இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது…

அவளுக்குப் பதினாறு வயது

பேரழகு என்று நீங்கள்

எதைச் சொல்வீர்களோ

அதையெல்லாம் மீறிய

அழகு

ஒருநாள் 

கைகாலை அசைக்க முடியவில்லை

பேச முடியவில்லை

சப்தநாடியும் செயலிழந்து போனது

LGMD என்றார் மருத்துவர்

இனிமேல் அந்தப் பெண்ணுக்கு

ஆட்டமில்லை 

ஓட்டமில்லை

பௌதிக இயக்கமில்லை 

துன்ப சாகரத்தில் வீழ்ந்தது 

குடும்பம்

வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ

எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி

இன்று எனக்கொரு 

ஜனன செய்தி வந்த போது

எதுவொன்றும் சொல்லத் தோணாமல்

விக்கித்து நின்றேன்

தாள முடியாத துயரம் 

தொண்டையை 

அடைத்தது

பெண்ணா ஆணா என்று கூடக் கேட்கவில்லை

துன்ப சாகரத்தில் வீழ்ந்த பிறகு 

ஆணென்ன பெண்ணென்னடா

நீ

நிலவோடு பேசியிருக்கிறாயா

நட்சத்திரங்களோடு விளையாடியிருக்கிறாயா

மின்மினிப் பூச்சிகளோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறாயா

பட்டாம்பூச்சி சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கிறாயா

அதன் மீசையிலே ஒட்டியிருக்கும் மகரந்தம் கண்டதுண்டா

ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும கிளியின் இதயத்திலே

பதுங்கியிருக்கும் ரகசியம் அறிவாயா

மழைநீரில் குதித்ததுண்டா

மண்புழுவிடம் பேசியிருக்கிறாயா

விருட்சத்தை அணைத்ததுண்டா

விருட்சத்தை முத்தித்திருக்கிறாயா

பல்லியின் சொல்மொழி அறிந்ததுண்டா

காகமாவத கிளியாவது உன் தோளில் அமர்ந்ததுண்டா

நாயும் பூனையும் நிழல் போல் தொடர்ந்ததுண்டா

சரி, எதுவுமே வேண்டாம்

காற்றிலாவது பறந்திருக்கிறாயா…

***

கவிதையை என் குரலில் கேட்க: