கவிதைத் தொகுப்பு

என்னுடைய கவிதைத் தொகுப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. பாதி அளவுக்கு திருத்தம் செய்து விட்டேன். கவிதை பற்றிய என் விளக்கம் எதுவும் தொகுப்பில் இருக்காது. ஆத்மார்த்தி மற்றும் நேசமித்ரனிடம் முன்னுரை கேட்டிருக்கிறேன். இருவரும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்தவர் எப்போதும் போல் ஸ்ரீராம்தான்.

2022இலிருந்து 21.4.2025 வரை எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. ஏப்ரல் இறுதியிலிருந்து இன்று வரை எழுதியதே தனித்தொகுப்பாக வரும் போல் இருக்கிறது. தினமும் இரண்டு மூன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். கவிதை என்றால், அப்படியே காற்றில் ஓவியம் வரைவது போல் அல்ல. ஒரு கவிதையை எழுத ஏழெட்டு மணி நேரம்கூட ஆகிறது. நீங்கள் வாசிப்பது ஒரு கவிதையின் பத்தாவது அல்லது பதினொன்றாவது படிவத்தை. அதற்கு முன்னதாக பத்து படிவங்கள் எழுதி ரத்து செய்கிறேன். எல்லாமே கைவசம் உள்ளது.

அட்டையில் என்னுடைய புகைப்படம் வரலாம் என்று நினைக்கிறேன். பொதுவாக என் புத்தகத்தில் எந்த இடத்திலும் என் புகைப்படம் வருவதை நான் விரும்புவதில்லை. இருநூறு பிரதி விற்கிறது, இதில் புகைப்படம் ஒரு கேடா என்பதே என் எண்ணம். ஆனால் நிகானோர் பார்ராவின் புத்தகங்களைப் பார்த்த பிறகு என் கருத்தை மாற்றிக்கொண்டேன். புகைப்படத்தை ஒரு அரிய கலையாக மாற்றியிருக்கிறார்கள், பார்ராவின் நூல்களில். அந்த அளவுக்கு புகைப்படம் எடுக்கக் கூடியவர் எனக்குத் தெரிந்து புதுவை இளவேனில்தான். அவருடைய புகைப்பட நூல் பற்றித் தனியாக எழுத வேண்டும். அவர் ராமேஸ்வரத்தில் வைத்து என்னை எடுத்த புகைப்படங்கள் அரிய ஆவணங்கள். அவரையே மீண்டும் எடுக்கச் சொல்ல வேண்டும். அந்தப் புகைப்படம்தான் அட்டையில் வரும்.

நாளைதான் புத்தகத்தை பதிப்பகத்திடம் தர வேண்டும். தொகுப்புக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

திருத்தம் செய்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட இந்தக் கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

சென்னை கோடையும் ட்யூரின் குதிரையும்…

கோடை தொடங்கி விட்டது

மனிதர்கள் வியர்வையில் குளிக்கிறார்கள்

குளிக்கும்போதும் வியர்க்கிறது

எங்கும் சூடு எதிலும் சூடு

காற்றும் சுடுகிறது

நீரும் சுடுகிறது

இரவும் சுடுகிறது

நிலவும் சுடுகிறது

மனிதர்களும் சூடாகவே இருக்கிறார்கள்

சூடாகவே பேசுகிறார்கள்

எங்கு பார்த்தாலும் அனல் பறக்கிறது

சென்னை எப்போதுமே இப்படித்தானென

அலுத்துக் கொள்கிறார்கள் சென்னைவாசிகள்

ஐரோப்பியப் பனிப்பாலையில் சிக்கிக் கொண்ட

குதிரை ஒன்று

தன் பலத்தையெல்லாம் திரட்டி

இழுத்துச் செல்கிறது

ஒரு வண்டியை

ஏப்ரல் 8, 2022