காலா முன்வைக்கும் தலித் உளவியல்

இன்று காலை பா. வெங்கடேசன் பேசினார்.  கமல்ஹாசனின் படங்களை மதிப்பீடு செய்யும் போது என்னிடம் இருக்கும் சீரியஸான மனோபாவம் காலா விமர்சனத்தில் இல்லை என்று சொன்னார்.  உண்மைதான் என்றேன்.  காலா போன்ற ஒரு படத்தை நான் மதிப்பீடு செய்வதே தேவையில்லாததுதான்; ஆனால் அது தமிழக அரசியலோடு மிக நெருக்கமாகப் பிணைந்து விட்டதால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்று விளக்கினேன்.  பிறகு பா. வெங்கடேசன் சுமார் அரை மணி நேரம் பேசினார்.  பா. வெங்கடேசன் எழுத்தாளர், நாவலாசிரியர் மட்டும் அல்ல; 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதத் தத்துவவாதிகளின் எழுத்தை மிக ஆழமாகப் பயின்றவர்.  கால் நூற்றாண்டுக்கு முன்னால் அவர் ஹொகனேக்கல்லில் அமைப்பியல்வாத ஆசிரியர்களில் ஒருவரான ரொலான் பார்த்தின் Image, Music, Text நூல் பற்றிப் பேசியது எனக்கும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

இப்போது நான் எழுதுவதெல்லாம் இன்று பா. வெங்கடேசன் காலா பற்றிப் பேசியதில் நான் புரிந்து கொண்டது.  நீங்களே எழுதுங்களேன் என்றேன்.  அதற்கான சூழல் இல்லை என்றார்.  புரிந்தது.  எனவே அவர் பேசியதன் சுருக்கத்தை நான் புரிந்து கொண்ட அடிப்படையில் தருகிறேன்.  அவரே எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  முக்கியமாக காலா முன்வைக்கும் தலித் உளவியல் மிகவும் ஆபத்தனாது.    தலித் மக்களுக்கு எதிரானது.  காலா பற்றி எழுதிய பலரும் ஹரி தாதாவாக வரும் நானா படேகரும் ரஜினியும் ஒன்றாகத் திரையில் வரும் போது நானா படேகரே வலுவாகத் தெரிகிறார் என்று எழுதியிருக்கின்றனர்.   இதற்குக் காரணம், நானா படேகரின் நடிப்பாற்றல் அல்ல.  இயக்குனர் ரஞ்சித்தே அந்தப் பாத்திரத்தை அப்படி உருவாக்கியிருக்கிறார்.  அதாவது, தலித்தான கரிகாலன் படம் முழுவதுமே உயர்ஜாதி ஹரிதாதாவுக்கு முன்னால் பதற்றப்படுகிறான்.  இந்தப் பதற்றம்தான் இந்தப் படம் முன்வைக்கும் ஆபத்தான தலித் உளவியல்.  படம் முழுவதுமே கரிகாலன் தாழ்வு மனப்பான்மையிலேயே செயல்படுகிறான்.

உதாரணத்துக்கு இரண்டு காட்சிகள்:  ஹரிதாதா தாராவிக்கு கரிகாலனின் வீட்டுக்கு வருகிறான்.  அப்போது அவன் கொஞ்சம் கூடப் பதற்றமின்றி இருக்கிறான்.  அவனைக் கரிகாலன் வீட்டுக்குள் அழைக்கவில்லை.  வெளியே வைத்தே பேசுகிறான்.  கரிகாலனின் மனைவி தரும் தண்ணீரை கைகூப்பி வணங்கி மறுக்கும் போது பதற்றம் அடைவது கரிகாலனும் அவன் மனைவியும்தான்.  ”நம் வீட்டில் அவர்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.”  என் இந்தத் தாழ்வு மனப்பான்மை?  ஹரிதாதா அங்கிருந்து கிளம்பும் போது கரிகாலன் சொல்கிறான்.  ”என்னைக் கேட்காமல் நீ இங்கே வரலாம்.  ஆனால் நான் அனுமதி அளிக்காமல் நீ இங்கிருந்து போக முடியாது.”   ஹரிதாதா வெளியே போக முடியாமல் சாலைத் தடுப்புகள் போடப் படுகின்றன.  ஹரிதாதா பதற்றம் அடையவில்லை.  அமைதியாகத் திரும்ப வந்து நான் கிளம்பலாமா என்றே கேட்கிறான்.

