ஒரு சிறிய திருத்தம்…

சிறப்புப் பதிப்புக்கான திட்டத்தில் ஒரு சிறிய திருத்தம். ஐந்து லட்சம் பணம் கொடுத்து இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்ற திட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால், ஒருவர்தானே வழங்க முடியும்?

மேலும், அந்த ஐந்து லட்சத்தைக் கொடுத்த நண்பருக்கு இந்தத் திட்டம் பற்றிய விவரமெல்லாம் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குக் கொடுக்கும் பிரதியில் இன்னார் வழங்கும் என்று அச்சிட்டிருக்கும் என்று நினைத்திருக்கிறார். இப்போதும் இனி வரும் காலத்திலும் வெளிவரும் எல்லா பிரதிகளிலும் இன்னார் வழங்கும் நான்தான் ஔரங்ஸேப்… என்றுதான் இருக்கும். அதாவது, டெடிகேஷன் பகுதியில் இன்னாருக்கு… என்று போட்டால் அது அந்தப் புத்தகத்தின் காலம் பூராவும் அப்படியே வரும்தானே? அதே மாதிரிதான் இதுவும்.

எனவே, அந்த ஐந்து லட்சம் திட்டம் முடிந்தது. மீதி மூணு லட்சம், ஒரு லட்சம், ஐம்பதாயிரம், பத்தாயிரம் ரூபாய் திட்டங்கள் அப்படியே உள்ளன. பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேற்று ஐந்து லட்சம் கொடுத்த நண்பர் சொன்னார், சாரு, நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது சந்தர்ப்பம் வாய்த்தது.

காரணம்? வாழ்வின் ஒரு கட்டத்தில் தன் வசம் இருந்த எல்லாமே பறிபோய் வெற்று ஆளாக ஆனாதையாக நின்ற நேரத்தில் அவருக்கு உயிர் கொடுத்து, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் கொடுத்தது ஸீரோ டிகிரி நாவல். இதை அவர் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.