பார்வையற்றவனுக்குப் பார்வையும்
செவியில்லாதவனுக்கு செவியும்
வாய் பேசாதவனுக்கு வாயும்
மனம் பிறழ்ந்தவனுக்கு மனமும்
நிதியற்றவனுக்கு நிதியும்
மதியற்றவனுக்கு மதியும்
கிடைத்தாற்போல் மகிழ்கிறேன்
இப்போது என்னால்
அணில் குஞ்சுகளிடமும்
கிளி குயில் மைனா போன்ற பட்சிகளிடமும்
மற்றும் இன்னோரன்ன பிராணிகளிடமும்
விலங்குகளிடமும்
தாவரங்களிடமும்
உரையாட முடிகிறது
ஒருநாள் தேன்சிட்டு
மலரில் தேனுண்ணும்
ஒலியைக்கூட கேட்க முடிந்தது
இன்னொரு நாள்
கரையான் கூடுகளில் கரையான்கள்
மண்ணில் புரியும்
மௌன உழைப்பைக்
காண முடிந்தது
இதுவரை
வெறும் சொல்லாகவே இருந்த
ஆன்மா என்பதும்
இப்போது அருகில் வந்து
உரையாடுகிறது
எல்லாவற்றையும்விட,
முதுகில் குத்தி விட்டு
மூச்சு வருகிறதா என
கை வைத்துப் பார்ப்போரை
மன்னிக்க முடிகிறது