பாரம்பரியம்

இனிமேல் ஒருபோதும் சின்னச் சின்ன உடல்நலப் பிரச்சினைகளுக்கு அலோபதி பக்கம் போகக் கூடாது என்று நேற்று சபதமே எடுத்து விட்டேன்.  அதிலும் மூன்று தினங்கள் தொடர்ந்து ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொண்டதால் வாய், நாக்கு, தொண்டை, உணவுக் குழாய் எல்லாமே வெந்து புண்ணாகி விட்டது. 

இங்கே அவந்திகா பற்றிச் சொல்ல வேண்டும்.  மருத்துவ விஷயத்தில் அவள் காந்தி மாதிரி.  எதற்குமே எந்த மருத்துவத்தின் பக்கமும் போக மாட்டாள்.  அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் எதுவுமே வேண்டாம்.  எல்லாம் கை வைத்தியம்தான்.  அவளுடைய அம்மாவும் அப்படியே 85 வயது வரை வாழ்ந்தார்கள்.  மருத்துவரிடம் சென்றதே இல்லை.  ஒருமுறை அவந்திகாவுக்குக் கடுமையான ஜுரம் வந்தது.  அவளுடைய கை மருத்துவத்துக்கு ஜுரம் படியவில்லை.  உடம்பு அனலாய்க் கொதித்தது.  பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.  என் நண்பர் ஒருவர் அலோபதி மருத்துவர்.  அவருக்கு அவந்திகா பற்றித் தெரியும்.  குழந்தைகளுக்குக் கொடுக்கும் டோஸ் கொடுக்கிறேன் என்று சொல்லியே கொடுத்தார். 

ஒரு மாத காலம் அவந்திகாவுக்கு வாய், நாக்கு, தொண்டை, குடல் எல்லாம் புண்ணாகி வெறும் திரவ உணவே சாப்பிட்டாள். 

அனஸ்தீஸியா கொடுக்கும் மருத்துவர்கள் இதயத்தில் பைபாஸ் சர்ஜரி பண்ணுவதற்கு முன்பு திரும்பத் திரும்ப ஒரு டஜன் தடவை கேட்பார்கள்.  ”கடைசியாக எப்போது ஜலதோஷம் வந்தது? எப்போதாவது காச நோய் வந்திருக்கிறதா?” போன மாதம்தான் ஜலதோஷம் வந்தது என்று சொன்னால் அறுவை சிகிச்சையை இன்னும் கொஞ்ச நாள் ஒத்திப் போட்டு விடுவார்கள்.  இவர்கள் இப்படிக் கேட்பதற்கு முன்பே அறுவை சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மருத்துவர் என்னிடம் முன்னெச்சரிக்கையாக மேற்கண்ட கேள்விகளைக் கேட்டார்.  ”ஆமாம், பதினைந்து வயதில் எனக்குக் காச நோய் வந்திருக்கிறது, ஆனால் அதற்குப் பிறகு இன்று வரை ஜலதோஷம் கூட வந்ததில்லை, சொல்லப் போனால் நான் இதுவரை உடம்புக்கு வந்து மாத்திரையே போட்டதில்லை” என்றேன்.  உடனே அறுவை சிகிச்சை நிபுணர் “வேண்டாம், உங்களுக்குக் காச நோய் வந்ததைச் சொல்லி விடாதீர்கள், இப்போது உங்களுக்கு ஐம்பது வயது, ஆனாலும் அனஸ்தீஸியாகாரர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், அறுவை சிகிச்சை இன்னும் தள்ளிப் போகும்” என்றார்.

இது எல்லாம் எதற்கு என்றால், அனஸ்தீஸியா கொடுத்தால் நெஞ்சு பூராவும் கிலோ கணக்கில் கபம் கட்டி விடும்.

ஜுரம் என்று சொல்லி ஆண்டி பயாடிக் மருந்தைச் சாப்பிட்டு எனக்கு அந்த மாதிரி நெஞ்சு பூராவும் கபம் கட்டி விட்டது.  உடம்பு பூராவும் போலீஸ் லத்தியால் அடி வாங்கியது போல் அணுஅணுவாக வலித்தது. 

