என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் குடும்பநல நீதிமன்றம்.  நீதிபதியின் உள் அறையில் அவர் முன்னே ஒரு குற்றவாளியைப் போல் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நீதிபதியும் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே பார்க்கிறார். உம்முடைய பெயர் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்.  (ஆங்கிலத்தில் நீ, நீர், நீங்கள் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர் கேட்ட விதம் நீ என்பதற்கும் நீங்களுக்கும் நடுவில்தான் இருந்தது என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.)  அறிவழகன் சார் என்று பவ்யமாகச் சொன்னேன். அட்ரஸ் என்று சொல்லிவிட்டு என்னை மீண்டும் குற்றவாளியைப் போல் பார்க்கிறார் நீதிபதி. அந்தத் தருணத்தில் எனக்கு என்னுடைய முகவரி மறந்துவிட்டது. அதனால் மிகுந்த பதற்றத்துடன் ”சாரி சார், எனக்கு என் முகவரி மறந்துவிட்டது” என்று சொன்னேன்.  கடும் கோபத்துடன் என்னை பார்த்த கனம் நீதிபதி ”நீர் சரியான ஆளாகத் தெரியவில்லை, குடும்பம் நடத்துவதற்கு நீர் லாயக்கு இல்லை, உடனடியாக உமக்கு விவாகரத்து வழங்குகிறேன்” என்று சொல்லிவிட்டு வலது கரத்தைத் தன் நெஞ்சுக்கு முன்னே உயர்த்தி அவரது உள்ளங்கை அவரது நெஞ்சை பார்த்து இருக்க நான்கு விரல்களால் கொசுவை விரட்டுவது போல வெளியே போ என்று சைகை காண்பித்தார். அவர் கண்களில் தெரிந்த வெறுப்பு எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது என்றாலும் அதிகாரமே அற்ற புழு பூச்சிகளால் என்ன செய்ய முடியும் என்று வெளியே வந்துவிட்டேன்.

இப்படி பல தருணங்களில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.  இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த வாஸந்தி என் மீது தனிப்பட்ட அன்பும் கரிசனமும் கொண்டவர் என்பதால், ஒருமுறை என்னையும் சுந்தர ராமசாமியையும் ரவிக்குமாரையும் ஒரு இலக்கியச் சந்திப்புக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்தார்.  எங்களுடைய உரையாடலைத் தொகுத்து தீபாவளி மலரில் வெளியிடுவது அவர் திட்டமாக இருந்தது.

மூவரும் சேர்ந்து உரையாட வேண்டும்.  நாகர்கோவில்காரர் என்ன செய்தார் தெரியுமா? ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டு வந்து படித்தார். (தட்டச்சு செய்யப்பட்டிருந்தது அக்கட்டுரை!) அதுதான் உரையாடலில் அவர் பங்காம்.  அப்போது நான் அடைந்த அதிர்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.  நான் அப்போது தமிழ்ச் சூழலில் நிலவிய பத்தாம்பசலித்தனத்தை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்த நேரம்.  அந்தப் பத்தாம்பசலித்தனத்தை நான் தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று குறிப்பிடுவது வழக்கம்.  அந்த வார்த்தை சுந்தர ராமசாமியைக் குறிப்பிடுவது அல்ல.  பொதுவான தமிழ்ச் சிறுபத்திரிகை சூழலில் நிலவிய பத்தாம்பசலித்தனத்தைக் குறிப்பிடும் வார்த்தை அது.  அவர் அந்த வார்த்தையால் எரிச்சலுற்று விட்டார் போலும்.  தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்றால் என்ன என்று என்னை மடக்கினார்.  நான் பத்தாம்பசலித்தனம் என்றேன்.  உடனே ஒரு தேர்ந்த வக்கீலைப் போல் பத்தாம்பசலித்தனம் என்றால் என்ன என்று மீண்டும் மடக்கினார்.  நான் க்ளீன் போல்ட். 

ஆனால் இந்தியா டுடே அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் சு.ரா. கேட்டதற்கான பதில் எனக்குத் தெரிந்து விட்டது.  அதாவது நான் இப்படிச் சொல்லியிருக்க வேண்டும்:

ஜே.ஜே. குறிப்புகள் நாவலில் அதன் நாயகன் விளையாட்டு மைதானம் ஒன்றில் ஒரு சிமெண்ட் பெஞ்சைப் பார்க்கிறான்.  ”அதில் ஒரு கெட்ட வார்த்தை கிறுக்கப்பட்டிருந்தது” என்று எழுதுகிறார் சு.ரா.  சிமெண்ட் பூசப்பட்ட அன்று ஈரத்தில் எழுதியதால் அவ்வார்த்தை நிரந்தரமாக அந்த சிமெண்ட் பெஞ்சில் தங்கி விட்டது. 

ஒரு தேர்ந்த எழுத்தாளன் அதைக் கெட்ட வார்த்தை என்று எழுத மாட்டான்.  வார்த்தையில் என்ன நல்லது கெட்டது?  எந்த வார்த்தை எழுதப்பட்டிருந்ததோ அந்த வார்த்தையைத்தான் சு.ரா.  எழுதியிருக்க வேண்டும்.  ஆனால் அதை எழுதாமல் கெட்ட வார்த்தை என்று பம்மி விட்டார் சு.ரா.  இப்படிப் பம்முவதைத்தான் தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்கிறேன்.

இப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.  ஆனால் சு.ரா.வின் வாக்குத்திறமைக்கு முன்னால் அன்று நான் தோற்று விட்டேன். பொதுவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் விவாதங்களின் போதும் உரையாடலின் போதும் இப்படித்தான் தோற்றுக் கொண்டேயிருக்கிறேன். 

ஏனென்றால், ஒரு விரோதமான சூழலில் எனக்கு சரியான முறையில் உரையாடத் தெரியாமல் போகிறது.  பேசத் தெரியாமல் போகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் போகிறது.  என்னுடைய இடம் எழுத்து, பேச்சு அல்ல என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.   

