெற்றிலை போடுபவர்கள் எச்சிலைத் துப்ப ஒரு குடுவை மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா?  அதன் பெயர் மறந்து விட்டது.  ஐந்து நிமிடத்துக்குள் தேவை.  குமுதத்துக்கு இந்த வாரம் கட்டுரைக்கு பதிலாக ஒரு கதை அனுப்பினேன்.  அந்தக் கதைக்குத் தேவை.  பெயர்கள் மறந்து போவது பற்றிய கதை.  அதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொருளின் பெயர் மறந்து விட்டது.  தொண்டையில் நிற்கிறது.  வரவில்லை.  ராம்ஜிக்கு போன் போட்டேன்.  அவருக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் பெரியவர்களைக் கேட்டுச் சொல்வார்.  கேட்கிறேன் என்றார்.  காயத்ரி வெளியே போயிருந்தாள்.  தொடர்பு கொள்ள முடியவில்லை.  சீனிக்கு போன் போட்டேன்.  எடுக்கவில்லை.  மணியைப் பார்த்தேன்.  பதினொன்று.  ம்ஹும்.  அவருக்கு நள்ளிரவு.  ஸ்ரீராமை அழைத்தேன்.  அவர் எடுக்கவில்லை.  அப்படியானால் நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  இந்த உலகத்திலேயே அவர் எனக்குத் தெரிந்து போன் வரும்போது எடுத்துப் பேசாத இரண்டாவது டாக்டர்.  முதல்வர் ஒரு ஹார்ட் சர்ஜன்.  அப்போது எடுப்பது பற்றி யோசிக்கக் கூட வாய்ப்பில்லை.  எனக்குத் தெரிந்த மற்ற எல்லா டாக்டர்களுமே அவர்கள் என்னை சோதித்துக் கொண்டிருக்கும்போது வரும் எல்லா போன் அழைப்புகளையும் தட்டாமல் எடுத்துப் பேசுவதையே இதுவரை பார்த்திருக்கிறேன்.  அந்த வகையில் ஸ்ரீராம் என் பாராட்டுக்குரியவர்.  ஆனால் அந்த நோயாளி போன பிறகு அழைத்தார்.  விஷயத்தைச் சொன்னேன்.  விசாரிப்பதாகச் சொன்னார்.  ராகவனை அழைத்தேன்.  (ஸ்ரீவில்லிபுத்தூர்)  அவர் கைபேசி என்ற சாதனம் பழக்கத்துக்கு வந்த பிறகு, அதிலும் எங்கள் இருவர் கைக்கும் வந்த பிறகு நான் அழைத்து ஒருநாள் கூட இதுவரை எடுத்ததில்லை.   ஆனால் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ அல்லது ஆறு ஏழு மணி நேரமோ கழித்து பேசி விடுவார்.  இது எனக்கு ரொம்ப நாள் மர்மமாக இருந்தது.  பிறகு ஒருநாள் கேட்டே விட்டேன்.  அது என்ன விஷயம் என்றால், அவர் வீட்டில் இருக்கும் போது அவருக்கு யாரும் போன் செய்வதில்லை.  வெளியே போனால் மட்டுமே அவர் மனைவி போன் செய்வாராக இருக்கும்.  மட்டுமல்லாமல் அவருக்கு எந்த சமூக வாழ்வும் கிடையாது.  நண்பர்களும் இல்லை.  நானும் அடிக்கடி போன் செய்ய மாட்டேன்.  எனவே போன் என்ற சாதனம் அவர் ஞாபகத்திலேயே இருப்பதில்லை.  அதனால் அவர் போனை எப்போதும் தன் அருகில் வைத்திருப்பதில்லை.  வீட்டில் எங்காவது ஒரு இடத்தில் கிடக்கும்.  அது தப்பே இல்லை.  ஆனால் ஒருமுறை நள்ளிரவில் எனக்கு நெஞ்சு வலி வந்தது பற்றியும், உடனடியாக ராம்ஜிக்கு போன் செய்து உடனடியாக அவர் பெஸண்ட் நகரிலிருந்து மைலாப்பூர் வந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தபோது மிகுந்த கவலையுடனும் அன்புடனும் ராகவன் என்னிடம் எனக்கு போன் பண்ணி இருக்கலாமே சார் என்று சொன்னபோதுதான் ரொம்பக் கடுப்பாகி விட்டேன்.  “எதுக்கு ராகவன், ஹார்ட் அட்டாக் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி ஆவதற்கா?  உங்களுக்கு போன் பண்ணினால் சாதாரண நாளிலேயே ஹார்ட் வலி வந்து விடுமே” என்று வெடுக்கென்று கேட்டு அவரைப் புண்படுத்தி விட்டேன்.  ஏன் அப்படிக் கேட்டேன் என்றால், ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நிலைமை தெரிய வேண்டும்.  உதாரணமாக, நான் பத்து மணிக்கெல்லாம் என் போனை அணைத்து விடுவேன்.  காலையில் ஏழு மணிக்குத்தான் திறப்பேன்.  இரவு நேரத்தில் குடித்து விட்டு பல நண்பர்கள் என்னைத் தொந்தரவு செய்ததால் இந்த ஏற்பாடு.  எனவே ராகவன் சொன்னது போன் நான் யாரிடமும் சொல்ல இயலாது.  அடுத்து ராமசேஷனுக்கு போன் பண்ணினேன்.  எப்போதும் உடனே எடுத்து விடுவார்.  நேற்று எடுக்கவில்லை. 

எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  ஏதாவது ஒரு வார்த்தை கையில் இருந்தால்தானே கூகிளில் தேட முடியும்.  அதுவும் இல்லை.  அப்போது ராமசேஷன் அழைத்தார்.  கோளாங்கி என்றார்.  ஆஹா, பிரச்சினை தீர்ந்தது.  கோளாங்கியை கூகிளில் போட்டேன்.  நான் தேடிய வார்த்தை, என் தொண்டையில் நின்ற வார்த்தை கிடைத்தது.  படிக்கம்.  ஆங்கிலத்தில் spittoon.  அடடா, ஸ்பிட்டூன் என்ற வார்த்தை எனக்கு மிக நெருக்கமானது.  ஆங்கிலப் பிரதி ஒன்றில் அது எனக்கு மிகச் சாதாரண வார்த்தை.  ஆனால் அந்த வார்த்தை என் மன அகராதியில் இல்லை.  இருந்திருந்தால் அதைப் போட்டு படிக்கத்தை எடுத்திருப்பேன்.  பிறகு கதைக்குள் புகுந்து மிக அவசரத்துடன் எழுதிக் கொண்டிருந்தபோது ராகவன் இரண்டு முறை போன் செய்தார்.  என்னால் எடுக்க இயலவில்லை.  கதை அவசரமாகப் போக வேண்டும். 

இத்தனை பெரிய சம்பவத்தில் கதை இல்லை.  இது வெறும் சம்பவம்.  ஆனால் இன்று எழுதிய ”ஜான் மகளுக்குக் கல்யாணம்” என்ற சிறிய சம்பவம்ஒரு கதை.  இருபத்தஞ்சாயிரம் ரூபாயோடு வேலையை விட்டு நின்று விட்டார் என்பதுதான் அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றும் தருணம். 

இன்னொரு குட்டிக் கதை.  ஒரு வாத்தியார் மதிய நேரத்தில் கொஞ்ச நேரம் தூங்குவார்.  எழுந்தவுடன் பையன்கள் கேட்டால் கனவில் சொர்க்கம் போனேன், தேவதைகளைப் பார்த்தேன் என்பார்.  ஒருநாள் பையன்களும் மதியம் தூங்கினார்கள்.  வாத்தியார் கோபத்துடன் கேட்டார்.  அதற்கு ஒரு  பையன் இப்படிச் சொன்னான்.  சார், நாங்களும் சொர்க்கம்தான் போனோம்.  அங்கேயிருந்த தேவதைகளிடம் இங்கே எங்கள் சார் வருவாரே என்று கேட்டோம்.  அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். 

