பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன்

ஜூலை 2016

(பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை)

Balakumaran 14.2 (1)

எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன்.

உனக்கென்ன கோவில் குளம்

சாமி பூதம்  ஆயிரமாயிரம்

இனிமையாய்ப் பொழுதும் போகும்

வலப்பக்கம் கடல் மணலை

இடப்பக்கம் இறைத்திறைத்து

நகக்கணுக்கள்

வலிக்கின்றன

அடியே

நாளையேனும் மறக்காமல்

வா

என்று ஒரு கவிதை கணையாழியில் வந்திருந்தது. பாலகுமாரன். உடனே அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்று கடிதம் எழுதினேன். லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. உடனே பதில் வந்தது நிவேதிதா என்ற பெண்ணுக்கு. போனேன். அடப்பாவி, இப்படி ஜெயகாந்தன் மாதிரி வந்து நிற்கிறீரே. ஆமாம் அப்போது ஜெயகாந்தன் மாதிரி கட்டுமஸ்தாகவும், அவரைப் போலவே சிகையலங்காரமும் கொண்டிருந்தேன்.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அழகிய இளம்பெண் வந்து பாலாவிடம் கொஞ்சம் கொஞ்சிவிட்டு போனது. ம்… பொறாமையாக இருந்தது. என்ன செய்தாவது எழுத்தளானாகிவிடுவது என்று முடிவு செய்த தருணம் அது. மேன்ஷனுக்கு திரும்பிய கையோடு ஒரு சிறுகதை எழுதி சாவிக்கு அனுப்பினேன். அடுத்த வாரமே பிரசுரித்தார் சாவி. அதுக்கு அடுத்த வாரம் தில்லி போய்விட்டேன். அப்புறம் என்ன, பெர்க்மன், அந்தோனியோனி, ஃபெலினி, காஃப்கா, ஜான் ஜெனே, ஆஸ்கார் ஒயில்ட். அதோடு மெட்ராஸ் என் நினைவில் இருந்து மறந்து போயிற்று. இப்போது கடந்த பத்து இருபது ஆண்டுகளாக திரும்பவும் மெட்ராஸ், திரும்பவும் பாலா. இப்போதைய பாலா ஒரு சித்தபுருஷராக உயர்ந்திருந்தார்.

மனிதனுக்கும் விலங்குக்கும் இடைப்பட்ட நிலையில் பல மனிதர்களைப் பார்க்கிறோம். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களே ஞானிகள், சித்தர்கள். பாலா அப்படிப்பட்ட சித்த புருஷராக உயர்ந்திருக்கிறார். அவரைப்பற்றி எத்தனையோ கதைகளை, சம்பவங்களை நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைத் தொட்டார். துலக்கியது வாழ்க்கை. ஒரே கணம் பார்த்தார். வேறு மனிதனானேன். இப்படி, இப்படி.

மேலே, மனிதனுக்கும் விலங்கிற்கும் இடைப்பட்ட ஜீவிகளைப் பற்றி சொன்னேன் இல்லையா, அந்தப் பிரிவில் உள்ள பலரும் மெத்தப் படித்தவர்களாகவே இருப்பதையே  காண்கிறேன். ஆச்சரியம் கொள்ளத்தக்க விஷயம் அது. படிப்பு மனிதனை மேன்மை கொள்ளச் செய்யாதா? சமீபத்தில்கூட ஒரு மெத்தப் படித்தவர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வைத்து என்னிடம் நீங்கள் தேவனைப் படித்திருக்கிறீர்களா என்றார். இடம் வலமாக தலையாட்டினேன். அப்படியானால், உங்களை எழுத்தாளர் என்றே சொல்லிக்கொள்ளாதீர் என்றார். படித்தவர்கள் மட்டுமே இப்படி இருப்பதைப் பார்க்கிறேன். படிக்காத ஆள் ஒருவர்கூட இப்படி நடந்துகொண்டதில்லை, இதுவரை. யோசித்தேன். ஒரே காரணம்தான். படிப்பு அதன்கூடவே அகந்தையையும் கொண்டுவந்துவிடுகிறது. படிப்பினால் ஏற்படும் மேன்மையை அந்த அகந்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

சமீபத்தில் என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் லட்சக்கணக்கான பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் இப்படி எழுதியிருந்தார். “பிச்சைக்காரனாக இந்தியா பூராவும் சுற்றினேன். திருவண்ணாமலைக்கு வந்தேன். பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன். யோகி ராம்சுரத்குமார். பின்னாளில் அவர் ஞானியானார். நான் எழுத்தாளனானேன்.” அதிர்ந்து போனேன். காரணம் அந்த எழுத்தாளனின் வயது 50. அகந்தைதான் இப்படியெல்லாம் பேசவைக்கிறது.

பாலாவின் கண்களைப் பார்க்குந்தோறும் ஒரு யோகியைப் பார்ப்பது போல் இருக்கிறது. தாடியினால் அல்ல; அந்த கண்கள். கைகளைத் தொட்டேன். உடனே உள்ளே அதிர்ந்தது. இப்படிப்பட்டவர்களின் பாதம் தொட்டு வணங்குவது என் வழக்கம். அனுமதி கேட்டேன். “அது கூடாது சாரு. நீ எனக்கு சமமானவன்,” என்றார் பாலா. அதுதான் பாலா. அவன் அடைந்திருக்கும் இடம் எங்கே? நான் எங்கே? இந்த அடக்கம்தான் பாலா.

சினிமாவில் பாலா விட்ட இடத்தை இன்னும் நிரப்ப ஆள் இல்லை. (நீங்கள் நல்லவரா? கெட்டவரா?)

பரவாயில்லை. சினிமாவினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் பாலா என்ற ஒரு சித்த புருஷன்… இப்படி ஒரு மனிதனை நான் கண்டதில்லை.

பாலா, மூத்தவனே, உன் தாள் பணிந்து வணங்குகிறேன்…