ஆனால் சூழல் மிக இணக்கமாகவும் சிநேகபூர்வமாகவும் இருந்தால் அங்கே நான்தான் மற்றவர்களை விடவும் நன்கு பேசுபவனாகவும் உரையாடுபவனாகவும் இருக்கிறேன். பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.  மணிப்பால் பல்கலைக்கழகத்தில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.  வந்திருந்த அனைவருமே ஆய்வு மாணவர்களும் பேராசிரியர்களும்.  என்னை ஒரு பெண் ஒரு மணி நேரம் கேள்விகள் கேட்கிறார்.  முழுக்கவும் ஆங்கிலம்.  எனக்கு ஆங்கிலம் பேசி அவ்வளவாகப் பழக்கமில்லை.  ஆனாலும் அன்றைய தினம் ஒரு மணி நேரம் அந்தப் பெண்மணியின் கேள்விகளுக்கு, திக்காமல், திணறாமல், யோசிக்காமல், ம்ம்ம் ம்ம்ம் என்று இடைவெளி விடாமல் சரளமாக, தமிழில் எப்படிப் பேசுவேனோ, நண்பர்களுக்கு இடையில் எப்படிப் பேசுவேனோ அதேபோல் ஆங்கிலத்தில் பேசினேன்.  கிட்டத்தட்ட ஜக்கி வாசுதேவ் போல் பேசினேன் என்று சொல்லலாம்.  என்னைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தில் தேடினீர்கள் என்றால் என்னுடைய மணிப்பால் பல்கலைக்கழக உரையாடல் உங்களுக்குக் கிடைக்கும்.  நான் பேசும்போது எல்லோரும் உன்னிப்பாக கவனித்தார்கள்.  பல இடங்களில் கரகோஷம் செய்தார்கள்.  உரையாடல் முடிந்து பார்வையாளர்களும் கேள்வி கேட்டார்கள்.  அது ஒரு அரை மணி நேரம் சென்றது.  இத்தனைக்கும் அந்தப் பெண் என்ன கேள்விகள் கேட்பார் என்று எனக்கு எதுவும் முன்கூட்டியே தெரியாது.   

இன்னொரு இடம், தில்லியில் நடந்த அல்ஜேப்ரா அமைப்பின் மாதாந்திர சந்திப்பு.  தில்லி மாநகரின் பிரமுகர்கள் யாவரும் அதில் உறுப்பினர்கள்.  ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர விடுதியின் ஒரு விஸ்தாரமான ஹாலில் சுமார் ஐநூறு பேர் குழுமியிருந்தார்கள்.  அல்ஜேப்ரா  நிகழ்ச்சியும் ஒரு உரையாடலாகவே நடக்கும்.  வட்ட வட்ட மேஜைகளில் பார்வையாளர்கள் மதுபானம் அருந்தியபடியே சிறப்பு விருந்தினர்கள் உரையாடுவதைக் கேட்பார்கள்.  நுழைவுக் கட்டணம் மூவாயிரம் ரூபாய்.   உறுப்பினராக இருந்தால் நுழைவுக் கட்டணம் இல்லை.  நான் மட்டும் அந்த அமைப்பின் ஆயுட்கால உறுப்பினன்.  என்னிடம் அவர்கள் காசு வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள்.  ஆஷிஷ் நந்திக்கும் எனக்கும் மட்டும் இலவசம்.  அந்த அல்ஜேப்ரா அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பாயல் என் எழுத்தின் தீவிர விசிறி. 

நான் பேசுவதற்கு முன்னால் ஒரு மத்திய மந்திரி பேசினார்.  மற்ற மந்திரிகளைப் போல் அல்ல அவர்.  இளைஞர். ஆக்ஸ்ஃபோர்டிலோ எங்கேயோ படித்தவர் என்பதால் ஆங்கிலத்தில் விளாசித் தள்ளினார்.  கேள்வி கேட்டு அவரோடு உரையாடியவர் முன்னாள் தெஹல்கா ஆசிரியரும் என் சிநேகிதியுமான ஷோமா சௌத்ரி. எனக்குக் கொஞ்சம் மருட்சியாகி விட்டது.  இந்த மேட்டுக்குடி கூட்டத்தில் ஷோமாவுடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியுமா என்று.  

ஏதோ கவனக் குறைவின் காரணமாக எனக்கு யாரும் மதுக்கோப்பையும் தரவில்லை.  கூச்ச சுபாவி என்பதால் நானும் கேட்டுக் கொள்ளவில்லை.  அப்போது நான் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தேன்.  கொஞ்சமாவது தண்ணீர் அருந்தாமல் ஒரு வார்த்தை பேச முடியாது. அந்த அளவுக்கு நா வறண்டு கிடந்தது.  மேடையில் தாராளமாக தண்ணீர் இருந்ததால் ஆசுவாசமாயிற்று.  மேடைக்குப் போய் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் இருந்தேன்.   

மந்திரி பேசி முடித்ததும் நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.  அல்ஜேப்ரா நிர்வாகிகளைத் தவிர பார்வையாளர் யாருக்கும் என்னைத் தெரியாது.  என் எழுத்தைப் படித்திராத பார்வையாளர்கள். 

ஷோமா என்னைப் பற்றி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  அறிமுகப்படுத்தும் போது மிகப் பிரபலமான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஷோமாவுக்கு எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்ற வார்த்தையில் திக்கி விட்ட்து.  மீண்டும் சொல்ல முயற்சித்தார்.  மீண்டும் திக்கியது.  நான்தான் குறுக்கே விழுந்து தடங்கலைத் தவிர்த்தேன்.  அப்புறம்தான் கவனித்தேன்.  மேஜையில் தண்ணீர் இல்லை.  மேடையை நிர்வகித்துக் கொண்டிருந்த பாயலை அழைத்து தண்ணீர் என்றேன்.  பாயல் சிரித்தபடி தண்ணீரா, வைனா என்று கேட்டார்.  நான் வைன் என்று சொல்ல, வைன் அருந்தியபடியேதான் ஒரு மணி நேரமும் உரையாடினேன்.  சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கிக்கு அடுத்தபடியாக மேடையில் குடித்தபடி பேசிய எழுத்தாளன் நானாகத்தான் இருக்கும். 

கரண் ஜோஹரும் ஜக்கி வாசுதேவும் உரையாடிய சில காணொலிகளைப் பார்த்திருக்கிறேன்.  அன்றைய தினம் நானும் ஷோமாவும் உரையாடியது அப்படித்தான் இருந்தது.  நான் உரையாடிய ஆகச் சிறந்த கூட்டம் என்று தில்லி அல்ஜேப்ரா கூட்டத்தையே சொல்வேன்.  கூட்டம் முடிந்து சுமார் இருபது புத்தகங்களில் (மார்ஜினல் மேன்) கையெழுத்திட்டேன்.  பிறகு நான் ஒரு ஓரமாக அமர்ந்து வைன் அருந்திக் கொண்டிருந்தபோது அங்கே வந்த பாயல் பிரமாதமான பேச்சு என்று சொல்லி தன் மோதிரத்தைக் கழற்றி என் விரலில் அணிவித்தார்.  இந்த அல்ஜேப்ரா உரையாடலையும் நீங்கள் காணொலியில் பார்க்கலாம், கேட்கலாம். 

Algebra, The Arts & Ideas Club

இதே பாயலை நான் பிறகு நைனிட்டாலிலும் சந்திக்க நேர்ந்தது.  அல்ஜேப்ரா குழுவினர் நைனிட்டாலில் உள்ள ஒரு வன மாளிகையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.  மூன்று நாள் சந்திப்பு.  முழு நாளும் பேச்சுகளும் உரையாடல்களும் மாலையிலிருந்து மது விருந்துமாக இருக்கும்.  சிறப்பு விருந்தினர் ஆஷிஷ் நந்தி.  மாலை செஷன் முடிந்ததும் விரிவான முறையில் மது விருந்து நள்ளிரவு வரை போகும்.  மொத்தம் இருபத்தைந்து பேர். 

நான் எந்நேரத்துக்கு உறங்கப் போனாலும் காலையிலேயே எழுந்து விடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.  ஆறு மணிக்கு எழுந்து வனத்தின் ஒரு ஓரத்திற்கு வந்து அங்கேயிருந்த பெஞ்சில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தேன். கொடிய விலங்குகள் இல்லாத வனம் என்று சொல்லியிருந்ததால் பயமின்றி இருக்க முடிந்தது.  அந்த இடத்தில் ஒரு கிணறு இருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.  எட்டிப் பார்த்தேன்.  ஆழமில்லாத கிணறு.  தெளிவாக இருந்த தண்ணீரின் கீழே சில நாணயங்கள் தெரிந்தன.  பிரார்த்தனைக் கேணி போல.  அதில் நானும் ஒரு நாணயத்தை போட்டேன்.  அப்போது பின்னாலிருந்து Ludovico Einaudiயின் Divenire என்ற பாடல் ஒலித்தது.  கொஞ்சம் பயந்துதான் போனேன்.  என் வாழ்நாள் பூராவும் தொடர்ந்து வரும் பாடல் என்றாலும் அந்த நடு வனத்திற்குள் எப்படி இந்தப் பாடல்?  மனித நடமாட்டமும் இல்லை.  பாடல் எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை.  சரி, இந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம், இப்படி ஒரு ஆழமான வனத்தின் உள்ளே இந்தப் பாடலைக் கேட்பது ஒரு பாக்கியம் என்று தோன்றி பெஞ்சிலேயே அமர்ந்து விட்டேன். 

பாடல் முடிந்த பிறகுதான் அங்கே தோன்றினார் பாயல்.  உங்களுக்கு இந்தப் பாடல் பிடிக்கும் என்று யூகித்ததால் இதை வைத்து விட்டுப் போனேன் என்றார்.  அவர் கையில் குவளை மாதிரி ஒரு எந்திரம் இருந்தது.  அதிலிருந்துதான் பாடல் வந்ததா?  ஆமாம் என்றார் பாயல்.  சரி, எப்படி இது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பாடியது என்று கேட்டேன்.  ரிமோட் என்றார்.  அந்தச் சம்பவம் என் வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஒன்று.

இதேபோல் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் பிரதான அரங்கமான புல்வெளியில் கிட்டத்தட்ட 2000 பேர் முன்னிலையில் பேசிய பேச்சு.  அதுவும் உரையாடல்தான்.  ஷோமா சௌத்ரிதான் ஒருங்கிணைப்பாளர்.  எனக்கு முன்னே பேசியவர்கள் எல்லோரும் பேசிய போது ஒன்றை கவனித்தேன்.  அது, பார்வையாளர்களால் மேடையில் பேசும் எழுத்தாளர்களின் பேச்சோடு ஒன்ற முடியவில்லை.  அது காலை நேரமாக இருந்தாலும் ஏதோ ஒரு மதியத்தில் ஒரு முதிய பேராசிரியரின் சலிப்புற வைக்கும் லெக்சரைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல் இருந்தன பார்வையாளர்களின் முகங்கள். 

அதனால் அதே ரீதியில் பேசக் கூடாது என்று நினைத்து, ஷோமா கேட்ட நீண்ட கேள்விகளை நிராகரித்து விட்டு, நான் வேறு சில விஷயங்களைச் சொல்லுகிறேன் ஷோமா, கேளுங்கள் என்று ஆரம்பித்து ஒரு தமிழ் எழுத்தாளன் எம்மாதிரி சூழலில் எழுதுகிறான் என்பதை விளக்கினேன்.  பேச ஆரம்பித்ததுமே பார்வையாளர்கள் அத்தனை பேரும் கரகோஷம், சிரிப்பு.  விசில் சப்தம்.  அந்த செஷன் பதினொன்றரைக்கு முடியும்.  ஆனால் பதினொன்றரை மணிக்கு நான் இன்னொரு அரங்கத்தில் பேச வேண்டும்.  இங்கே பதினொன்றரைக்கு மேல் ஆகி விட்டது.  அதனால் விழா ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒரு பெண் என் கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அடுத்த அரங்கிற்கு ஓடினார்.  அது ஒரு சின்ன அரங்கம்.  ஆனாலும் ஐநூறு பேர் இருக்கும்.

