விஸ்வரூபம்

ரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை.  அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார்.  கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார்.  போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார்.  அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார்.  ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார்.  அவர்தான் கமல்.  கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிரிக்கிறார்கள்.  அதுதான் கமலின் வெற்றி.  அவரது இந்துத்துவ உள்தோற்றம் அந்த அளவுக்கு முகமூடியால் மூடப்பட்டிருக்கிறது.  அவருடைய படங்கள் அனைத்துமே இஸ்லாமிய விரோதமானவை.  ஹே ராமில் இந்து முஸ்லீம் கலவரம் நடக்கிறது.   முஸ்லீம் கலவரக்காரர்களைக் காண்பிக்கும் போது கற்பழிப்பு போன்ற காட்சிகளைத் தத்ரூபமாக (graphic) எதார்த்தமாக, குரூரமாகக் காண்பிக்கிறார்.  ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும் போது எல்லாம் நிழல் காட்சியாகத் தெரியும்.

தசாவதாரத்தில் வரும் முஸ்லீம் ஆஃப்கன் முஸ்லீமைப் போல் இருப்பார்.  தமிழ் முஸ்லீம் எப்படி இருப்பார் என்றே கமலுக்குத் தெரியாது.  ஏனென்றால், அவர் கூட இருப்போர் அத்தனை பேருமே பிராமணர்கள். மற்றும் நியோபிராமணர்கள்.  (நியோபிராமணர்கள் என்றால், பிராமணத்துவத்தைத் தங்கள் கொள்கையாக ஏற்றவர்கள்.) ஏதோ இட ஒதுக்கீடு அடிப்படையில் கபிலனை உடன் வைத்திருக்கிறார்.  அவ்வளவுதான்.

இன்றைய தினம் விஸ்வரூபம் – 2 ட்ரைலர் பார்த்து கொதித்துப் போய் விட்டேன்.  நாஸர் பள்ளிக்கூடத்துக்குப் போகணும், ஜலால் காலேஜுக்குப் போகணும், அதான் சரி என்ற டயலாகுடன் படம் ஆரம்பிக்கிறது.  இந்த ஒரு வசனத்துக்காகவே இந்தப் படம் தடை செய்யப்பட வேண்டும்.   முஸ்லீம்களைப் படிக்காதவர்கள் போல் காண்பிக்கும் இந்த வசனம் கண்டிக்கத் தக்கது.  விஸ்வரூபத்தில் எல்லோரும் தொழுகையை முடித்து விட்டுத் துப்பாக்கியைத் தூக்குவார்கள்.  இது ஒரு சாமான்ய மனிதனின் மனதில் என்ன மாதிரியான எண்ணத்தைத் தூண்டும் என்பது கூடவா கமல்ஹாசனுக்குத் தெரியாது?  இப்போது விஸ்வரூபம் 2 மதத்துவேஷத்தை ஆடையாக அணிந்து கொண்டு வர இருக்கிறது.  இன்றைய இந்தியாவில் இந்துத்துவம் தீவிரவாதமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிப் பேசும் அவசியம் என்ன?  ரஜினியை விட கமல் ஆபத்தானவர்.  கமலும் ரஜினியும் தில்லி பிஜேபியால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப் போவதைக் கெடுப்பதற்காகவும் பிஜேபி இங்கே காலூன்றுவதற்காகவும் களம் இறக்கப்பட்டவர்கள்.  நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய விஸ்வரூபம் விமர்சனத்தைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விஸ்வரூபம் (1)

ஜனவரி 23, 2013

விஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ? அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. லட்டு தின்ன ஆசையா ரசிக்கும் தமிழர்கள் இதை ரசிப்பார்களா என்று தெரியவில்லை.

கமலின் DTH திட்டம் ஒரு புரட்சிகரமான ஆரம்பம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முக்கியமாக வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ்ப் படம் பார்க்க வேண்டுமென்றால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கமலை உலக நாயகன் என்று சொல்லி தூக்கி விட்டு ஜால்ரா அடித்த கூட்டம் அவர் ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்ததும் சுயநலமிகளாக மாறி அந்தத் திட்டத்தையே கவிழ்த்து விட்டு விட்டது. கமல் சொல்லியிருப்பது போல் தமிழர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். என்ன செய்வது? தமிழர்களை விட கமல் 50 வருடம் முன்னால் சிந்திக்கிறார்.

ஆனால் எனக்குள் ஒரு சம்சயம். இப்படி 100 கோடி செலவு செய்து தமிழில் ஒரு ஹாலிவுட் படம் செய்வதை விட ‘புயலிலே ஒரு தோணி’யை கமல் எடுத்திருந்தால் உலக அளவில் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிட்டியிருக்கும். பொன்னியின் செல்வனை விட புயலிலே ஒரு தோணியில் ஏகப்பட்ட சாகசங்கள் உள்ளது. நேதாஜியும் அதில் ஒரு கேரக்டர். Forrest Gump போல் ஒரு க்ளாஸிக்காக இருக்கும்.

விஸ்வரூபம் (2)

ஃபெப்ருவரி 2, 2013

விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது.

நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே  கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non-muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?

கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது. வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது.

ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால், என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு, நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

விஸ்வரூபம் (3)

ஃபெப்ருவரி 3, 2013

விஸ்வரூபம் பற்றி நான் எழுதியிருந்த நாலு வரிகளுக்கு நானூறு மெயில்கள் வந்தன. என் கட்டுரையை ஆதரித்து எழுதியிருந்தவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். எதிர்த்து எழுதியிருந்த நண்பர்கள் யாவரும் இந்துக்கள். ரொம்பவும் அவமானமாக இருந்தது நண்பர்களே… ஒருக்கணம் கூட உங்கள் மத அடையாளத்தை விட்டு விட்டு ஒரு முஸ்லீம் நண்பனின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொள்ள முடியாதா? இந்து நண்பர்கள் அனைவருமே செப்டம்பர் 11 அமெரிக்க சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். இப்படிக் கேட்பவர்கள் என் கட்டுரையைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றுதான் சொல்வேன்.

நான் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். கொலை செய்யும் போது குரானின் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே கொலை செய்தால் – அதுவும் படம் பூராவும் – நம் பக்கத்து வீட்டுக்காரர் அதே வார்த்தைகளை ஓதும் போது நமக்கு அது எப்படி அர்த்தமாகும்? தாலிபானின் செயல்களுக்காக என் சொந்த சகோதரர்களை நான் எப்படிப் பகைவனாகப் பார்க்க முடியும்?

இந்தியாவில் இஸ்லாம் பரவியது வன்முறையினால் என்றா நினைக்கிறீர்கள்? நான் எழுதிய ‘கடவுளும் நானும்’ என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா? ‘தப்புத் தாளங்கள்’ என்ற நூலைப் படித்ததில்லையா? இஸ்லாம் இந்தியாவில் பரவியது அன்பினால். அன்பினால். அன்பினால். சூஃபிகளின் வரலாற்றைப் படியுங்கள். துக்ளக் என்ற பைத்தியக்காரன் ஆயிரக் கணக்கான இந்துக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றியிருக்கலாம். ஆனால் இந்தியாவில் இஸ்லாம் பரவியது துக்ளக் போன்ற பைத்தியக்கார மன்னர்களால் அல்ல. அன்பின் மொத்த வடிவமான சூஃபி ஞானிகளால்தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது. அதற்கு இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் தர்ஹாக்களே சாட்சி.

விஸ்வரூபம் (4)

ஃபெப்ருவரி 3, 2013

வாசகர் வட்டத்தில் பாலாஜி ஜி.சேகர் என்ற நண்பர் எழுதியது:

கடைசியா விஸ்வரூபம் பார்த்தாச்சு.. ஆமாம். இனிமேல பார்க்கிறதா இல்லை. அப்படியே பார்க்கறதா இருந்தா முதல் 40 நிமிஷம் மட்டும் பார்க்கலாம். அதுவரைக்கும்தான் அது கமல் என்கிற நடிகரின் படம். அதுக்குப்பிறகு அது டைரக்டர் கமலோட மத துவேஷ கைக்கு சென்றுவிடுகிறது. தீவிர கமலின் ரசிகனாய் இருந்து இப்படி எழுத மனம் வரவில்லை. எனக்கு வேறு வழியில்லை.

என்னடா நேத்து வந்த ரகுமான் 2 ஆஸ்கர் வாங்கிட்டார், நம்ம 50 வருஷமா குட்டிக்கரணம் அடிச்சும், குரங்கு வேஷம் போட்டும் வாங்க முடியலையேன்னு தனியா உட்கார்ந்து கமல் யோசிச்சிருப்பார் போல. அமெரிக்காகாரனை எது பண்ணா இம்ப்ரெஸ் ஆவான், எதுக்கு அவன் ஆஸ்கர் கொடுப்பான். அவனுக்கு இருக்கிற ஒரே ப்ரச்னை தாலிபான் மற்றும் அதன் தீவிரவாதம். அதுலேருந்து அவனையும் அமெரிக்காவையும் காப்பாத்தற மாதிரி படம் அடுத்தா அவன் இம்ப்ரெஸ் ஆவான். சரி அதுக்கு எப்படி கதை தயார் பண்றது.

