கொரோனா நாட்கள் – 3

என்னைப் பொறுத்தவரை கொரோனாவினால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  இரண்டே விஷயங்களைத்தான் இழக்கிறேன்.  காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடக்க முடியாமல் போனது.  இப்போது வீட்டு மொட்டைமாடியிலேயே நடக்கிறேன்.  அடுத்து, வாரம் ஒருமுறை நண்பர்களை சந்திப்பேன்.  அது இல்லை.  மற்றபடி ஒரு துளிக்கூட என் வாழ்வில் மாற்றம் இல்லை.  ஆனாலும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வசிக்கும் பத்து பூனைக்குட்டிகளைப் பற்றி மிகவும் கவலையாக இருக்கிறது.  பிரகாஷுக்கு போன் போட்டுக் கேட்பதற்குக் கூடத் தயக்கமாக இருக்கிறது.  போகவில்லை என்று சொல்லி விட்டால் என்ன செய்வது?

என் வீட்டுக்குக் கீழே உள்ள பூனைகளுக்கு தினமும் காலை மாலை உணவிட்டு விடுகிறேன்.  ஆனால் கடைகள் எல்லாம் மூடிவிட்ட நிலையில் உணவு தீர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை எழுகிறது.  அதனால் நேற்று பாக்யராஜிடம் சொல்லி மூன்று கிலோ பூனை உணவு வாங்கி வர சொன்னேன்.  மந்தவெளியில் உள்ள ரவி ஃபார்மஸியில் பூனை உணவு கிடைக்கும்.  வாங்கி வந்து கொடுத்தார்.  பாக்கெட்டுகளை அப்படியே வாசலில் வைத்து விட்டுப் போனார்.  பாக்கெட்டுகளையும் சானிடைஸர் கொண்டு துடைத்து விட்டு உள்லே எடுத்து வந்தோம்.  பணம் வேண்டாம் என்றார்.  இருந்தாலும் தொடர்ந்து வாங்க வேண்டும் என்பதால் ஜீப்பே மூலம் அனுப்பி வைத்தேன். 

கீழே உள்ள பூனைகள் சற்று கலவரப்பட்டு கிடக்கின்றன.  பக்கத்தில் உள்ள தாவத் ஓட்டலை மூடி விட்டார்கள். அது இருந்தால் ஏதாவது இறைச்சி கிறைச்சி கிடைக்கும்.  மூடி விட்டதால் பதற்றத்துடன் வந்து சாப்பிடுகின்றன.  ஆனால் காகங்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளன.

இதைப் படித்தால் உங்களுக்கு எரிச்சல் வரலாம்.  சிலருக்குக் கோபம் வரலாம்.  இந்த கொரோனா காலத்திலும் எனக்கு வசை கடிதங்கள் வரத் தவறுவதே இல்லை.  தினமும் வருகின்றன.  நானும் அவற்றைப் படிப்பதில்லை.  அந்த அறிவு கெட்ட முண்டங்களுக்கும் நான் எத்தனை சொன்னாலும் தெரிய மாட்டேன் என்கிறது.  அன்புள்ள சாரு என்று ஆரம்பித்தால்தானே நான் படிக்க ஆரம்பிப்பேன்.  ங்கோத்தா டேய் பாடு என்று கடிதத்தை ஆரம்பித்தால் நான் எப்படித் தம்பிகளா படிக்க முடியும்?  படிக்கலாம்தான்.  எனக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லையே?  எனக்கு மட்டும் நிறைய பணம் இருந்தால் இதற்கென்றே ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு நீயும் கெட்ட வார்த்தையில் பதில் எழுது என்று சொல்லலாம்.  தத்துவார்த்தமாக எழுதுபவர்களுக்கும் தத்துவார்த்தமாகவும் அன்பாக எழுதுபவர்களுக்கு அன்பாகவும் நானே எழுதி விடுகிறேன்.  வசை கடிதங்கள் மட்டும் பதில் எழுதப்படாமல் நிராதரவாகக் கிடக்கின்றன என்பது பற்றி எனக்கு மனசுக்குள் ஒரு வருத்தம் மேவுகிறது.  எனவே நிறைய காசு வந்தால் இதற்கென்று ஒரு காரியதரிசி வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரே தகுதி, நிறைய கெட்ட வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.  சரி விடுங்கள், அந்த லக்‌ஷுரிக்கெல்லாம் இப்போது பணமும் இல்லை; நேரமும் இல்லை.  சரி, இப்போது நான் எழுதுவது பற்றி உங்களில் சிலருக்கு அல்லது பலருக்குக் கோபம் வரலாம்; எரிச்சல் வரலாம்.  ஆனாலும் இதைப் படித்துப் புரிந்து கொள்ள ஒரே ஒரு ஆத்மாவேனும் இருக்கும்.  அந்த ஆத்மாவுக்காகவே எழுதுகிறேன்.

