வளன் அரசுவின் யூதாஸ் : என் வாசிப்பு அனுபவங்கள் (2)

நேற்று என் நித்திரை மயக்கத்தில் ஒரு பிழை நேர்ந்து விட்டது.  யூதாஸ் நாவலில் நான் மேற்கோள் காண்பிக்க நினைத்த பகுதியை விட்டு விட்டு வேறு ஒரு பகுதியைக் கொடுத்து விட்டேன். 

பாலத்துக்கு அடியில் தங்கியிருக்கும் ஜூட் என்பவனை கியரா மீண்டும் தற்செயலாக சந்திக்க நேரும் சந்தர்ப்பம் அது. 

கென்மோர் (பாஸ்டன்) ரயில் நிலையத்திலிருந்து போலீஸால் விரட்டப்பட்டு வெளியே வருகிறாள் கியாரா. கடுமையான குளிர்.  குளிருக்கு இதமாக கொஞ்சம் விஸ்கியோ பிராந்தியோ அருந்தினால் தேவலாம்.  துணிப்பைக்குள் கையை விட்டுத் துழாவுகிறாள்.  ஒரு மதுப்புட்டி கிடைக்கிறது.  எடுத்துப் பார்த்தால் அதில் ஒருசில துளிகளே மிச்சம் இருந்தன.  பிராந்தி.  அதை நாக்கில் விட்டுக் கொள்கிறாள்.  பசி வேறு கொல்லுகிறது.  பையில் கிடைத்த ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்க முயல்கிறாள்.  தீப்பொறிகள் வருகின்றனவே தவிர பற்ற வைக்க முடியவில்லை.  அப்போது அவள் அருகே வரும் ஒருத்தன் அவள் சிகரெட்டைப் பற்ற வைக்கிறான்.  அவன் பாலத்துக்கு அடியில் வசிப்பவன்.  

அவன் கையில் சாண்ட்விச்சும் விஸ்கி போத்தலும் இருப்பதை கவனிக்கிறாள். 

“அறிமுகமில்லாத ஒருவனிடம் எப்படி ஒரு பாட்டிலைக் கேட்பது? கியாராவுக்குத் தயக்கமாக இருந்தது. வேறொருவனாக இருந்தால் அவன் கண்ணுக்குக் கீழே பலமாக ஒரு குத்துவிட்டு எல்லாவற்றையும் கவர்ந்து கொண்டு ஓடியிருப்பாள். ஆனால் இவன் பார்க்க மிகவும் நல்லவனாக இருந்தான். அவன் பார்வையில் ஒரு மருட்சியிருந்தாலும் அவன் நல்லவன் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இன்னொரு காரணம், இவனும் இவளைப் போல் ஒரு வீடற்றவன். எப்படியாவது குடிக்க வேண்டும் என்றிருந்த கியாரா செயற்கைப் புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.”

தன் நண்பர்களைக் கொண்டு அவளுக்குத் தங்குமிடமும் ஒரு வேலையும் ஏற்பாடு செய்து தரவா என்று கேட்கிறான் அந்த இளைஞன். 

“மிஸ்டர் கீசு! உங்கள் அக்கறைக்கு நன்றி. இது என்னுடைய விருப்பம். உங்களிடம் சிரமமாக இருப்பதாகச் சொன்னேனா? போர்பன் கொடுத்ததற்காக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்!”

மூன்றாவது சுற்றை ஒரே மடக்கில் குடித்து முடித்தவள் எழுந்து நின்று சத்தமாக கத்தத் துவங்கினாள்.

“Eat Drink Fuck, Eat Drink Fuck, Eat Drink Fuck…”

பின் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு இன்னும் சத்தமாகக் கத்திக்கொண்டு ஆடத் துவங்கினாள்

“Smoke Smoke Fuck, Smoke Smoke Fuck, Smoke Smoke Fuck… Eat Drink Fuck, Eat Drink Fuck…”

அதே போதையில் ஜூடின் அருகிலமர்ந்து பேச ஆரம்பித்தாள். அழுக்குத் துணி வியர்வை நெடியுடன் போர்பனின் மணமும் சேர்ந்து ஜூடைக் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்கும்.  ஆனால் அவன் நிலையும் அப்படித்தான் இருந்தது என்பதால் முகம் சுளிக்காமல் பேசினான். கியாராவுக்குக் கண்கள் தானாக மேல் நோக்கி சொருகியது. அதனோடு அவள் பேசுகையில் வாயும் ஒரு பக்கமாக இழுத்து வார்த்தைகள் தடுமாறி வந்தன. ஆனால் ஜூட் சரியாகப் புரிந்துகொண்டு பதிலளித்தான்.

