கமலை வம்புக்கிழுக்கும் ஒளரங்கசீப்: Episode 85 : நிர்மல் ம்ருன்ஸோ

இன்று வெளியான 85ஆவது அத்தியாயம் பல சுவாரஸ்யமான காட்சிகளும் , மனித வாழ்வு அபத்தத்தை நுணுக்கமாகச் சொல்கிறது. இந்த நாவலின் மூன்றாம் பகுதியில் கொக்கரக்கோ என்ற பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார். இடைவிடாத ஆவிகளின் உரையாடலுக்கு மத்தியில் இந்த கொக்கரக்கோ இருப்பது ஒரு வகையில் விறுவிறுப்பென்றாலும் நாவலின் போக்கை கலைத்து போடுகிறவனை இப்படி நாவலின் இறுதிப் பகுதியில் கொண்டு வந்திருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. புண்ணியரான தியாகராஜரைக் குறித்து ஒளரங்கசீப்பை சொல்ல வைப்பதெல்லாம் ரகளையான கற்பனை. இதெல்லாம் சாருவின் புதினங்களில் மட்டுமே சாத்தியம். தன்மானம், சுய மரியாதைக் கொள்கை என அடம் பிடிக்காமல் கப்பம் கட்டத் துணியும் ஒரு ராணி. அதனால் போரில் பலியாகாமல் தப்பிய பல மனித உயிர்கள். அதற்கு நேர் மாறாக ஒரு வெட்டிக் காரணத்திற்காக ஒரு மன்னன் தொடுத்த போரால் உருவான பஞ்சத்தில் இறந்தது ஒரு கோடி மக்கள். அதே அரசன் தன் செல்ல மகள் உயிர் பிழைக்க தன் கஜானாவில் இருக்கும் செல்வம் அனைத்தையும் செலவு செய்யத் தயாராக இருந்த நிகழ்வு என இப்படி சில மனித அபத்தங்களை நேர்கோட்டில் வரிசைப்படுத்திக் காட்டி “ மனித இயல்புகளை” காட்சிப்படுத்துகிறது இந்த அத்தியாயம். தனது மற்றொருவனாக கருதும் சிவாஜியைக் குறித்து இப்பொழுதுதான் பேச ஆரம்பித்துள்ளார் ஆலம்கீர். கொக்கரக்கோ குறுக்கீடுகளுக்குள் அதை எப்படி ஆலம்கீர் சொல்லப் பார்க்கிறார் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கமல் – பாரதி படம் குறித்த ஒரு நக்கல் இந்த அத்தியாயத்தில் இருக்கிறது, வாசித்தால் ரசிக்க முடியும். BYNGE APP டவுன்லோட் பண்ணுங்க, BYNGE பண்ணுங்க