ஆனால் கரிகாலனின் உயிருக்குயிரான மனைவியையும் மகனையும் ஹரிதாதா கொன்ற பிறகு ஹரிதாதா வீட்டுக்குக் கரிகாலன் போகிறான்.  அந்த இடம் கரிகாலன் பாத்திரத்தின் ஆக மோசமான வீழ்ச்சி.  அங்கே ஹரிதாதா கரிகாலனை எதிர்கொண்டு வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.  தன் பேத்தியிடம் கரிகாலனுக்குத் தண்ணீர் கொடுக்கச் சொல்லி அவன் கால்களைத் தொட்டு வணங்கும்படி சொல்கிறான்.  பெரியவர்களின் காலில் விழுவது வட இந்தியாவில் ஒரு மரபு.  ஆனால் கரிகாலன் காலில் விழத் தேவையில்லை, கை கொடுத்தால் போதும் என்று பதற்றமான ஒரு வசனத்தைச் சொல்கிறான்.  தெளிவான குரலில், உன்னைத்தான் கொல்ல நினைத்தேன்; துரதிர்ஷ்டவசமாக உன் மனைவியையும் உன் மகனையும் கொல்ல நேர்ந்து விட்டது.  அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்கிறான்.  அப்போது கரிகாலன் நான் காலன் (எமன்); என்னை நீ கொல்ல முடியாது என்று அபத்தமாக உளறுகிறான்.

கரிகாலனை மோட்டார் பைக்கில் அழைத்து வந்த இளைஞன் குரூரமான கொல்லப்பட்ட போது அது கரிகாலனையே கொன்றது போல் இல்லையா?  கரிகாலனின் நெஞ்சில் பாய இருந்த தோட்டாவைத் தன் நெஞ்சில் வாங்கி உயிர் விட்ட அவன் மகனின் மரணம் கரிகாலனின் மரணம் இல்லையா?  அவன் மனைவியையே கொன்று விட்டானே, அது கரிகாலனின் மரணம் இல்லையா?  கரிகாலனுக்கு அதெல்லாம் பொருட்டே இல்லை.  காரணம், இயக்குனர் ரஞ்சித்.  அப்படித்தான் அந்தப் பாத்திரத்தை ஒரு அடியாள் கூட்டத் தலைவனைப் போல் உருவாக்கியிருக்கிறார்.  அதனால்தான் தன் படித்த மகன் பேச்சு வார்த்தைக்குச் செல்லும் போது அடிதடியே பெரிது என்று தடுக்கிறான் கரிகாலன்.

அம்பேத்கர் என்ன சொன்னார்?  கல்வியே விடுதலை என்றார்.  ஆனால் படத்தில் என்ன நடக்கிறது?  ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனான கரிகாலன் என்ன செய்கிறான்?  தாராவியின் மக்கள் ஒடுக்கப்பட்டவர்கள்.  ஆனால் தாராவி மண் – அந்த நிலம் – பல நூறு கோடிகள் மதிப்புடையவை.  ஆக, அத்தனை பெரிய தொகையைப் பேச்சு வார்த்தையின் மூலம் – மூளை பலத்தின் மூலம் அடைவது சிலாக்கியமா?  அடிதடி மூலமா?  கடைசியில் என்ன நடக்கிறது?  வன்முறையின் பேரழிவு.

கரிகாலனின் மகன்கள் தாராவியை விட்டுப் போக விரும்புகின்றனர்.  நாங்கள் படித்து விட்டோம்; இன்னும் ஏன் இந்த வசதியற்ற இடத்தில் வாழ வேண்டும் என்பது அவர்கள் கேள்வி.

கரிகாலன் அதற்கு சாகும் வரை இந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என்கிறான்.  அம்பேத்கர் அதையா சொன்னார்?  சேரியிலேயே வாழ்வதுதான் விடுதலையா?  நான் வாழ்ந்த சேரியில் என் சக மனிதர்கள் எடுப்புக் கக்கூஸில் மலம் அள்ளினார்கள்.  நானும் கூடப் போயிருக்கிறேன்.  பெண்கள் அத்தனை பேரும் எடுப்புக் கக்கூஸில் மலம் அள்ளுவார்கள்.  இடுப்பில் ஒரு பிரம்புக் கூடை.  கையில் ஒரு துரட்டி.  அந்தத் துரட்டி மூலம் தண்ணீர் இல்லாத எடுப்புக் கக்கூஸில் மலத்தை அள்ளுவார்கள்.  மலம் கெட்டியாக இருந்தால் எடுப்பது சுலபம்.  கொழகொழ என்று இருந்தால் மண் போட்டு அள்ளுவார்கள்.  இதைப் படிக்கும் உங்களுக்குக் குமட்டல் வரலாம்.  இது 15 வயது வரை என் வாழ்க்கையாக இருந்தது.  சில வீடுகளில் மலம் கழிசலாக இருக்கும்.  கூடைகளில் சேகரித்த மலத்தை இடுப்பிலேயே சுமந்து சென்று பீ சந்து என்ற சந்தில் – இது சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது, அவ்வளவாக யாருக்கும் தெரியாது – வந்து நிற்கும் ஒரு பெரிய ட்ரம்மில் கொட்டப்படும்.  படும் என்ன படும்?  அந்தப் பெண்கள்தான் கொட்டுவார்கள்.  தினந்தோறும் நின்று நின்று அதைப் பார்த்திருக்கிறேன்.