எப்படி இந்தியாவுக்கும் தாலிபானுக்கும் முடிச்சு போடறது? ஒரு இந்தியனா நம்ம எப்படி அமெரிக்காவை காப்பாத்த முடியும்? அதுக்கு ஒரு இந்தியன் தாலிபானுக்கு தற்செயலா போய் ‘விக்ரம்’ பட ஸ்டைல அங்க நடக்கிறதை கண்டுபிடிச்சு உளவு சொல்ற மாதிரி வைக்கலாம். ஓகே. காஸ்மீர் தீவிரவாதியா போகலாம். லாஜிக்கும் செட் ஆகும். நடுநடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, அவங்க பண்ற கொடும்தண்டனை முறைகளையும் அவங்கக்கிட்ட இருக்கிற பழமைவாததனத்தையும் காட்டலாம். ஓகே. இதுக்கு நம்ம ஊர் முஸ்லிம் மக்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?? அது யாருக்கு வேணும்? அதான் உன்னைபோல ஒருவன்லேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டாச்சுல்ல. அதே மாதிரி இதிலேயும் தப்பிச்சுக்கலாம்.

100 கோடிக்கு மேல இருக்கிற நம் நாட்டில் சகோதர பாசத்தோட பழகுற நம்ம முஸ்லிம் மக்களின் கோபம் பெரிதா, இல்லை ஆஸ்கர் பெரிதா?

எனக்கு ஆஸ்கர்தான் பெரிதென்று கமல் முடிவு பண்ணிட்டார் போல! சரி உலகத்தில நடக்கிறத்தான படத்தில வைக்கிறேன். சரி வைங்க. அதை எதுக்கு இந்தியாவில ரிலிஸ் பண்றீங்க?

எங்கோ உலகத்தின் மூலையில சில லட்சம் சொச்சத்தில இருக்கிற ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தைப் பத்தி படம் எடுத்து 16 கோடிக்கு மேல இருக்கிற இந்தியாவில ஏன் ரிலீஸ் பண்ற? அமெரிக்காவில எடுத்து அங்கயே ரிலிஸ் பண்ண வேண்டியதுதான? படம் பார்த்துட்டு போற எல்லாருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சிட்டு நடந்து போறவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்தில இருக்கு.

போதும். இதுக்கு மேல நெகடிவ் விளம்பரம் பண்ண விரும்பலை. விஸ்வரூபம் . நிரந்தரமா தடை பண்ண வேண்டிய படம். போங்கடா, போய் புள்ளைக்குட்டிங்களை படிக்க வைங்க, மதக்கலவரத்தைத் தூண்டாதீங்க. 15 வருஷமா பழகிட்டுருந்த முஸ்லிம் நண்பனை இந்த படத்துக்காக பகைச்சிக்கிட்டதுதான் மிச்சம். ஸாரி நண்பா. மன்னிச்சுடு.

விஸ்வரூபம் (5)

ஃபெப்ருவரி 14, 2013

Hi Mr.Charu,

My name is Ravi Shankar and I have read few of your books including Zero Degree. I was deeply hurt by the comment you wrote against the movie Vishwaroobam. I have only one question for you. If the Tamil Nadu government oppose the ‘Zero Degree’ book saying it has got sexual content and it cannot be sold to people with kids, would you still support the TN government? The point I’m making here is, I should have the freedom of speech and freedom of rights. I’m totally against censor board as well. I do not want five people decide what movie I can watch. Their job should only rate the movie like they do it in US. If Kamal makes a movie how RSS demolished Babri masjid and we should watch that as well.

Regards,

Ravi

டியர் ரவி,

நீங்கள் வருத்தம் அடைந்தது போல், காயப்பட்டது போல் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் விஸ்வரூபம் பார்த்துக் காயமடைந்து இருக்கிறார்கள். நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அந்தப் படத்தை ஒரு முஸ்லீமாகத்தான் பார்த்தேன். அந்தப் படத்தில் சென்ஸார் செய்வதற்கு எதுவும் இல்லை. படம் முழுவதுமே இஸ்லாமிய விரோதப் பார்வைதான் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் எல்லா சிறுவர்களும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கா தானே? அமெரிக்காக்காரன்தானே ரஷ்யாவை எதிர்ப்பதற்காக தாலிபான்களை வளர்த்து விட்டார்கள்?

ஒரு தமிழர் அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அவரை அறிஞர் என்று கொண்டாட முடியுமா? மிமிக்ரி ஆர்டிஸ்ட் கூடத்தான் அப்படிப் பேசுவான். இல்லாவிட்டால் ஒருத்தர் அமெரிக்காவில் ஆறு மாதம் தங்கினால் அந்த உச்சரிப்புடன் பேச முடியும். அது ஒரு சாதனையா? ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுத்தால் அதற்குப் பெயர் சாதனையா?