“மிஸ்டர் கீ…சு…, எனக்கு உதவுவதாகச் சொன்னீர்களே? நீங்கள் என்ன பெரிய தொழிலதிபரா? நீங்களும் பாலத்துக்கடியில் சாக்கடையோரத்தில் அல்லவா இருக்கிறீர்கள்?”

“ஆம், இரண்டு வருடமாக அங்குதான் தங்கியிருக்கிறேன். இந்த வருடம் எப்படியும் வேலை கிடைத்துவிடும். வேலை கிடைத்துவிட்டால் வீடு கிடைத்துவிடும்.”

“அதைத்தான் நான் கேட்கிறேன். உங்களால் உதவ முடியாத நிலையில் எப்படி எனக்கு உதவுவீர்கள்?”

“என் நண்பர்கள் வழியாக உதவுவேன். அவர்கள்தான் எனக்கு இந்த உணவையும் மது பாட்டிலையும் கொடுத்தார்கள். ஹார்ட்வர்ட் சதுக்கத்துக்கு அருகில் நாங்கள் மாதம் இருமுறை கூடுவோம். ஒருவருக்கொருவர் எங்கள் மத நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்வோம். நாங்கள் எல்லோரும் வெவ்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்தவர்கள். அந்நிய நிலத்தில் எங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொள்வதில் உள்ள சவால்களைப் பகிர்ந்துகொண்டு திரும்புவோம். என் நண்பர்களில் சிலர் யூதர்கள்; சிலர் இஸ்லாமியர்கள்; இரண்டு இந்து நண்பர்கள்; ஒரேயொரு கத்தோலிக்க கிறிஸ்துவன். அவன்தான் எனக்கு இந்த உணவுகளையும் மதுவையும் கொடுத்தது.”

“நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்?”

கியாராவின் கேள்வி மிகத் தெளிவாக இருந்தது. ஜூடின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரல் மட்டுமல்லாது முழு உடலும் புகையால் நிரம்பும் அளவுக்குப் புகையை உள்ளிழுத்தாள்.

“நான் கிறிஸ்துவன்.”

அவனது பதிலும் அவள் வாயிலிருந்து புகையும் ஒன்றாக வெளி வந்தன. அவனது பதிலின் முடிவில் தன் வாய்க்குள் இரண்டு விரலை நுழைத்து வாந்தியெடுக்க ஆரம்பித்தாள் கியாரா. மதுவால் ததும்பிக் கொண்டிருந்த அவளுக்கு வாந்தியெடுப்பதில் சிரமமாக இல்லை. ஜீரணமாகாத ஏதேதோ வாந்தியாக வந்து விழுந்தது. பெரும் துர்நாற்றம் அச்சூழலை கலக்கமுறச் செய்தது. ஜூடுக்கு எதுவும் புரியவில்லை. வயிற்றிலிருந்த யாவும் காலியான பின்னும் அவள் திணறிக் கொண்டிருந்தாள். வயிற்றைப் பிடித்துக் கொண்டு துடிதுடித்து அழுதாள்.

“கியாரா என்ன ஆனது? நான் உதவட்டுமா?” கேட்டுக் கொண்டு நெருங்கிய ஜூடைப் பெண் சிங்கத்தைப் போல சடாரெனத் தாக்கினாள் கியாரா. அவன் முகத்தில் மூன்று நகக் கீறல்கள் எரிச்சலை தந்து கொண்டிருந்தது. மீண்டும் கியாராவை நெருங்க முனைந்த போது சத்தமாகக் கத்த ஆரம்பித்தாள்.

“பன்றிக்குப் பிறந்தவனே, கிட்ட வராதே. கிறிஸ்தவ நாயே. உன் உடலில் புழு பிடிக்கட்டும். ச்சீ, நீ கொடுத்த மதுவை வெளியில் கக்கியிருக்கிறேன். எடுத்துச் சாப்பிடு. எதுவும் என்னுள்ளே தங்கியிருந்தால் நாளை என் மலத்தில் வரும் அதையும் உனக்குத் தருகிறேன். சாப்பிடு.”

போதையும் தலை சுற்றலும் ஒன்று சேர்ந்து அவளைப் பைத்தியமாக்கியது. நெருங்கி வர முனைந்த ப்ரூனோவைத் தொடர்ந்து தாக்கினாள். இயலாத நிலையில் மயக்கமுற்றுக் கீழே சாய்ந்த போது அவளை மெல்லத் தூக்கிக் கொண்டு பாலத்தை நோக்கி நடந்தான். ஏசாயா இறைவாக்கினரின் பாடலை அவ்விரவின் நிசப்தத்தைக் கலைக்காமல் மெல்லப் பாடிக் கொண்டே கியாராவைத் தன் படுக்கையில் படுக்க வைத்தான்.