ஆரம்பித்தேன்.  எனக்கு இந்த ஜெய்ப்பூர் இலக்கிய விழா கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  ஏனென்றால், எந்த எழுத்தாளரைப் பார்த்தாலும் ஆக்ஸ்ஃபோர்டிலோ, ஹார்வர்டிலோ, ஸோர்போனிலோ பேராசிரியராக இருக்கிறார்கள்.  நானோ கல்லூரி ட்ராப் அவ்ட்.  அதனால்தான் பயம் காணுகிறது என்று ஆரம்பித்தேன்.  கூட்டத்திலிருந்த ஒரு பெண் சத்தமாக “That’s why we love you charu” என்று கத்தினார்.  கல்லூரி மாணவி போல் தெரிந்த அந்தப் பெண்ணை கூட்டம் முடிந்த பிறகு தேடினேன்.  கண்டுபிடிக்க முடியவில்லை. 

(கேரளத்தில் நான் பேசிய கூட்டங்களை எண்ண முடியாது.  மாதம் ஒரு கூட்டம் என்று பத்து ஆண்டுகள் பேசியிருக்கிறேன்.) 

இப்படி எனக்குப் பழக்கமில்லாத மொழியான ஆங்கிலத்தில், பழக்கமே இல்லாத  வெளிச்சூழலில் பிரமாதமாகப் பேசுகின்ற, பிரமாதமாக உரையாடுகின்ற நான் ஏன் என் சொந்த பூமியான தமிழ்நாட்டில் என் தாய்மொழியான தமிழில் மட்டும் சொதப்புகிறேன்?

ஏனென்றால், தமிழர்கள் எழுத்தாளர்களை அவமதிக்கிறார்கள்.  குற்றவாளியைக் கேள்வி கேட்பது போல் மடக்குகிறார்கள்.  ராணுவத்தில் கோர்ட் மார்ஷல் என்பார்கள்.  அப்படி எனக்கு சமீபத்தில் நடந்த ஒரு கோர்ட் மார்ஷல் பற்றித்தான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன்.    

தமிழ்நாட்டில், தமிழில் என் எழுத்து பற்றி கேட்கப்படும் பல கேள்விகளுக்கு என்னால் உடனுக்குடன் பதில் சொல்லத் தெரியவில்லை.  பல மணி நேரம் சென்று அல்லது மறுநாள்தான் அந்தக் கேள்விக்கு பதில் தோன்றுகிறது. ”முந்தாநாள் நீங்கள் கேட்டீர்களே, அதற்கு என்னுடைய பதில் இது” என்று சொல்வது எனக்கு இங்கே வழக்கமாகி விட்டது.  உடனுக்குடன் பதில் சொல்ல முடியவில்லை.  காரணம், இங்கே உள்ள விரோதமான சூழல்.  உதாரணமாக, ஒளிவண்ணன் என்பவர் – இவர் ஒரு பதிப்பாளர், எழுத்தாளர்களின் அருமை தெரிந்திருக்க வேண்டியவர் – என்னைப் பற்றி ஃபேஸ்புக் காமெண்ட் ஒன்றில் எழுதியுள்ள வார்த்தைகளிலிருந்து நீங்கள் நான் சொல்வதைப் புரிந்து கொள்ளலாம். 

ஒன்றுமில்லை, நீங்கள் “நான் சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு வரியை ஃபேஸ்புக்கில் எழுதிப் பாருங்களேன்.  பின்னூட்ட்த்தில் வந்து என்னைத் தாக்கு தாக்கு என்று தாக்குவார்கள்.  ங்கோத்தா என்ற அளவுக்கெல்லாம் போகும் வசை வார்த்தைகள்.  அப்படி ஒரு பின்னூட்டமே ஒளிவண்ணன் செய்ததும்.  இப்போது நான் கோபித்துக் கொண்டேன் என்று தெரிந்ததால் அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டார்.  ஆனால் நான் கோபித்துக் கொண்டேன் என்று தெரிந்திருக்காவிட்டால் இந்த நிமிடம் கூட அந்தப் பின்னூட்டம் அந்த ஃபேஸ்புக் பதிவில் இருந்து கொண்டுதான் இருந்திருக்கும். 

பின்னணி:

சென்ற மாதம் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பு வைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளரின் ஏதேனும் ஒரு கதையைப் படித்து அந்தக் கதை பற்றிய மதிப்பீடுகளை சேகரித்து அதில் சிறந்த ஐந்து மதிப்பீடுகளுக்குப் பரிசளிக்கிறார்கள். அடுத்த மாதம் (அதாவது செப்டம்பர்) என்னுடைய ஏதாவது ஒரு சிறுகதையை வாசித்து மதிப்புரை எழுதச் சொல்லலாம் என்பது அவர்கள் திட்டம். என்னுடைய எந்தக் கதையை வாசிக்கலாம் என்று நான் யோசனை சொல்ல வேண்டும். 

கதை வாசிப்புக்காக நானும் சம்மதம் தெரிவித்தேன். ஏனென்றால், மாணவர்களோ பெண்களோ இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தால் அவர்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்ய முற்படுவது என் வழக்கம்.  பிறகு கதை வாசிப்புக்கான தேதியும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் வழக்கப்படி அத்தோடு அந்த விஷயத்தை மறந்து போனேன்.

சில நாட்கள் கழித்து எந்தக் கதையை வாசிக்கலாம் என்று அந்தப் பெண் தொலைபேசியில் கேட்டார்.  என்னுடைய ஐந்து கதைகளைச் சொல்லி அதில் ஒரு கதையை தேர்ந்தெடுக்கலாம் என்றார். நான் முள் என்ற கதையை வாசிப்புக்கும் மதிப்புரைக்கும் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். என் வழக்கப்படி அத்தோடு அந்த விஷயத்தை மறந்து போனேன்.

ஸூம் மூலமாக நடக்கும் அந்த நிகழ்ச்சிக்குப் பத்து நாட்கள் முன்பாக அது பற்றி எனக்கு நினைவூட்டினார்கள். ஆனால் அந்தக் குறிப்பிட்ட தேதியில்தான் நான் என் நண்பர் ஒருவரை ஏழு ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். வெளிநாட்டிலிருந்து அவர் ஒவ்வொரு முறை சென்னை வரும் போதும் நான் ஏதாவது ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு இருந்ததால் அவரை சந்திக்க முடியாமலேயே போய்க்கொண்டு இருந்தது. இந்த முறை அவந்திகா ஊரில் இல்லாததால் அவரைச் சந்தித்து சாவகாசமாக பேசிக்கொண்டிருக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன்.  ஆனால் அது முடியாது போல் இருந்தது.  இனிமேல் இம்மாதிரி நிகழ்ச்சிகளையெல்லாம் ஒப்புக் கொள்ளக் கூடாது என்று தாமதமாக நினைத்துக் கொண்டேன். 

ஒரு செக்ரட்டரி இருந்தால் இப்படிப்பட்ட தேதிக் குழப்பங்கள் நடக்காது.  ஏழைத் தமிழ் எழுத்தாளனுக்கு அந்த லக்‌ஷுரியெல்லாம் கிடைக்குமா என்ன?  (இதற்காகவாவது அந்த புக்கரோ கிக்கரோ கிடைத்துத் தொலைத்தால் நல்லது!)

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவது ஒளிவண்ணன் என்பது தெரிந்தது.   முன்பே இந்த விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் மிக நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்திருக்க மாட்டேன்.  முதல் பேச்சிலேயே மறுப்புத் தெரிவித்திருப்பேன்.  ஏனென்றால், ஏற்கனவே இரண்டு முறை ஒளிவண்ணனின் நடவடிக்கைகளால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்; அந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்.

ஒன்று:

ஜனவரி 22, 2014இல் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையின் முதல் பத்தி இது:

”நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன்.  இரண்டு மணி நேரம் இருந்தேன்.  புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன்.  அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.  ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள்.”

புத்தக விழாவில் சகஜமாக நடக்கும் விஷயம்தான் அது.  எழுத்தாளன் என்ற ஜந்துவைக் கூப்பிட்டு ”எங்கள் அரங்கில் நின்று போஸ் கொடுங்கள்” என்பார்கள்.  இல்லாவிட்டால் எதைப் பற்றியாவது பேசச் சொல்வார்கள்.  நானும் பூம்பூம் மாடு மாதிரி அவர்கள் சொல்வதைச் செய்வேன்.  அப்படித்தான் ஒளிவண்ணனும் எதையோ செய்யச் சொன்னார்.  அதற்குப் பரிசாகத்தான் ரெண்டு எல்கேஜித்தனமான புத்தகங்களை எனக்குப் பரிசளித்தார்.  என்ன புத்தகம் என்பது இப்போது எட்டு ஆண்டுகளில் மறந்து விட்டது.  ஏதாவது மு.வ. புத்தகமாக இருக்கும். அல்லது, பணம் சம்பாதிப்பது எப்படி என்ற புத்தகமாகவும் இருக்கலாம்.     

இரண்டாவது சம்பவம்:

மாபெரும் சவால்… என்ற தலைப்பில் செப்டம்பர் ஏழாம் தேதி 2019இல் பதிவு செய்யப்பட்ட கட்டுரை கீழே உள்ளது:

”இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.

இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை பெரும்பான்மையானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் மைஆத்தர்ஸ்.காம் என்கிற வலைத்தளம்.

எழுத்தாளராகிய தாங்கள் எப்படி இதில் பதிவு செய்துகொண்டு உங்களது புத்தகங்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்ள என்னோடு தொடர்பு கொள்ளவும்.”

மேற்கண்ட அறிவிப்பை பதிப்பகத் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவரான ஒளிவண்ணன் எனக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு ஒளிவண்ணன், நீங்கள் பாலாவின் நான் கடவுள் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல்தான் இருக்கிறோம் தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள்.  இதில் ஒன்றிரண்டு பேர் சினிமாவில் வசனம் எழுதுவதால் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்திலிருந்து விலகி விட்டார்கள்.  மற்றவர்களெல்லாம் அப்படியேதான் இருக்கிறோம்.  இதற்குக் காரணம், புத்தகங்களின் விற்பனை என்று மட்டுமே சொல்ல மாட்டேன்.  உலகம் பூராவுமே பல எழுத்தாளர்களின் நூல்கள் ஆயிரம் ரெண்டாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்பதில்லை.  ஆனாலும் அவர்கள் எப்படி தமிழ் எழுத்தாளர்களைப் போல் பிச்சைக்காரர்களாக இல்லை என்றால், அவர்களுக்கு வேறு விதங்களில் பணம் வருகிறது.  கேரளத்தை எடுத்துக் கொண்டால், பல பத்திரிகைகளில் அவர்களை ஆலோசகர்களாக வைத்துக் கொண்டு மாத ஊதியம் கொடுக்கிறார்கள்.  என்னுடைய நண்பர் ஒருவர் இரண்டு பத்திரிகைகளில் ஆலோசகராக இருக்கிறார்.  சன்மானம், ஒரு பத்திரிகைக்கு ஒன்றரை லட்சம்.  ஐயோ, ரெண்டு பத்திரிகைகளில் வேலை செய்வது கஷ்டமாயிற்றே என்றேன்.  ஆமாம், கஷ்டம்தான் என்றவர், ”ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை; தேதியை மாற்றிக் கொள்ளச் சொல்லி விடுவேன்” என்றார்.  எனக்குப் புரியவில்லை.  நண்பர் விளக்கினார்.  மாதம் ஒருமுறையோ ரெண்டு முறையோ மீட்டிங் என்று சொல்லி மாலை எட்டு மணிக்கு அழைப்பார்கள்.  குடி பார்ட்டிதான் மீட்டிங்.  இரண்டு பத்திரிகைகளிலும் ஒரே நாளில் கூப்பிட்டு விட்டால் கஷ்டம் இல்லையா, அதனால் இரண்டாவதாக அழைக்கும் பத்திரிகையிடம் நாளை வைத்துக் கொள்ளச் சொல்லுவேன்.  அவ்ளோதான்.

அவ்வளவுதான் வேலையா?

அவ்வளவுதான்.

இதுக்கா அவ்வளவு பெரிய சன்மானம்?

சகோதரரே, என்னுடைய பெயரை நான் அந்தப் பத்திரிகைக்குத் தருகிறேன் இல்லையா?  என் பெயர் என்ன சாதாரணமா?  நாற்பது ஆண்டுகள் எழுதிச் சம்பாதித்த பெயர் ஆயிற்றே?

இந்தப் பெயரால் பத்திரிகையில் ஒரு பிரதியாவது அதிகரிக்குமா?

ம்ஹும்.  அதிகமாகாது.  ஆனால் அந்தப் பத்திரிகையின் மதிப்பு உயரும்.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில், மற்ற நாடுகளில் இப்படி பல வகைகளில் எழுத்தாளர்களுக்குப் பணம் கிடைக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி நடப்பதில்லை.  வெளியிடங்களில் வருகை தரு பேராசிரியராக பல எழுத்தாளர்கள் பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகிறார்கள்.  அந்த வாய்ப்பும் தமிழ்நாட்டில் கிடையாது.

இந்த நிலையில் நீங்கள் (ஒளிவண்ணன்) எழுத்தாளர்களையே புத்தகங்களை விற்கவும் சொல்கிறீர்கள்.  பின்வரும் வாக்கியங்கள் உங்களுடையது:

”இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள மாபெரும் சவால், தங்களுடைய படைப்புகளை அதிக அளவில் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது.

ஒரு எழுத்தாளருக்கு, தன்னுடைய படைப்பினை உருவாக்குவது சாதனையென்றால், அப்படி உருவாக்கிய படைப்பினை அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதனினும் கூடுதலான சாதனை.”

இதை விட ஒரு எழுத்தாளன் பிராத்தல் நடத்தலாம் ஒளிவண்ணன்.  கோபிக்காதீர்கள்.  உங்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் நிலை தெரியுமா, தெரியாதா?  எத்தனை எழுத்தாளர்கள் பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள் என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?  அவர்களைப் போய் அவர்களின் புத்தகங்களையும் விற்கச் சொல்கிறீர்களா?  எனக்கு ஒரு ஆண்டு ராயல்டி ஒன்றரை லட்சம் ரூபாய் வருகிறது.  மாத வருமானம் எவ்வளவு?  12,500 ரூ.  ஒரு இஸ்திரி போடுபவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  ஒரு கார் டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  ஒரு ஆட்டோ டிரைவரின் சம்பளம் கூட இதை விட அதிகம்.  தெருவில் நின்று தன் உடம்பை விற்கும் கடைநிலை விபச்சாரியின் மாத வருமானம் இதை விட அதிகம்.  நான் யார்?  தமிழின் மிகப் பிரபலமான மூன்று எழுத்தாளர்களில் ஒருவன்.

இப்போது நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?  உங்களை அணுகினால் என் புத்தகங்களை இன்னும் அதிகம் விற்பனையாவதற்கு ஆலோசனை சொல்வீர்கள்.  ஒளிவண்ணன், நீங்கள் அல்ல, உங்களைப் படைத்த ஆண்டவனே வந்தாலும் புத்தக விற்பனையை அதிகரிக்க முடியாது.  முன்பெல்லாம், 1200 பிரதிகள் அச்சடிப்பார்கள்.  அதில் 200 பிரதிகளை புத்தக மதிப்புரைக்குக் கொடுப்பார்கள்.  இப்போது அச்சடிப்பதே 200 பிரதிதான்.  உங்களை அணுகி அலோசனை கேட்டால் இந்த 200 பிரதிகள் 210 ஆக உயரும் இல்லையா? ஆக, அதன்படி என் ராயல்டியும் 12500 இலிருந்து 12750 ஆக உயரலாம்.  ஏனென்றால், நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள் ஒளிவண்ணன்.  இப்போதைய தேவை என்னவென்றால், தமிழ் எழுத்தாளர்கள் ஐரோப்பிய மொழிகளில் – குறிப்பாக ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் – மொழிபெயர்க்கப்பட வேண்டும்.  இன்னொரு கொடுமை, அப்படி மொழிபெயர்க்கப்பட்டும் அந்நூல்களை ஐரோப்பாவில் கொண்டு சேர்க்க ஆள் இல்லை.  எங்கே விற்பனை?  செக்ஸ் ஒர்க்கர் என்றால் ஐரோப்பியத் தெருக்களில் நிற்கலாம்?  நான் மார்ஜினல் மேன் புத்தகங்களை வைத்துக் கொண்டு லண்டன் தெருக்களில் நிற்க முடியுமா?  லண்டனில் ஒரு publishing outlet வேண்டும்.  அதற்கு மாதம் ரெண்டு லட்சம் ரூபாய் செலவாகும்.  என்ன செய்ய ஒளிவண்ணன்?

நீங்கள் இப்படிப்பட்ட திட்டங்கள் போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  ஆனால் அதை எனக்கு அனுப்பி வைத்திருக்கக் கூடாது.  மேலும் ஒரு வேண்டுகோள்.  என்னை மீண்டும் தொடர்பு கொண்டு தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டாம்.  அதைக் கேட்கும் பொறுமை எனக்கு இல்லை.  மேலும், ஸாரியும் சொல்ல வேண்டாம்.  என் தரப்பை உங்களுக்கு விளக்கினேன்.  அதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டாம்.  அப்படி ஒரு கோணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.

ஏற்கனவே அவலத்தில் வாழும் எழுத்தாளர்களை மேலும் மேலும் அவலத்தில் தள்ள வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.”

மேலே குறிப்பிட்ட கசப்பான இரண்டு அனுபவங்களால்தான் அப்படிச் சொன்னேன், ஒளிவண்ணன்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே மறுத்திருப்பேன்.

சரி, இப்போது ஒன்றும் செய்ய முடியாது, முடிந்த வரை காயம் இல்லாமல் தப்பி வர வேண்டியதுதான் என்ற மனநிலையோடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.    

குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்பாக முள் சிறுகதை பற்றி வாசகர்கள் எழுதிய நாற்பத்தோரு மதிப்புரைகளும் எனக்கு வந்து சேர்ந்தன.  இதெல்லாம் நான் எதிர்பார்க்காத வேலைப் பளு.  அது எல்லாவற்றையும் வாசிப்பதில் பல மணி நேரம் போனது.  1978இல் எழுதிய ஒரு கதைக்கு நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மதிப்புரை எழுதியிருப்பது பெருமையாகத்தான் இருந்தது என்றாலும் அந்த நிகழ்ச்சிக்கான தினசரிச் செயல்பாடுகளில் ஒரு கூலியாளைப் போல் ஈடுபட்டு என் நேரத்தை வீணடிப்பது பெரும் தவறு என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.  

கடைசியில் வேறு வழி தெரியாமல் நாற்பத்தோரு மதிப்புரைகளையும் படித்து அவற்றிலிருந்து ஆறு மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.  எழுதியவர் பெயர் எதுவும் தெரியாது.  பிறகு ஆறு மதிப்புரைகளையும் தர வரிசையில் சொல்ல வேண்டும் என்றார்கள்.  உடனே அந்த ஆறு மதிப்புரைகளையும் மீண்டும் படித்து அவற்றைத் தர அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொடுத்தேன்.  (ஆச்சரியகரமாக என்னிடம் இடக்கு முடக்கான கேள்விகள் பல கேட்டு அவமரியாதை செய்த பெண்ணின் மதிப்புரையையே நான் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருந்தேன்.)

குறிப்பிட்ட நாளும் வந்தது.  என் நண்பரும் சென்னை வந்து சேர்ந்தார்.  அவரோடு மதிய உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். மாலை ஏழரைக்கு நிகழ்ச்சி. ஸூம் மூலமாக நடக்க இருந்தது. 

கேள்விகள் எல்லாம் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடிப்பது போல் இருந்தது.  நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.  இதுதான் இங்கே தமிழ்நாட்டில் இயல்பானதாகக் கருதப்படுகிறது. இதெல்லாம் ஒருவரை அவமதிக்கும் விஷயம் என்றே யாருக்கும் தெரிவதில்லை. 

ஒரு உதாரணம் சொல்கிறேன்.  கமல்ஹாசனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் அவமரியாதை செய்வார்களா? ”பதினாறு வயதினிலே படத்தில் கோமணம் கட்டி நடித்தீர்களே, இதெல்லாம் ஆபாசம் என்று உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கமல்ஹாசனை விருந்தினராக அழைத்து விட்டு அவரை மேடையில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்பீர்களா?  உடனே ஒளிவண்ணன் வந்து, கமல்ஹாசனைக் கவிழ்த்து விட்டார் எங்கள் குழுவைச் சேர்ந்தவர், பதில் சொல்ல முடியாமல் கமல்ஹாசன் திணறினார் என்றெல்லாம் எழுதுவாரா?  

எழுத்தாளனைக் கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரத்தை இவர்களுக்குக் கொடுத்தது யார்? 

கேள்வி கேட்ட பெண்மணி குற்றவாளியைக் குறுக்கு விசாரணை செய்யும் தோரணையிலேயே என்னைக் கேட்டுக் கொண்டிருந்ததால் “என்ன இது, ராம்ஜெத்மலானி மாதிரி கேட்கிறீர்கள்?” என்று கேட்டேன்.  அதையே அந்தப் பெண்மணி அவருக்கு நான் கொடுத்த பாராட்டு என்று எடுத்துக் கொண்டு அதை ஃபேஸ்புக்கிலும் எழுதிப் பகிர்ந்திருந்தார்.  அதற்குத்தான் ஒளிவண்ணன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். 

அந்தப் பின்னூட்டத்தின் புகைப்பட நகல் இது:

எடுத்த எடுப்பிலேயே ஒளிவண்ணன் சொல்கிறார்: ”சாரு நிவேதிதா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.”

ஏன் ஐயா, உங்கள் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரைப் பற்றி இப்படித்தான் எழுதுவீர்களா?  யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லைதான்.  ஆனால் உங்களுடைய நிகழ்ச்சிக்காக என்னுடைய இரண்டு தினங்களை நான் செலவிட்டிருக்கிறேன்.  முக்கியமான நண்பரோடு நேரம் செலவிடாமல் உங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.  பொதுவாக நான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 50000 ரூ. கட்டணம் வசூலிக்கிறேன்.  ஏனென்றால், இலவச சேவை செய்தால் இப்படித்தான் செருப்படி பட வேண்டியிருக்கிறது.  காசு கொடுத்தால்தான் உங்களுக்கும் விருந்தினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும். ஒரு பிரமுகரை உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு, அவரைப் பற்றி இப்படித்தான் ஃபேஸ்புக்கில் அவதூறு செய்வீர்களா?  ஒளிவண்ணன் ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் செய்திருப்பது விமர்சனம் அல்ல, அவதூறு.  அப்படியே விமர்சனமாக இருந்தாலும் உங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு – நானும் உங்களுக்காக இரண்டு தினங்களை செலவழித்து, உங்களுக்கு இலவச சேவை செய்து தந்திருக்கும்போது என்னை விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  விமர்சிப்பதாக இருந்தால் நீங்கள் என்னை அழைத்திருக்கவே கூடாது. 

ஒளிவண்ணனின் மொழியை கவனியுங்கள்.  என்னுடைய ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக அவர் என்னிடமிருந்து விலகி விட்டாராம்.  இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்பு நீடிக்கிறதாம். 