இதை விடக் கொடுமை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில், “பாப்பாத்திதான் சிக்கனை ருசி பார்த்து சொல்லணும்,” என்று வரும் வசனம். பாப்பாத்தி என்று சொல்வது சட்டப்படி குற்றம். ஒருவரை நீக்ரோ என்று சொல்வது எப்படிக் குற்றமோ அதே போன்ற குற்றம்தான் பாப்பாத்தி என்று சொல்வதும்.

என் விஸ்வரூபம் விமர்சனம் சம்பந்தமாக சுமார்  நூறு கடிதங்கள் வந்துள்ளன. பாதி கடிதங்கள் என் கட்டுரையைப் பாராட்டி. பாதி கடிதங்கள் என்னைக் கண்டித்து. பாராட்டி எழுதியவர்கள் அத்தனை பேரும் முஸ்லீம்கள். கண்டித்து எழுதிய அத்தனை பேரும் இந்துக்கள். என் துபாய் நண்பர் கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாராட்டி எழுதிய இந்து நண்பர். மதத்தைத் தாண்டி சிந்திக்க முடியாத நாம் என்ன செய்து என்ன பயன்? ரொம்பவும் அவமானமாக இருந்தது.

இந்தப் படம் பிராமணர்களையும் முஸ்லீம்களையும் எவ்வளவு கொச்சைப் படுத்துகிறது என்பதைக் கூடவா ஒருத்தரால் உணர முடியாது? கமல் தன்னுடைய இஸ்லாமிய விரோத பார்வையை விஸ்வரூபத்தில் மட்டும் காட்டவில்லை. ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்று ஏற்கனவே நிறைய செய்திருக்கிறார். அந்தப் படங்கள் பற்றிய என்னுடைய விரிவான விமர்சனங்களைப் படித்துப் பாருங்கள்.

நான் இப்போது தமிழ் சினிமாவுக்கு உள்ளே இருக்கிறேன் என்பதால் விஸ்வரூபத்துக்கு விரிவான விமர்சனம் எழுதவில்லை. என்னால் என் நண்பர்கள் யாருக்கும் தொந்தரவு வரக் கூடாது என்று எண்ணுகிறேன். இனிமேல் விஸ்வரூபம் பற்றி எதுவும் எழுத மாட்டேன். எனக்கும் சென்ஸார் போர்டு இருக்கக் கூடாது என்பதுதான் எண்ணம். ஆனால் நம்முடைய நாடு அந்தப் பக்குவத்தை இன்னும் அடையவில்லை. சென்ஸார் போர்டு இல்லாவிட்டால் 90 சதவிகிதம் நீலப் படங்கள்தான் வரும். வேண்டுமானால் சென்ஸார் போர்டில் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வைக்க வேண்டாம்.

சாரு

விஸ்வரூபம் (6)

சாரு நிவேதிதா வாசகர் வட்டம்,

ஃபெப்ருவரி 15, 2013.

பிரியமுடன் துரோகி: விஸ்வரூபம் படத்தின் முதல் பாடலையும் அதன் இசை, நடனம் மற்றும் அதில் வரும் பெண்களின் முகபாவனைகளை சாரு சிலாகிக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

பிச்சைக்காரன்: Pleasure of the text என்பது வேறு. Text for pleasure என்பது வேறு என்பதை அறிந்தவர்கள், கைதட்டலுக்காக வைக்கப்படும் இது போன்ற காட்சிகளில் மயங்க மாட்டார்கள்.

சாரு: பிச்சைக்காரன் பிரமாதமாக எழுதியிருக்கிறார். கமலின் அந்தக் காட்சிகள் எனக்கு அருவருப்பையே ஏற்படுத்தின. ஏனென்றால், “பாருங்கள்… என்னை மாதிரி எவனாவது நடிக்க முடியுமா?” என்றே அவரது முகபாவம் தோன்றியது. இயல்பாக இல்லை. பெரும் க்ளோஸப் ஷாட்டுகள். மகா அருவருப்பு. Narcissism-த்தின் உச்சம். இந்தக் காட்சிகள் தரும் அருவருப்பு பற்றியே என்னால் பத்து பக்கம் எழுத முடியும். அதிலும் பாப்பாத்தி என்று சொல்லும் போது திரைச்சீலையையே கிழிக்க வேண்டும் என்று தோன்றியது.

குணாவில் இயல்பாக இருந்த நடிப்பு விஸ்வரூபத்தில் படு செயற்கையாக மாறி விட்டது. உலகத்திலேயே சுலபமானது பெண் தன்மை உள்ளவராக நடிப்பதுதான். ஏன், நம் சரத்குமார் கூட இப்படி நடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பூதக் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தன அந்தப் படத்தில் கமலின் முகம்.

அந்தப் பெண்கள்? பாவம்… அடிமைகளைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது.