நிழலுடன் நடனமாடுதல்

பிடித்த கவிஞர்
என்பதால் படித்தேன்
வாழ்க்கை வரலாறு
எல்லா தேர்விலும் முதல் மதிப்பெண்
பொறியியல், பௌதிகம், வானவியல்—
சர்வதேச உச்ச நிறுவனங்களிலிருந்து
ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு பட்டம்
கணிதப் பேராசிரியர், பௌதிகப் பேராசிரியர்.
நூற்றி ஐந்து வயது வரை வாழ்ந்தார்
விளம்பரத்தில் வருவதற்கு
ஹாலிவுட் நடிகைகளின் கட்டணம்.
எமது மொழியின் உச்ச கவிஞரென
இன்னொரு உச்ச கவிஞரால் உறுதி.

நான்?
பள்ளித் தேர்விலேயே தோல்வி.
இருபது ஆண்டுகள் ஸ்டெனோ அடிமை
மணமான நாள் முதலாய் குடும்ப அடிமை.
குடிக்கவும் உரிமை இல்லை.
கவிதை எழுதினால் நிச்சயமாய்
உண்டு நூறு வாசகர்
அதில் அம்பது பேர் சொல்கிறார்கள்:
‘இது கவிதையே இல்லை!”
ஒரு சக கவிஞர் ஆறுதல்:
‘நம் கவிதை புரிய ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.’

எதற்கு எழுதுகிறேன்?
என்னுள்ளிருக்கும் ஒரு கண்ணாடியை உடைக்க,
என்னை நானே தொடர்ந்து கண்டடைய,
என் நிழலுடன் நடனமாட.

எதற்கு வாழ்கிறேன்?
வாழ்க்கை – ஒரு புதிரின் மையத்தில்
முடிவில்லா வட்டமிடல்.
அந்த சுழற்சியே ஒரு தியானம்.

எதற்கு மற்ற கவிஞர்களின்
வாழ்க்கையைத் தொடுகிறேன்?
அவர்கள், உச்சத்தில் நின்று
என்னைக் கேலி செய்கிறார்கள்.
நான், குப்பையின் மேல் நின்று,
அவர்களைப் பார்த்து,
ஒரு புன்னகையில் உலகை மறுக்கிறேன்.