இன்னொரு கதை.  இரண்டு காச நோயாளிகள் பற்றிய கதை.  அது உண்மையில் ஒரு செய்தி.  ஒரு பதினைந்து நாள் இடைவெளியில் திருவனந்தபுரத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையில் கேரளத்தின் புகழ் பெற்ற கவி ஒருத்தரும் இன்னொரு தமிழ்நாட்டுக்காரரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.  கவி அங்கேயே இறந்து போகிறார்.  தமிழ்நாட்டுக்காரர் அங்கே நாலு நாள் இருந்து விட்டு சொந்த ஊருக்குப் போய் அங்கேயும் நாலு நாளில் செத்து விடுகிறார்.  கதைசொல்லி இந்த இரண்டு பேரையும் மருத்துவமனையில் சந்தித்த ஒரு ஆளைச் சந்திக்கிறான்.  கவியைப் பற்றிக் கேட்கப் போன அவனுக்கு அந்தத் தமிழ்நாட்டுக்காரரைப் பற்றிக் கேட்டதும் பதற்றம்.  ஏனென்றால், அவர் திருநெல்வேலிக்காரர், அவர் மனைவி பெயர் கமலா என்கிறார் அந்தப் பார்வையாளர்.  பதற்றம் கூட, அவரோடு பேசியிருக்கிறீர்களா என்று கேட்கிறான்.  ம், ஒருநாள் பேசினேன். 

உங்களுக்கு எப்படி காசநோய் வந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், இந்த உலகத்திலுள்ள அத்தனைபேரும் அவர் முகத்தில் காறித்துப்பினார்கள். அதனால் காசநோய் வந்தது என்று. 

புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு சாதாரண செய்தி – இன்ன தேதியில் அவர் திருவனந்தபுரம் காசநோய் மருத்துவமனையில் இருந்தார் – ஒரு மறக்க முடியாத கதையாக மாறும் மேஜிக் மேலே உள்ள மூன்று வரியில் உள்ளது.  கதையை எழுதியவர் ஜெயமோகன். 

இத்தனையும் இங்கே எழுதியதன் காரணம், மே மாதம் நான்கு வாரமும், ஜூன் முதல் வாரமும் ஆக ஐந்து தினங்கள் – வார இறுதியில் – ஒரு வகுப்புக்கு இரண்டு மணி நேரம் என்று ஒரு சிறுகதைப் பயிற்சிப் பட்டறை நடத்தலாம் என்று திட்டம்.  மொத்தம் பத்து மணி நேரம்.  இரண்டு அமெரிக்கத் தமிழ் நண்பர்கள் இதை என்னிடம் கேட்டார்கள்.  குறைந்த பட்சம் பத்து பேர் இருந்தால் நடத்தலாம் என்றேன்.  பதினைந்து பேர் போதும்.  அதற்கு மேல் இருந்தால் ஒவ்வொருவராக நான் கவனம் செலுத்த இயலாது என்று நினைக்கிறேன்.  அதே சமயம் அதிகம் பேர் இருந்தால் கட்டணத்தைக் குறைக்கலாம்.  கட்டணம் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை.  பத்து பேர் வந்தால் பயிற்சிப் பட்டறை நடக்கும்.  இல்லையேல் ரத்து செய்து விடுவேன். 

எழுதுதல் என்பது ஒரு இசைக்கருவியைக் கற்றுக் கொள்வது போல.  ஆகாய விமானத்தை இயக்குவது போல.  அந்தத் தொழில்நுட்பம் அறியாமல் அதில் ஈடுபட முடியாது.  இந்த விஷயம் தெரியாததாலேயே பலர் தோல்வியுறுகிறார்கள்.  உங்கள் எதிர்வினையைப் பார்த்து இதை முன்னெடுத்துச் செல்லலாம். 

எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai