வாழ்த்துக்கு நன்றி…

விஷ்ணுபுரம் விருதுக்காக நேற்று எனக்கு வாழ்த்து சொன்னவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தேன். இன்று அது சாத்தியமில்லை போல் தெரிகிறது. ஏனென்றால், என் தொலைபேசி எண் ஒரு முந்நூறு பேருக்குத் தெரிந்திருக்கும் என்றால் அதில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் வாழ்த்து வந்து விட்டது. அந்த ஒருவர் எழுத்தாளர். அதற்கு அவருக்குக் காரணங்கள் இருக்கலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை. சினிமா உலகிலிருந்து இயக்குனர் வஸந்த், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன் மூவரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். வாழ்த்து அனுப்பாதவர்களில் என் உள்வட்டத்தினரும் அடக்கம். அராத்து, காயத்ரி, வினித், ஸ்ரீராம், சுஜா (அரூ), ராஜா வெங்கடேஷ் எல்லாம் உள்வட்டம். உள்வட்டத்தினர் வாழ்த்து சொன்னால் உள்வட்டத்திலிருந்து தூக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் விக்ரமில் வரும் விக்ரம் மாதிரி.

வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.