இந்த 65 வயதிலும் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.   நான் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.  அந்த இடத்தைக் கடக்க வேண்டுமென்றால் ஆயிரக் கணக்கான பேர் மலம் கழித்து வைத்திருக்கும் இடத்தைக் கடக்க வேண்டும்.  கால்களை எங்கே வைப்பது?  எங்கு பார்த்தாலும் மலம், மலம், மலம், மலம், மலம்.  உவ்வே என்று அடி வயிற்றைப் புரட்டும் குமட்டலோடு எழுந்து கொள்வேன்.  இப்போதும் இந்தக் கனவு என்னைத் துரத்துகிறது.

இந்த வேலையைச் செய்வது பெண்கள்.  ஆண்கள் பன்றி மேய்ப்பார்கள்.  பன்றி மலத்தை எடுத்துக் காயப்போட்டு உலர்த்தி எருவாக்குவார்கள்.  பெண்கள் வேலையை விட எத்தனையோ மடங்கு சுலபம்.  மாலையில் வேலை முடிந்து வேலிமுட்டி சாராயம் அருந்தி எங்காவது விழுந்து கிடப்பார்கள்.

இந்த அவலத்திலிருந்து வெளியேறுவதற்கு எனக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது.  படிப்பு.  படித்தேன்.  வெளியேறி விட்டேன்.  நான் வளர்ந்த இடம் அப்படியே தான் இருக்கிறது இன்னமும்.  இப்படிப்பட்ட வாழ்க்கையை எனக்கு இளமையில் நல்கிய – இன்னமும் துளியும் மாறாமல் இருக்கின்ற இந்த தேசத்திலேயே நான் வாழ விரும்பவில்லை – 2011-இல் ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய்பீம் காம்ரேட் என்ற படத்தைப் பார்க்காத யாரோடும் நான் பழக மாட்டேன் என்று அந்த ஆண்டு நான் அறிவித்தேன்.  இன்னமும் வட இந்தியாவில் தலித்துகளின் வாயில் மலக் கரைசல் ஊற்றப்படுகிறது.  வட இந்தியப் பத்திரிகைகளில் இதுதான் தினசரிச் செய்தி.  இப்படிப்பட்ட ஒரு தேசத்தில் வாழ்வதை விட ஏதாவது ஒரு ஐரோப்பிய தேசத்தில் பிச்சை எடுத்து வாழ்வதையே நான் மனதார விரும்புகிறேன்.

படிப்பே என்னை என் அவலமான மண்ணிலிருந்து விடுதலை செய்தது.  ஆனால் காலா தன் பிள்ளைகளிடம் சொல்கிறான்… பிறந்து வளர்ந்த இந்த மண்ணிலேயே இருங்கள்.

நானா படேகரின் பாத்திரம் ஏன் அழுத்தமாக இருக்கிறது என்றால் அதில் தாழ்வு மனப்பான்மை இல்லை.  தலித் தலைவனான கரிகாலன் தாழ்வு மனப்பான்மையாலும் அதன் காரணமாக நம்மில் வளரும் ஈகோவினாலும் பதற்றத்திலேயே வாழ்கிறான்.  இதை ஏதோ பிஜேபி ஆளான ரஜினியை வைத்தே ரஜினியை செஞ்சுட்டார் ரஞ்சித் என்று எழுதுகிறார்கள்.  செய்யப்பட்டது ரஜினி அல்ல.  அவருக்குக் கோடிக் கணக்கான காசை லைக்கா தந்து விட்டது.  அவர் வெளியே வந்து போராடுபவர்களெல்லாம் சமூக விரோதிகள் என்று சொல்லிக் கொண்டுதான் அலைவார்.

காட்சி மொழி என்பது பல்வேறு அர்த்த அடுக்குகளைக் கொண்டது.  அதைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  பொழுதுபோக்குச் சித்திரத்துக்கு இந்த ஆபத்து இல்லை.  ஆனால் கோட்பாடுகளை முன்வைத்து எடுக்கும் போது நாம் என்ன கோட்பாட்டை முன்வைக்க விரும்புகிறோமோ அதற்கு எதிராக நாம் உருவாக்கும் காட்சி மொழி அமைந்து விடக் கூடும்.  அதற்கு ஒரு உதாரணம்தான் காலா.

ராமனை வணங்குபவன் வில்லன் என்பதால் இது ராவண காவியமோ தலித் படமோ அல்ல.  தாழ்வு மனப்பான்மை என்ற உளவியலை தலித் மக்களோடு பொருத்தியதால் காலா என்ற இந்தப் படம் தலித் மக்களுக்கும் சமூகநீதிக்கான அவர்களின் போராட்டத்துக்குமே எதிரானதாகத்தான் அமைந்து விட்டது, துரதிர்ஷ்டவசமாக.  இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது.  இந்த மாத உயிர்மையில் எழுத இருக்கிறேன்.