ஒளிவண்ணனின் இந்தப் பின்னூட்டமே ஃபேஸ்புக்கில் எனக்குத் தெரியவில்லை.  ஏனென்றால், ஒளிவண்ணன் என்னைப் பல தருணங்களில் அவமதித்து இருந்ததால் நான் அவரை சில ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக் செய்து விட்டேன்.  எனவே அவர் எழுதும் குப்பை எதுவும் எனக்குத் தெரிய வராது.  ஆனால் என்னைக் கேள்வி கேட்டு மண்ணைக் கவ்வ வைத்த பெண்ணே அதை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  அதனால் என் கைபேசியில் ஒளிவண்ணன் என் மீது அடித்திருந்த அழுகல் முட்டை எனக்குப் படிக்கக் கிடைத்த்து.  இதில் பரிதாபம் என்னவென்றால், எனக்கு இந்த லிங்கை அனுப்பிய அம்மையாருக்கு ஒளிவண்ணன் செய்திருப்பது என் மீதான அவதூறு என்று கூடத் தெரியவில்லை.  தெரிந்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டார்.

அதை விடப் பெரிய பரிதாபம் என்னவென்றால், ஒளிவண்ணனுக்கே தான் செய்திருப்பது அவதூறு என்று தெரிந்திருக்காது.  ஏனென்றால், ஒட்டு மொத்தத் தமிழ்நாடுமே ஒளிவண்ணன்களால்தான் நிரம்பியிருக்கிறது.  இவர்களைத்தான் நான் ஃபிலிஸ்டைன் சமூகம் என்று விமர்சிக்கிறேன்.  இவர்களுக்கெல்லாம் இம்மியளவு கூட சுரணையுணர்வு என்பது கிடையாது.  இருந்திருந்தால் தன் நிகழ்ச்சிக்கு அழைத்த விருந்தினரை இப்படி அவமதிப்பார்களா? 

அடுத்து ஒளிவண்ணன் சொல்கிறார், ஆன்மீகத்தையும் பின்நவீனத்துவத்தையும் இணைப்பது என்னுடைய ideological bankruptcyயாம். 

முதலில் இவருக்குப் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.  பின்நவீனத்துவத்தின் முக்கியக் கூறு அதிகார அழிப்பு.  இந்திய ஆன்மீகம் – குறிப்பாக அத்வைதம் – தான் என்பதன் அழிப்பையும் எல்லாவற்றிலும் பிரம்மத்தைக் காண்பதையும் வலியுறுத்துகிறது.  அப்படியானால் நானும் நீயும் ஒன்று என்று ஆகிறது.  நானும் நீங்களும் ஒன்று என்கிற போது அங்கே அதிகாரத்துக்கு இடம் ஏது?  ஆக, ஆன்மீகத்திலும் அதிகாரம் அழிக்கப்படுகிறது.  எனவே அடிப்படையில் இரண்டின் அடிச்சரடுகளும் ஒன்றுதான்.

ஒளிவண்ணனுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்தப் பின்னூட்டத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம். 

”ஒட்டு மொத்தமாகக் கதாநாயகியாக ஆக்கிரமித்தவர் அர்ஷா.

தொல்காப்பியன் சொன்னது போலத் தொடக்கத்திலிருந்தே அர்ஷாவின் கை ஓங்கியிருந்த்து. முதல் கேள்வியிலேயே சாரு விழுந்து விட்டார்.  பிறகு அர்ஷா சலிக்காமல் மாற்றி மாற்றிக் கேள்விகளைக் கேட்கும் போது – குறிப்பாகப் பின்நவீனத்துவம் ஆன்மீகத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய போது அவர் (சாரு) ராம்ஜெத்மலானி போல அர்ஷா மடக்கி விட்டார் என்று சாரு வெளிப்படையாகச் சொன்னார்.”

இது ஒளிவண்ணன்.

ஆக, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேதான் ஒளிவண்ணன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.  அதாவது, அர்ஷா என்ற பெண் கதாநாயகியாக ஆவதற்காக நான் பஃபூன் ஆக்கப்பட்டிருக்கிறேன், அப்படித்தானே மிஸ்டர் ஒளிவண்ணன்?

ஜெயமோகனின் அறம் கதையில் வரும் எழுத்தாளன் ஒரு பதிப்பாளரைப் பார்த்து அறம் பாடுவார். 

அதேபோல் இந்தத் தருணத்தில் இந்த ஒளிவண்ணன் என்ற பதிப்பாளர் மீது அறம் பாட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.  ஆனால் அதையெல்லாம் நான் கைவிட்டுப் பத்து ஆண்டுகள் ஆகின்றன.  இந்த அசிங்கத்தையும் அவமானத்தையும் இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் துக்கத்தையும் இறை சக்தியிடம் ஒப்படைக்கிறேன். 

பின்குறிப்பு: 1. எந்த இலக்கிய நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த இடமும் சூழலும் நண்பர்களும் சிநேகபூர்வமாக இருந்தால் நான் தங்கு தடையில்லாமல் பிரமாதமாகப் பேசுவேன்.  உங்களுக்கும் பயன் உண்டு.  எனக்கும் மகிழ்ச்சி.  ஆனால் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றோ, என்னை முதல் அடியிலேயே விழ வைக்க வேண்டும் என்றோ, என்னைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றோ நினைத்துக் கேள்வி கேட்டால், முன்பு போல் நான் சண்டை போடுவதில்லை.  உளற ஆரம்பித்து விடுகிறேன்.  யாருக்கும் பயனில்லை; ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் சாருவை வீழ்த்தி விட்டோம் என்று பீற்றிக் கொள்ளலாம்.

2. இனிமேல் இது போன்ற இலக்கியச் சந்திப்புகள் எதிலுமே கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.  அதையும் மீறி என்னை அழைத்தால் கட்டணம் 50000 ரூ.

3. ”இந்த அசிங்கம் பற்றி எழுத வேண்டாம், விட்டு விடுங்கள்” என்று என் நண்பர்கள் பலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனாலும் இதை இத்தனை விரிவாக எழுதக் காரணம், நான் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டு இதேபோல் விதவிதமாக அவமதிக்கப்பட்டு வருகிறேன்.  அது நிற்கும் வரை நானும் இதைப் பதிவு செய்து கொண்டேதான் இருப்பேன்.  ஏனென்றால், இதெல்லாமும் சேர்ந்ததுதான் என் இலக்கிய வாழ்க்கையாக இருக்கிறது.