சொற்கடிகை – 1

நான் வசிக்கும் இந்த வீட்டில் என் இஷ்டப்படி மட்டுமே இருந்து விட முடியாது.  குடித்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டில் ஒரு ’பார்’ இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.  தமிழ்நாட்டில் மத்தியதர வகுப்பைச் சார்ந்த ஒரு இல்லத்தரசியின் வீட்டில் அது கற்பனையில் கூட சாத்தியம் இல்லாதது.  மேலும், நான் ஊர் உலகமெல்லாம் சுற்றுகின்ற ஆள்.  அவந்திகாவுக்கோ வீடுதான் உலகம்.  அதனால் அவளுக்கென்று இருக்கும் இந்தச் சிறிய வெளியில் நானும் ஆக்ரமித்துக் கொள்வது ஆகாது என்று நானே என்னைக் குறுக்கிக் கொண்டேன். 

என் நண்பர்களை நான் என் வீட்டில் சந்திப்பது கிடையாது.  வெளியில்தான்.  ஒரு நாள் என் நெருங்கிய நண்பர் ஈஸ்வரன் என் மேக் ஏர்புக்கில் சில வேலைகளைச் செய்து கொடுப்பதற்காக வந்தார்.  இந்த ஒரு காரியத்துக்காக மேக்புக்கைத் தூக்கிக் கொண்டு அவரை ப்ரூ ரூமில் சந்திப்பதெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல என்பதால் அவரை வீட்டுக்கே வரச் சொன்னேன்.  என் மகன் வயது இருக்கும்.  அவரும் அவந்திகாவின் அன்புக்குரியவர்.  அப்படி நேர்வது ரொம்பவும் அபூர்வம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   

பொதுவாக இப்படி வீட்டுக்கு வரும் நண்பர்களை என்னுடைய அறையில் சந்திப்பதே வழக்கம்.  ஆனால் என் மேஜையில் டெஸ்க் டாப்புக்கு மட்டும்தான் இடம் இருந்ததால் வெளியே ஹாலில் உள்ள சாப்பாட்டு மேஜையில் வைத்து அவரிடம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  ஒரு மணி நேரம் இருந்திருப்பார்.  பிறகு கிளம்பி விட்டார்.

மறுநாள் அவந்திகாவிடம் உன் சங்கீத வகுப்பு எப்படிப் போகிறது என்று விசாரித்தேன்.  நல்லா போகுது என்றாள்.  என்னென்ன கிழமைகளில் கிளாஸ் என்றேன்.  ஏதேதோ கிழமைகள் சொன்னாள்.  திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது.  ”திங்கள் கிளாஸ் என்றால் நேற்று நீ கிளாஸ் பண்ணலயே?” என்றேன்.  நேற்றுதான் ஈஸ்வரன் வந்துட்டாரேப்பா, நீங்கள் ரெண்டு பேரும் இங்கே இருந்தீங்களா, அதனால் கிளாஸ் அட்டெண்ட் பண்ணல என்றாள்.  சாதாரணமாகத்தான் சொன்னாள்.  ஆனாலும் எனக்கு அதிர்ச்சி ஆயிற்று.

வீட்டுக்கு யாருமே வருவதில்லை.  ஒரே ஒரு நாள் அழைத்தேன்.  அவளுடைய சங்கீத வகுப்பு காலி.  சொல்லியிருந்தால் அல்லது தெரிந்திருந்தால், என் அறைக்குள் வைத்துப் பேசியிருப்பேனே என்றேன்.  பரவால்லப்பா என்றாள்.

இப்படியான சூழலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் சின்மயா நகரில் வசித்த போது எங்கள் வீட்டின் ஒரு உறுப்பினராகவே இருந்தார் ஒரு நண்பர்.  அவந்திகாவுக்கு அவரை அந்த அளவு பிடித்துப் போயிற்று.  எந்த அளவுக்கு என்றால், வீட்டின் சமையலறைக்குள் நுழைந்து வெங்காயமெல்லாம் நறுக்கிக் கொடுப்பார்.  இப்படி எங்கள் குடும்ப வாழ்வில் அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, நடந்ததே இல்லை.  இனிமேலும் நடக்க வாய்ப்பு இல்லை.  நண்பர் அத்தனை நல்லவர்.  அதிர்ந்து பேச மாட்டார். எப்போதும் சிரித்த முகம்.  ஆனால் மிகவும் ஆழமானவர்.

அடிக்கடி சிறுகதைகள் எழுதிக் கொண்டு வந்து கொடுப்பார்.  காகிதத்தில் பேனாவினால் எழுதியது.  படித்தவுடனேயே பிடித்துப் போயிற்று.  தமிழில் அவர் எழுதிய களனும் கதையும் மிகவும் புதிதாக இருந்தன. 

கதைகளில் பாலியல் கூறுகள், வர்ணனைகள் அதிகமாகவே காணப்பட்டன. ஆனாலும் இலக்கியத்துக்கான இலக்கணத்தை மீறாமல் இருந்தன. கெட்ட வார்த்தை என்று சொல்லப்படும் வார்த்தைகள் கதையில் இல்லை.

அவர் கதைகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தன.  காலச்சுவடுக்கு அனுப்புங்கள் என்றேன்.  அப்போது உயிர்மை வந்ததா இல்லையா என்று ஞாபகம் இல்லை.  வந்து கொண்டிருந்தாலும் காலச்சுவடுக்குத்தான் அனுப்பச் சொல்லியிருப்பேன்.  ஏனென்றால், உயிர்மை avant garde பத்திரிகை.  ஹமீது என் நண்பர்.  அதில் இப்படிப்பட்ட கதைகள் வருவதை விட காலச்சுவடு போன்ற ’பழைய’ சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த பத்திரிகையில் வந்தால் நல்லது.  நான் சொன்னபடியே காலச்சுவடுவில் நண்பரின் கதைகள் வர ஆரம்பித்தன.  நாகர்கோவில் பக்கம் போனால் என்னை உங்களுக்குத் தெரிந்ததாக சொல்லிக் கொள்ளாதீர்கள் என்றேன்.  அதுதான் அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. 

சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தார்.  மிக வெற்றிகரமான இயக்குனர் ஆவதற்கான தகுதி உள்ளவராக அவரை நான் அனுமானித்திருந்தேன்.   புகைப் பழக்கம், குடிப் பழக்கம் இல்லாதவர் என்பது கூடுதல் அனுகூலம்.  ஒருமுறை அதற்கான காரணமும் கேட்டேன்.  வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன் சார், குடி அதற்குத் தடை என்றார்.  அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது.  என்னை சார் என்று அழைத்த ஒரே இளைஞர் அவர்தான். 

காலாவில் ரஞ்சித்தோடு பணியாற்றினார் என்று நினைக்கிறேன்.  அவர் தொடர்பு விட்டுப் போய்  பதினைந்து ஆண்டுகளுக்கு மேலேயே இருக்கும்.  காரணமே தெரியாமல், எந்த மனஸ்தாபமும் இல்லாமல் சில நல்ல நண்பர்கள் என் வாழ்க்கையை விட்டு விலகிப் போய் விடுகிறார்கள்.  காரணம் தெரிந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.   

நான் பழகிய அற்புதமான மனிதர்களில் ஒருவர். ஜே.பி. சாணக்யா என்று பெயர்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai