யாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்


1

நான் யாசகர் இனத்தின் நிழல்,
ஈராயிரம் ஆண்டுகளின் எலும்புகளில்
என் மூதாதையர் கையேந்தினர்.

வயல்களில் பறவைகளுடன்
தானியத்தின் தூசைப் பகிர்ந்தோம்
உப்பு புளி மிளகாய்—
தெருக்களில் பாடி யாசித்தோம்.

அன்னையிடம் உழைப்பையும்
கன்னியரிடம் காதலையும் காமத்தையும்
நண்பரிடமும் பெயரறியா அன்பரிடமும்
எண்ணிலாப் பொருளை யாசித்தேன்.

புரியா தவறுகளுக்கும் மன்னிப்பை
யாசித்தேன்

ஒரு கை அன்னமளித்தது
மற்றொரு கை ஆடையளித்தது
இன்னொரு கை இடமளித்தது

ஆயிற்று அகவை எழுபத்து மூன்று
யாசகம் சலித்தாலும் மீறவொரு வழியில்லை
ஆசானின் இல்லத்தில்
அடுத்த வேளை அன்னம்
யாசித்தே பெற வேண்டும்.
இது மண்ணின் விதி.

2

ஆறுதல்:
அரசனே ஆனாலும்
ஆசானின் தாள் பணிவான்.

3

மூன்று ஆண்டுகள் உனக்காகக் காத்திருந்தேன்
என்றாள்.
சொல்லியிருக்கலாமே
என்றேன்.
உயிர் போனாலும்
யாசகம் கேட்க மாட்டேன்
என்றாள்.