இன்று சமூக வலைத்தளம் ஒன்றில் என் நீண்ட கால நண்பரும், நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபனின் பின்வரும் குறிப்பைக் கண்டேன்.
”ராக்கி பார்த்திபன் !
என் மகன்
என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!”
ஒரு தகப்பன் தன் மகன் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம் என்ற வகையில் இதைப் பாராட்டினாலும் இது இன்றைய இந்தியாவின் சமூகச் சீரழிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே எனக்குத் தோன்றியது.
மேலைநாடுகளின் வளர்ச்சி பற்றி உங்கள் யாருக்கும் நான் சொல்ல வேண்டியதில்லை. போக்குவரத்து, சாலைகள், தனிமனித சுதந்திரம், எல்லாவற்றையும் விட முக்கியமான உணவு, இருப்பிடம், ஆரோக்கியம் ஆகிய மூன்றுக்கும் அரசு தரும் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இங்கே ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மாத ஊதியம் 7000 ரூ. ஒரு சாஃப்ட்வேர் எஞ்ஜினியரின் மாத ஊதியம் சராசரியாக ஒன்றரை லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை. சினிமா நடிகர்களின் ஊதியம் பத்து கோடியிலிருந்து நூறு கோடி வரை.
இந்தியாவில் ஏழை ஏழையாகவே இருந்து கொண்டிருக்கிறான். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான். ஏழைக்கும் பணக்காரனுக்குமான வித்தியாசம் இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் இல்லை.
இதற்கும் தந்தை மகன் பாசத்துக்கும் என்ன சம்பந்தம்?
சுருக்கமாக விளக்குகிறேன்.
மேலை நாடுகளில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை அரசே தத்து எடுத்துக்கொள்கிறது. அதன் பொருள், அந்தக் குழந்தைக்கான கல்விக்கும் ஆரோக்கியத்துக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இங்கே இந்தியாவில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகன் ஐஐடியில் அல்லது ஐஐஎம்மில் படிப்பதெல்லாம் கனவிலும் காண முடியாதது.
இது தவிர, குழந்தைகளை மூன்று வயதிலிருந்தே தன்னால் முடிந்த வேலைகளை அக்குழந்தைகளே செய்து கொள்வதற்குப் பயிற்சி அளிக்கிறது சமூகம். உதாரணமாக, தொடக்க நிலைப் பள்ளிகளிலேயே குழந்தைகள் தானே உணவை எடுத்து உண்ணத் தொடங்குகின்றன. பறவைகள்கூட இந்தப் பயிற்சியை குஞ்சுகளுக்குக் கற்பிப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால் மேலைநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களிலிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடுத்தவர் ஊட்டி விட்டால்தான் சாப்பிடுகின்றன. இல்லாவிட்டால், பட்டினி கிடக்கின்றன. இங்கே இந்தியாவில் மட்டும்தான் இருபது வயது தடிமாடுகளுக்குக் கூட பெற்றோர் சோறு ஊட்டி விடும் கண்றாவியைக் காண்கிறேன்.
பதினெட்டு வயது ஆனாலே அங்கே குழந்தைகள் தன் விருப்பப்படி படிக்கவும், வேலை பார்க்கவும், வேலை பார்த்துக்கொண்டே படிக்கவும் ஆரம்பிக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் பார்த்திபனின் குறிப்பைத் திரும்ப வாசிப்போம்.
ராக்கி தன் தந்தை பார்த்திபனின் புகழ் என்ற அடையாளத்தில்தான் படம் இயக்குகிறார். பார்த்திபனின் புகழ்தான் ராக்கியின் ஏணி. ஏனென்றால், எத்தனையோ ஆயிரம் துணை இயக்குனர்கள் சென்னையில் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ராக்கிக்குக் கிடைத்த வாய்ப்பு பார்த்திபன் இத்தனை ஆண்டுகளாகத் தன் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய உழைப்பின் பலன். அப்படியிருக்கும்போது ராக்கிதானே இப்படி ஒரு குறிப்பை தன் தந்தை பற்றி எழுதியிருக்க வேண்டும்?
இன்னொரு விஷயம் பாருங்கள். ”அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன்.”
மை டியர் பார்த்திபன், இது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? ராக்கி என்ன க்றிஸ்டோஃபர் நோலனா? அல்லது, டரண்டினோவா? இப்போதுதான் முதல் படம் இயக்கப் போகும் ஒரு இளைஞர். அவர் படத்தில் நடிப்பதற்கு ஒரு சீனியர் நடிகருக்கு அந்த இளைஞர் வாய்ப்பு தருவதா? தமிழர்கள் என்ன அத்தனை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறீர்களா, பார்த்திபன்? வாய்ப்பு கிடைத்தால் அது உங்களுக்குப் பிறவிப் பயன்?
இதற்கெல்லாம் ராக்கி என்ற இளைஞர் பார்த்திபனின் மகன் என்பதைத் தவிர வேறு ஏதாவது தகுதி அந்த இளைஞருக்கு உண்டா, சொல்லுங்கள்?
