அப்படியா?

சீதாராம் கேசரி, காலஞ்சென்ற காங்கிரஸ் தலைவர்
ஏன் என் கனவில் தினசரி வருகிறார்?
அவருக்கும் எனக்குமென்ன சொந்த பந்தம்?
இத்தனைக்கும் கேசரி எனக்குப் பிடித்த
இனிப்பு கூட அல்ல
கேசரி வளர்த்த நாய், மணி
அவர் இறந்ததுபோது
அருகிலேயே அமர்ந்திருந்து கல்லாகிப் போனது
அந்தக் கல் என் நெஞ்சில் இறங்கி
தினமும் கனவில் வந்து பாரமாய் அழுத்துகிறது

ஒரு டால்மேஷனை
சரக்கு ரயிலில் அனுப்பி விட்டது ஒரு மனிதக் கூட்டம்
வடநாட்டிலிருந்து வந்த ரயில்
சென்னை செண்ட்ரலில் காப்பாற்றப்பட்டபோது
அதன் கண்கள் என் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டன.

இப்படி ஒன்றா இரண்டா
ஒரு நூறு கதைகளுண்டு

இந்த ஜென்மத்தில் நான் நிம்மதியாய்
நித்திரை கொண்ட ஓர் இரவு இல்லை

என் மனையாள் காண்பித்தாள் ஒரு காணொலி
பிரேதத்தின் அருகே தேம்பியழும் குரங்கு ஒன்று
ஃபோனை வீசியெறிந்தேன்
நெஞ்சு வலிக்கத் தொடங்கியது
இப்போதும்
இதைத் தட்டச்சு செய்யும்போதும்…

இருபது ஆண்டுகளுக்கு முன்,
என் ஆருயிர் நண்பன் அழைத்து
தமிழிலக்கியப் பிதாமகர் இறந்து விட்டதாகத்
தேம்பினான்
நான் நெஞ்சில் ஈரமின்றி
‘அப்படியா?’ எனக் கேட்டேன்.

அவன் என்னிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
மானுட மரணம் ஆயிரம் சொல்லுங்கள்
அப்படியா எனக் கேட்டுக் கொள்வேன்
அதற்குத் தயாரென்றால் சொல்லுங்கள்
பேசுவோம்

ஆனால்
ஒரு நாயின் கண்ணீர்
ஒரு குரங்கின் அழுகை
நெஞ்சைப் பிளந்து விடும்