I, the Lord of sea and sky

I have heard my people cry

All who dwell in dark and sin

My hand will save

I who made the stars of night

I will make their darkness bright

Who will bear my light to them?

Whom shall I send?

Here I am, Lord

Is it I, Lord?

I have heard You calling in the night

I will go, Lord

If You lead me

I will hold Your people in my heart

I, the Lord of wind and flame

I will tend the poor and lame

I will set a feast for them

My hand will save

Finest bread I will provide

‘Til their hearts be satisfied

I will give my life to them

Whom shall I send?

Here I am, Lord

Is it I, Lord?

I have heard You calling in the night

I will go, Lord

If You lead me

I will hold Your people in my heart

I will hold Your people in my heart

நாவலின் மேற்கண்ட பகுதியைத்தான் நான் நேற்று குறிப்பிட்டேன்.  இப்படி ஒரு தருணத்தை நான் கஸான்ஸாகிஸின் நாவல்களிலும் லூயி புனுவலின் திரைப்படங்களிலும்தான் அனுபவித்திருக்கிறேன்.  வளன் தன் முதல் நாவலிலேயே கஸான்ஸாகிஸ், லூயி புனுவல் போன்ற மேதைகள் உருவாக்கிய தருணங்களைக் கொண்டு வந்திருக்கிறான்.  இங்கே ஜெனே, கஸான்ஸாகிஸ், புனுவல் என்றெல்லாம் பெயர் சொல்வார்கள்.  ஆனால் தனக்குப் பக்கத்தில் அதெல்லாம் நிகழும்போது அவர்களுக்கு அது எதுவுமே புரியாது.  ஏனென்றால், பிராண்டுகளின் பெயரைப் பார்த்து மயங்கும் பத்தாம்பசலிகள் அவர்கள்.  பாவம்.   

இத்தனை எழுதியும் மேற்கண்ட தருணத்தை என்னால் சரியாகப் பாராட்ட முடியவில்லை என்றே தோன்றுகிறது.  புனுவலையும் கஸான்ஸாகிஸையும் வளன் என்ற இளைஞன் தாண்டி விட்ட தருணம் என்று சொன்னால் தகும். 

“பன்றிக்குப் பிறந்தவனே, கிட்ட வராதே. கிறிஸ்தவ நாயே. உன் உடலில் புழு பிடிக்கட்டும். ச்சீ, நீ கொடுத்த மதுவை வெளியில் கக்கியிருக்கிறேன். எடுத்துச் சாப்பிடு. எதுவும் என்னுள்ளே தங்கியிருந்தால் நாளை என் மலத்தில் வரும் அதையும் உனக்குத் தருகிறேன். சாப்பிடு.”

இந்த வாசகத்தில் தெரியும் உளவியல் சிடுக்குகளின் ஆழத்தை அதே தீவிரத்துடன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆல்பெர் கம்யு எழுதிய அல்ஜீரிய நாட்குறிப்புகளை வாசிக்க வேண்டும்.  கம்யு தன் வாழ்நாள் முழுக்க அல்ஜீரியர்களுக்காக எழுதினார்.  ஆனால் அவர்கள் அவரை துரோகி என்றார்கள்.  ஃப்ரான்ஸ் ஃபானன் எழுதிய Wretched of the Earth நூலைப் படித்தவர்களால் வளன் உருவாக்கிய கியாராவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.  மற்ற அசடுகளுக்கும் கட்டுப்பெட்டி மூடர்களுக்கும் இந்த நாவல் எந்த அனுபவத்தையும் தராததில் எனக்கு ஆச்சரியம் இல்லை. 

இந்த நாவலின் உச்சங்களை உணர உணர எனக்கு இந்த நாவல் புறக்கணிக்கப்பட்ட விதத்தை நினைத்து சீற்றமே உண்டாகிறது.  போகட்டும்.  தஞ்சை ப்ரகாஷையே புறக்கணித்த இலக்கிய உலகம் இது. 

நாவலில் நான் மேற்கோள் காட்டிய இடங்களில் வரும் பகுதி பாஸ்டன் நகரில் உள்ள காமன்வெல்த் அவென்யூ.  அந்த அவென்யூவின் காணொலி கீழே:

நாவலில் வரும் துதிப்பாடலின் இணைப்பு:

துதிப்பாடலின் பியானோ வடிவம்: