நிராகரிப்பும் தடையும் (8)

நேசமித்ரன்

18.02.20

நிலமற்றவர்கள்/ தேசமிருந்தும் தேசமிழந்தவர்கள்/நாடுகடத்தப்பட்டவர்கள்/ அகதிகளானவர்கள் தமது ஞாபகங்கள் அழிந்தழிந்து ஒரு புதிரடையாளம் பெறும் போது ஒரு மொழிதல் முறை உருவாகிற்று. அப்படியான மொழிதல் முறைமையில் ‘அறுதியிடல்’ அற்ற அடையாளச்சிக்கல் கொண்ட பாத்திரமாக்கல் உருவானது. அதில் காலமும் வெளியும் கூட புனைவே. இந்திய புராணீகங்களில் அதுவொரு திரிசங்கு சொர்க்கம், ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவில் உருவான வெளி. Hundred years of solitude- Macondo – fictitious town . Dublin- James Joyce. இது ஒருமுறைமை. இதில் அடையாளங்கள் /தொன்மங்கள் உண்டா இல்லையா? உண்டெனில் அவை எவ்விதம் தொழிற்பட்டிருக்கிறது என்பதை நல்ல வாசகன் கண்டு கொள்வான் என்பது என் தாழ்மையான அபிப்ராயம், சாரு.

தற்கால இந்தியா, தம் நிலவெளி அல்லாத தேசங்களில் வாழும் ஈழத்தவரின் ஞாபகங்கள் fade ஆகும் போது அடுத்தடுத்த தலைமுறைகள் எழுதப் போகும் கதைகள் எப்படி இருக்கக் கூடும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். தமிழ்ப் பெயர்கள் மட்டும் எஞ்சி இருக்கக் கூடிய தமிழ் பேசத் தெரியாத குடியேறிகளை நான் சில தேசங்களில் சந்தித்திருக்கிறேன் .