வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த இணைய இதழ் சமூக சீர்திருத்த நோக்கத்துக்காக நடத்தப்படுவது.  அதன் ஆசிரியர் தினமும் இருபது மணி நேரம் பணியாற்றியதை நான் அறிவேன்.  எத்தனையோ எச்சரித்தேன்.  கேட்கவில்லை.  உடல் சுகவீனம் ஆனது.  அந்தப் பத்திரிகையால் அவருக்கு சல்லிக்காசு கிடைக்காது.  எனவே அவரிடம் நான் என் எழுத்துக்குக் கூலி கேட்க முடியாது.  ஏனென்றால், நான் என்னுடைய ஒரு வார்த்தைக்குப் பத்து ரூபாய் விலை வைத்திருக்கிறேன்.  அவரால் அதைக் கற்பனை கூட செய்ய இயலாது.  ஆக, அவரும் இலவசமாகப் பத்திரிகை நடத்துகிறார்.  நானும் இலவசமாகவே எழுதுகிறேன்.  என் வாசகர்களும் இலவசமாகவே வாசிக்கிறார்கள் – ஆயிரத்தில் ஒருவர் இருவர் சந்தாவோ நன்கொடையோ அனுப்புகிறார்.  அப்படி ஒரு நண்பர் மாதம் 25000 ரூ அனுப்புகிறார்.  ஒருவர் 2500 அனுப்புகிறார்.  ஒருவர் 1500.  ஒருவர் 1000.  இந்த நான்கு பேரும் என் நெருங்கிய நண்பர்கள்.  இதுதான் எனக்கு வரும் அதிக பட்ச தொகை.  ஆக மொத்தம் 30000.  இன்னும் 20000 ரூ நூறு இருநூறு ஐநூறு என்று வருகிறது.  மொத்தம் 50000.  இந்தக் கணக்கு வழக்கு எனக்கு முந்தாநேற்று வரை தெரியாது.  

என் சுற்றுப் பயணங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போனதால் முந்தாநாள் உட்கார்ந்து பொறுமையாகக் கணக்குப் பார்த்தேன்.  விஷயம் தெரிந்தது.  என் மாதாந்திர செலவு ஒரு லட்சம்.  பயணம், பாண்டி கெஸ்ட் ஹவுஸ் வாடகை, இன்ன பிற.  ஆக 50000 ரூ. தட்டுப்பாடு.  மாதாமாதம்.  இதைப் படிக்கும் வாசகர்களில் ஒரு நூறு பேர் மாதம் ஆயிரம் ரூபாய் என் எழுத்துக்கான சன்மானமாக அனுப்ப முடியாதா?  இந்த எழுபது வயதிலும் நான் இலவசமாகவே எழுத வேண்டுமா?  மேலே நான் குறிப்பிட்ட நூறு பக்க நேர்காணலின் விலை ஆயிரம் ரூபாய்தானா?  ஒவ்வொரு வாரமும் 2000 வார்த்தைகள்.  பத்து வாரம்.  ஒரு வார்த்தைக்குப் பத்து ரூபாய் என்றால் இரண்டு லட்சம் ரூபாய் எனக்கு அந்தப் பேட்டி மூலம் வந்திருக்க வேண்டும்.  அதைப் புத்தகமாக விற்றால் கிடைக்கக் கூடிய ராயல்டி 1000 ரூ.  எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. 

இப்படி பற்றாக்குறை பட்ஜெட் காரணமாக எந்நேரமும் பணம் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.  சென்ற மாதம் வினித் வாடகைப் பணம் கேட்டு மெஸேஜ் அனுப்பியபோது பத்து தினங்கள் சென்றே அனுப்பினேன்.  முன்பெல்லாம் அடுத்த நிமிடமே அனுப்புவேன்.  தயவுசெய்து நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள்.  நான் அளிக்கும் ஞானத்துக்கு தானம் கேட்கிறேன்.  புத்தர் தன்னுடைய 1250 சீடர்களோடு ஸ்ராவஸ்த்தி என்ற ஊரில் யாசகம் கேட்டார்.  ஸ்ராவஸ்த்தி என்ற நகரில் 1250 பிக்குகள் தினமும் யாசகம் கேட்டு நடப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.  ஞானிகளின் பணி விறகு வெட்டுவது அல்ல.  அதையேதான் நானும் சொல்கிறேன்.

குருதட்சணையை வழங்குங்கள்.  

***

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai