நிராகரிப்பும் தடையும் (7)

அ. ராமசாமியின் கருத்தை ஒட்டிய முகநூல் விவாதம்.

17.02.20

மதுரை அருணாச்சலம்:

ராமசாமி சார், ஏதோ அவருடைய படைப்புகளால் பயனடைந்த வாசகர்கள் மட்டுமே அவரை கொண்டாடுகிறோம். உடன் நிற்கிறோம். வெறும் விமர்சகனை விட, பயனடைந்த தேர்ந்த வாசகன் எவ்வளவோ மேல். வாசகன் நன்றியுடனும் இருப்பான் என்பது என் எண்ணம். உலகளாவிய பார்வை கொண்ட சாருவை இங்கே புரிந்து கொள்வதில், பலருக்கும் ஒவ்வாமை இருந்தது, இருக்கிறது என்பதே என்னுடைய எண்ணம். சாரு தமிழ்ச்சமூகத்தில் இருந்து விலகவில்லை. மற்ற எழுத்தாளர்கள் தொடத் தயங்குற அல்லது வெகு உழைப்பை கோரும் தளங்கள், அவர் பயணித்ததே.

அவரைப் பலருக்கு உள்ளுக்குள் பிடித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்வதில் தயங்குகிறார்கள்.

***

அ. ராமசாமி:

வாசகர்களின் கொண்டாட்டத்தை – அன்பை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஒரு எழுத்தாளருக்குத் தேவைதான். அதே நேரத்தில் அந்த எழுத்தை வாசித்து விவாதிக்கும் – விமரிசிக்கும் நபர்களோடு காட்டவேண்டிய உறவுநிலைகளைப் பேண நினைத்ததில்லை என்பதையும் சொல்ல விரும்புகிறேன். சாருவின் விலகல் மற்றும் தனிப்பாதை பற்றிய பார்வை எனது பாண்டிச்சேரிக் காலத்தில் உருவானது.

***

அ. ராமசாமி: சாரு, நீங்கள் சொன்னபடி உங்களை நீண்டநாள் அறிந்தவன் என்ற வகையில் நீங்கள் உங்கள் வாசகர்களோடு கொள்ளும் உறவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனச் சொல்லத் தோன்றியது. உங்கள் எழுத்துக்கான ஒரு விமரிசகனை உருவாக்காமல் கொண்டாடுபவர்களை உருவாக்கியதையும் மறுபரிசீலனை செய்யலாம். உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகியிருப்பதான பாவனையைக் குறைக்கவேண்டும் என்றும் சொல்லத் தோன்றியது. எல்லாமே என்னுடைய அவதானம் மட்டுமே.

செல்வகுமார்:

அவரை ‘பைத்தியமா போ’ ன்னு சொல்ற மாதிரி இருக்குங்க. அவரை நெருங்கி நிற்கும் வாசகர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. அவங்களும் இல்லை என்றால் என்னவிதமான இலக்கிய நன்மைகள் நடந்திருக்கும்? முழுமையாக சொல்லுங்க சார்.

தமிழில் எழுதுபவனே தனக்கான விமர்சகனை உருவாக்கணுமா? உண்மையில் புரியலை.

அ. ராமசாமி:

சமகாலத்திலும் அதுதான் நடக்கிறது.கடந்த காலத்திலும் அதுதான் இங்கே நடந்தது.

***