இன்னொரு பிரச்சினை.  காலையில் நான் ஆறு இட்லி சாப்பிடுவேன்.  வீட்டு இட்லி.  இப்போது இரண்டுதான் சாப்பிட முடிகிறது. 

அவந்திகாவே சொன்னாள், உன்னை இந்த அளவுக்கு inactiveஆக நான் பார்த்த்தே இல்லையே என்று.  எல்லாம் ஆண்டி பயாடிக் கடவுள்கள் செய்த வேலை. 

இதை எதற்குச் சொன்னேன் என்றால், நேற்று சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் விரிவாகப் பேசினேன்.  ஜுரம் அதிகமாகி கைகால்கள் நடுங்கும் நிலைக்குப் போனால் கூட அதைச் சட்டென்று குணப்படுத்தும் மருந்துகள் (அலோபதியின் டோலோ போல) சித்த மருத்துவத்திலும் உண்டு, நான் அப்படி ஆயிரக்கணக்கான பேரை குணப்படுத்தியிருக்கிறேன் என்றார்.  உண்மைதான்.  கொரோனா காலத்தில் அராத்துவின் தங்கையும் ஆயுர்வேத மருத்துவருமான சுப்ரஜா கொடுத்த ஆயுர்வேத மருந்துகளின் மூலம்தான் மூன்று ஆண்டுகளும் சின்ன ஜுரம் கூட வராமல் எங்களைக் காப்பாற்றிக் கொண்டோம்.  சுப்ரஜா சொல்லியிருந்த ஆயுர்வேத மருந்துகளைத்தான் கேரள அரசும் பரிந்துரை செய்திருந்தது.

நேற்று வேலூரிலிருந்து சில மருந்துகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார் மருத்துவர் பாஸ்கரன்.  நேற்று இரவு அந்த மருந்துகளை உட்கொண்டேன்.  கிட்டத்தட்ட 75 சதம் குணமாகி விட்டேன்.  ஒரே வேளை. 

பாஸ்கரன் புகழையே பாடுகிறேன் என்று நினைக்காதீர்கள்.  பாஸ்கரனை எனக்குத் தெரியாத காலத்தில் நான் எழுதிய எக்ஸைல் நாவலில் கிட்டத்தட்ட ஐம்பது பக்கம் தமிழ்ப் பாரம்பரியம் பற்றியும் அகத்தியர், தொல்காப்பியர், தேரையர் போன்ற சித்தர்கள் பற்றியும் எழுதியிருக்கிறேன்.  தேரையருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? எக்ஸைலில் விளக்கம் உண்டு. 

பாஸ்கரன் என்று அல்ல, உங்கள் ஊரிலும் சித்த மருத்துவர்கள் இருப்பார்கள்.  அவர்களை அணுகுங்கள்.  பாஸ்கரனின் விசேஷம், அவர் பரம்பரை பரம்பரையாக சித்தம் பயின்ற மரபில் வந்தவர்.  நாடியைப் பிடித்தே சகலத்தையும் சொல்லி விடுகிறார்.  இத்தனை சிறிய வயதில் இது சாத்தியமாகி இருப்பது பாஸ்கரனுக்கு அவர் முன்னோர்கள் அளித்த வரம். 

திரும்பவும் சொல்கிறேன்.  நான் பாஸ்கரன் பற்றி எழுதவில்லை.  நமது பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதே சமயம் இன்னொரு விஷயம்.  என் நண்பர் ஒருவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.  அவரை நான் பாஸ்கரனிடம் அனுப்ப மாட்டேன்.  அலோபதிதான் அவர் உயிரைக் காப்பாற்றியது.  ஆனால் இப்போது அவர் திரும்பவும் பழைய நிலைக்கு வருவதற்கு, பழைய தெம்பைப் பெறுவதற்கு பாஸ்கரனின் உதவி தேவை.  சித்த மருத்துவம் தேவை.  இன்னும் சொல்லப் போனால், மூளையில் ரத்தக் கசிவு போன்ற பயங்கரமெல்லாம் நடவாமல் இருக்க யோகமும் சித்தமும் மட்டுமே நமக்கு உதவக் கூடியவை. 

எல்லோரும் இன்புற்றிருக்கவே இதை எழுதினேன்.