சில அறிவிப்புகள்

நாளைய தினம் (14.1.2014) மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை புதுயுகம் தொலைக்காட்சி சேனலில் சொல்லி அடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.  முடிந்தால் பாருங்கள்.

நாளை மறுநாள் (15.1.2014) நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.

(ஒன்றுமில்லை, மனுஷ்ய புத்திரனின் பாதிப்பு)

இன்றைய குங்குமம் இதழில் என் பேட்டி வெளிவந்துள்ளது.  அதில் ஜெயமோகன் பற்றிய என் பதிலில் ஒரு பிழை ஏற்பட்டுள்ளது.  அவருடைய வாசிப்பு பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.  ஒவ்வொருவருடைய வாசிப்பும் அவரவரது சொந்த விஷயம்.  இன்னொருவரை அனாவசியமாகப் புண்படுத்துவது என் வழக்கம் அல்ல.  சாரு படிப்பதே இல்லை என்று ஜெ. சொன்னார்.  ஒருத்தரைத் திட்டக் கூட  அவருக்குத் தெரியவில்லை.  படிப்பது என்பது என்னுடைய அதி அந்தரங்கமான விஷயம்.  என் மனைவிக்குக் கூடத் தெரியாது.  அது எப்படி ஜெ.வுக்குத் தெரியும்?  திட்டினால் அதில் ஒரு தர்க்கம் இருக்க வேண்டும்.  இவர் படிப்பதெல்லாம் இவர் மண்டையில் ஏறவில்லை என்று திட்டினால் அது திட்டு என்றுதான் சொன்னேன்.  இதில் இவர் என்பது சாரு.  ஜெயமோகன் அல்ல.

தொடர்ந்து வாராவாரம் நியூஸ் சைரன் பத்திரிகையில் எழுதி வருகிறேன்.  படிக்கிறீர்களா?

அடுத்த மாதம் உயிர்மையில் என்னுடைய நெடுங்கதை ஒன்று வர உள்ளது.  மனுஷ்ய புத்திரனிடம் கதையைக் கொடுத்து விட்டு ஒரு இருபது வயது இளைஞன் தன் முதல் கதையின் பிரசுர விபரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்தேன்.  நேற்று மனுஷ் கதை நன்றாக இருப்பதாகச் சொன்னார்.  கதை பேய்க் கதை.  முன்பு ஒருமுறை ஒரு ஆங்கில பேய்க்கதைத் தொகுதிக்கு எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்தேன் அல்லவா, அந்தக் கதை.  Gothic Stories வரிசையில் உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய பேய்க்கதைகள் அந்தத் தொகுதியில் உள்ளன.  ஒஸாமா பின் லாடனின் முன்னாள் மனைவி kola boof இன் கதையும் உள்ளது.  அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் Joyce Carol Oates எழுதிய பேய்க்கதையும் தொகுப்பில் உண்டு.  அந்தத் தொகுப்புக்காகவே நான் எழுதிய Diabolically Yours என்ற கதையின் தமிழ் வடிவமே உயிர்மையில் வர உள்ளது.  உயிர்மையில் வெளிவரும் என் முதல் கதையும் இதுதான்.  உயிர்மையில் இதுவரை என் கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளன.  பிரதிக்கு முன் கூட்டியே சொல்லி வையுங்கள்.  இதே போல் துப்பறியும் கதை, வரலாற்றுக் கதை எல்லாம் எழுத ஆசை.  பார்க்கலாம்.

 

 

Comments are closed.