ஒரு உச்சபட்ச இயக்குனர் – என் நண்பர் – தன் மகனைப் பற்றி ஒருநாள் சொன்னார், ”அன்பின் மிகுதியால் செடிக்கு அதிக நீர் ஊற்றி விட்டேன்.” அதற்கு அடுத்த வாக்கியத்தை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
பார்த்திபன் எப்படி இந்த இடத்துக்கு வந்தார் என்பது தமிழ்நாடு அறிந்த கதை. அது அவரது அதிர்ஷ்டம் அல்ல. உழைப்பு, உழைப்பு, உழைப்பு. அத்தனை உழைத்து முன்னுக்கு வந்தார் பார்த்திபன். ஆனால் தன் மகன் என்றதும் தன் பழைய வாழ்க்கை மறந்து விட்டது. தன்னைப் போல் தன் மகன் கஷ்டப்படக் கூடாது என்று கருதுகிறார்.
என் மகன் தன் காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பதே என் மகன் மீது ஒரு தகப்பனாக நான் காண்பிக்கும் உண்மையான அக்கறை என்றும், அதுவே அவன் வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்புபவன் நான்.
இன்னொரு முக்கியமான சமூகவியல் ஆய்வு ஒன்றையும் அனைவருக்கும் வாசிக்கத் தருகிறேன்.
பிரெட்ரிக் எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல், மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும், தனிச்சொத்து, குடும்ப அமைப்பு, அரசு ஆகியவற்றின் உருவாக்கத்தையும் ஆய்கிறது. எங்கெல்ஸ் கூறுவது: தனிச்சொத்து உருவாக்கம் முதலாளித்துவத்தின் அடித்தளமாகவும், குடும்ப அமைப்பு மற்றும் அரசின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது.
பழங்கால சமூகங்களில், உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருந்தன. உபரி உற்பத்தி தோன்றியவுடன், செல்வம் சிலர் கைகளில் குவிந்தது. இது தனிச்சொத்து உருவாக வழிவகுத்தது. ஆணாதிக்க குடும்ப அமைப்பு (monogamy) உருவானபோது, ஆண்கள் தங்கள் சொத்தை தங்கள் சந்ததிக்கு மட்டும் உறுதி செய்ய விரும்பினர். இதனால், வாரிசு முறை தனிச்சொத்தைப் பாதுகாக்கும் கருவியாக மாறியது. குடும்பம், பெண்ணை அடிமைப்படுத்தி, சொத்து மாற்றத்தை ஒழுங்குபடுத்தியது. அரசு, இந்த சொத்து உறவுகளைப் பாதுகாக்கவும், ஆதிக்க வர்க்கத்தின் நலன்களை உறுதிப்படுத்தவும் உருவானது.
எனவே, எங்கெல்ஸின் ஆய்வு, ”தனிச்சொத்து உற்பத்தி முறைகளின் மாற்றத்தால் உருவானது; வாரிசு முறை அதை நிலைநிறுத்த உதவியது” என்கிறது.
ஆம், இன்றும் மக்கள் தங்கள் சொத்துக்களை தங்கள் பிள்ளைகளுக்கு வாரிசாக வழங்குவதன் மூலம் தனிச்சொத்து முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்றனர். எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில் விளக்கப்பட்டபடி, தனிச்சொத்து உருவானது உற்பத்தி முறைகளின் மாற்றத்தால், ஆனால் அதன் தொடர்ச்சி வாரிசு முறையால் உறுதிப்படுத்தப்படுகிறது.
நவீன சமூகத்தில், பெற்றோர் தங்கள் செல்வத்தை—நிலம், பணம், வணிகம், அல்லது பிற சொத்துக்களை—தங்கள் பிள்ளைகளுக்கு உயில் மூலமாகவோ, பரம்பரையாகவோ வழங்குகின்றனர். இது தனிச்சொத்து முறையைப் பாதுகாக்கிறது, ஏனெனில் செல்வம் ஒரு குறிப்பிட்ட குடும்ப வரிசையில் குவிகிறது. இதனால், பொருளாதார ஏற்றத்தாழ்வு தலைமுறைகளாகத் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக, பணக்கார குடும்பங்கள் தங்கள் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு மாற்றுவதால், அவர்கள் சமூகத்தில் ஆதிக்க நிலையைத் தக்கவைக்கின்றனர்.
முதலாளித்துவ அமைப்பில், இந்த வாரிசு முறை செல்வத்தைக் குவிக்கவும், வர்க்கப் பாகுபாடுகளை நீடிக்கவும் உதவுகிறது. சட்டங்கள், உயில் முறைகள், மற்றும் வரி அமைப்புகள் இதை மேலும் எளிதாக்குகின்றன. இதனால், தனிச்சொத்து முறை தொடர்ந்து வலுப்பெறுகிறது, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நிலைத்திருக்கின்றன. எங்கெல்ஸ் வாதப்படி, இது மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திற்கு மாற்றாக உள்ளது, ஏனெனில் செல்வம் சமமாகப் பகிரப்படுவதில்லை.