அமேஸான் ~ சாரு ~ ஜெமோ ~ மனுஷ் ~ ஹார்ட் லேண்டிங் ~ சாஃப்ட் லேண்டிங் (மீள்: 2019): கார்ல் மார்க்ஸ்

வாழை பிரச்சினையில் சமூவம் பற்றி எரிந்து கொண்டிருப்பதால் கார்ல் மார்க்ஸ் ஃபேஸ்புக்கில் மீள் பதிவு செய்ததை நான் இங்கே மீள்பதிவு செய்கிறேன். இனி கார்ல்:

இந்த பல்பு நாவல் விவகாரத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதான கவியான மனுஷ்ய புத்திரன், உங்கள் சங்கத்தின் பக்கம் நிற்காமல், கட்சியினர் பக்கம் நின்றுவிட்டாரே, அதில் உங்களுக்கு வருத்தமில்லையா என்று ஒருவர் உள்பெட்டியில் கேட்டார். நான் அதற்கு, இல்லையே அவர் “தீவிரவாத இலக்கிய சங்கத்தின்” கொள்கைப்படி மிகச் சரியாகத்தானே செயல்படுகிறார் என்று சொன்னேன். அவருக்குப் புரியவில்லை. ஏன் இதைப் படிக்கும் உங்களுக்கும் கூட குழப்பமாகத்தான் இருக்கும். இருந்தாலும் எங்களது மத்தியக்குழுவின் கட்டுப்பாடுகளையும் மீறி இந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். பேப்பரில் இருப்பதை எப்படி படித்தவுடன் கிழித்துவிட வேண்டுமே, அதே போல் இந்த நிலைத்தகவலைப் படித்தவுடன் டைம்லைனில் ஹைட் செய்துவிடுங்கள். ரகசியம் முக்கியம். மனுஷ் எங்கள் தீவிர இலக்கிய கும்பலால் திராவிட இயக்கத்துக்குள் ஊடுருவச் செய்யப்பட்டிருக்கும் கொரில்லா போராளி. அவருக்குத் தரப்பட்ட இலக்கு, திராவிட இயக்கத்தில் கவிஞர்கள் என்ற பெயரில் உலவிக்கொண்டிருந்தவர்களை கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான். யோசித்துப் பாருங்கள். முன்பெல்லாம் புலவர் இலக்குவனார், ஒளிக்கீற்று ஒட்டப்பிடாரத்தார், இடிமழை நிலாவடையார் போன்ற திராவிடக் கவிஞர்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். எங்கு பார்த்தாலும் அவர்களது சந்தமும் விருத்தமுமாகவே இருக்கும். யாப்பு, சீர், தொடையெல்லாம் இருக்கும் ஆனால் மருந்துக்குக் கூட கவித்துவம் இருக்காது. பல்கலைக் கழகங்கள், தமிழ் விழாக்கள், மாநாடுகள் என்று எல்லா இடங்களிலும் அவர்கள்தான் இருந்தார்கள். மனுஷின் பிரவேசத்துக்குப் பிறகு என்ன நிலைமை? செல்ஃபோன் டவர் வந்ததும் அருகிப்போன சிட்டுக்குருவிகளைப் போல சந்தக் கவிகள் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் இந்த இடத்தில் எங்கள் பலவீனத்தையும் ஒத்துக்கொள்ளவே வேண்டும். எங்கள் மத்தியக் குழு கவிஞர்களைக் குறிவைத்ததே தவிர, இப்படி கூலி டவுன்லோடர்களின் ஆதரவுடன் புற்றீசல் போலக் கிளம்பும் கிரைம் எழுத்தாளர்களை கணிக்கத் தவறிவிட்டது. அதுவும் கூட தாமதம் தானே ஒழிய மெத்தனம் அல்ல. அதற்கும் ஒரு ஸ்லீப்பர் செல்லை இறக்குவதற்கு திட்டமிட்டோம். கிட்டத்தட்ட அதுவொரு ஹார்ட் லேண்டிங் (Hard Landing) ஏற்பாடு. திராவிட இயக்கத்தின் போலி புனைகதையாளர்களை கட்டுக்குள் வைக்க நாங்கள் களமிறக்க முயன்றது ஜெயமோகன் என்ற போராளியை. “அந்த மளிகைக்கடை ஒரு திமுக ஆளுடையதுதான்” என்று உளவு பார்த்துவிட்டு வந்து சொன்ன எங்கள் ரகசிய ஏஜென்டின் பிசகால், கடைசி நேரத்தில் “ஓபரேஷன் ஜெமோ லேண்டிங்” கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஒரிஜினல் திட்டம் என்னவென்றால், எங்களது போராளியைக் கொண்டு மாவு பாக்கெட்டை கடைக்குள் எறியச் செய்வது, அதன் மூலம் கலவரத்தை உருவாக்குவது. அதன் பிறகு, பிரியாணி சண்டைக்கு நேரில் வந்தது போல இதற்கும் ஆறுதல் சொல்ல ஸ்டாலின் வருவார், அப்படியே ஜெயமோகனை உள்ளே இறக்கி விடலாம் என்பதுதான் ஏற்பாடு. அது பொய் என்று தெரிந்தே, ஸ்டாலினை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக, “திமுகவினர் அறிவுத்தளத்தினர்” என்ற டயலாக்கையும் நாங்கள் எழுதியிருந்தோம். ஒத்திகையின் போது கூட ஜெயமோகன் அதை சரியாகத்தான் சொன்னார். அந்த வஜனம் அவருக்கு நிரம்பவும் பிடித்துவிட்டது. சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தார். கடைசியில் அந்தக் கடைக்காரர் பிஜேபியைச் சேர்ந்தவராகிப் போனதும், கல்லாவில் அவரது மனைவி இருந்துவிட்டதும்தான் திட்டத்தைக் குழப்பிவிட்டது. எங்கள் போராளி மாவை மாற்று திசையில் எறிந்துவிட்டார். இத்தனைக்கும் “திசைகளின் நடுவே” பயிற்சி எடுத்த கொரில்லா அவர். அப்போதும் கூட சமயோசிதமாகத் தப்பி வந்திருக்கலாம். அந்த டயலாக் மீது எங்கள் போராளிக்கு ஏற்பட்ட போதையே ஆபத்தாக மாறிவிட்டது. “திட்டம்தான் வெற்றியடையவில்லை, அந்த டயலாக்கையாவது பேசிவிட்டு ஓடிவந்துவிடுகிறேனே” என்று அடம் பிடித்தார். நாங்கள் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. அந்த கடைக்காரரின் முன்னால் போய் நின்று, “திமுகவினர் அறிவுத்தளத்தினர்” என்று அந்த டயலாக்கை சொல்ல, “தாமரை மலர்ந்தே தீரும்” என்ற டயலாக்குக்குக்கே கலங்காத அந்த சங்கி, இந்தப் பொய்யை சகிக்க முடியாமல் ஆத்திரப்பட்டு இறங்கியதுதான் அந்த துர்சம்பவம். அளவில் மட்டும்தான் உங்களது ஊடுருவலா அல்லது மத்திய அளவிலும் ஏதாவது திட்டம் இருந்ததா என்று. இருந்தது. சாரு நிவேதிதாவை வைத்து ஒரு சாஃட் லேண்டிங் திட்டத்தை திட்டமிட்டிருந்தோம். அவரை பிஜேபியில் ஊடுருவச் செய்ய வைப்பதாக ஏற்பாடு. அதன் மூலம் அந்தக் கட்சியின் பாசிஸ நடவடிக்கைகளைத் தடுப்பதாகத் திட்டம். மோடிக்கு நவீன கவிதையை அறிமுகம் செய்வது, ஜீரோ டிகிரியை தேசிய நூலாக அறிவிப்பது, ராக்கெட் தாதா சிறுகதைத் தொகுப்பை இஸ்ரோவில் கட்டாயமாக்குவது போன்றவை உபதிட்டங்கள். அவரது இடது கன்னத்தில் மருவெல்லாம் ஒட்டி, ஒத்திகையெல்லாம் பார்த்து அவரைத் தயார்படுத்திவிட்டோம். எங்களது மத்தியக்குழுவில் கணிசமானோர் சாரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாருநிவேதிதா வாசகர் வட்டம் எப்படி இயங்குகிறது என்பதை ஒரு உப தகவலாகச் சொல்லிவிடுகிறேன். இதையும் படித்தவுடன் மறந்து விடுங்கள். எங்களது வட்டம் பயங்கர ஒற்றுமைக்குப் பெயர் போனது. உதாரணத்துக்கு அராத்துதான் எனது வாரிசு என்று சாரு அறிவித்தால் அராத்துவைத் தவிர வேறு யாரும் அதை ஒத்துக்கொள்ளமாட்டோம். அதே போல் கார்ல் மார்க்ஸின் சிறுகதைகள் உலகத்தரம் என்று அவர் சொன்னால் என்னைத்தவிர வேறு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செல்வா கவிதை நூல் கொண்டு வரவேண்டும், கணேசன் அன்பு பயணக்கட்டுரை எழுதவேண்டும் போன்ற சாருவின் கருத்துகளை, அவரையும் அந்த சம்பந்தப்பட்டவர்களையும் தவிர மீதி அனைவரும் நிராகரித்துவிடுவோம். போன வாரம் கூட ப. சிங்காரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்று காயத்ரியிடம் சொன்னார். அதை காயத்ரி ஏற்கவில்லை. ப. சிங்காரம் மட்டுமே அதற்கு ஒத்துக்கொண்டார். அந்த ஒப்புதல் கடிதத்தை நீங்கள் “ஷேக்ஸ்பியருக்கு ஒரு மின்னஞ்சல்” எனும் சாருவின் கட்டுரையில் காணலாம். சரி நாம் ஊடுருவல் முயற்சிக்குத் திரும்புவோம்.அந்த நாளும் வந்தது. அந்த பிரம்மாண்டக் கட்டிடத்தின் ஒன்பதாம் நம்பர் வாசல் வழியாக சாரு உள்ளே நுழைய வேண்டும். உள்ளே போனதும் அவர் செய்யவேண்டிய காரியங்களை, சங்கேதக் குறிப்புகளாக கோணங்கியிடம் எழுதி வாங்கி, அந்தக் காகிதத்தை சாருவிடமும் கொடுத்துவிட்டோம். இறுதி நேரத்தில் அராத்து ஒரு மாற்றத்தைப் பரிந்துரைத்தார். அதாவது போர்டிங் பாஸ் இல்லாமல் பிளைட்டுக்குள் போவது, பின் நம்பர் தெரியாமல் டெபிட் கார்டை எந்திரத்தில் நுழைப்பது, ஓலாவில் வண்டி புக் பண்ணிவிட்டு உபர் வண்டிக்குக் கைகாட்டி அவன் நிறுத்தாமல் போய்விட்டான் என்று ஃபிலிஸ்டைன் சமூகத்தைத் திட்டுவது போன்ற சாருவின் தனித்துவமான குணங்களை அராத்து நுணுக்கமாக அவதானித்திருந்ததால், என் காதில் வந்து ரகசியமாக, “நீங்கள் ஆறாம் நம்பர் வாயிலில் நுழையவேண்டும்” என்று சாருவிடம் சொல்வோம், அப்போதுதான் அவர் மிகச் சரியாக ஒன்பதாம் எண் கொண்ட வாசலில் நுழைந்து விடுவார் என்றார். எனக்கும் அது சரியென்று பட்டது. ஆனால் அன்றைய தினம், ஆயிரத்தில் ஒரு முறைதான் அப்படி நடக்கும், சாரு மிகச் சரியாக நாங்கள் சொன்ன ஆறாம் என் கொண்ட வாசலிலேயே நுழைந்து எங்களுக்கு ஷாக் கொடுத்தார். அப்படி நுழைந்ததோடு மட்டுமில்லாமல், சங்கேதக் குறிப்பு கொண்ட காகிதத்தையும் தலை கீழாகக் பிடித்து விட, கோணங்கியின் குறிப்புகள் அனைத்தும் அறம் செய விரும்பு, ஆறுவது சினம் போன்ற எளிய செய்யுள்களாக உருமாறிவிட்டன. சாரு குழம்பிவிட்டார். எப்போதுமே பின் நவீனத்துவவாதிகள் எளிய விஷத்துக்குத்தான் குழம்புவார்கள். விளைவு, மோடி ஒரு சர்வாதிகாரி, இது காங்கிரசை விட கேடு கெட்ட ஆட்சி என்று அங்கு எதிர்பட்ட அமித்ஷாவிடமே சொல்லிவிட்டார். “அப்படி இல்லையே சாரு, உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் போல” என்று அமித்ஷா தன்மையாகக் கேட்டிருந்தால், “அப்படியா சொல்கிறீர்கள், நான்தான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேனோ” என்று உடனே கன்வின்ஸ் ஆகியிருப்பார். ஆனால் அப்போது அந்த வழியாக நிர்மலா சீதாராமன் வர, சாரு அவரைப் பார்த்ததும், யாரிந்தப் பேரழகி, தமிழச்சி போல் இருக்கிறாரே, டெல்லி வந்ததும் கறுத்துப் போய்விட்டாரா என்று குறிப்பில் இல்லாததை எல்லாம் பேச மொத்த திட்டமும் பனால் ஆகிவிட்டது!

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

All reactions:67Prabu Gangatharan, Siva Subramanian and 65 others4 comments4 sharesLikeSendShare