பூனை உணவு மாதாமாதம் நான்கு பேர் அனுப்பி வைக்கிறார்கள்.  நானும் ஒரு பங்கு.  ஆக, ஐந்து பேர் சேர்ந்து பதினைந்து பூனைகளை வளர்க்கிறோம்.  என் வீட்டில் ஐந்து பூனைகள்.  கீழே தரையில் பத்து.  ஐந்து பூனைகளுக்கும் பெயர் உண்டு.  தரைப் பூனைகளுக்குப் பெயர் இல்லை.  வீட்டுப் பூனைகளின் பெயர்கள்: ஸிஸ்ஸி (பெண்), லக்கி (பெண் குட்டி), பெல்லா (ஆண்), ஸ்மோக்கி (ஆண்), கிட்டி (பெண்).  இப்போது கொரோனா காலம் என்பதால் ஸிஸ்ஸியை கீழே விடவில்லை.  ஐந்தும் வீட்டிலேயேதான்.  ஐந்து பேர் சேர்ந்தாலும் பூனை உணவு தொட்டுக்க தொடச்சுக்க என்றுதான் வருகிறது.  அப்போது நானே மற்றொரு ஷேர் போட்டு வாங்கி வந்து விடுவேன்.  நேற்று கூட ஒரு நண்பர் அனுப்பி வைத்த ஏழு கிலோ விஸ்காஸ் பூனை உணவு வந்து சேர தாமதம் ஆகும் என்று அமேஸானிலிருந்து தகவல் வந்தது.  ஆக, மந்தவெளியில் உள்ள ரவி ஃபார்மஸியில்தான் வாங்க வேண்டும்.  இப்படிப்பட்ட பற்றாக்குறை காலத்தில் நான் காகங்களுக்குப் பூனை உணவு போடுவதில்லை.  நான் பூனைகளுக்கு உணவு போடும் போது காகங்கள் வந்து கரையும்.  ஒரு இருபது இருக்கும்.  நான் கண்டுகொள்ள மாட்டேன்.  மனசைக் கல்லாக்கிக் கொள்வேன்.  மனசிலிருந்தே அவைகளிடம் சொல்வேன்.  என்னைக் கோவிக்காதீர்கள் செல்லங்களே.  நீங்கள் பூனைகளை விட அதிர்ஷ்டசாலிகள்.  உங்களால் பறக்க முடியும்.  பூனைகளால் முடியாது.  நீங்கள் பறந்து போய் அதோ தெரிகிறது பாருங்கள் மெரினா பீச் அங்கே வந்து சேரும் படகோட்டிகளின் அருகே நின்றால், அவர்கள் தங்கள் வலைகளிலிருந்து எடுக்கும் மீன்களில் ஒன்றிரண்டை உங்களுக்குத் தருவார்கள்.  அப்படித் தராத ஒரு மீனவரைக் கூட நான் கண்டதில்லை.  ஆனால் பூனைகள் அப்படியெல்லாம் இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து போகத் தெரியாதவை.  போய் விடுங்கள்.  என்னைக் கோபிக்காதீர்கள்.  பூனை உணவு நான் நினைத்த அளவுக்கு என் வாசகர்கள் அனுப்பி வைப்பதில்லை.  அவர்களுக்கும் பாவம் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கும்.  இதுவா அவர்களின் கவலை?  என்னிடம் இருந்தால் உங்களுக்குத் தர மாட்டேனா?

அவைகளும் ரெண்டு நிமிடம் கரைந்து விட்டு ஓடி விடும்.  சில காகங்கள் கோபத்துடன் என் தலையில் தோளில் கழிந்து விட்டுப் போகும்.  நான் வீட்டுக்கு வந்து சுத்தப்படுத்திக் கொள்வேன். 

ஆனால் இன்று அப்படி நடக்கவில்லை.  இருபது காகங்களும் பசியில் கதறின.  ஆமாம்.  கதறின.  அவைகள் இரண்டு மூன்று தினங்களாக சாப்பிடவில்லை.  படகுகள் கடலுக்குப் போகவில்லை.  மீன் வரத்து இல்லை.  அவைகளுக்குக் கடலுக்கு நடுவே போய் மீன் வேட்டையாடிச் சாப்பிடத் தெரியாது.  அல்லது, அப்படிப் பழகவில்லை.  சுற்றுவட்டாரத்தில் எந்த ஓட்டலும் இல்லை.  தாவத் இல்லை.  தாவத் இருந்தால் நூறு காகம் வாழலாம்.  எங்கே போகும்?  என் தலை மீதெல்லாம் கழியவில்லை.  என்னிடம் வந்து – நம்புங்கள் – என் அருகில் வந்து என்னைப் பார்த்துக் கா கா என்று கதறின.  என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன.  அதற்கு மேல் என் கல் நெஞ்சு கல்லாக இருக்க முடியவில்லை.  ஒரு கிண்ணம் பூனை உணவை எடுத்துக் கொடுத்தேன்.  பயங்கர வேகத்துடன் தின்றன. தின்று விட்டுப் போய் விடும்.  இன்று போகவில்லை.  மேலும் கரைந்தன.  இன்னும் ஒரு கிண்ணம் போட்டதும்தான் கலைந்தன.

இப்போது குரியர் வேலை செய்யவில்லை.  குரியர் வேலை தொடங்கும் வரை நீங்கள் பூனை உணவை ஆர்டர் செய்ய இயலாது.  ஆனால் பணமாக அனுப்பினால் நான் பாக்யராஜையோ அல்லது மற்ற நண்பர்களையோ அனுப்பி வாங்கிக் கொள்கிறேன்.  100 ரூபாயாக இருந்தாலும் அது இந்தப் போர்க் காலத்தில் உதவும்.  இது பற்றி என்னை வசை பாடுபவர்கள், கிண்டல் செய்பவர்கள் செய்து கொள்ளலாம்.  அவை பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை.  பணம் அனுப்புவது எப்படி என்பது கீழே உள்ளது.  வசை கடிதம் எழுத என் முகவரி: charu.nivedita.india@gmai.com

ஒரு வாசகி எனக்குத் தேவையான மருந்துகளை அனுப்பி வைக்க விரும்பி மெயில் அனுப்பி இருந்தார். என் வீட்டுக்கு மேல் வீட்டில் வசிப்பவர் ஒரு மருந்துக் கடை வைத்திருப்பதாக இப்போதுதான் அறிந்தேன்.  அவர் எனக்குத் தேவையான மருந்துகளைக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்.  பூனை உணவுதான் இப்போதைய தேவை. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai